‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35

34. பெருங்கைவேழம்

flowerநிஷத நாட்டு எல்லைக்குள் நுழையும் பாதையின் தொடக்கத்திலேயே திரௌபதி தருமனிடமிருந்து சிறுதலையசைவால் விடைபெற்றுக்கொண்டாள். “சென்று வருகிறேன்” என்று சொல்ல அவள் நெஞ்செழுந்தும்கூட உதடுகளில் நிகழவில்லை. தருமன் திரும்ப தலையசைத்தார். அவள் சிறு பாதையில் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென விழுந்த தன் காலடிகளை நோக்கியபடி நடந்தாள். ஒருபோதும் அவ்வாறு தன் காலடிகளை தான் நோக்கியதில்லை என்பதை இரு நாட்களுக்கு முன்னரே அறிந்தாள். கிளம்பிச்செல்லவிருந்த பீமனை “நீங்கள் அடுமனையிலும் புழக்கடைகளிலும் புழங்கியிருக்கிறீர்கள், இளையவரே. நான் எதையும் நோக்கியதில்லை. ஏவற்பெண்டுகளின் இயல்புகளில் முதன்மையானதென்ன?” என்றாள். “தலைகுனிந்து நிலம் நோக்கி நடப்பது” என்று பீமன் சொன்னான்.

அக்கணமே அவள் தானறிந்த ஏவற்பெண்டுகளின் நடைகள் அனைத்தையும் சித்தத்திற்குள் ஒழுங்குபடுத்தி நோக்கிவிட்டாள். “ஆம், அவர்கள் அனைவரும் அவ்வாறுதான் நடக்கிறார்கள்” என்று சொன்னாள். பின்னர் “ஏன்?” என்று பீமனிடம் கேட்டாள். பீமன் நகைத்து “அவர்கள் செல்லும் வழியெல்லாம் படுகுழிகள் காத்திருக்கின்றனவோ என்னவோ?” என்றான். “விளையாடாதீர்கள்” என்றாள். “விழி தணிவதை பணிவென்று மானுடர் கொள்கிறார்கள். விழியோடு விழி நோக்குவது நிகரென்று அறிவித்தல். நிகரென்று கூறுதல் எப்போதுமே அறைகூவல். குரங்குகளும் நாய்களும்கூட அவ்வாறே கொள்கின்றன” என்று பீமன் சொன்னான். “ஏவற்பெண்டு இவ்வுலகில் உள்ள அனைவரிடமும் விழிதணிந்தவள். ஏவலர் ஏவற்பெண்டுகள் முன் விழிதூக்குபவர்.”

“விழிதணித்துச் சென்றால் எங்கிருக்கிறோம் என்றும் எப்படி செல்கிறோம் என்றும் எப்படி தெரியும்?” என்று திரௌபதி கேட்டாள். பீமன் “ஏவற்பெண்டு அதை அறியவேண்டியதில்லை. அவள் இருக்குமிடம் பிறரால் அளிக்கப்படுகிறது. செல்லும் வழி முன்னரே வகுக்கப்பட்டிருக்கிறது. பின் தொடர்வதற்கு விழி தேவையில்லை. செவி ஒன்றே போதும்” என்றான். அவள் பெருமூச்சுடன் “நான் அதை பயில வேண்டும்” என்றாள். “பயில்வதல்ல, அதில் அமையவேண்டும். உனது தோள்களும் விழியும் ஒடுங்க வேண்டும்.” அவள் நிமிர்ந்து அவன் விழிகளை சிலகணங்கள் நோக்கிவிட்டு “என்னால் அது இயலும் என்று எண்ணுகிறீர்களா?” என்றாள். அவன் “உண்மையை சொல்வதென்றால் ஒருகணமும் உன்னால் அது இயலாதென்றே தோன்றுகிறது” என்றான்.

“சைரந்திரியாக நான் எப்படி அவ்வரண்மனையில் இருப்பேன்? என்னால் எண்ணவே கூடவில்லை” என்று விழிதிருப்பி அப்பால் இருந்த காட்டை நோக்கியபடி திரௌபதி சொன்னாள். “ஆனால் அது நிகழ்ந்துவிடுமென்றும் தோன்றுகிறது” என்றான் பீமன். அவள் அவனை ஐயத்துடன் நோக்கி “எவ்வாறு?” என்றாள். “உன்னில் எழவிருக்கும் சைரந்திரி யார் என்று நமக்குத் தெரியாது. இச்சிக்கல்கள் அனைத்தையுமே புரிந்துகொண்டு தன்னை உருமாற்றி நேற்றிலாத ஒருத்தியென எழக்கூடும் அவள்” என்றான் பீமன். புரியாமல் “ஆனால்…” என்றபின் புரிந்துகொண்டு “அவ்வாறே நிகழ்க” என்று தலையசைத்து திரௌபதி பேசாமலிருந்தாள்.

மறுநாள் காலை விழித்தெழுகையில் குடிலில் பீமன் இருக்கவில்லை. அத்திடுக்கிடல் படபடப்பென உடலில் நெடுநேரம் நீடித்தது. பின்னர் எழுந்து சென்று நோக்கினாள். நீராடி வந்து ஈரக்குழலைத் தோளில் பரப்பி மடியில் கைவைத்து கிழக்கு நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருந்த தருமனின் அருகே சென்று “கிளம்பிவிட்டார்” என்றாள். “ஆம்” என்று அவர் சொன்னார். மீண்டும் மெழுகு உறைவதுபோல் அவரில் ஊழ்கம் நிகழ திரும்பி வந்து பீமன் படுத்திருந்த இடத்தை பார்த்தாள். பீமன் எடுத்துக்கொண்டிருந்த இடம் என்னவென்பது அப்போதுதான் தெரிந்தது. நிலையழிந்தவளாக குடிலுக்கு வெளியே வந்து சூழ்ந்திருந்த வறண்ட குறுங்காட்டில் சுற்றிவந்தாள்.

