கடிதங்கள்

அன்புள்ள ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
ராமச்சந்திர சர்மா எழுதியதையும் அதற்கான் தங்கள் அழகான பதிலையும் படித்து மகிழ்ந்தேன்.  மகிழ்ச்சி மட்டுமல்ல; சிந்திக்கவும் வைத்தது.
சமீபத்தில் பரனூர் கிருஷ்ண ப்ரேமியின் புதல்வர் திரு ரங்கன்ஜீ என்ற சுமார் முப்பது வயது இளைஞர் “தைத்ரேய உபநிஷதம்” பற்றிய தொடர் உரையைக் கேட்கும் வாய்ப்புக்கிட்டியது.
மிகக்கடினமான நுட்பமான க்ருத்துக்களை சரளமான ஆங்கிலத்தில் எளிதாகப் புரியும் வண்ணம் விரித்துரைக்கும் ஆற்றல் பெற்று விளங்குகிறார்.  டாகடர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
“ஸ்ருஷ்டி” என்பதை creation என்று மொழிபெயர்ப்பது சரியல்ல; release என்பதே சரி என்று ஆரம்பித்துவிட்டு, எந்த ஒரு ஜடப்பொருளும் இயங்குவதற்கு ச்க்தி அல்லது force/pressure என்ற ந்யூடனின் முதல்விதியை விள்க்கிவிட்டு, ஜடப்பொருள் இயங்குவதும் ஒரு ஒழுங்குமுறையப் (orderliness) பின்பற்றுவதும் எதனால் என்ற கேள்வியை எழுப்பினார்.  அதற்கு அவரே விடையையும் தந்தார். அழகான சிற்பம் ஒன்றை உருவாக்குகிறார் சிற்பி.  நம் கண்ணையும் கருத்தையும் கவருகிறது அது.  ஆனால் அதற்கு உயிரோ அல்லது உணர்வோ இல்லை.  இந்த உணர்வில்லா சிற்பத்தை இன்னொரு உணர்வற்ற பொருள் உருவாக்கமுடியாது.  உணர்வுள்ள (conscious object) ஒன்றுதான் உருவாக்கமுடியும்.
அதுபோலவே ஒழுங்குமுறையுடன் இயங்கும் அண்டத்தையும் கோளங்களையும் ஒரு conscious objectதான் ஸ்ருஷ்டித்து இருக்கமுடியும்.  அப்படி ஆக்கிய அலகிலா விளையாட்டுடையார்தான் கடவுள் அல்லது ப்ரம்மம் என்று முடித்தார். 
அந்த இளம் மேதையின் சிந்தனைகள் எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவே இக்கடிதம்.  
அன்புடன்
முகில்வண்ணன்

**

கைதோநி என்பது தமிழ்நாட்டில் கைய்யாந்தரை என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன். புகைப்படத்தைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறது. எங்கள் வீட்டிலும் இந்த எண்ணை காய்ச்சும் படலம் உண்டு. இப்போதும்.
 
-ராம்

அன்புள்ள ராம்,

இப்போதுமா?
ஆச்சரியம்தான். வீட்டு மருந்துகள் அனேகமாக இல்லாமலாகிவிட்டன என்று எண்ணியிருந்தேன்
ஜெ

 

ஆமாம். எனக்கும் தான். எப்போதுமே என் அப்பா ஆங்கில மருத்துவத்தை பெரிதும் அவசியமேற்பட்டாலே ஒழிய விரும்புவதில்லை. இயற்கை மருத்துவம் என்பதைவிட உணவு மருத்துவமமென்றே சொல்லலாம்.சரியான காய்கறிகள் சாப்பிட்டால் எந்த உடல் உபாதையும் வராது என்று நம்புபவர்.
 
குப்பைமேனி, கையாந்தரை, கரிசலாங்கன்னி, நொச்சி, மினுக்கத்தான், ஆடுதொடாதழை, தூதுவளை, முடக்கத்தான் என்று பல வேலியோர செடிகளின் பயன்பாட்டை அறிந்துகொண்டது அவரிடமிருந்துதான்.
 
காலில் பித்தவெடிப்புக்குக்கூட வீட்டில் ஏதோ சில மரங்களின் பட்டைகளைப்போட்டு காய்ச்சிய களிம்பைத்தான் பூசுவார்.
 
எங்களூரில் நல்ல பாம்புகள் அதிகம் வீட்டிற்குள் வந்துவிடும். அதை பிடித்து படுகையில் விடுவார்கள். தற்காப்பாக எனது தாத்தா ஒரு மூலிகையை சாப்பிட்டார் என்றும், அது மிகவும் கசப்பாக இருக்குமென்றும் சொல்வார்கள். அது ஒரு இடத்தில் மட்டுமே இருந்தது, அது அழிக்கப்பட்ட ஒரு வருடத்தில் தாத்தா பாம்பால் கடிபட்டு 3 நாள் உயிரோடிருந்து இறந்துவிட்டார்.
 
நீங்கள் கொட்டம்சுக்காதி பற்றி எழுதியபோது என் அப்பாவிடம் சொன்னேன். இதெல்லாம் கூட இண்டர்நெட்டில் எழுதுகிரார்களா என்று ஆச்சரியப்பட்டார்.
 
