ஆன்டனி டிமெல்லோ,கிறித்தவ,இந்து உரையாடல்

அன்பின் சிறில் அலெக்ஸ்,

தங்கள் தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. இப்போதுதான் பார்த்தேன். ஆண்டனி டி மெல்லாவை நீங்கள் இறையியல் கல்லூரியில் படித்ததையும் நான் அறிவேன். போனதடவை சந்தித்த போது நீங்கள்தான் சொன்னீர்கள் என்று நினைக்கிறேன். இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது?  [ கிறித்துவம், இந்து மரபு ]இறுதியாக கத்தோலிக்க சபை ஒரு ஒற்றைப் பாறாங்கல் அல்ல என்பதையும் அறிவேன். ஒரு பத்து-பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறு நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு பெரும் மானுட அமைப்பும் ஒற்றைப் பாறாங்கல்லாக நூற்றாண்டுகளுக்கு செயல்பட முடியாது. ஆனால் எந்த அமைப்பிலும் காலங்களூடாக ஒரு மைய நீரோட்டமும் எதிர் நீரோட்டங்களும் இருக்கின்றன. இதில் ஆண்டனி டிமெல்லாவின் திசை எது என்பது முக்கியமான ஒன்று.

 

கிறிஸ்தவத்தை அதன் மேம்போக்கான சடங்குகளுக்கு இந்திய சூழல் பெயர்களை அளிப்பதும், அதன் உள்ளார்ந்த ஆன்மிகக்குறியீட்டை அழித்து அங்கே கிறிஸ்தவ இறையியலை புகுத்துவதும் உரையாடல் அல்ல என நான் நினைக்கிறேன். இதைத்தானே பௌத்தம் ஹிந்து மதக் கடவுளருக்கு தெற்காசிய தேசங்களில் செய்தது, இதைத்தானே சைவ-வைணவ வைதீகங்கள் பௌத்த சமண தெய்வங்களுக்கு செய்தன எனும் வாதம் எத்தனை சரியானது? முதலாவதாக இந்த இரண்டு இயக்கங்களின் இணைத்தன்மைகளுக்கும் கேள்விக்குரியன. இரண்டாவதாக இது ஒன்றையொன்று செரித்து வளர்தலே அன்றி உரையாடல் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த இந்த இயங்குமுறைதான் நம் இன்றைய உரையாடலுக்கும் வரைத்திட்டமாக இருக்குமென்றால் அது சரியானதல்ல.

எனவேதான் நான் ஆண்டனி டி மெல்லாவை முன்வைக்கிறேன்.

எப்படி ஒரு மதத்தின் ஆன்மிகத்தேடலாளன் தன் முகத்தையும் தான் பிறந்த மதத்தையும் இழக்காமலே பிற மதத்தின் சிறந்த அமசங்களை தன் ஆன்மிகத்தேடலுக்கு உள்வாங்க முடியும் என அவர் காட்டுகிறார். இதுதான் நாம் வந்தடைந்துள்ள இந்தியப்பண்பாட்டின் அடிநாதமாகவும் விளங்குகிறது என நான் கருதுகிறேன். ஒரு கிறிஸ்தவர் இந்தியப்பண்பாட்டு அம்சங்களை தமது வழிபாட்டில் பயன்படுத்த விளைந்தால் அதனை தடுக்க எனக்கு எவ்வித உரிமையும் இல்லை. அப்படி தடுக்க நினைப்பது ஒரு கீழ்மையான எண்ணமும் கூட.

 

ஆனால் கத்தோலிக்க சபை “பெரிய நாயகி” எனும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் அம்பாளின் பெயரை திருவிதாங்கூரில் கன்னிமேரிக்கு வைக்கும் போது அது எவ்வளவு மடத்தனமாக இருக்கிரது. ஒன்று: பெரியநாயகி என்பது இறைவனின் சக்தி அம்சம். ஆனால் மேரி கிறிஸ்தவ இறையியலில் இறைவனின் சக்தி அல்ல. நாயகி அல்ல. இறைவனுக்கு கீழான நிலையில் இருக்கும் புனிதர்கள் எனும் அடுக்கில் உள்ளவள். இத்தகைய பெயர் வைத்தல்கள் ஏறக்குறைய பெப்ஸி-கோக் கம்பெனிகளின் பிராந்திய பண்பாட்டு விளம்பரங்களிலிருந்து வேறானவை அல்ல. இதைத்தான் பண்பாட்டு திருட்டு என்று சொல்லுவேன்.

 

மாடனுக்கு சக்கரைப் பொங்கல் படைப்பதற்கும் பாகன் கூறுகளை கிறித்தவம் உள்ளிழுத்தமைக்கும் என்ன வேறுபாடு என கேட்கிறீர்கள். நிச்சயமாக ஆழமான வேறுபாடுகள் இருக்கின்றன. சுடலை மாடன் சுடலைமாடனாக இருந்தபடியே பிரபஞ்சமெங்கும் வியாபிக்கும் பிரம்மத்தின் அம்சமாக திகழ முடியும். பாகனியத்திலிருந்து உள் வாங்கப்பட்ட கடவுளர் கிறிஸ்தவத்தில் அதிகப்படியாக புனிதர்களாக மட்டுமே இருக்க முடியும். இந்த முக்கியமான வேறுபாட்டை சுட்டிக்காட்டவே லின் வைட் ஜூனியரின் பிரசித்தி பெற்ற கட்டுரையைக் குறிப்பிட்டேன். ஆனால் இந்த கொடுக்கல் வாங்கல்களை மீறிய ஆன்மிக மரபுகளிடையிலான உரையாடலே மதங்கள் கடந்த மானுடம் தழுவிய பன்மை அழிப்பில்லாத ஆன்மிகத்துக்கு நம்மை அழைத்துச்செல்லும். இத்தகைய உரையாடலையே சுவாமி விவேகானந்தரும் காந்தியும் முன்வைத்தனர். ஆண்டனி டி மெல்லாவையும் குமரப்பாவையும் இதே மரபின் நீட்சியாகவே நான் காண்கிறேன்.

நான் ஏன் ஆண்டனி டி மெல்லாவை முன்வைக்கிறேன் என்று வினவும் நீங்களே அதற்கான பதிலையும் இறுதியில் சொல்லியிருக்கிறீர்கள்: “கிறீத்துவர்கள் எடுத்தாள வேன்டியது இந்தியாவின் சடங்குகளை அல்ல. (அதைச் செய்வதில் எனக்கு ஒரு மறுப்பும் இல்லை) மாறாக அதன் பின்னிருக்கும் தத்துவ தரிசனங்களையே.” இதைவிட அழகாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் இந்த விஷயத்தை நான் சொல்லியிருக்க முடியாது. நன்றி. ஆண்டனி டி மெல்லாவைப் பொறுத்தவரையில் நிச்சயமாக அவரை என்னைவிட நன்றாக நீங்கள் அறிவீர்கள் என்பதில் ஐயமில்லை. இருந்தபோதிலும் அவரை வாசித்ததில் நான் அடைந்த சில புரிதல்களை முன்வைக்கிறேன்.

ஒன்று அவரது பிரசித்தி பெற்ற அவரது புகழுக்கு காரணமாகியிருந்த “Sadhana a way to God” இந்நூலின் முன்னுரையில் அவர் ஹிந்து துறவியையும் அவரது மூச்சுப்பயிற்சிக்கான தத்துவத்தையும் கூறி ” the exercises I propose in this book are very much in line with the approach of that Hindu guru whom I have never met or hear of since” என்கிறார். எந்த ஒரு புத்த துறவி குறித்தும் அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அது முக்கியமானதுமல்ல. ஹிந்து துறவிக்கு பதிலாக அந்த இடத்தில் விபாசனா முறையை கற்றுக்கொடுத்த ஒரு பௌத்த துறவி இருந்திருந்தாலும் அது அந்நூலின் உள்ளீட்டுக்கும் மத எல்லைகளை கடந்து அது முன்வைக்கும் ஆன்மிகத்துக்கும் எவ்வித வேறுபாட்டையும் ஏற்படுத்தியிருக்காது.