விடிந்த பின்னரே அவளால் காட்டுக்குள் செல்ல முடிந்தது. சுனைக்குச் சென்று நீராடி மீள்கையில் தன்னுள் இருந்துகொண்டே இருந்த அச்சத்தையும் பதற்றத்தையும் உணர்ந்தபோது ஓர் எண்ணம் எழுந்தது. பீமன் இல்லாதபோது தான் அரசி அல்ல. இக்காடுகளை, விலங்குகளை, மானுடரை, விண்ணோரை, ஒருகணமும் அஞ்சியதில்லை. அடுத்த பொழுது உணவென்ன என்று எண்ணியதில்லை. விரும்பிய ஒன்று கைப்படாதிருக்கக்கூடுமென்று ஐயம் கொண்டதே இல்லை. அங்கு இந்திரப்பிரஸ்தம் என்றும் அஸ்தினபுரியென்றும் காம்பில்யமென்றும் எழுந்துள்ள பெருநகரங்களல்ல. அறமுணர்ந்தவனோ வில்லெடுத்தவனோ இணைத்தம்பியரோ அல்ல. தந்தையோ உடன் பிறந்தவனோ அல்ல. பீமன் ஒருவனால் மட்டுமே பேரரசியென்று இப்புவியில் நிலை நிறுத்தப்பட்டேன்.

அவ்வெண்ணம் எழுந்ததும் கால் தளர சிறிய ஒரு பாறை மேல் அமர்ந்து உளம் உருகி கண்ணீர்விட்டாள். விழிநீர் வழிய தனித்து அமர்ந்திருக்க தன்னால் இயல்வதை விட்டு எழுந்தபோதுதான் உணர்ந்தாள். அது அவளுக்கு அறியா இனிமை ஒன்றை அளித்தது. ஒரு பெண்ணென முற்றுணர்வது ஆண் ஒருவனுக்காக தனித்திருந்து விழிநனைகையில்தான் போலும். அவன் ஒருவனுக்காக அன்றி தன் உள்ளம் நீர்மை கொள்ளப்போவதில்லை. அவள் தன் பொதிக்குள் இருந்த சிறு மரச்சிமிழில் இறுக மூடப்பட்டிருந்த கல்யாணசௌகந்திக மலரை நினைவுகூர்ந்தாள். புன்னகைத்துக்கொண்டபின் அதை எவரேனும் பார்க்கிறார்களா என்று சுற்றும் நோக்கினாள்.

NEERKOLAM_EPI_35_UPDATED

உலர்ந்த விழி நீர்த்தடத்தை கைகளால் துடைத்தபின் புன்னகை எஞ்சிய உதடுகளை இழுத்துக்குவித்து அவள் திரும்பிவந்தாள். சைரந்திரி என நடிப்பது இனி மிக எளிது. முடியுடன் குடியும் குலமும் அகன்று சென்றுவிட்டது. எஞ்சியிருப்பது கைகளும் கால்களும் மட்டுமே. இப்புவியில் வாழ மானுடர் கற்று அடைந்திருக்கும் திறன்கள் எதுவும் இல்லாதவை அவை. அன்று முழுக்க அத்தன்னுணர்விலேயே அலைந்தாள். இங்கிருந்து தருமனும் கிளம்பிச்சென்றுவிட்டால் இக்காட்டில் எதை உண்டு வாழ்வேன்? எப்படி என்னை காத்துக்கொள்வேன்? அவ்வெண்ணமே அவளை உருமாற்றியது. அவள் நடையும் நோக்கும் மாறிக்கொண்டிருந்தன.

அன்றிரவு துயில்கையில் வாழ்வில் முதல் முறையாக ஒவ்வொரு சிறு ஒலிக்கும் அஞ்சி உடல் விதிர்த்தாள். வெளியே தொலைவில் காட்டு யானைக்கூட்டம் ஒன்று கிளையொடியும் ஒலியுடன் கடந்து சென்றதைக்கேட்டு எழுந்தமர்ந்து நெஞ்சில் கைவைத்து சூழ்ந்திருந்த இருளை நோக்கி நெட்டுயிர்த்தாள். துயிலின் அடுக்குகளுக்குள் அணிப்பெண்டு என்றும் காவல்மகள் என்றும் அடுமனையாள் என்றும் ஆகி விழித்து புரண்டு படுத்தாள். புலர்ந்தபோது சைரந்திரி என உருமாறியிருப்பதை உணர்ந்தாள். அடிமேல் விழி வைத்து நடப்பதென்பது எம்முயற்சியுமின்றி அவளுக்கு வந்தது. அதுவே காப்பென்று தோன்றியது.

பெருஞ்சாலையை அடைந்தபோது தன் உடலைத் தொட்டு வருடிச்செல்லும் விழிகளை ஒவ்வொரு கணமும் உணர்ந்துகொண்டிருந்தாள். பிறந்த நாள்முதல் விழிகளை உணர்ந்திருந்தாள். ஆனால் அவையனைத்தும் அவள் காலடி நோக்கி தலை தாழ்த்தப்படும் வேல்முனைகளின் கூர்கொண்டவை. இவ்விழிகள் வில்லில் இறுகி குறிநோக்கும் வேடனின் அம்புமுனைகள். இவ்விழிகளை புறக்கணித்து செல்வதற்குரிய ஒரே வழி தன் உடலை ஒரு கவசமென்றாக்கி உள்ளே ஒடுங்கி ஒளிந்துகொள்வது. அந்நோக்குகளெதையும் நோக்காமல் விழிகளை நிலம் நோக்கி வைத்துக்கொள்வது.