என் தந்தை வழிப்பாட்டியினது குடும்பம் வைத்தியத்தில் ஈடுபட்டிருந்ததால் என் அப்பாவிற்கு இதில் ஓரளவு அறிமுகம் இருந்திருக்கிறது போலும். எனக்கு சுத்தம். பெனட்ரில், கோல்டாக்ட், செட்சைன் ரகம். :-)
 
-ராம்
***
அன்புள்ள ஜெ
தங்களின் கலைக்கணம் படித்து மிக்க பரவசம் அடைந்தேன்.நாட்டார் கலைகளிளும் இதெ போன்ற மனநிலையெ எனக்கும் ஏற்பட்டதுண்டு.எங்கள் ஊரில் கூத்துக்கள் பல உண்டு.பெரும்பாலும் பள்ளியே சென்றிராத மக்களால் ஒரளவு தூய தமிழில் பாடப்படுவது. கோவலன் கதை,நளன்,அண்ணண்மார் கதை,நல்லதங்காள், பாரதம் போன்றவை ஆடப்படும்.ஒரு சிறு நாயன வாத்திய கருவி,தொம்பை மற்றும் சிறு மத்தளம் போன்றவையெ இசைக்கருவிகள்.ஒரு மேடான பகுதியில் பந்தல் பொடப்பட்டு ஒரு சட்டி விளக்கொளியில் நடத்தப்படும்.இரவு 7 மணி அளவில் தொடங்கி விடியும் வரை நடக்கும்.கதை சொல்லல் இடையில் பாட்டு,மேடையை சுற்றி வீரநடை பெண் என்றால் ஒய்யாரத்துடன்,பல்வேரு தருணங்கள்.ராவணம் போருக்கு செல்லும் காட்சி,இந்தரஜித் மரணம்,மூளிஅலங்காரி தன் அண்ணன் மக்களை கொடுமைபடுத்தல் போன்றவை பார்க்கும் மக்களை பரவசபடுத்தும் ஆனால் அதில் நான் கன்ட அடைந்த ஆவெசமும் மனஎழுச்சியும் சோகமும் வார்த்தைகளில் வடிக்க இயலாது தங்கள் எழுத்து என்னை மலரும் நினவுககளில் ஆழ்த்தி விட்டது
அன்புடன்
மதன்
பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்
ஐஐடி சென்னை
அன்புள்ள மதன்
நீங்கள் சொல்வதை நான் உண்மையில் புரிந்துகொள்கிறேன். ஒரு சமூகம் தன்னை உண்மையாக வெளிப்படுத்திக் கொண்டே ஆகவேன்டும். அதற்கான கலையை அது கண்டிப்பாக உருவாக்கியிருக்கும். அது நம்மைச்சுற்றி நிகழ்ந்துகொன்டிருக்கவும்கூடும். நாம் இரண்டு காரணங்களால் அதை தவறவிடுவோம். ஒன்று, நாம் அதை ரசிக்க பயிற்றுவிக்கபப்ட்டிருக்க மாட்டோம். இரண்டு நாம் வேறுவகை கலைகளை ரசிக்க பழக்கபப்ட்டிருப்போம். இருபதாம் நூற்ராண்டில் தொழிற்சாலை என்ற உழைப்புமுறை உருவானபோது மனிதனுக்கு உழைப்பு என்ற இன்பம் இல்லாமல் ஆயிற்று. உழைப்பில் இருந்த படைப்பூக்கம் மறைந்தது. ஆகவே அவனுக்கு கேளிக்கைகள் அதிகளவில் தேவைப்பட்டன. அதன்பொருட்டு உருவானதே கேளிக்கைக் கலை. கேளிக்கைக் கலைக்கு நாம் நம்மை தயாரித்துக்கொள்ள வேன்டியதில்லை. அது நமக்காக தன்னை தயாரித்துக்கொள்ளும். நம்மிடம் வந்து நின்று நம்மை கவர முயலும். அதற்கு தனிமனிதர்கள் முக்கியமல்ல. கூட்டாகவே அது மனிதர்களைக் காணும். மந்தையாக. ஆகவேதான் அதற்கு பாப் ஆர்ட் – பரப்புக்கலை என்று பெயர். அதை நாம் ரசிக்க ஆரம்பித்தால் மெல்ல மெல்ல நல்ல கலைகள் மீதான நாட்டத்தை இழப்போம். செவ்வியல்கலையாக இருந்தாலும் சரி அல்லது நாட்டார்கலையாக இருந்தாலும் சரி….இன்று நிகழ்வது இதுவே
ஜெ
**
அன்புள்ள ஜெ
Destination is not important. Only the ‘Travel”. 
உச்சியை அடைந்து விட்டால் பயணம் முடிந்து விடும். கிட்டத்தட்ட அது தோல்விதான். அதை எண்ணிதான் நீங்கள் திரும்பி விடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் பயணம் தொடரட்டும். எங்களுக்கான பகிர்வுகளும்தான்.

 இளம்பரிதி

அன்புள்ள இளம்பரிதி
இலக்கு என்பதை பாதையை தீர்மானிக்கும் ஓர் அமசம் என்பதர்கு அப்பால் முக்கியமாகக் கொள்ளலாகாது என்பது ஒரு தொன்மையான வாக்கு
ஜெ
முந்தைய கட்டுரைநூல்கள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 10