இரண்டு. நான் ஆண்டனி டிமெல்லாவை “வேத சாட்சியாக” அழைக்கவில்லை. இன்னும் சொன்னால் ஜெயமோகனின் அதே இணைய பக்கத்தில் அவர் இறுதி வரை தனது சபைக்குள்ளேயேதான் இருந்தார் என்பதை தெரிவித்திருக்கிறேன். அதே பக்கத்தில் சிறிது கீழே பார்த்தால் அந்த பக்கத்தில் எனது இறுதி கடிதத்தில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்: “ஆண்டனி டி மெல்லாவை நினைவுகூரவும்.. நிறைந்த சிரிப்பும் ஞானமும் கொண்ட எளிமையான அந்த ஏசுசபை பாதிரியார் இறுதி வரையில் எத்தனையோ துன்பங்களுக்கு அப்பாலும் சபையிலிருந்து விலகவில்லை. இறுதிவரை கிறிஸ்தவ அடிப்படைகளை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர்தாம்.”

மூன்று ஆம் சிறில் அலெக்ஸ், இன்றைய போப்பாக திகழும் கார்டினல் ராட்சிங்கர் அன்றைய போப்பான போப் இரண்டாம் ஜான் பால் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில் 1998 இல் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில் “With the present Notification, in order to protect the good of the Christian faithful, this Congregation declares that the above-mentioned positions are incompatible with the Catholic faith and can cause grave harm.” என்றுதான் குறிப்பிட்டாரே ஒழிய “முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டிய ஒரு பாகனிய, சாத்தானிய படைப்பாக” அவற்றை குறிப்பிடவில்லை. மேலே கூறிய வாசகங்களை சிறிதே வாசித்து பாருங்கள். “கத்தோலிக்க விசுவாசத்தின் நன்மைக்காக” “கத்தோலிக்க விசுவாசத்துடன் ஒத்துப் போகாததும் பெரும் தீங்கை உருவாக்கும் தன்மை கொண்டதுமாகத்தான்” டி மெல்லாவின் படைப்புகள் குறித்த அறிக்கை இன்றைக்கும் வத்திகானின் அதிகார பூர்வ அறிவிப்பாக இருக்கிறதே அன்றி “பாகனிய சைத்தானிய படைப்பாக” அவை சொல்லப்படவில்லை. ஏனெனில் நாம் வாழும் நூற்றாண்டுக்கு ஏற்ற பதங்களைத்தான் கத்தோலிக்க சபை பயன்படுத்த முடியுமல்லவா? “சைத்தானிய” என்று சொல்ல முடியாது “நன்மையை பாதுகாக்க” “பெரும் தீங்கை உருவாக்கக் கூடிய” என்றுதான் சொல்ல முடியும். காலத்தின் கட்டாயம். ஆனால் சிறில், நிச்சயமாக நீங்கள் மென்மைப்படுத்தி சொல்லியிருப்பது போல “கத்தோலிக்க நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது” (beyond Catholic faith) என சொல்லவில்லை. இன்றைக்கும் அந்த முழு அறிக்கையும் வத்திகான் இணையதளத்தில் உள்ளது: நீங்களே சென்று வாசித்துக்கொள்ளலாம்: (http://www.vatican.va/roman_curia/congregations/cfaith/documents/rc_con_cfaith_doc_19980624_demello_en.html)

நான்கு: இது கத்தோலிக்க சபையின் உள் நிகழும் ஒரு முக்கியமான முரணியக்கத்தைக் காட்டுகிறது. கிறிஸ்தவ மதத்தில் நிகழும் விஷயங்களை அவதானித்து வரும் ஒரு ஹிந்து என்கிற முறையில் எனக்கு இந்த விஷயம் முக்கியமானது. போப் இரண்டாம் ஜான் பால் மிக அதிகமான அளவில் புனிதப்பட்டங்களை கொடுத்தவர் அல்லது அதற்கு முந்தைய நிலைக்கு கத்தோலிக்க முக்கியஸ்தர்களை உயர்த்தியவர் என்றே பலரும் அவரை அறிவார்கள். ஆனால் அவரும் அன்று அவருக்கு முக்கிய வலது கையாக திகழ்ந்த கார்டினல் ராட்ஸிங்கரும் மிக அதிக அளவில் கத்தோலிக்க இறையியலாளர்களை குறிப்பாக சமயப்பன்மை பிறசமயங்களுடன் உரையாடல் என செயல்பட்ட பலரை கண்டனம், சபை நீக்கம், அல்லது நூல்களை விலக்குதல் ஆகியவற்றை செயல்படுத்தினார்கள் என்பது மிகவும் வெளியில் தெரியாத விஷயம். இவ்விரு பெருந்தகைகளின் தலைமையின் கீழ் Congregation for the Doctrine of the Faith எனும் பழமையான அமைப்பு புத்துயிர் பெற்றது. Jacques Poheir, Hans Kung, Charles Curran, திஸா பாலசூரியா, எனும் வரிசையில் இறந்த பின் தோண்டியெடுத்து தடைப்படுத்தப்பட்டவராக ஆண்டனி டி மெல்லா. இதில் Hans Kung குறித்து தனியாக குறிப்பிடவேண்டும். சமயங்களிக்கிடையேயான உரையாடலை மிகவும் முக்கியமாக வலியுறுத்தியவர் அவர். Congregation for the Doctrine of the Faith என நவீனப்பெயர் சூட்டப்ப்படும் முன்னால் இந்த அமைப்புக்கு ஒரு பெயர் இருந்தது. என்ன தெரியுமா? Supreme Sacred Congregation of the Roman and Universal Inquisition. :)

ஐந்து: நான் எழுதியது: “ஆண்டனி டி மெல்லாவுக்கு நிகழ்ந்தது தெரிந்ததது தானே. ஆனால் தாங்கள் உருவாக்கிய நிறுவனங்களிலிருந்தே வெளியேற்றப்பட்டு சிவன் கோவில் முன்னால் மாரடைப்பு ஏற்பட்டு வீழ்ந்து கிடந்த கத்தோலிக்க இறையியலாளர்கள் குறித்து அதிகமாக வெளியே தெரியாது.” உத்தரகாசியில் சிவன் கோவில் முன்னால் மாரடைப்பால் வீழ்ந்து பிறகு பத்து மாதங்களுக்கும் குறைவாக ஜீவித்திருந்த அந்த துறவியின் பெயர் Henri le Saux என்கிற அபிஷிக்த்தானந்தா. இந்திய மதங்களின் வெளி அமைப்புகளை கிறிஸ்தவமயமாக்க பூரண கிறிஸ்தவ நம்பிக்கையுடனும் ஹிந்து தத்துவங்கள் குறைபாடுடைய கிறிஸ்துவில் மட்டுமே பூரணமடையக்கூடியவை எனும் நிச்சயத்துடனும் களம் இறங்கியவர் அவர். பல ஹிந்து புனித இடங்களில் எவரும் அறியாமல் ஹிந்து துறவி வேடம் பூண்டு சென்று “ஹோலி மாஸ்” நடத்தியவர். ஒரு கிறிஸ்தவ ரமணரை உருவாக்கும் புராஜெக்ட் கூட கைவசம் இருக்கிறது. ஆனால் அவரை அறியாமலே அவர் அத்வைத அனுபவத்துக்காக ஏங்க ஆரம்பிக்கிறார். தம் வாழ்வின் இறுதிக்கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கும் அவர் ஒரு முக்கியமான கேள்வியை சென்றடைகிறார்: “முடிவில்லாத அந்த ஒன்றை ஒரே ஒரு ஒற்றை வெளிப்படுத்துதலில் நாம் அடக்கிக்கொள்ள முடியுமா?” இறுதியாக அவரால் அடக்க முடியாத ஒரு விஷயம் அவரிலிருந்து வெளிவருகிறது “எவன் தன் சுயானுபவத்தில் ஆத்மாவை அனுபவிக்கிறானோ அவனுக்கு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையோ, சபையோ, பிரார்த்தனையோ தேவையில்லை.” சுத்த அத்வைத நிலையை அடையத் தடையாக அமையும் நாமரூபங்களில் அவர் சர்ச்சையும் ஏசுவையும் கூட சேர்க்க தயங்கவில்லை. ஆனால் இறுதி வரை அவர் கிறிஸ்தவ சபையின் சடங்குகளை கைவிடவில்லை. அவரது அத்வைத அனுபவத்தை சீதாராம் கோயல் கடுமையாக விமர்சித்திருக்கிறார். பரிதாபத்துக்குரிய சுய ஏமாற்று என்று கூட சொல்லியிருக்கிறார். சுவாமி சிதானந்தர் அவரது அத்வைத அனுபவம் உண்மையான அனுபவமே என்கிறார். ஆனால் இன்றைய திருச்சி சாந்திவனத்தில் அபிஷிக்த்தானந்தா அல்ல, எவ்வித ஆன்மிக நாட்டமும் இல்லாமல் முழுக்க முழுக்க கிறிஸ்தவ-மற்றும் மேற்கத்திய உயர்வு மனப்பான்மையுடன் செயல்பட்டவரும் ஓரளவு அவருடன் மோதியவருமான மறைந்த  Bede Griffiths தான் முக்கிய ஆளுமையாக மதிக்கப்படுகிறார்.