எல்லைகளை குறுக்கும்தோறும் இருப்பு எளிதாகிறது. இந்தக் காலடிகளில் பட்டுச் செல்லும் மண், இவ்வுடல் அமரும் இடம், இவ்வுள்ளம் சென்று திரும்பும் எல்லை அனைத்தும் குறுகியவை. ஆணையிடப்படும் செயல்களன்றி பிறிதொரு உலகு இனி எனக்கில்லை. ஆழத்திலெங்கோ மெல்லிய புன்னகை ஒன்று எழுந்தது. உலகை வெல்ல எழுந்தவளென்று பிறந்த குழவியை கையிலேந்தி உள்ளங்காலில் விரிந்த ஆழியையும் சங்கையும் நோக்கி வருகுறி உரைத்த நிமித்திகர் இத்தருணத்தை எங்கேனும் உணர்ந்திருப்பாரா என்ன?

flowerநிஷதபுரிக்குச் சென்ற நெடுஞ்சாலையில் வண்டிகளின் சகட ஒலிப்பெருக்கை காட்டுக்கு அப்பால் அவள் கேட்டாள். அனைத்து காலடிப்பாதைகளும் சிறு சாலைகளாக மாறி அப்பெருஞ்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தன. இளைப்பாறும் பொருட்டு சற்று அமர்ந்த சாலமரத்தடியில்  பறவைகள் எழுந்து சென்ற ஒலி கேட்டு நோக்கியபோது ஒற்றை மாட்டுவண்டி ஒன்றை தொடர்ந்து சென்ற சூதர் குழு ஒன்றை அவள் கண்டாள். வண்டிக்குள் கருவுற்ற பெண்கள் இருவரும் நான்கு குழந்தைகளும் இருந்தனர். ஓரிரு மூங்கில் பெட்டிகளும் இருந்தன. வண்டிக்கு இருபுறமும் குத்துக்கட்டைகளில் பொதிகளும் பைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. வண்டியோட்டி நுகத்தில் அமராமல் கயிறுகளைப் பற்றியபடி வண்டியுடன் நடந்துகொண்டிருந்தான்.

வண்டிக்குப் பின்னால் அதன் பின்கட்டையைப் பற்றியபடி எட்டு சிறுவர்கள் ஒருவரோடொருவர் பேசி பூசலிட்டவாறு நடக்க தலையில் பொதிகளும் கலங்களும் பெட்டிகளுமாக சூதர் பெண்களும் அவர்களைச் சூழ்ந்து இளைஞர்களும் நடந்தனர். முதியவர்கள் தோளில் பைகளுடன், வெற்றிலை மென்ற வாயுடன் மூச்சிரைக்க நடந்தனர். அவர்கள் வளம்நோக்கி இடம்பெயர்பவர்கள் என்பது தெரிந்தது. வண்டியின் சகட ஒலியும் கலங்கள் முட்டும் ஒலியும் காளையின் கழுத்துமணியொலியும் இணைந்து ஒலித்தன.

அவர்கள் அருகே வந்தபோது திரௌபதி எழுந்து நின்றாள். கையில் தோளுக்குமேல் உயர்ந்த குடிக்கோல் ஏந்தியிருந்த அவர்களின் தலைவர் அவளை கூர்ந்து நோக்கியபின் “எக்குலம்?” என்றார். திரௌபதி “விறலி” என்றாள். “பெயர் சைரந்திரி. அரசியருக்கு அணுக்கப்பணிகள் செய்வேன்.” அவர் கூர்ந்து நோக்கிவிட்டு “நகருக்கா செல்கிறாய்?” என்றார். “ஆம்” என்றாள். “தனித்தா…?” என்று ஒரு பெண் கேட்டாள். “ஆம், நான் தனியள்” என்றாள் திரௌபதி. “வருக!” என்று இன்னொரு முதிய பெண் அவளை நோக்கி கைநீட்டினாள். அவள் சென்று உடன் இணைந்துகொண்டதும் “ஒரு நோக்கில் எவரும் சூதப்பெண் என உன்னை உரைத்துவிடமாட்டார்கள். அரசிக்குரிய நிமிர்வும் நோக்கும் கொண்டிருக்கிறாய்” என்றாள். “நான் பாஞ்சாலத்தை சேர்ந்தவள். எங்கள் அரசியும் நெடுந்தோற்றம் கொண்டவர்” என்றாள் திரௌபதி.

முதியவள் அவள் தோளில் கைவைத்து “எனக்கு உன்னைப்போல் மகள் ஒருத்தி இருந்தாள். முதற்பேற்றிலேயே மண்மறைந்தாள். வண்டிக்குள் துயில்வது அவள் மகன்தான்” என்றாள். திரௌபதி புன்னகைத்து வண்டிக்குள் எட்டிப்பார்த்து இரு வெண்ணிற பாதங்களைக்கண்டு “அந்தப் பாதங்கள்தானே?” என்றாள். “எப்படி தெரிந்துகொண்டாய்?” என்று அவள் மீண்டும் திரௌபதியின் கைகளைப் பற்றியபடி கேட்டாள். “தாங்கள் இதை சொன்ன கணத்திலேயே அன்னையென்றானேன். மைந்தனை கண்டுகொண்டேன்” என்றாள். உள்ளிருந்து பிறிதொரு குழந்தை உரக்க கை நீட்டி “உயரமான அத்தையை நான்தான் முதலில் பார்த்தேன்” என்றான். இன்னொரு குழந்தை அவனை உந்தியபடி எட்டிப் பார்த்து “உயரமான அத்தை! உன்னை நான்தான் முதலில் பார்த்தேன்” என்றாள். “போடி” என்று அவன் சொல்ல மாறி மாறி பூசலிட்டு இரு குழந்தைகளும் முடியை பற்றிக்கொண்டன.

