கல்குருத்து கடிதங்கள்-3

கல்குருத்து- சிறுகதை

அன்புள்ள ஜெ

கல்குருத்து கதையை வாசிக்கையில் அதில் இருக்கும் இரண்டு வெவ்வேறு தலைமுறைகளின் இயல்புகளை அம்மி என்ற படிமம் ஒன்றாக ஆக்குகிறது என்று புரிந்துகொண்டேன். சரியா என்று தெரியவில்லை. அந்த முதிய தம்பதிகளின் வாழ்க்கை மென்மையாக ஆகிவிட்டிருக்கிறது. மென்மையாக ஆவது என்றால் பல்லாயிரக்கணக்கான உரசல்கள் வழியாக அது நிகழ்ந்திருக்கிறது என்றுதான் பொருள்.

அந்த வகையான உரசல்கள் தொடச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் இடமாக இளம் தம்பதிகளின் உலகம் உள்ளது. அந்த உரசல்கள் எல்லாமே அந்த மென்மையை நோக்கிச் செல்வதற்குத்தான். அந்த வாசிப்பு கதையை துலங்கச் செய்தது. ஒரு தித்திப்பான அனுபவத்தை அளித்தது. கிழவர் கிழவின் பேச்சில் இருந்தே அவள் இனிப்பை விரும்புவதை ஊகித்து கருப்பட்டி கொடுக்கும்படிச் சொல்கிறார். அந்த தித்திப்பு கதை முழுக்க இருந்துகொண்டே இருக்கிறது.

அழகான கதை. இனிமையான கதையும்கூட. துன்பங்கள் கசப்புகளை மட்டுமே பரிமாறிக்கொண்டிருக்கும் நம் இலக்கியச் சூழலில் இந்த வகையான கதைகள் அளிக்கும் இனிமை மிகமிக முக்கியமானது. ஒரு அழகான இனிமையான குளிர்த்தென்றல் மாதிரி

எம்.பாஸ்கர்

 

கல்குருத்து அழகான சிறுகதை. கல்குருத்து அந்தப்பெண்தான் என்ற எண்ணம் வந்தது. அவளுடைய பார்வையில் அந்த அம்மி திரண்டு வருகிறது. ஒரு விதையை உடைத்துக்கொண்டு தளிர் எழுவதுபோல குருத்து வருவதுபோல அம்மி வருகிறது. பல்லாயிரம் காலம் அங்கே கிடந்த கல்விதை முளைத்துவிட்டது. அது இனி வளர்ந்து வளர்ந்து மரமாகும். கடைசியில் முதிர்ந்து மீண்டும் ஒரு தளிர்போல ஆகும். கி

ழவரும் கிழவியும் புதுமணத்தம்பதிகள் மாதிரி அவர்கள் மட்டுமே உள்ள ஓர் உலகில் வாழ்கிறார்கள். வேறு எவருமே இல்லாத ஒரு அந்தரங்கமான உலகத்தில் இருக்கிறார்கள். அந்த உலகுக்கு அவளும் அவள் கணவனும் போய் சேர்வார்கள்.

இந்தவகையான கதைகள் ஒரு மனம் மலரும் அனுபவத்தை அளிக்கின்றன. வாசித்து முடித்தபிறகும் நீண்டநேரம் நம் முகத்தில் ஒரு புன்னகை இருந்துகொண்டே இருக்கிறது

ஆனந்த் குமார்

கல்குருத்து- கடிதம் -1

கல்குருத்து கடிதம்-2

முந்தைய கட்டுரைநீலம்- அணிபுனைதல்
அடுத்த கட்டுரைசின்னச்சின்ன ஞானங்கள்- கடிதம்