அடிப்படையில் நம் எண்ணங்களில் நேர் எதிரான கருத்தாக்கங்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டன்

 

 

அன்புள்ள அரவிந்தன்,
நான் எழுதிய முதல் கடிதத்தில் சொன்ன சிலவற்றையே மீண்டும் கோடிட்டு காட்ட வேண்டியதுள்ளது என நினைக்கிறேன்.

1. கத்தோலிக்க திருச்சபை கலாச்சாரமயமாக்கலின் எதிரி அல்ல. ஆனால் கலாச்சாரமயமாக்கலோ அல்லது கத்தோலிக்கத்தின் பெயரில் நடத்தப்படும் வேறெந்தவொரு ஆன்மீக முயற்சியுமோ இயேசுவின் போதனைகளுக்கோ அல்லது திருச்சபையின் நம்பிக்கைகளுக்கோ பாதகமானதாக விளங்குமானால் அதை திருச்சபை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதை எந்த மதமும் ஏற்றுக்கொள்ளாது.
உங்களின் முக்கிய உதாரணமான டி மெலோவுக்குச் செல்வோம். நீங்கள் அனுப்பியிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை படிக்கவும். குறிப்பாக அந்த முதல் பத்தியை.

His works, which almost always take the form of brief stories, contain some valid elements of oriental wisdomThese can be helpful in achieving self-mastery, in breaking the bonds and feelings that keep us from being free, and in approaching with serenity the various vicissitudes of life.  Especially in his early writings, Father de Mello, while revealing the influence of Buddhist and Taoist spiritual currents, remained within the lines of Christian spirituality.  In these books, he treats the different kinds of prayer: petition, intercession and praise, as well as contemplation of the mysteries of the life of Christ, etc.

”டிமெலோவின் எழுத்து ‘கிழக்கின் ஞானத்தின் சில நியாமனான கூறுகளைக் கொண்டுள்ளது’ அவை சுய மேம்பாட்டையும், விடுதலையுணர்வையும், சமநிலையுடன் வாழ்வின் பல்வேறு சவால்களையும் சந்திக்கும் திறனையும் தரக்கூடியவை.”
இப்படிச் சொல்லும் ஒரு கடிதம் பிற ஞானங்களை ஏற்றுக் கொள்ளாததும் inquisitionக்கு இணையானதுமாய் உங்களால் வர்ணிக்கப்படுவது நியாயமானதல்ல. தாவோயிசத்தின், பௌத்தத்தின் உட்கூறுகளை கிறீத்துவ நம்பிக்கையின் எல்லைக்குள் பொருத்திக் கொள்வதை இங்கு யாரும் எதிர்க்கவில்லை. அது வரவேற்கப்படுகிறது. டி மெலோ பல இடங்களில் எல்லைகளை விட்டு விலகித்தான் செல்கிறார். இவை அந்தக் கடிதத்திலேயே பட்டியலிடப்படுகின்றன.
நீங்கள் அந்தக் கடிதத்தில் இல்லாத வார்த்தைகளை அதில் நுழைக்கப் பார்க்கிறீர்கள். அந்தக் கடிதத்திலுள்ளவை இந்த நூற்றாண்டுகளுக்கான வார்த்தைகள்தாம் . பழைய நூற்றாண்டுகளின் வார்த்தைகளைக் கொண்டு அதை மீள்வாசிப்பது சரியானதுதானா? அதுதான் உரையாடலுக்கு களமமைக்குமா? நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப பழைய நூற்றாண்டு விஷயங்களை இன்குயிசிஷன், பாகனீய அழிப்பு எனக் கையாளுகிறீர்கள் ஆனால் நான் அதே கூறுகளை இந்து மதத்தில் சுட்டிக்காட்டும்போது நீங்கள் அதெல்லாம் பழசு என்கிறீர்கள்.
தன் நம்பிக்கைக்கு பாதகமான, நம்பிக்கையை விட்டு விலகி மற்றொரு புதிய நம்பிக்கையாகவே நிற்கும் இன்னொரு நம்பிக்கையை கத்தோலிக்கம் ஏற்றுக்கொள்ள வேண்டியதே இல்லை. எந்த மதமும் அப்படி ஒன்றை ஏற்றுக்கொள்வதில்லை.

2. ஆந்தனி டி மெலோ உயிரோடிருக்கையில் அவர் துன்புறுத்தப்படப்பட்டார் என்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். எந்த ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு இது. அவரின் இறப்புக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னரே டிமெலோவின் ஆன்மிகம் குறித்த நீங்கள் குறிப்பிட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டி மெலோ உயிரோடிருந்தவரை ஒரு மாபெரும் ‘கத்தோலிக்க’ ஞானியாக கொண்டாடப்பட்டார். இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் , ஸ்பெயினிலும்கூட..

3. போன கடிதத்தில் நான் குறிப்பிட்ட ஒன்றை முழுமையாகச் சொல்லாமல் விட்டுவிட்டேன். இலங்கைப் பாதிரியார் கலாச்சாரப்படுத்தலுக்கு மறுப்புக் கட்டுரை எழுதியிருந்தார் என்றேனே அவர் கிறீத்துவ மதிப்பீடுகளில் நம் மக்களை வளர்ப்பதில் நாம் முழுக்கவனமும் செலுத்தவேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார். கிறீத்துவம் ஒன்றும் வறண்ட உயிரற்ற ஆன்மிகமல்ல முதலில் நம் மக்கள் அதையே உணர்ந்து கொள்ளாத போது வேறெந்த கலாச்சாரத்தை அவர்களுக்கு உணர்த்துவது? என்பது அவரின் பக்கம்.

உங்களின் தற்போதைய கடிததுக்கு வருவோம்
”கிறிஸ்தவத்தை அதன் மேம்போக்கான சடங்குகளுக்கு இந்திய சூழல் பெயர்களை அளிப்பதும், அதன் உள்ளார்ந்த ஆன்மிகக்குறியீட்டை அழித்து அங்கே கிறிஸ்தவ இறையியலை புகுத்துவதும் உரையாடல் அல்ல என நான் நினைக்கிறேன்.”
”ஒரு கிறிஸ்தவர் இந்தியப்பண்பாட்டு அம்சங்களை தமது வழிபாட்டில் பயன்படுத்த விளைந்தால் அதனை தடுக்க எனக்கு எவ்வித உரிமையும் இல்லை. அப்படி தடுக்க நினைப்பது ஒரு கீழ்மையான எண்ணமும் கூட.”

எந்த ஒரு மதச் சடங்கின் பின்னாலும் இரு ஓட்டங்கள் இருக்கின்றன. ஒன்று வேதாந்தம் இன்னொன்று தத்துவம். வேதாந்தம் கடவுளை, கடவுளரை, கட்வுள் நம்பிக்கையை அந்தச் சடங்கோடு சம்பந்தப்படுத்துகிறது. தத்துவம் மனிதனை , மனிதத்தை, மரபை கலாச்சாரத்தை அந்தச் சடங்கோடு தொடர்புபடுத்துகிறது.

சரஸ்வதி பூஜையை எடுத்துக்கொள்வோம். அதன் இறையியலில் சரஸ்வதி கல்வியே தெய்வ வடிவானவளாக நிற்கிறாள். அதன் தத்துவம் கல்வி மனிதனுக்கு வழிபடத் தகுந்த அளவுக்கு முக்கியமானது என உணரச் செய்வது. தீபாவளியை எடுத்துக்கொள்வோம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பல்வேறு காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் மறைவுக்காக, இராமன் வெற்றியுடன் திரும்பியமைக்காக, மகாவீரர் ஞானம் பெற்ற தினமாக சீக்கியர்களுக்கு ஒரு காரணம், நேபாளில் பௌத்தர்கள் கூட தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இந்த மாபெரும் இந்திய கலாச்சார நிகழ்வுக்குப் பின்னணியில் பல இறையியல்கள் உள்ளன ஆனால் அங்கே இருப்பது ஒரே மானுட தத்துவம்தான்… அது தர்மத்தின் வெற்றியை, ஞானத்தின் வெற்றியை, இருளின் மீது ஒளி கொண்ட வெற்றியை கொண்டாடுகிறது. இந்த தத்துவ தரிசனங்களையே கிறீத்துவர்கள் எடுத்தாள வேண்டும் என்கிறேன். இதற்கு யாரும் மறுப்பு சொல்லவே முடியாது.நீங்களே சொல்வதுபோல இதை மறுப்பது கீழான எண்ணமும்கூட
தீபாவளி என்பது இயேசு லூசிபரை வென்ற நாள் என கத்தோலிக்க திருச்சபை கொண்டாடலாம். ஆனால் அதைத்தான் இந்தியாவில் தீபாவளி எனக் கொண்டாடிவருகிறார்கள் எனச் சொல்லுமேயானால் அது மிக மிக தவறானது.தற்போதைய சிரியன் கிறீத்துவர் விவகாரத்தில் கிறீத்துவச் சடங்குமுறைதான் இந்துக்களால் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது எனக் கூறியிருப்பது ஆதாரமற்றது, கண்டிக்கத்தக்கது.