“என்ன அங்கே சத்தம்? கையை எடு… நீலிமை, கையை எடு என்று சொன்னேன்” என்றாள் அவர்களின் அன்னை. “இவன்தான் என் முடியை பற்றினான்” என்றாள் நீலிமை. “இவள்தான்! இவள்தான்!” என்று சிறுவன் கூவினான். “நான் உயரமான அத்தையை மரத்தடியிலேயே பார்த்தேன்” என்று நீலிமை அழுகையுடன் சொன்னாள். “மரத்தடியிலே நான் பார்த்தேன்” என்று சிறுவன் கூவினான். அன்னை திரௌபதியிடம் “எப்போதும் பூசல்… ஒரு நாழிகை இவர்களுடன் இருந்தால் பித்து பெருகிவிடும்” என்றாள்.

“இரட்டையரா?” என்றாள் திரௌபதி. “இல்லை. ஓராண்டு வேறுபாடு. ஆனால் மூத்தவள் பிறந்தபோது எங்களூரில் கடுமையான வறுதி. அன்னைப்பாலுக்காகவே நான் வீடு வீடாக அலைந்த காலம். இளையவன் பிறந்தபோது ஊரைவிட்டு கிளம்பிவிட்டோம். பிறிதொரு ஊர். அங்கு அவ்வப்போது ஊன் வேட்டையாடி கொண்டுவர இயன்றது. இருவர் வளர்ச்சியும் அவ்வாறுதான் இணையாக ஆயிற்று” என்றாள். “என் பெயர் கோகிலம். நான் அடுமனைப்பெண்.” திரௌபதி “என் பெயர் சைரந்திரி” என்றாள். “ஊரைச் சொல்ல விரும்பவில்லை என்றால் நான் கேட்கவில்லை” என்றாள் கோகிலம். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த இளம்பெண்ணொருத்தி “ஊர் துறந்து வருபவர்கள்தான் தனியாக கிளம்பியிருப்பார்கள்” என்றாள். பிறிதொருத்தி “ஊரென்றால் பெண்களுக்கு ஆண்கள்தான். ஆணிலாதவள் ஊரிழந்தவளே” என்றாள்.

அவர்களே தனக்குரிய வரலாறொன்றை ஓரிரு கணங்களுக்குள் சமைத்துவிட்டதை திரௌபதி உணர்ந்தாள். அவ்வாறு உடனடியாகத் தோன்றுவதனாலேயே அதுவே இயல்பானதென்று தோன்றியது. “ஆம், இந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த கணத்திற்கு முன்னால் எனக்கு வாழ்க்கையென்று ஏதுமில்லை” என்றாள். “நன்று, அவ்வண்ணமே இரு. பெண்கள் விழைந்ததுபோல் வாழ்க்கை அமைவது மிக அரிது. விரும்பாத வாழ்க்கையை எண்ணத்திலிருந்து முற்றிலும் வெட்டி விலக்கிக்கொள்ளும் பெண்ணே மகிழ்ச்சியுடன் வாழலாகும். அக்கணத்துக்கு முன்னால் உனக்கு என்ன நிகழ்ந்திருந்தாலும் அவையனைத்தும் இப்போது இல்லை. இனி நிகழ்வனவே உன் வாழ்க்கை. அது இனிதென்றாகுக!” என்று கோகிலம் சொன்னாள்.

“என் பெயர் மலையஜை” என்று சொன்ன இளையவள் “நீ உணவருந்தியிருக்க வாய்ப்பில்லை” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி. “உணவுக்காக இன்னும் சற்று நேரத்தில் வண்டிகளை நிறுத்துவோம். அங்கு நீ எங்களுடன் உணவருந்தலாம். நிஷதத்தின் எல்லைக்குள் நுழைந்ததுமுதல் உணவுக்கு எக்குறையுமில்லாதிருக்கிறது. பேரரசி தமயந்தியின் ஆட்சிக்காலத்தில் அவர்கள் அமைத்த மூவாயிரம் அன்னநிலைகள் இப்பகுதியெங்கும் உள்ளன. இடையில் இங்கு அரசின்மை நிலவியபோதுகூட அருகநெறியினர் அவற்றை குறைவிலாது ஓம்பினர். ஓர் அன்னநிலையில் பெற்ற உணவை உண்டு பசியெழுவதற்குள் அடுத்த அன்னநிலைக்கு சென்றுவிடலாம்” என்றாள் மலையஜை.

திரௌபதி “இன்னும் எத்தனை தொலைவு நிஷதபுரிக்கு?” என்றாள் “விராடநகரி இங்கிருந்து எட்டு அன்ன சத்திரங்களின் தொலைவில் உள்ளது. களிற்றுயானை நிரைபோல கரிய கோட்டை கொண்டது. கவந்தனின் வாய்போல அருகணைபவரெல்லாம் அதன் வாயிலினூடாக உள்ளே சென்று மறைகிறார்கள். எத்தனை நீர் பெய்தாலும் நிறையாத கலம்போல ஒவ்வொரு நாளும் உள்ளே நுழைந்துகொண்டிருக்கும் எங்களைப் போன்ற அயலவருக்கு அங்கு இடமிருக்கிறது. அடுமனைகளிலும் அகத்தளங்களிலும் இன்னும் பலமடங்கு சூதர்கள் சென்று அமையமுடியுமென்றார்கள்” என்றார் குடித்தலைவர். “என் பெயர் விகிர்தன். நான் அங்கு சென்று நோக்கிய பின்னரே என் குடியை அழைத்துச்செல்ல முடிவெடுத்தேன்.”

