விஷ்ணுபுரம், ஊமைசெந்நாய் – கடிதங்கள்

ப்ரிய ஜெ.மோ,

சுகமானோ?

உங்கள் சிறுகதை மற்றும் குறுநாவல்கள் தொகுப்புகளிலிருந்து உங்கள் எழுத்துடனான என் வாசிப்பனுபவம் தொடங்கியது. பின் ரப்பர், காடு, பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் என தொடர்ந்தது.

விஷ்ணுபுரம் நூலை வாங்கி வைத்து இரண்டு வருடங்கள் ஆனபின்னும் முதல் 30 பக்கங்களைத் தாண்டுவதற்கு முடியாமல் இருந்தேன் (அதே பக்கங்களை சில கால இடைவேளை விட்டு திரும்ப திரும்ப வாசித்தேன்), பிறகு உங்கள் வலைப்பக்கத்தில் “எப்படி வாசிப்பது” என்ற உங்கள் குறிப்புகளை வைத்து, மீண்டும் வாசிக்க தொடங்கினேன் பத்து நாட்கள் முன்பு, முதல் பாகத்தை மட்டும் இரண்டு முறை வாசித்தேன்( மீண்டும் மீண்டும் வாசிக்கையில் பல கதவுகள் திறந்தன). தற்போது இரண்டாம் பாகத்தை மிக பொறுமையுடன் வாசித்து வருகிறேன் – தத்துவ விவாதங்கள் புத்தியை மிகவும் வசீகரிக்கின்றன. எனக்குள் நானே விவாதம் செய்கிறேன்.சுகமான இந்த வாசிப்பனுபவத்தை தந்தமைக்கு மிக்க நன்றி!

அனல்காற்று, ஊமைச்செந்நாய் & மத்தகம் என விரியும் உங்கள் எழுத்து வல்லமைக்கு சிரம் தாழ் வணக்கங்கள்! அனல்காற்றின் வெம்மையும், (ஊமைச்செந்நாய்) கோணாவின் “நரகத்துக்குப் போ” என்ற துப்பலும், கேசவனின் அடிபணிவும் நெடுநாளாகியும் எண்ணத்தை விட்டு நீங்காமலிருக்கிறது. எத்துணை வன்(/ள)மையானது மொழி!.

தாய்மொழியானாலும் மலையாள வாசிப்பு மிகவும் குறைவேயெனக்கு (வளர்ந்ததும் படித்தும் எல்லாம் புதுவையில்) ஆனாலும் M.T.V மற்றும் பஷிரீன் எழுத்துக்களைத்தான் முதலின் படித்தேன், ரசித்தேன். தகழி, சக்காரியா, முகுந்தன் என இப்போதுதான் வட்டம் விரிவடைய தொடங்கியுள்ளது.

அசோகவனம் எப்பொழுது வெளிவரும் என அறிய ஆவல். உங்களுடைய மலையாள புத்தகங்களை இணையத்தில் வாங்க வழியுள்ளதா?

ரா. சு

***

அன்புள்ள சுப்புலட்சுமி

நன்றி. விஷ்ணுபுரத்தின் முக்கியமான பிரச்சினை இரண்டு– ஒன்று அது நாமறியாத ஓர் உலகைப்பற்றிப்பேசுகிறது. ஆகவே நாம் வாழும் மொழி- இடச் சூழலில் இருந்து கொஞ்சம் எம்பி அதற்குள் செல்ல வேண்டியிருக்கிறது. இரண்டு, அதன் மொழி கவியுருவகம் நிறைந்தது — மெட்ட·போரிகல். அதை சென்று அடைவதற்கு ஒரு கவனம் தேவை. ஆவால் அந்தக்கவனத்துடன் உள்ளே சென்ற எவருக்கும் அது ஒரு தனியனுபவமாகவே இருக்கும் என எண்ணுகிறேன்.

மலையாளநூல்களில் சம்ஸ்கிருத ஆதிக்கம் நிறைந்த மொழிநடை கொண்டவர்கள் சிலர் உண்டு. அவர்களைத்தவிர்த்தால் பிறரை எளிதாகவே வாசிக்க முடியும். என் கட்டுரை அதற்கு உதவும் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் நானறிந்து எங்குமே மலையாள நூல்கள் வாங்கக் கிடைப்பதில்லை.

ஜெ

***

மிக விரைவான பதிலுக்கு நன்றி, ஜெமோ!

”விஷ்ணுபுரம்” பற்றி நிறைய எழுத தோன்றுகிறது, ஆனால் எழுதி விட்டால் மனம் வெறுமையாகி விடுமோ, நான் பெற்ற அரிய அனுபவம் “ நீர்த்து” போய் விடுமோ என ஒரு சின்ன அச்சம்…:-) சொற்கள் எனக்குள்ளேயே இருக்கட்டும் கொஞ்ச காலம்… ஆனால் நான் வாசித்த வரையில் நாவல் ஆக்கத்தில் இதுதான் உங்கள் “ Master Piece!” [ குறு நாவலில் “டார்த்தீனியம்” போல].