பெரியவர்களை மதிப்பது நமது கலாச்சாரத்தின் முக்கியக் கூறு. ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன்பு இந்துக்கள் பெரியவர்களின் ஆசியை நாடுகிறார்கள். இது செயல்படுத்தப்படும் விதம் பல்வேறாக உள்ளது. பிராமணர்கள் சாஷ்டாங்கமாக விழுகிறார்கள். கிறீத்துவர்கள் முழங்காலிட்டு நிற்க பெரியவர்கள் வந்து அவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமிடுகிறார்கள். அடிப்படை மானுட சிந்தனை, தத்துவம் ஒரேமாதிர்யாயிருக்க அதன் செயல்படுத்தும் வடிவங்கள் மாறியிருப்பதைக் காணலாம்.
இது போன்ற கலாச்சாரமயமாக்கலை கத்தோலிக்க கிறீத்துவர்கள் சிரத்தையுடன் செய்துவருகிறார்கள். பல பிரிவினை சகோதர கிறீத்துவர்களும்(ப்ராட்டஸ்டான்ட்) இதை வன்மையாக எதிர்க்கிறார்கள், ஏன் பல கத்தோலிக்கர்களுமே சில பழக்கங்களை பின்பற்றுவதை எதிர்க்கிறார்கள். இவை இன்றோ நேற்றோ ஏதோ ஒரு சாமியாரின் இராக்கனவில் உதித்துவந்த மதமாற்ற யுக்திகள் அல்ல. பல காலங்களாய் நம் இந்திய கலாச்சாரத்தின் விழுமியங்களாக நம் மக்களின் வாழ்கைமுறையில் ஒட்டி வந்தவைதான். தட்டிப்பறிக்கவும் விட்டுக்கொடுக்கவும் இது யார்  வீட்டு சொத்தொன்றும் அல்லவே?

புது வருடத்தன்று நள்ளிரவில் கோவிலுக்கு செல்வது எனக்குத் தெரிந்தமட்டும் ஒரு கிறீத்துவப் பழக்கமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது சென்னையில் மட்டுமேனும் இந்துக்குகள் பலரும் நள்ளிரவு கோவிலுக்குச் செல்கிறார்கள். இல்லை இல்லை இது கிறீத்துவ கலாச்சாரத்தை hijack செய்யும் வேலை என யாரும் கூறிவிட முடியாது.
இந்துக்களும் கிறீஸ்துமஸ் கொண்டாடுகின்றனர் என்பதை பலமுறை உயர்வாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல விஷயம்தான். ஆனால் அப்படி கிறீஸ்துமஸ் கொண்டாடும் இந்து தான் வணங்கும் பல்லாயிரம் தெய்வங்களில் ஒன்றாகத்தான் இயேசுவைக் காண்கிறானேயன்றி அவன் இஸ்ரேயலின் மரபில் வந்து உலகையே இரட்சிக்க வந்த மெசியா இயேசுவின் பிறப்பைத்தான் கொண்டாடுகிறான் என்று சொல்லிவிட முடியுமா. அதில் அவன் காணும் இறையியல் ஒரு கிறீத்துவன் கானும் இறையியலை விட முற்றிலும் வேறானது.

பெரிய நாயகி என்பது ஒரு காரணப் பெயர். அது உணர்த்துவது பெண்ணின் கடவுள் வடிவமென்று எதைவைத்துச் சொல்வது? மரியாள் வெறும் புனிதை மட்டுமல்ல அவளுக்கு கத்தோலிக்க கிறீத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் ஒன்று உள்ளது. அவள் ‘மீட்பின் வரலாற்றின் நாயகியே’ அவளுக்கு ஆயிரம் பெயர்கள் உள்ளன. பெரிய நாயகின் என்பது மிகச்சாதாரண பெயர். Queen of love, Queen of mercy, Queen of peace, Queen of angels, Queen of patriarchs and prophets, Queen of apostles and martyrs, Queen of confessors and virgins, Queen of all saints, Queen conceived without original sin, Queen assumed into heaven, Queen of all the earth, Queen of heaven, Queen of the universe. இன்னும் எத்தனையோ பெயர்கள், ப்ராட்டஸ்டண்டுகள் வெறுத்தோடுமளவுக்கு மரியாளுக்கு கத்தோலிக்க கிறீத்துவ இறையியலில் இடமுள்ளது என்றால் ‘பெரிய நாயகி’ எனும் பெயர் எம்மாத்திரம்?.
கலாச்சாரம் எடுத்தாளப்படும்போது அதன் பழைய வடிவிலேயே, அப்படியே எடுத்தாளப்படவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அது தேவையில்லை என்பதற்கு இந்து மதமே மாபெரும் சான்று. இந்திய கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை வியந்தேற்றும் நீங்கள் அதை மாற்று மதத்தினர் உட்கொண்டு கையாளும்போது சந்தேகத்தோடே அணுகுகிறீர்கள். அதை தாராளமனதுடனும் பெருந்தன்மையுடனும் அணுகிவிடவில்லை என்பதே உண்மை. அதுவே சரியானதும்கூட. இல்லையென்றால் தெய்வநாயகம்போன்றோர்களை கட்டுக்குள் வைத்திருப்பது கடினம். இந்த வருடம் முதல் திருப்பதியில் கிறீஸ்துமசுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுமானால் நானும் அதை சந்தேகத்தோடுதான் பார்ப்பேன்.
’பெரிய நாயகி’ பெயர்சூட்டுதலை கத்தோலிக்க திருச்சபை மதம்மாற்றும் ஒரு மோசடி நோக்கில் செய்வதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மரியாளுக்கு சேலை கட்டுவது கொடிமரங்களைச் சுற்றிவருவது, முழங்காலில் சுற்றிவருவது, சபரி மலைக்கு செல்வது போலவே வேளாங்கண்ணிக்கு மாலையிடுவது, உப்பு மிளகு தருவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கலாச்சார உள்வாங்கல்கள் பொதுமக்களால் தாமாகவே உருவாக்கப்படுகின்றன நடைபெறுகின்றன. முன்பே குறிப்பிட்டதைப்போல கிறீத்துவ நம்பிக்கைகளின் எல்லைகளுக்குள் இவை நின்றுவிட்டால் போதுமானது அதை யாரும் எதிர்ப்பதில்லை. அப்படித்தான் உருவாகின்றன இவற்றில் பலவும்.

சுடலை மாடன்  இன்னும் தெய்வம்தானே என்கிறீர்கள். உண்மைதான். நல்லதுதான். மாடன் வலுவான உதாரணம் இல்லைதான். ஜெயமோகனின் மாடன் மோட்சத்தைவைத்தே அந்த உதாரணத்தை கையெடுத்தேன். ஆனால் விஷ்ணுபுரத்தில் இந்து மதம் எப்படி சிறுதெய்வங்களை நேரடியாக பழங்குடியினரின் பெருந்தெய்வங்களாகவே மாற்றியது என்பதைச் சொல்லியிருக்கிறார் ஜெ. என்னோடுடனான தனிப்பட்ட உரையாடலிலும் அவர் அப்படி குறிப்பிட்டது நினைவில் உள்ளது. ஒரே கடவுளுக்கு இத்தனை வடிவமும் கதைகளும் வரலாறும் உருவானது இத்தகைய உள்வாங்கலால்தான் நடந்திருக்க இயலுமில்லையா? அந்த பழங்குடி தெய்வங்கள் யாரென்றே இன்று தெரியாமல் போனதில்லையா? ஆக மாடன் தற்போதைக்கு தப்பித்தார் எனக் கொள்ளலாமா?