“நீ படைக்கலப்பயிற்சி பெற்றிருக்கிறாயா?” என்று ஒரு குள்ளமான முதியவள் திரௌபதியின் கைகளை தொட்டுப்பார்த்தபின் விழிகளைச் சுருக்கியபடி கேட்டாள். அக்குழுவில் இணைந்த தருணம் முதல் அவள் தன்னை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதை திரௌபதி உணர்ந்திருந்தாள். திரும்பிப் பார்த்து “ஆம். எங்களூரில் புரவிப்பயிற்சியும் படைக்கலப்பயிற்சியும் பெண்களுக்கு அளிப்பதுண்டு. நாங்கள் புரவிச் சூதர்களின் குலம்” என்றாள். மலையஜை “அவள் பெயர் மிருகி. எப்போதும் ஐயம் கொண்டவள்” என திரௌபதியிடம் சொல்லிவிட்டு “புரவிச் சூதர்களுக்கு படைக்கலப்பயிற்சி அளிக்கும் பழக்கம் மகதத்திலும் அயோத்தியிலும் உண்டு என்பதை அறியமாட்டாயா?” என்றாள். “ஆம். தேவையென்றால் அவர்கள் போர்களில் ஈடுபடவும் வேண்டும். ஆனால் பெண்களுக்கு அப்பயிற்சிகள் அளிக்கப்படுவதை இப்போதுதான் அறிகிறேன்” என்றார் விகிர்தர். “அத்தனை பெண்களுக்கும் அளிக்கப்படுவதில்லை. இளவயதிலேயே எனது தோள்கள் போருக்குரியவை என்று என் தந்தை கருதினார். ஆகவே அப்பயிற்சியை எனக்களித்தார்” என்று திரௌபதி சொன்னாள்.

மிருகியின் விழிகளில் ஐயம் எஞ்சியிருந்தது. ஆனால் “ஆம், உனது உடல் உனக்கு என்றும் பெரிய இடரே. எவ்விழியும் வந்து இறுதியாக நிலைக்கும் தோற்றம் உனக்கு அமைந்துள்ளது. அரசகுடியினர் உன்னை விரும்புவர். அவர்கள் விரும்புவதனாலேயே இடர்களுக்குள்ளாவாய். தோள்களை குறுக்கிக்கொள். குரலெழாது பேசு. ஒருபோதும் அரசகுலத்து ஆண்கள் சொல்லும் சொற்களை நம்பாதே” என்றாள். திரௌபதி “இனி நம்புவதில்லை” என்றாள். மிருகி விழிகளில் ஐயம் அகல நகைத்தபடி “ஆம், நீ சொல்லவருவது எனக்கு புரிகிறது. இனி அனைத்தும் நன்றாகவே நடக்கட்டும்” என்றாள்.

flowerஅவர்கள் தழைத்து கிளைவிரித்து நின்றிருந்த அரசமரத்தடி ஒன்றை அணுகினர். சூதர்கள் இருவரும் முன்னால் சென்று அந்த இடத்தை நன்கு நோக்கிவிட்டு கைகாட்ட வண்டியை ஓட்டியவர் கயிற்றை இழுத்து அதை நிறுத்தினார். கட்டைகள் உரச சகடங்கள் நிலைத்து வண்டி நின்றதும் சூதப்பெண்கள் உள்ளிருந்து குழந்தைகளைத் தூக்கி கீழே விட்டனர். அவை குதித்துக் கூச்சலிட்டபடி அரசமரத்தை நோக்கி ஓடின. கருவுற்றிருந்த பெண்களை கைபற்றி மெல்ல கீழே இறக்கினர். அவர்களில் ஒருத்தி குருதி இல்லாமல் வெளுத்திருந்த உதடுகளுடன் அவளை நோக்கி புன்னகைத்து “இக்குழுவில் ஆண்களின் தலைக்கு மேல் எழுந்து தெரிகிறது உங்கள் தலை” என்றாள். “ஆம், அதை மட்டும் நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று திரௌபதி சொன்னாள். “ஏன் தலைதணிக்க வேண்டும்? நிமிர்ந்து நடவுங்கள். சூதர்களில் ஒருவர் தலைநிமிர்ந்து நடந்தாரென்று நாங்கள் எண்ணிக்கொள்கிறோம்” என்றாள் அவள்.

அவள் கைகளை பற்றிக்கொண்டு “எத்தனை மாதம்?” என்று திரௌபதி கேட்டாள். “ஏழு” என்றபின் கையை இடையில் வைத்து மெல்ல நெளித்து “இந்த வண்டியில் அமர்ந்து வருவதற்கு நடந்தே செல்லலாம். நடனமிட்டபடி செல்வதுபோல் உள்ளது” என்றாள். “என் பெயர் சிம்ஹி. அதோ, அவர்தான் என் கணவர்.” அவள் சுட்டிக்காட்டிய இளைஞன் பெரிய பற்களைக் காட்டி புன்னகைத்தான். “அவர் பெயர் அஸ்வகர். நளமன்னர் இயற்றிய அடுதொழில் நூலை உளப்பாடமாக கற்றவர் எங்களுள் அவர் ஒருவரே.”

சிம்ஹிக்குப் பின்னால் இறங்கிய கருவுற்ற பெண் பதினெட்டு வயதுகூட அடையாதவள். சிறுமியருக்குரிய கண்களும் சிறிய பருக்கள் பரவிய கன்னங்களும் கொண்டிருந்தாள். அவளும் உதடுகள் வெளுத்து கண்கள் வறண்டு தோல் பசலைபடர்ந்து வண்ணமிழந்த பழைய துணிபோலிருந்தாள். “உனக்கு எத்தனை மாதம்?” என்று திரௌபதி கேட்டாள். “ஆறு” என்று அவள் சொன்னாள். பின்னர் விழிகளைத் திருப்பி வேறெங்கோ நோக்கினாள். சிம்ஹி “அவள் பெயர் சவிதை. அவளிடம் பேசவே முடியாது” என்றாள். “ஏன்?” என்று திரௌபதி கேட்டாள். “இப்புவியே அவளுக்கு தீங்கிழைக்கிறது என்று எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவள் கணவன் அவளைக் கொல்லும் நஞ்சொன்றையே கருவாக அவள் உடலில் செலுத்தியிருப்பதாக நேற்று சொன்னாள். அக்கரு வளர்ந்து தன்னை கிழித்துக்கொண்டுதான் வெளியே வரும் என்று ஒவ்வொரு நாளும் கனவில் காண்கிறாள்.” திரௌபதி சவிதையின் கைகளை பற்றிக்கொண்டு “என்ன கனவு அது?” என்றாள்.

