கலையும் அல்லதும் -கடிதங்கள்

rias
கலையும் அல்லதும்- ஒருகடிதம்
கலையும் அல்லதும் –ஒரு பதில்

ஜெ,

உங்கள் விரிவான பதில் கண்டதில் மகிழ்ச்சி. நான் அதனை எழுதும் போது நாவல்களையும் திரைப்படங்களையும் மையப்படுத்தியே எழுத ஆரம்பித்தேன். நாவல்களைப் பற்றி எழுதும் போது, அது நான் நினைத்திராத தளங்களுக்குச் சென்று வேறு சில புதிய சாத்தியங்களைக் காட்டியது. அதனை விரிவாக எழுத வேண்டுமென்று தோன்றியமையால், நண்பர்களுடனான அப்போதைய உரையாடலுக்காக திரைப்படத்தினை உதாரணம் கொள்ளும்படியாயிற்று.

ஆமாம், நீங்கள் சொல்வது போல் நான் முதன்மையாக திரைப்பட ரசிகன் அல்ல. ஆனால் சிலசமயம் சில வணிகத் திரைப்படங்களை எவ்வாறு மாற்றம் செய்தால் அது கலைப் படைப்பாக மாறும் என்பதை ஒரு விளையாட்டாக கற்பனை செய்வதுண்டு. நாவல்களுக்கு அவ்வாறு செய்வதில் மனம் ஒப்பவில்லை. உங்கள் பதிலையொட்டி எனக்கு தோன்றிய எண்ணங்களை சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்களுக்கு எழுத வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.

கூடுதலாக ஓர் விண்ணப்பம்.

உங்கள் தளத்திலுள்ள எண்ணுடைய அந்தப் புகைப்படம் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னாலானது. அதில் பழம் மாதிரி இருக்கிறேன். இம்மடலுடன் இணைத்திருக்கும் புகைப்படத்தினையே இனிவரும் காலங்களில் பயன்படுத்துவதற்கு தாங்கள் ஆவணம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மின்னஞ்சல் முகவரியை இணைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.

ஒப்பம்,

ரியாஸ்

***

அன்புள்ள ரியாஸ்,

சிங்கப்பூர் மைனர் போலிருக்கிறீர்கள்.

சொந்த அனுபவங்களில் இருந்து வாசிப்பை மதிப்பிடுவதற்கான தொடக்கமாக அமையட்டும் இது. நல்ல விவாதம்

ஜெ

***

அன்புள்ள ஆசிரியருக்கு,

கலையும் அல்லதும் பதிலில் வரலாறு, பண்பாட்டு பின்புல சார்ந்த அறிவு பற்றி எழுதியிருந்தீர்கள்.அவை சார்ந்த அறிவுபெற எந்த நூல்களை வாசிக்கலாம்.அதே வகையில் தமிழகம், ஆந்திரகேரள தென்னிந்திய அறிதலுக்கு உதவும் நூல்கள் பற்றி தெரிந்து காெள்வது எப்படி?.எதிலிருந்து துவங்குவது அல்லது வாசிக்கும் நூல்களில் துவங்கிவிட்டேனா? எனத் தெரியவில்லை.உங்களுக்கு நேரமிருப்பின் நூல்களைக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.

அன்புடன்,

கமல தேவி

***

அன்புள்ள கமலதேவி,

அவ்வாறு குறிப்பிட்ட சில நூல்களைச் சொல்லமுடியாது. ஆடு மேய்வதைப்போலத்தான். அது சுவைதேடித்தான் மேயும். ஆனால் அதன் நாவுக்குச் சுவையாக இருப்பது அதன் உடலுக்கு நல்லது

நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன். வரலாறு, பண்பாடு சார்ந்து தமிழில் எழுதப்பட்ட முக்கியமான நூல்களை எல்லாம் என் தளத்தில் குறிப்பிட்டிருப்பேன். அவற்றை வாசித்தாலே போதுமானது என நினைக்கிறேன்

ஜெ

***

அன்புள்ள ஜெ

கலையும் அல்லதும் முக்கியமான கட்டுரை. எனக்கே நான் எதை கலை என்று எண்ணுகிறேன் என்ற சந்தேகம் இருந்தது. பெரும்பாலும் எனக்கு எதில் அதிக வேலை இருந்ததோ அதை கலை என நினைப்பது என் வழக்கமாக இருந்திருக்கிறது. நான் கலை எனக்கண்ட பல படைப்புகளுக்கும் நீங்கள் சொல்லும் critique of culture and history என்னும் அம்சம் மிகக்குறைவு என இப்போது உணர்கிறேன்

சரவணன்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26
அடுத்த கட்டுரைஒரு கதைக்கருவி