சொன்னதையே திரும்பத் திரும்பா சொல்வதுபோலத் தோற்றமளிக்கிறது… இருப்பினும்..

  1. தனது நம்பிக்கை வட்டத்துக்குள் நடக்கும் எந்தவொரு கலாச்சாரமயமாக்கலையும் கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பதில்லை. சொல்லப்போனால் அதை தேடிச் சென்று உள்வாங்குகிறது. இது மதமாற்ற நோக்கில் என நீங்கள் நம்புகிறீர்கள் இது கலாச்சார நோக்கில் என்று நான் நினைக்கிறேன். நம் இருவருக்குள்ளும் இந்த அடிப்படை வித்தியாசம் இருப்பதால்தான் இந்த உரையாடலே என நினைக்கிறேன்.
  2. 2. மதச்சடங்குகளுக்குள் இரு வேறு ஓட்டங்கள் உள்ளன ஒன்று மதம் சார்ந்தது, இறை சார்ந்தது இன்னொன்று மானுடம் சார்ந்தது. இந்த மானுடம் சார்ந்த தத்துவ தரிசனத்தையே நான் கலாச்சாரம் என்கிறேன். மற்றவை யாவும் குறியீடுகளேயன்றி வேறில்லை. இந்த மானுட தத்துவ தரிசனத்தைக் காட்டும் வேறொரு குரியீட்டை உருவாக்க யாருக்கும் தடை இல்லை. இந்துமதமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தீபாவளிக்கு சாமி கும்பிட வேண்டும் என நம்பிக்கை இருக்கிறாதென்றால் அவரவர் அவரவர் சாமியைத்தான் கும்பிடுகிறார்கள். தீபாவளிக்க்கு கடவுளை வழிபட வேண்டும் என்பது ஒரு மானுட தரிசனம். ஐயப்பனையோ, முருகனையோ, வினாயகரையோ சிவனையோ கிருஷ்ணனையோ வழிபடுதல் வெவ்வேறு குறியீடுகள். இதில்  என்னது மட்டுமே உயர்ந்ததென்றோ, முதன்மையானதென்றோ மற்றவை இழிவானதென்றோ கொண்டாட யாருக்கும் உரிமையில்லை.
  3. 3. கலாச்சாரமயமாக்கலை திருச்சபை ஒரு தந்திரச் செயலாக நடத்திவருகிறது என நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். நான் அது இயல்பான ஒன்றாய் அனுமதிக்கப்படுகிறது எனச் சொல்கிறேன்.

நான் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வ குரல் அல்ல. இங்கே நான் முன்வைக்கும் எல்லா கருத்துக்களும் எனது சொந்த கருத்துக்களே என்பதை தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை என நினைக்கிறேன்.

உரையாடலுக்கான களாம் மதங்களுக்கிடையே தேவையில்லை என நினைக்கிறேன். மானுடர்கள் உரையாடினால் போதுமானது. மதங்களின் உரையாடல் ஒரு பொய்யான தளத்திலேயே நடைபெற இயலும். மதங்கள் ஒன்றை ஒன்று சகித்துக் கொள்ளலாமே அன்றி நம்பிக்கை என வந்தபின்பு மதித்து வரவெற்று உரையாட அங்கே ஒன்றுமேயில்லை. நாம் தொடர்ந்து உரையாடுவதில் எனக்கு மகிழ்ச்சியே.

அன்புடன்
சிறில்

அன்பின் சிறில் அலெக்ஸ்,

முதலில் பெரியநாயகி விஷயத்தை முடித்துவிடுகிறேன். நாயகி என்பது மணப்பெண் என பொருள் படும். இறைவனின் மணவாட்டியாக மேரியை கத்தோலிக்க மரபு முன்வைப்பதில்லை. தமிழ்நாட்டில் முக்கிய தலங்களான திருவண்ணாமலை (தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவில்), தஞ்சாவூர் (புராதனவனேஸ்வரர் கோவில்), பழனி (உபகோவில்), சீர்காழி (தோணியப்பரர் இங்கே பெரியநாயகி சமேதராக காட்சி அளிக்கிறார்) காஞ்சி, திருஆப்பாடி(பால் உகந்த ஈஸ்வரர், பெரியநாயகி) ஆகிய இடங்களில் சிவனின் துணைவியாக காலங்காலமாக தமிழர்கள் பெரியநாயகியை வழிபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் இப்பெயரை கத்தோலிக்க தாய் புனிதருக்கு பயன்படுத்துவது எத்தனை அபத்தமானது என்பது தெரிந்திருக்கும் என நம்புகிறேன். கத்தோலிக்க மக்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபடும் அளவுக்கு பண்பாட்டு பிரக்ஞை இல்லாதவர்கள் என நான் கருதவில்லை. இதி கீழிருந்து பரிணமித்து எழும் மக்கள் பண்பாட்டு இயக்கமும் இல்லை. திருவிதாங்கோட்டிலோ அல்லது புளியாள் கிராமத்திலோ மேரிக்கு பெரியநாயகி என அபத்தமாக பெயர் சூட்டியது மக்களாக இருக்கமுடியாது அரைகுறையாக inculturation குறித்து படித்து அதனை பயன்படுத்த துடித்த இறையியல் போதகர்களாகவும் அருளப்பா போன்ற பிஷப்புகளுமாகவே இருக்கவேண்டும்.

 

சபையை இறைவனின் மணவாட்டியாக முன்வைப்பதும் கூட ஒரு ஆணிய பக்தி மார்க்க மரபுகள் சார்ந்த அடங்கி நடக்கும் மணவாட்டியாகத்தான் என்பதை இங்கே நினைவுப்படுத்தலாம் (வைணவத்திலும் சில சைவ பக்தி நிலைகளிலும் போல) ஆனால் சிவ-சக்தி மண உறவு அதனைக்காட்டிலும் தொன்மையான ஆதாரமான ஒரு ஆண்-பெண் உறவினைக் காட்டுவதாகும். அதற்கு கிறிஸ்தவ இறையியலில் இன்றைய தேதியில் இடம் இருக்கிறதா அல்லது விவிலிய பெண்ணியத்தில் இடம் இருக்கிறதா என்பது கேள்விக்குரியதே ஆகும்.  “இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம் அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினன் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை” என்று சொல்லும் நிலைக்கு மேற்கத்திய இறையியல் வளர இன்னும் சில நூற்றாண்டுகளாவது பிடிக்கும். அதற்கு பல டி மெல்லாக்கள் கண்டனங்கள் பெற வேண்டி இருக்கும்.

இரண்டாவதாக மேரி – “சிறு தெய்வங்கள்” இத்யாதி குறித்து. முதலில் இந்த “சிறுதெய்வங்கள்” என்ற கோட்பாடே தவறானதென கருதுகிறேன். வட்டாரத் தெய்வங்கள் என்பது சரியாக இருக்குமென நினைக்கிறேன். அடுத்து இந்த வட்டார தெய்வங்கள் வழிபாட்டுடனான உறவாடுதலானது இந்து பண்பாட்டில் கிறிஸ்தவ இறையியலைக் காட்டிலும் அதிக நெகிழ்ச்சியும் குறைவான அல்லது முழுமையாக இல்லாத வன்முறையைக் கொண்டதாக அமைந்துள்ளது என்பதையும் காண்கிறேன். ஏனெனில் இந்திய பெண் தெய்வங்கள் ஏறக்குறைய அனைத்து அதீத மானுட உணர்ச்சிகளையும் முன்வைத்து அதி-மானுட அல்லது இறை நிலையை அடைகிறார்கள்.

 

ஆனால் மேரியை பொறுத்தவரையில் அவர் மூலம் கத்தோலிக்கச்சபை முன்வைப்பது ஒரே ஒரு உணர்ச்சியையே அது கீழ்படிதல். யூத ஏவாளின் கிளர்ச்சிக்கு எதிர்மறையாக கச்சிதமாக வைக்கப்படும் ஒரு பெண் பிம்பம் மேரி. நீங்களே இதை சொல்லியிருக்கிறீர்கள். பூமி சார்ந்த ஆன்மிகத்தின் குறியீடான சர்ப்பத்தின் ஏவலால ஏவாளின் கிளர்ச்சியால் அடங்கமறுத்தமையால் ஏற்படும் ஆதிபாவத்துக்கு கழுவாயாக ஒரு யூத கன்னிப்பெண் “இதோ உம் அடிமை” என வான் உறையும் ஆண் தெய்வத்தின் ஆண் குழந்தைக்காக ஆண் தேவதூதன் முன் மண்டியிடும் பிம்பம். ஆனால் இந்த பிம்பத்தினை முன்வைத்து செயல்படுத்தப்படும் கத்தோலிக்க இறையியலில் மேரி பெரும்பாலும் சகித்துக்கொள்ளப்படும் பெண் புனிதராகவே இருக்கிறார்.