அவள் கைகள் குளிர்ந்து இறந்த மீன்கள் போலிருந்தன. கையை உருவ முயன்றபடி “ஒன்றுமில்லை” என்று சொன்னாள். “அத்தகைய கனவுகள் வராத கருவுற்ற பெண்கள் எவருமில்லை” என்றாள் திரௌபதி. “ஆம், எனக்குத் தெரியும்” என்றாள் அவள். “சரி, நான் சொல்கிறேன். நீ இக்கருவால் உயிர் துறக்கப்போவதில்லை. அறுபதாண்டு வாழ்ந்து உன் மூன்றாம் கொடிவழியினரைக் கண்ட பின்னரே இங்கிருந்து செல்வாய். போதுமா?” என்றாள் திரௌபதி. அவள் விழிகளையும் சொல்லுறுதியையும் கண்ட கோகிலம் “தெய்வச்சொல் கேட்டதுபோல் உள்ளது, அம்மா” என்றாள்.

சவிதை சினத்துடன் “அதைச் சொல்ல நீங்கள் யார்?” என்று கேட்டாள். சுளித்த உதடுகளுக்குள் அவள் பற்கள் தெரிந்தன. “சொல்வதற்கு எனக்கு ஆற்றலுண்டு என்றே கொள்” என்றாள் திரௌபதி. சவிதை முகம் திருப்பிக்கொண்டாள். அரசமரத்தடியில் பெண்கள் ஒவ்வொருவராக அமர்ந்துகொண்டனர். ஆண்கள் வண்டியிலிருந்து பொதிகளையும் பெட்டிகளையும் கலங்களையும் இறக்கி வைத்தனர். பொதி சுமந்துவந்த பெண்கள் முதுகை நிலம்பதிய வைத்து மல்லாந்து படுத்தனர். கலங்களில் இருந்து இன்கடுங்கள்ளை மூங்கில் குவளைகளில் ஊற்றி ஆண்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். பெண்கள் துணிப்பொதிகளை அவிழ்த்து உள்ளே வாழையிலையில் பொதிந்து தீயில் சுட்டெடுத்த அரிசி அப்பங்களை எடுத்து குழந்தைகளுக்கு அளித்தனர். ஒருவரோடொருவர் பூசலிட்டு கூவிச்சிரித்தபடி குழந்தைகள் அவற்றை வாங்கிக்கொண்டனர்.

தேங்காய் சேர்த்து பிசைந்து சுடப்பட்ட பச்சரிசி அப்பம் அந்த வழிநடைப் பசிக்கு மிக சுவையாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. மிருகி “நான் ஊனுணவு மிகுதியாக உண்ணவேண்டும் என்கிறார்கள். நான்கு மாதம் எதை உண்டாலும் வெளியே வந்துகொண்டிருந்தது. உண்மையில் இப்போது ஓரிரு மாதங்களாகத்தான் வயிறு நிறைய உண்கிறேன். ஆயினும் முன்பு வாயுமிழ்ந்த நினைவு எழும்போது மேற்கொண்டு உண்ண முடியவில்லை” என்றாள். “அதற்கு எளிய வழி உன் வயிறு ஒரு சிறு குருவிக்கூடு, அதிலுள்ள குஞ்சு ஒன்று சிவந்த அலகைப் பிளந்து சிறு சிறகுகளை அடித்தபடி எம்பி எம்பி இந்த உணவுக்காக குதிக்கிறது என்று எண்ணிக்கொள்வதே. ஒரு துண்டுகூட வீணாகாமல் உண்பாய்” என்றாள் திரௌபதி. அவள் முகம் மலர்ந்து “ஆம், அதை கேட்கையிலேயே மெய் விதிர்ப்பு கொள்கிறது” என்றபடி திரௌபதியின் கைகளை தொட்டாள்.

கோகிலம் “நன்றாக பேசுகிறாய். கதை சொல்வாயா?” என்றாள். “நிறைய கதை கேட்டிருக்கிறேன் எதையும் இதுவரை சொன்னதில்லை” என்றாள் திரௌபதி. “நீ எதில் தேர்ந்தவள்?” என்றாள் மிருகி. “அணிச்சேடி வேலையை செய்ய முடியுமென்று எண்ணுகின்றேன். காவல்பெண்டாகவும் அமைவேன்” என்றாள் திரௌபதி. “அதை அடுமனைகளில் செய்ய முடியுமா என்ன? அதற்கு அரண்மனைப்பழக்கம் இருக்க வேண்டுமே?” என்றாள் கோகிலம். “அவளை பார்த்தாலே தெரியவில்லையா அவள் அடுமனைப்பெண் அல்ல என்று? அரண்மனைகளில் வளர்ந்தவள் அவள்” என்றாள் மிருகி. திரௌபதி “எப்படி தெரியும்?” என்றாள். “உன் கால்களைப் பார் அவை நெடுந்தூரம் வழி நடந்தவை ஆயினும் எங்களைப்போல இளமையிலிருந்தே மண்ணை அறிந்தவையல்ல. கடுநடையில் வளர்ந்த கால்களில் விரல்கள் விலகியிருக்கும். பாதங்கள் இணையாக நிலம் பதியாது.”