”மலையாள மனோரமா” வாரப்பத்திரிக்கை வாயிலாகத்தான் நான் மலையாளம் படிக்க கற்றுக்கொண்டேன் – எங்கள் வீட்டில் வரும் ஒரே இதழ் அதுவாகத்தான் இருந்தது. மொழி பிடித்திருந்தாலும் அதில் வரும் கதைகள் அறவே பிடிக்காமலிருந்தது(எ.கா மாத்யூ மற்றம், கமலா கோவிந்த், கோட்டயம் புஷ்ப நாத்,சுதாகர் மங்கலோதயம் அவர்களின் கதைகள் – தமிழில் வரும்(வந்த?) ராணி,தேவி தொடர் எழுத்தாளர்களின் கதைகள் போல ஒரு “ஒவ்வாமை”), ஒரு காலகட்டத்தில் முழுமையாக நிறுத்தி விட்டேன்.

முதல் முறையாக எம்.டி வாசுதேவன் அவர்களின் சிறுகதை தொகுப்பு ( நாலு கெட்டு) வாசிக்க கிடைத்தது, மொழியை அவர் கையாண்ட விதமும் கதை மாந்தர்களும் களமும் வசீகரித்தன. பின் தேடல் தொடங்கியது….தொடர்கிறது…[ உங்கள் கட்டுரையில் சில புதிய எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன், நன்றி! ]

நீங்கள் பல முறை குறிப்பிட்டது போல பஷீர் ஒரு முக்கியமான இலகுவான நடையில் வசப்படுத்தும் அரிய எழுத்தாளராகத் தெரிந்தார். அவரின் இரண்டு பெரிய புத்தகங்களை ( DC Books வெளியீடு ) இன்னும் வாசித்து கொண்டிருக்கிறேன்.

சம்ஸ்கிருத வாடை அதிகமுள்ளாதலேயே என்னால் மலையாள கவிதைகளை புரிந்து கொள்ள இயலவில்லை. ஐயப்ப பணிக்கர், குஞ்ஞுண்ணி மாஷ் அவர்களின் கவிதைகள் பிடிக்கும்.

பல மொழிகளில் மூல நூல்கள் வழியாகவே அந்தந்த எழுத்தாளர்களை படிக்கும் சுகம் மொழிப்பெயர்ப்பு நூல்களில் கிடைப்பதில்லை[ டப்பிங் திரைப்படங்கள் பார்ப்பது போல் இருக்கிறது ]- “Lost in Translation”.

உங்கள் மலையாள புத்தகங்களின் பதிப்பாளர்கள்/பதிப்பகங்கள் விவரங்கள் கிடைக்குமா? திருச்சூரில் கிடைக்குமா என விசாரிக்கிறேன் ( என் தாயும் தந்தையும் அங்குதான் வசிக்கின்றனர்).

ப்ரியமுடன்,
ரா.சு.

***

அன்புள்ள சுப்புலட்சுமி

நான் மலையாளத்தில் ஒரு நூல்மட்டுமே வெளியிட்டிருக்கிரேன் — நெடும்பாதையோரம். அதை திரிச்சூர் கரெண்ட் புக்ஸ் வெளியிட்டார்கள். திரிச்சூரில் கிடைக்கலாம்.

மலையாளத்தில் மலையாள நூல்களை மட்டுமல்ல யஷ்பால், ஆஷாபூர்ணா தேவி, பிமல் மித்ரா போன்றவர்களின் மொழியாக்கங்களையும் படிக்கலாம், தமிழில் கிடைக்காது.

மலையாள எழுத்தில் இலக்கியத்தரமான எழுத்துக்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். ஆனால் மிகச்சிறந்த, தனித்தன்மை கொண்ட, எழுத்துக்கள் தமிழ் அளவுக்குத்தான் இருக்கும்.

தமிழில் வந்துள்ள மலையாள மொழியாக்கங்கள் பெரும்பாலும் மிகச்சுமாரானவை.

உங்களுக்கு மொழிகற்க ஆவலிருந்தால் இந்தி- தேவநாக்ரி லிபி கற்றால் வங்கம் மராத்தி என பல மொழிகளுக்குள் இயல்பாக நுழைய முடியும்

ஜெ

***

மதிப்பிற்குரிய ஜெ,

நிஜமாகவே என்னையும் ஒரு செந்நாய்யாக மாற்றி ஊமைச்செந்நாய்யின் பின்னால் ஓட வைத்தீர்கள். ஓடி ஓடி மூச்சிரைத்து என்வாயிலிருந்து நுரைதள்ளியது. கொஞ்சமும் ஓய்வு கொடுக்காமல் இவ்வளவு வேகமாக என்னை விரட்டிநீர்களே, இது நியாயமா? ஏன் ஊமைச்செந்நாய்யை கொன்றீர்கள்? மனோதத்துவ ரீதியில் ஏதேனும் அர்த்தமிருந்தால் தயவுசெய்து விளக்கவும்.

உங்கள் வாசகன்

கிறிஸ்

**

அன்புள்ள கிறிஸ்

ஊமைச்செந்நாய் பற்றி வந்த கடிதங்கள் என் இணையத்தளத்தில் நிறையவே இருக்கின்றன. என் கதையைப்புரிந்துகொள்ள அவை மிகவும் உதவுகின்றன.

ஒரே வரியில் இதுதாந்- ஆண்டான் அடிமை உறவில் எப்போதும் வெளித்தெரியாத உள்ளோட்டமாக அன்பும் வெறுப்பும் ஓடுகின்றன. ஆண்டானின் வெறுப்பின் உள்ளே கனிவும் அடிமையின் சேவையின் உள்ளே கசப்பும்

ஜெ

***

முந்தைய கட்டுரைகடல்,நிலம்,மனம்
அடுத்த கட்டுரைஆபிரகாம் பண்டிதர்