 

மேரி என்றாலே வெறுத்தோடுவதற்கு நீங்கள் புரோட்டஸ்டண்டுகள் வரை செல்லவேண்டாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க இறையியல் கல்லூரியில் ஒரு இறையியலாளர் அடித்த ஜோக் இது: “யூத ஆலயத்துக்கு சென்று திரும்பும் போது ஏசுவை காணவில்லை என்றவுடன் அவரது பெற்றோர்கள் என்ன செய்தார்கள்” என்று அவர் கேட்டாராம். அதற்கு ஒரு கிராமத்து மாணவன்  எழுந்து சொன்னானாம், “அய்யா அவர்கள் அரோக்கியமாதா கெபியில் விளக்கேற்றி ஏசு கிடைக்க பிரார்த்தனை செய்தார்கள்” என்று. இந்த அளவு நம் மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்” என்றார். கடவுளை விட நம்மக்கள் பக்தனுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

 

இதே விஷயத்தை இன்னொரு விதமாக இராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லுகிறார்: “கடவுளான இராமருக்கு கடலை கடக்க பாலம் தேவைப்பட்டது. ஆனால் அவரது பக்தரான அனுமானுக்கு இராமநாமத்தை சொல்லியபடியே கடக்க முடிந்தது.” கடவுளை என்கிற external reality ஐ விட பக்தி அல்லது பக்தியின் குறியீடாக விளங்கும் மானுடத்தின் internal reality க்கு அதிகம் மதிப்பு கொடுக்கும் இந்திய மனதின் போக்கு கத்தோலிக்கத்துக்கு பிரச்சனையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாரத பிரக்ஞையில் இந்த tension ராம-ஆஞ்சநேய யுத்தம் என்கிற கதையாடலாக மாற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கதையாடல்கள் நாட்டார் வழக்கு ஏசு கதைகள் ஐரோப்பாவில் இருக்கின்றன என நான் அறிவேன்.

 

உதாரணமாக இத்தாலிய நாட்டுப்புற கதையான ஏசுவுக்கு உணவளித்த ஒரு சூதாடியின் கதை. ஆனால் அவற்றுக்கு என்றைக்குமே சபை அங்கீகாரம் கிடைக்காது விளிம்பு நிலைகளில் மட்டுமே வழங்கப்பட்டு அழியும் யாராவது அதீத ஆர்வம் கொண்டு அதை பதிவு செய்து வைத்தால் ஏதாவது ஒரு இடத்தில் பதிவாகி காத்திருக்கும். இங்கு அவ்வாறல்ல. இதைத்தான் கத்தோலிக்கம் உள்வாங்க வேண்டும் என நான் கருதுகிறேன். (அப்படி கருத நான் யாரென கேட்கலாம். நானே அதைக் கேட்டுக்கொள்ளவும் செய்கிறேன்.)

மூன்றாவதாக ஆண்டனி டி மெல்லா தனது வாழ்க்கை காலத்தில் நிறுவன சபையால் கஷ்டப்பட்டாரா இல்லையா என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. அவரது சாதனா நிலையம் பூனாவிலின் முக்கிய இறையியல் கல்லூரியிலிருந்து மற்றொரு நகருக்கு மாற்றப்பட்டதும், அவரது கல்லறையிலிருந்து பெயர்பலகை அகற்றப்பட்டதுமெல்லாம் நிர்வாக குளறுபடிகள் அல்லது நமது அரசியல்வாதிகள் அதிகாரிகள் மாற்றங்கள் குறித்து சொல்வது போல “வழக்கமான நிர்வாக செயல்பாடுகள்” என்பதாகவே இருக்கும் என நம்பவே ஆசைப்படுகிறேன்..

 

மற்றபடி நீங்கள் டி மெல்லாவின் மறைவுக்கு பின்னர் அவரை கண்டனம் செய்யும் அறிக்கையின் தொடக்க நல் வார்த்தைகளை வைத்து அக்கடிதத்தை எடை போடுவது சரியல்ல என நினைக்கிறேன். பொதுவாகவே ‘பெரிய மனிதர்கள்’ யாரையாவது வேலையை விட்டு நீக்கும் முன்னால் அல்லது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முன்னால் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள் “நீங்க நல்லவருதான்…நீங்க நல்லது நினைச்சுதான் செஞ்சிருப்பீங்கன்னு தெரியும்…. ஆனால்….”  எனவே அந்த கடிதம் முழுவதையும் படியுங்கள் போக போக அதில் ஏறும் கடுமையையும் இறுதியில் அது கொடுக்கும் தீர்ப்பையும் பாருங்கள்…

 

” a progressive distancing from the essential contents of the Christian faith” என்பது மிகவும் மென்மையாக ஆரம்பிக்கும் கண்டனம் பிறகு இப்படி போகிறது, “This radical apophaticism leads even to a denial that the Bible contains valid statements about God.  The words of Scripture are indications which serve only to lead a person to silence.  In other passages, the judgment on sacred religious texts, not excluding the Bible, becomes even more severe: they are said to prevent people from following their own common sense and cause them to become obtuse and cruel.  Religions, including Christianity, are one of the major obstacles to the discovery of truth.”

 

பிறகு இப்படி முடிகிறது, “With the present Notification, in order to protect the good of the Christian faithful, this Congregation declares that the above-mentioned positions are incompatible with the Catholic faith and can cause grave harm.” மேலும் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ள Congregation for the doctrione of the faith உள்ளபடியே 1907 க்கு முன்னால் Congregation for Universal Inquisition என்றுதான் அழைக்கப்பட்டது (இதனை கத்தோலிக்க இணையதளங்களிலேயே நீங்கள் உறுதி செய்துக்கொள்ளலாம்: http://www.catholic-hierarchy.org/diocese/dxcdf.html)

இறுதியாக நம்பிக்கைகளை சகித்துக்கொள்ளத்தான் முடியுமா சிறில்? அவை நம்பிக்கைகளாகவும்தான் இருக்க வேண்டுமா? ஒரு சிறிய உண்மைக்கு எதிரானது ஒரு பொய்யாக இருக்க முடியும் ஆனால் ஒரு பெரிய உண்மைக்கு எதிர்ப்பதம் மற்றொரு பெரிய உண்மை என்றார் நெய்ல்ஸ் போர் நுண்ணலகு இயற்பியல் காட்டும் பிரபஞ்ச தரிசனம் குறித்து பேசும்[போது. இன்றைக்கு இறை நம்பிக்கைகளை தாண்டி தத்துவதரிசனங்களோடு பேசும் தன்மை நம் மதங்கள் அனைத்துக்கும் வந்துவிட்டன என நான் கருதுகிறேன்.

 

ஜேகே யோ ஓஷோவோ அல்லது டி மெல்லாவோ நாம் மதம் உதிர்ந்த ஆன்மிகத்தை பகிர்ந்து கொள்ள முடியும்தான். துரதிர்ஷ்டவசமாக சில குறுகிய மனமும் அதிகார பசியும் கொண்டவர்களால் நாம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்தான். கத்தோலிக்க இன்க்விசிஷனோ அல்லது மனு ஸ்மிருதியோ அல்லது கல்லாலடிக்கும் ஷரியத்தோ மீண்டும் எழுந்து வராமல் இருக்க அந்த விழிப்புணர்வு அவசியம்தான். ஆனால் அவற்றை மீறி சகிப்புத்தன்மை அல்ல பரஸ்பர மரியாதையை நாம் நம் கொண்டிருக்கும் பன்மை தரிசனங்களின் மீது காட்டமுடியும்.