திரௌபதி புன்னகையுடன் “மெய்தான். நான் அரண்மனையில் வளர்ந்தேன்” என்றாள். “நீ சொல்ல மறுக்கும் அனைத்தும் அரண்மனைகளில் நிகழ்ந்தவை” என்றாள் மிருகி. அவளை கூர்ந்து நோக்கியபடி “அழகிய சூதப்பெண்கள் அனைவருக்கும் ஒரு பெருங்கலத்தை நிறைக்கும் அளவுக்கு நஞ்சும் கசப்பும் நெஞ்சில் இருக்கும்” என்றாள். திரௌபதி “கடுங்கசப்பு” என்றாள். கோகிலம் “ஆம், உன் புன்னகை அனைத்திலும் அது உள்ளது. நீ சிறுமை செய்யப்பட்டாயா?” என்றாள். “ஆம்” என்றாள் திரௌபதி. “எங்கு?” என்றாள் சிம்ஹி. “அவை முன்பு” என்றாள் திரௌபதி. “அவை முன்பா?” என்றபடி இரு பெண்கள் எழுந்து அருகே வந்தனர். “அவையிலா?” என்றனர். “ஆம்” என்று குனிந்து அப்பத்தை தின்றபடி திரௌபதி சொன்னாள்.

கோகிலம் “பெண்களுக்கு சிறுமையெல்லாம் தனியறையில்தான். அவை முன்பிலென்றால்…?” என்றாள். மிருகி சீற்றத்துடன் “சிறுமையில் பெரிதென்ன சிறிதென்ன? தன்மேல் மதிப்பில்லாத ஆண் ஒருவனால் வெறும் உடலென கைப்பற்றி புணரப்படும் சிறுமைக்கு அப்பால் எவரும் பெண்ணுக்கு எச்சிறுமையையும் அளித்துவிட முடியாது” என்றாள். மூச்சு சீற “புணர்ச்சிச் செயலே அவ்வாறுதான் அமைந்துள்ளது. பற்றி ஆட்கொண்டு கசக்கி முகர்ந்து துய்த்து துறந்து செல்லுதல். எச்சில் இலையென பெண்ணை உணரச்செய்தல்” என்றாள். கோகிலம் “நாம் அதை ஏன் பேசவேண்டும்?” என்றாள். மிருகி “நீ அரண்மனைகளில் பணியாற்றியதில்லை” என்றாள். கோகிலம் “ஆம், அது என் நல்லூழ்” என்றாள். சிம்ஹி “உணவின்போது கசப்புகளை பேசவேண்டியதில்லை” என்றாள்.

“ஆயினும் அவை நடுவே என்றால்…” என்றாள் கோகிலம். “எண்ணவே முடியவில்லை.” மிருகி “கேளடி, இருண்ட அறையில் எவருமே இல்லாமல் கீழ்மைப்பட்டு தன்னுடலை அளிக்கும் ஒரு சூதப்பெண்கூட பல்லாயிரம் பேர் நோக்கும் அவை முன்புதான் அதற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறாள். இல்லையென்று சொல் பார்க்கலாம்” என்றாள். கோகிலம் “எனக்குத் தெரியவில்லை” என்றாள். “அப்போதும் பிறந்திருக்காத தலைமுறையினரும் அதை பார்க்கிறார்கள், அறிக!” என்றாள் மிருகி. சிம்ஹி பதற்றத்துடன் “நாம் இந்தப் பேச்சையே விட்டுவிடுவோமே…” என்றாள். கோகிலம் “ஆம், நாமிதை பேச வேண்டியதில்லை” என்றாள். மிருகி “பெண்ணுக்கு இழைக்கப்பட்ட சிறுமைக்கு குருதியை மட்டுமே நிகர் வைக்கமுடியும். அப்பெண்ணின் மைந்தன் அதை செய்யவேண்டும்… அக்குருதியை அவன் முலைப்பால் என அள்ளிக் குடிக்கவேண்டும்” என்றாள். “போதும்” என்றாள் சிம்ஹி.

விகிர்தர் அரைத்துயில் மயங்க அஸ்வகனும் இரு இளஞ்சூதர்களும் வெல்லமிட்ட கொதிக்கும் அன்னநீரை ஒரு கலத்தில் கொண்டுவந்தனர். மூங்கில் குவளைகளில் விட்டு அவர்களுக்கு அளித்தனர். அஸ்வகன் திரௌபதியிடம் நீட்டியபடி புன்னகையுடன் “இது கள்ளல்ல” என்றான். “நான் கள்ளருந்துபவள் என்று தோன்றுகிறதா?” என்றாள் அவள். “இல்லை. ஆனால் உங்கள் விழிகள் கள்ளிலூறியவை என்று தோன்றுகின்றன” என்று அவன் சிரித்தான். “எங்கள் குடியில் அடுமனைத்தொழிலில் முதன்மைத் திறனோன் இவன். நாங்கள் சிறுகுடி அடுமனையாளர். எளியோருக்கான உணவைச் சமைப்பவர். இவன் அரண்மனைச் சமையலை அறிந்தவன். சம்பவன் என்று பெயர்” என்றாள் கோகிலத்தின் இளையோள். “இவனுக்கு மூத்தவர் இருவர் முன்பே மறைந்துவிட்டனர். எனக்கென்று எஞ்சும் உடன்பிறந்தான் இவனே.”

சம்பவன் “அடுமனைத்திறன் அரண்மனையை கோருகிறது. நிஷதபுரியின் அரண்மனை இன்று நல்ல திறனுள்ள அடுமனையாளர்களுக்கான இடமென்றார்கள்” என்றான். திரௌபதி “அடுமனையாளர் எவரிடமாவது பயின்றிருக்கிறீர்களா?” என்றாள். “எந்தையிடம் அன்றி எவரிடமும் பயின்றதில்லை. அஸ்தினபுரியின் பீமசேனர் எனது ஆசிரியர். அவருக்கு மாணவனாக வேண்டும் என்பதற்காகவே நான் நளபாகத்தை பயில மறுத்தேன்” என்றான். திரௌபதி “அவரை பார்த்திருக்கிறீரா?” என்று கேட்டாள். சம்பவன் “பார்த்ததில்லை. ஆனால்…” என்றபின் தன் கச்சையை நெகிழ்த்து அதிலிருந்து சிறிய பட்டுத்துணி ஒன்றை எடுத்துக் காட்டினான். அதில் பீமனின் உருவம் வண்ண நூல்களால் வரையப்பட்டிருந்தது.

