தொடங்குமிடம்

hands

அன்புள்ள ஜெ ,

நம்மை சுற்றியிருக்கும் வறுமையையும், பாலின அத்துமீறலையும், குழந்தைகள் அனுபவிக்கும் வன்கொடுமைகளையும், எளியோர் ஏமாற்றப்படுவதையும் எப்படித்தான் பார்த்துக்கொண்டு கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம்? இன்று காலை இறந்த ஒரு தாயிடம் குழந்தை பால்குடித்து கொண்டிருந்தது பற்றி செய்தி படித்து மனம் கலங்கிப்போனேன்.

இந்த மாதிரி சோகங்களை தவிர்க்கவே மனம் நினைக்கிறது. வர வர படம் பார்த்தல் கூட ஜி.வி.பிரகாஷ் படம் தவிர்த்து வேறு எதுவும் பார்க்கப் பிடிக்கவில்லை. புத்தகங்களில் கூட நல்ல முடிவுடன் கூடிய சோக நிகழ்வுகள் இல்லாத புத்தகங்களையே படிக்கிறேன். இந்தியாவை விட்டு வெகு தொலைவில் இருப்பதால் பல துக்க செய்திகளை தவிர்க்க முடிகிறது. திரும்பி வந்து grass root level சமூக சேவைகளில் ஈடுபட ஆசை. குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி சொல்லிக் கொடுத்தாலும் மனம் நிறையும். ஆனால் பிறர் துன்பம் கண்டு ரொம்பவே கலங்கிப் போய்விடுகிறேன். என் சிறு வயது சோகங்கள் கூட காரணமாக இருக்கலாம்.

உங்கள் எழுத்துக்களில் (கட்டுரைகளில்)ஒரு நிதானம் என்னை வசீகரிக்கிறது.எனக்கு ஏதேனும் ஆலோசனை சொல்ல முடியுமா?

நன்றியுடன்,

ஸ்ரீ

***

அன்புள்ள ஸ்ரீ,

உங்கள் மிகையான உணர்வுகள் விலகியிருப்பதனால் வருபவை. களத்தில் உண்மையிலேயே பணியாற்றுபவர்களைப் பாருங்கள். அவர்கள் எளிதில் கலங்குவதில்லை. அனுபவங்கள் உணர்வுகளில் நிதானத்தை அளிக்கின்றன. பலகோணங்களில் பார்க்கச்செய்கின்றன. ஆகவே சமநிலையை அளிக்கின்றன.

மிகைக்கொந்தளிப்புகளை வெளிப்படுத்துபவர்களைக் கூர்ந்து நோக்கினால் அவர்கள் பெரும்பாலும் நேரடி யதார்த்தங்களுடன் சம்பந்தமற்றவர்கள். ஆகவே ஒற்றைநிலைபாடுகள் கொண்டவர்கள். தங்களைச் சார்ந்தே யோசிப்பவர்கள். தங்கள் பிம்பங்களை உருவாக்கிக்கொள்ளவே அந்த மிகையுணர்ச்சி. அது அவர்களுக்கு இரக்கமானவர் என்றும் நீதிசார்ந்தவர் என்றும் போராளி என்றும் கலகக்காரர் என்றும் பலவகையான தோற்றங்களை அளிக்கின்றன. அத்தோற்றங்களை நம்பி அவர் மேலும் மேலும் உணர்ச்சிக்கொந்தளிப்பு அடைகிறார். அதைத் தன்னையும் பிறரையும் நம்பவைக்க மேலும் பெருக்கிக்கொள்கிறார்.

ஆகவே உண்மையான ஆர்வமிருந்தால் சிறிய அளவிலேனும் எதையாவது செய்யத் தொடங்குங்கள். அதன் சிக்கல்களை சந்தியுங்கள். அது அளிக்கும் நிறைவையும் ஏமாற்றத்தையும் சந்தியுங்கள். எல்லாவற்றையும் சீராக்கியபின், தனக்குரிய இடத்துக்குத் திரும்பியபின், அதேபோன்ற பலவற்றுக்குப்பின் எவரும் எதையும் செய்வதில்லை. செய்ய விரும்பினால் மிக அருகே, அன்றாடவாழ்க்கையின் ஒருபகுதியாகவே, செய்வதற்குரியவை கண்ணுக்குப்படும்

ஜெ

 ***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 41
அடுத்த கட்டுரைபெரியசாமி தூரன்