அன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

 

அன்புள்ள அரவிந்தன்,
உங்களுக்கு கிறீத்துவ இறையியல் உவப்பானதாயில்லை. அது தட்டையானதாகவும், பெண்ணை அடிமை செய்வதாயும், பன்முகத்தன்மையே இல்லாததாயும் தெரிகிறது. மரியாளை விண்ணரசியாகக் கொண்டாடுகிறார்கள் எனச் சொன்னாலும் அவள் பெண்னின் கீழ்படிதலைத்தான் முன்வைக்கிறாள் என்கிறீர்கள். அவள் கீழ்படிந்தது கடவுளுக்குத்தான் கணவனுக்கல்ல என நான் சொன்னால் உடனே ‘ஆண்’ கடவுளுக்குத்தான் எனச் சொல்வீர்கள். அதற்கு சாதகமானதொரு இந்து மரபை எடுத்துக் காட்டுவீர்கள். பெண்ணை தெய்வத்துக்கெல்லாம் தாயெனப் பாடும் ஒரு பாடலை சுட்டிக் காண்பிப்பீர்கள் பெண்ணை அடிமை எனச் சொல்லும் வேத வரியையொன்றை நான் சுட்டிக்காட்டினால் இன்னொரு விளக்கம் தருவீர்கள்.

முன்பு நான் ‘புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்’ சிவனை வணங்காதவர்களை நிந்திக்கிறதே எனச் சொன்னதற்கு அது பக்தியின் வெளிப்பாடு என்றீர்கள் ஆனால் இன்று இன்னொரு செய்யுளை எடுத்துக்கொண்டு அது இந்து இறையியல் என்கிறீர்கள். இதை மறுக்கும் இன்னொரு செய்யுளை, சிவனே எல்லாவற்றிற்கும் தலையாயவன் என்கிற இறையியலை இந்துமதத்தில் நிச்சயம் காண இயலும். இவை வெறும் முரணியக்கங்களல்ல ஒரு காலத்தில் முரட்டு இயக்கங்களாயும் இருந்திருக்கின்றன. இன்றும் இந்த முரணியக்கங்கள் தங்களை இந்து எனும் குடையின் கீழ் கொண்டு இயங்குகின்றனவேயன்றி அவற்றினூடாக நீங்கள் கிறீத்துவத்தோடு நடத்த விரும்புகிற ‘உரையாடல்’ நடந்து கொண்டிருக்கிறதா, சாத்தியமா தெரியவில்லை. அந்த முரட்டு வரலாற்றை வெளியில் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இன்று உண்டு. உங்கள் தரப்பு எப்படியோ தெரியவில்லை.

உங்களுக்கு திருச்சபையின் பணியாட்கள் மீதும் நல்ல மதிப்பு இல்லை. இதனால் அவர்களை எப்போதும் சதிகாரர்களாகவும் மதமாற்றுபவர்களாகவும் காண்பீர்கள். அவர்கள் எந்த நூற்றாண்டின் வார்த்தைகளைச் சொன்னாலும் கறுத்த காலங்களுடனேயே ஒப்பிடுவீர்கள். அதற்கான நியாயங்களை உங்களுக்கு கற்பித்துள்ளீர்கள்.

இவற்றையெல்லாம் தாண்டியும் உரையாடலை நிகழ்த்தலாம் என்கிறீர்கள்.

முதலில் பெரிய நாயகி என்பது பெண்ணின் தெய்வ வடிவம் ஆகவே மேரிக்குப் பொருந்தாது என்றீர்கள். இப்போது அது மணவாட்டியை குறிக்கிறது அதனால் பொருந்தாது என்கிறீர்கள்.

இந்து இறையியல் என ஒரு ஒற்றைப் பரிமான இறையியல் ஒன்று இல்லை. இந்து இறையியலில் இருப்பது நெகிழ்தன்மையல்ல. அது பன்முகத்தன்மை மட்டுமே. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என நினைக்கிறேன். ஒரு ஒற்றைப் பரிமண இறையியல் நெகிழ்ந்து தருமேயானால் அதை நெகிழ்தன்மையுடையது எனலாம். இந்த பன்முகத்தரப்பைக் கொண்டு அதன் பன்முக ஆதாரங்களிலிருந்து நல்லவற்றை மட்டும் பிரித்தெடுத்து ஒற்றைப்பரிமாணத்தில் மட்டுமே இயங்குவதாய்  நீங்கள் நம்பும் ஒரு இறையியலை பல்வேறு குறைகளை குறிப்பிட்டு குறைத்துப் பேசுவது எளிதல்லவா?

நாம் ஒவ்வொன்றாகப் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் நம் நம்பிக்கைகள் வெவ்வேறானவை. அதைத் தாண்டிச் சென்ரு விவாதிப்பது கடினம். எனவேதான் நாம் நம்பிக்கை சார்ந்த உரையாடல்களை தவிர்ப்பதே நல்லது என நம்புகிறேன்.

ஆனால் என் தரப்பு ஜெயமோகனின் தரப்பை ஒத்துச் செல்கிறது, அதுவே இந்த மண்ணின் மரபானதொரு தரப்பு என நம்புகிறேன் . அது யார் எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் அது அமைதியின் வழியாக, மக்களின் நலன் பேணும் வழியாக இருந்தாலே போதும் என நினைக்கிறது. அந்த மரபு ஒன்றே பல தெய்வங்களை வழிபடுபவர்களையும் சகோதரர்களாக்குகிறது.

அந்த மரபினூடேயே கிறீத்துவம் ‘அதிக வன்முறையின்றி’ இந்த மண்ணில் காலூன்றியிருக்கும். அந்த மரபை நோக்கிச் செல்லும் கிறீத்துவ இணைப்பு முயற்சிகளை நான் வரவேற்கிறேன். அவை அதிகம் நிகழ வேண்டும் என நினைக்கிறேன். அந்த முயற்சிகள் நல்லெண்ணங்களோடு நடைபெற வேண்டும் என்று வேண்டுகிறேன். அப்படி நல்லெண்ணமற்ற எந்த முயற்சியையும் உங்களோடு சேர்ந்து எதிர்க்கிறேன்.

 

சிறில்

 

 

 

அன்புள்ள சிறில், அரவிந்தன்,

 

உங்களுடைய இவ்விவாதத்தில் நான் சொல்லவேண்டியதை முன்னரே சொல்லிவிட்டிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன். இங்கே மதங்கள் இருக்கின்றன, கோடிக்கணக்கானபேர் அவற்றை நம்புகிறார்கள். அவற்றையே தங்கள் வாழ்க்கையின் சாரமாகவும் சுய அடையாளமாகவும் கருதுகிறார்கள். இந்நிலையில் கேள்வி யார் இங்கே இருப்பது அல்லது யார் மேலே இருப்பது என்பதல்ல. அது சாத்தியமே அல்ல. அது வன்முறை, அவ்வன்முறையை நினைப்பவர்களுக்கும் அழிவைத் தரக்கூடியது.

 

ஆகவே இங்கே உள்ள கேள்வி அத்தனை சுய அடையாள உருவாக்கம், அமைப்புசார்ந்த இறுக்கம், கொள்கைகள் சார்ந்த பிடிவாதம், பிறனுருவாக்கம், அதன் விளைவான ஐயம் ஆகியவற்றுக்கு அப்பால் ஏதாவது உரையாடல் சாத்தியமா என்பதே.  ஆகவே எந்தவகையான உரையாடலும் நல்லதே. அது ஓர் பரஸ்பர புரிதலை உருவாக்குகிறது

 

உரையாடலுக்கு இன்னின்ன நிபந்தனைகள் உண்டு என்று சொல்வது முரட்டுத்தனமான பிடிவாதத்தையும் ஐயத்தையுமே காட்டுகிறது

.ஒருமதம், அதன் உறுதியான நம்பிக்கைக் கட்டமைப்பையும் தொன்மச்சங்கிலியையும் மீறி, அல்லது உதறி,  உரையாடலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதையே முரட்டுத்தனம் என்கிறேன். எந்த ஒரு புதிய விஷயத்தையும் தன்னுடைய தொன்மச்சங்கிலிக்குள் இணைத்துக்கொள்வதென்பது எந்த மதமும் செய்வதே. தன் மதத்தின் இறுக்கத்தை நெகிழ்த்தி  பிற மதம் ஒன்றின் நம்பிக்கைகளை, தொன்மங்களை,ஆசாரங்களை ஆராய ஒரு மதம் முயல்வதேகூட ஒரு பெரிய விஷயமாக மாறிவிட்டிருக்கிறது இன்று.

 

இருபது நூற்றாண்டுகளுக்கு முன் புத்தஜாதகக் கதைகள் உருவானபோது புத்தரின் அவதாரங்களாக ராமனும் கிருஷ்ணனும் உள்ளிழுக்கப்பட்டார்கள். ஆனால் அச்செயல்மூலமே வேதமரபை எதிர்த்த பௌத்தம் வேதமரபின் தத்துவ உச்சமாக இருந்த வேதாந்தத்துடன் ஓர் உரையாடலுக்கு முன்வந்தது. அதன் விளைவாகவே அதற்குள் யோகாசார பௌத்த மரபுகள் உருவாயின. பின்னர் அந்த யோகாசார ஞானமரபை தான் எடுத்துக்கொண்டு சங்கரர் வேதாந்தத்தை அத்வைதமாக ஆக்கினார்.