“இந்த ஓவியத்தை பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திசைச்சூதரிடமிருந்து எட்டு பணம் கொடுத்து வாங்கினேன். என் கையில் தந்தை அணிவித்திருந்த பொற்கங்கணத்தை விற்று அப்பணத்தை ஈட்டினேன். ஒவ்வொரு நாளும் இது என்னுடன் இருக்கிறது. என் ஆசிரியர், என் இறைவடிவம். அவர் எங்கிருந்தோ என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நான் கற்ற அடுமனைத்தொழிலனைத்தும் என் உள்ளத்தில் அறியாத குரலென ஒலித்து இவர் கற்பித்ததே” என்றான். குரல்நெகிழ “சொல்லுங்கள் அக்கா, ஆசிரியரின் அணுக்கம் இருந்தால்தான் கற்க முடியுமா?” என்று கேட்டான்.

திரௌபதி “இல்லை. தந்தை, ஆசிரியன், காதலன் என்னும் மூன்றும் உளஉருவகங்கள் மட்டுமே. ஆனால் மெய்யன்பு என்றால், முழுப்பணிவு என்றால் காதலனும் ஆசிரியனும் தந்தையும் ஏதேனும் ஒரு தருணத்தில் அத்தவத்தை அறிந்து நம்மைத் தேடி வருவார்கள். யார் கண்டது, நீர் இப்போது சென்றுகொண்டிருப்பதே உமது ஆசிரியரின் காலடிகளை தேடித்தானோ என்னவோ?” என்றாள்.

சம்பவன் உள எழுச்சியுடன் அவள் அருகே வந்து மண்டியிட்டமர்ந்து அவள் கால்களைத் தொட்டு “இச்சொற்களுக்காகவே நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன், அக்கா. இச்சொற்கள் போதும் எனக்கு. என்றேனும் ஒரு நாள் அவரை நான் காண்பேன். இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரின் இளையவர் அவர். எதிரிகள் எண்ணியே அஞ்சும் பெருவீரர். என்றேனும் ஒரு நாள் நேரில் கண்டால்கூட நெடுந்தொலைவில் நின்றபடிதான் கைகூப்புவேன். அவரது கால்தடங்கள் படிந்த மண்ணை எடுத்து என் தலையில் அணிந்துகொள்வேன். அந்த பிடிமண்ணைச் சூடும் வாய்ப்பு என் சென்னிக்கு கிடைக்குமென்றால்கூட என் மூதாதையர் என்மேல் பெருங்கருணை கொண்டிருக்கிறார்கள் என்றே கொள்வேன்” என்றான்.

திரௌபதி “ஆசிரியரின் பெருங்கருணைக்கு இணை நிற்பது தெய்வங்களின் கருணை மட்டுமே. நம் எளிமையை எண்ணி நாம் அஞ்ச வேண்டியதில்லை. நம்மில் ஆணவமும் சிறுமையும் மட்டும் இல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும். சிறு கோழிக்குஞ்சை செம்பருந்து பற்றிச்செல்வதுபோல நம்மை இப்புவியிலிருந்து தேடி வந்து பற்றிச் சென்று மலைமுடியில் அமர்த்துவார்கள். அன்னைமடியில் என அவர் அருகே நாம் அமரலாம்” என்றாள். சம்பவன் கன்னங்களில் நீர்ச்சால்கள் வழிய விம்மி அழுதபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். கோகிலம் “நற்சொற்கள் சொன்னாய், சைரந்திரி. உனது நா நிகழட்டும்” என்றாள். “நான் சொன்ன சொற்கள் எதுவும் நிகழாதிருந்ததில்லை” என்றாள் திரௌபதி.

பின்னாலிருந்து அவள் கையைத் தொட்ட சவிதை “அவ்வாறென்றால் நானும் பெற்றுப் பிழைப்பேனா, அக்கா?” என்றாள். “நீ பெருந்தோள் கொண்ட மாவீரனை பெறுவாய்” என்றாள் திரௌபதி. அவள் மெய்ப்புகொள்வது கழுத்தில் தெரிந்தது. “எப்படி?” என்று மூச்சொலியுடன் கேட்டாள். திரௌபதி “அடுமனைக்குச் செல். அங்கு உன்னைக் கண்டதுமே உனக்கு அருள்பவர் ஒருவர் வருவார். இப்புவி கண்டவற்றிலேயே பெருந்தோள் கொண்டவர். இளையவளே, யானை துதிக்கையை எண்ணுக! கருங்கால்வேங்கைப் பெருமரம் பறித்தெடுக்கும் ஆற்றல் கொண்டது அது. இதழ் கசங்காது மலர்கொய்யவும் அறிந்தது. உன்மேல் அக்கருணை பொழியும். ஆலமரத்தடியில் என அவர் காலடியில் அமைக! உன்னில் எழுவதும் பிறிதொரு பெருந்தோளனாகவே இருப்பான்” என்றாள். அவள் தலையில் கைவைத்து “தெய்வமெழும் சொல் இது, இளையவளே. நெடுந்தொலைவில் அவரைக் கண்டதுமே நீ அறிவாய், இப்புவியில் இனி அஞ்சவேண்டியதென்று எதுவுமே இல்லை என” என்றாள்.

துணி கிழிபடும் ஒலியில் விசும்பியபடி சவிதை தன் முட்டில் முகம் புதைத்து அழத்தொடங்கினாள். அவ்வொலியைக் கேட்டபடி விழிநீர் வழிய அப்பெண்கள் அமர்ந்திருந்தனர்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி: கழனியூரன்
அடுத்த கட்டுரைசபரி -கடிதங்கள்