விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகம் , கோவை -திறப்பு

விஷ்ணுபுரம் பதிப்பகம் இணையதளம்

நண்பர்கள் இணைந்து விஷ்ணுபுரம் பதிப்பகம் தொடங்கியபோது அதை லாபகரமாக நடத்தவேண்டும் என்றுகூட நினைக்கவில்லை. எல்லா நூல்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும்படிச் செய்யவேண்டும் என்றே எண்ணினார்கள். ஏனென்றால் இன்று நூல்கள் வெவ்வேறு பக்கங்களில் சிதறிக் கிடக்கின்றன. பெரிய பதிப்பகங்களுக்கு எல்லா நூல்களையும் கணக்கில் வைத்து எப்போதும் கிடைக்கும்படிச் செய்ய முடியாது.

ஆனால் பதிப்பகம் தொடங்கி ஓராண்டு ஆவதற்குள் அது லாபகரமானதாக ஆகிவிட்டது. குமரித்துறைவி நாவல்தான் முதன்மையான காரணம் என சொல்லவேண்டியதில்லை. பின்தொடரும் நிழலின் குரல் வெளியாகிவிட்டது. இவ்வாண்டுக்குள் வெண்முரசு முழுமையாகவே விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் இருந்து வெளிவரும். எல்லா நூல்களையும் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவையில் வடவள்ளியில் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு ஓர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் பதிப்பக நூல்களையும் என் நூல்களையும் அங்கே வாங்கலாம். அது நண்பர்கள் சந்திக்கும் ஓர் இலக்கிய மையமாக ஆகவேண்டும் என்பது என் விருப்பம். நான் கோவை வந்தால் அங்கே நண்பர்களைச் சந்திப்பேன்.

விஷ்ணுபுரம் பதிப்பகம் ஒரு சிறு முயற்சிதான் இப்போதும். நண்பர்களின் முதலீடு. (விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்புடன் தொடர்பில்லை இதற்கு). எங்கள் நூல்களை வாசகர்கள் வாங்கி ஆதரிக்கவேண்டும் என்பது இன்று என் கோரிக்கை. இந்நிறுவனம் வளரவேண்டும், எனக்குப்பின்னரும் நீடிக்கவேண்டும் என விரும்புகிறேன்.

ஜெ

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

விஷ்ணுபுரம் பதிப்பகம் அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு

கோவை வடவள்ளி, கஸ்தூரிநாயக்கன்பாளையம், நேரு நகர், 1/28 என்ற முகவரியில் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் அலுவலகம் 21.02.2022 முதல் செயல்படத் துவங்கியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் போன்ற இடங்களிலிருந்து 8 கிமீ தொலைவில் இவ்வலுவலகம் அமைந்துள்ளது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த வருடம் ஜுன் மாதம் முதல் தனிமையின் புனைவுக்களியாட்டு கதைகள் தொடங்கி கட்டுரைகள் விவாதங்கள் என விஷ்ணுபுரம் பதிப்பகம் மென்புத்தகங்களாக 40 புத்தகங்களை இதுவரை கிண்டிலில் வெளியிட்டுள்ளது.

விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் புத்தகமான குமரித்துறைவி துவங்கி இரு கலைஞர்கள் என பதினான்கு புத்தகங்கள் இதுவரை அச்சில் வெளிவந்துள்ளன. இலக்கியத்தின் நுழைவாயிலில், மலைபூத்தபோது, உடையாள் மூன்று புத்தகங்களும் தயாரிப்பில் உள்ளன.

இதுவரை தமிழினியின் பதிப்பில் வெளிவந்துகொண்டிருந்த பின்தொடரும் நிழலின் குரல் நமது பதிப்பகத்தில்  புதிய வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

வெண்முரசின் இறுதி நான்கு நாவல்களான நீர்ச்சுடர், களிற்றுயானை நிரை, கல்பொருசிறுநுரை, முதலாவிண் நான்கு நூல்களும்  செம்பதிப்பாக இனிவரும் மூன்று மாதங்களுக்குள் விஷ்ணுபுரத்தின் வெளியீடாக வரவுள்ளன. அதற்கான முன்பதிவுகள் நாவலின் வரைவு வேலைகள் முடிந்ததும் இத்தளத்தில் அறிவிக்கப்படும்.

ஜெயமோகன் அவர்களின் 60ம் ஆண்டு நிறைவான இவ்வாண்டில் அவரது நீண்ட படைப்பான வெண்முரசின் இருபத்தாறு புத்தகங்களும் கட்டாயம் அச்சில் இருக்க வேண்டுமென விரும்புகிறோம். பதிப்பில் இல்லாத மற்ற அனைத்து வெண்முரசு புத்தகங்களும் இன்னும் நான்குமாதங்களில் விஷ்ணுபுரத்தின் வெளியீடாக விற்பனைக்கு வந்துவிடும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுவரையிலும் எங்களுடன் உடன் நின்ற வாசகர்கள், எழுத்தாளர்கள் நண்பர்கள் பதிப்பாளர்கள் அனைவரும் இனி வரும் ஆண்டுகளிலும் எங்களுடன் துணை நிற்க வேண்டுகிறோம்.

அன்புடன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

மேலதிக தகவல்களுக்கு : மீனாம்பிகை, 9080283887

மின்னஞ்சல்: [email protected]

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைகோல்டிகா- தங்கபாண்டியன்
அடுத்த கட்டுரைஇரு கடிதங்கள் – அருண்மொழிநங்கை