 

புத்த ஜாதகக் கதைகளை பௌத்தர்களில் தேரவாதிகள் ‘மலம்’ என்று நிராகரித்தனர். சங்கரரை வைதிகர்கள் ‘மாறுவேட பௌத்தன்’ என்று நிராகரித்தனர். மதத்தின் இறுக்கமான அமைப்புக்குள் நிற்பவர்களின் எதிர்வினை எப்போதுமே அப்படிப்பட்டதுதான்.

 

சைவமோ வைணவமோ எல்லாக்காலத்திலும் நெகிழ்தன்மை கொண்டவையாக இருந்ததில்லை. அவற்றின் அமைப்பும்  மிக இறுக்கமாகவே இருந்தது. ‘பரசமய கோளரி’ என்றுதான் சம்பந்தர் போற்றப்பட்டார். எவையெல்லாம் புறச்சமயம் என்று பட்டியலிட்டு அவற்றை ஒதுக்கி தங்களை ‘பாதுகாத்துக்கொள்ளவே’ சைவம் முயன்றது. வைணவமும் அப்படித்தான்

 

இன்றுக்கூட சைவ வைணவ மதங்களின் மையத்தில் ஒரு பகுதி அதே இறுக்கத்துடன்தான் இருக்கிறார்கள். உதாரணமாக நெல்லை ஆ.ஈசுவரமூர்த்திப்பிள்ளை எழுதிய கட்டுரைகளைக் காணலாம். அது சைவ அடிப்படைவாதம். ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் போன்ற இதழ்களைப் பார்த்தால் வைணவ அடிப்படைவாதத்தைக் காணலாம்.

 

பதிமூன்றாம் நூற்றாண்டில் நாயக்கர்களின் காலகட்டத்தில்தான் சைவ வைணவ உரையாடல் நாம் இன்று காணும் அளவில் ஆரம்பமாகியது. சைவக்கோயிலில் வைணவத்தையும் வைணவக்கோயிலில் சைவத்தையும் அவர்கள்தான் குடியிருத்தினார்கள். மத உரையாடலை அவர்கள் அதிகாரம் மூலம் கட்டாயப்படுத்தினார்கள். அப்போதுகூட அது எளிதாக நிகழவில்லை.

 

உதாரணமாக சிவபெருமானின் அடியையும் முடியையும் காண விஷ்ணுவும் பிரம்மாவும் சென்றார்கள், இருவராலும் காணமுடியவில்லை, விஷ்ணு தோற்றுப்போய் திரும்பிவந்தார் என்ற சைவக்கதை [திருவண்ணாமலைபுராணம்] வைணவர்களுக்கு எப்படி ஏற்புடையதாக இருந்திருக்கும்? பெரும்பாலான வைணவக் கதைகளில் அசுரர்களை அழிக்க முடியாமல் சிவபெருமான் ஓடிவந்து விஷ்ணுவிடம் முறையிடுகிறார். சைவர்கள் எப்படி அதை ஏற்பார்கள்?

 

ஆனால் காலப்போக்கில் உரையாடல் சாத்தியமாகியது. இன்றும் சைவமும் வைணவமும் இரண்டாகவே உள்ளன என்றாலும் கசப்புகள் இல்லை. இப்படித்தான் உரையாடல் நடக்க முடியும். அந்த உரையாடலை வைணவச்சதி என்றே ஈசுவரமூர்த்திப்பிள்ளை சொல்கிறார். சைவச்சதி என்றே பிரதிவாதி பயங்கரம் அண்ணாங்கராச்சாரியார் சொல்கிறார். ஆனால் அதையும் மீறி உரையாடல் நடந்தது.

வரலாற்றின்  தருணங்களும் வாய்ப்புகளும் எப்படியோ அதைச்சார்ந்தே உரையாடல் நடக்க முடியும். இப்படித்தான் உரையாடல் நடக்க வேண்டும், இதுதான் உரையாடல், பிற எதையுமே நிராகரிப்பேன் என்பதும் முரட்டுத்தனமே. அரவிந்தனின் மனநிலையை நான் முழுமையாகவே நிராகரிக்கிறேன். அது அவரது அச்சங்கள், மனச்சிக்கல்களை மட்டுமே பெரிதும் சார்ந்திருக்கிறது. மறுபக்கம் தன் கட்டமை ப்பில் எந்த மார்றத்துக்கும் தயாராக இல்லாமல் பிறரது நம்பிக்கை தொன்மம் வரலாறு ஆகியவற்றை ‘திருத்த’ முயலும் போக்கை ஆக்ரமிப்பாக மட்டுமே பார்க்கிறேன். இதுவே என் நிலைபாடு.

 

அந்த சாத்தியத்தின் மீதான நம்பிக்கையை மட்டுமே நான் என் எழுத்துக்கள் வழியாக முன்வைக்கிறேன்

 

ஜெ

 

 

அன்பின் ஜெயமோகன்,

என்னை நீங்கள் நிராகரிப்பதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் என் தரப்பினை தெளிவாக்க விரும்புகிறேன். நான் இந்த விவாத இழை முழுக்க உரையாடலுக்கு எவ்வித முன் நிபந்தனையும் வைக்கவில்லை.

எனக்கு நீங்கள் எதை உரையாடல் என சொல்கிறீர்கள் என்பது குழப்பமாக இருக்கிறது. உதாரணமாக திருவண்ணாமலை புராணமோ அல்லது சிவனை விஷ்ணு பக்தராக காட்டும் வைணவக் கதைகளோ பாடல்களோ சைவ-வைணவ உரையாடலின் ஒரு பகுதியாக இருந்திருக்க முடியாதல்லவா? இன்றைய சைவ-வைணவ சமரசத்தன்மையை உருவாக்கிய தளம் எது? “அரியும் சிவனும் ஒண்ணு” என்பது போன்ற வழக்கு மொழிகளை ஏற்படுத்தியது எது? அது அதிகாரம் சார்ந்த ஒன்றாக இருந்திருக்க முடியாதல்லவா?

 

அந்த புள்ளியிலிருந்தே ஹிந்து-கிறிஸ்தவ உரையாடல் நடைபெறுவது நல்லதென நினைக்கிறேன். சாந்தி வனத்தில் ஹிந்து கத்தோலிக்க உரையாடலை மிகக் கவனமாக பல பத்தாண்டுகள் அவதானித்த Wayne Teasdale எனும் கத்தோலிக்க இறையியலாளர் கூறுவதை பாருங்கள்:

Jim. What about the Hindu side of the Christian-Hindu dialogue. How interested are Hindus in this dialogue?

Wayne. We have had so much frustration with Hindus. They are not committed to dialogue. Some are fascinated with it, but they always see it in the Hindu context that Hinduism embraces everything. Hinduism can hi-jack Christianity and obliterate differences.

Jim. Do you think a genuine Indian Catholic Church is going to develop?

Wayne. Yes, I think so. I think it is happening. The Catholic Church in India has a siege mentality against Hinduism, and is conservative. Christianity in its traditional form is European. It is not universal in its expression. Only 2% of Asia is Christian. The institutional form of Christianity is unintelligible to the oriental mind. There has to be this inculturation process which has to happen. That is my hope and my expectation.

என் தரப்பு எளிமையானது. போலி வரலாற்றுருவாக்கங்கள் இல்லாமல் மதங்கள் கடந்த ஆன்மிக வெளியிலிருந்தே உரையாடல்களை உருவாக்க முடியும். போலி வரலாற்றுருவாக்கங்களும், பண்பாட்டு அபகரிப்புகளும் மனக்கசப்பையும் ஐய உணர்வையுமே உருவாக்கும். அவை உரையாடல்கள் அல்ல. அவை உரையாடலுக்கான வெளியையும் உருவாக்குவதில்லை. இவ்வாறு கூறுவது முன்நிபந்தனையோ முரட்டுத்தனமோ அல்ல.

அரவிந்தன் நீலகண்டன்

கிறித்துவம், இந்து மரபு

 

கிறித்தவ விஜயதசமி

கிறித்துவம், இந்து மரபு

கிறித்தவ தசரா;கடிதங்கள்

முந்தைய கட்டுரைகாந்தி இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைமார்க்ஸ்,ஹெகல்,முஜீப்