எனது கணவனும் ஏனைய விலங்குகளும்

romulas

இனிய ஜெயம்,

வீ எஸ் ராமச்சந்திரன் அவர்களின் வழிகூறும் மூளை, தியடோர் பாஸ்கரன் அவர்களின் கல்மேல் நடந்த காலம் நூல்களைத் தொடர்ந்து, இவ்வாண்டின் தமிழின் சிறந்த வரவுகளில் ஒன்று பாரதி புத்தகாலய வெளியீட்டில் ஜானகி லெனின் எழுதிய எனது கணவனும் ஏனைய விலங்குகளும் எனும் நூல்.[படிங்க நல்லாருக்கு என்று சொல்லி அதை எனக்கு த ந்தவர் காந்தி டுடே சுனில்].

ராமும் அவரது மனைவி ஜானகியும் கோஸ்டாரிகாவில் தேடல் பணியில் இருக்கிறார்கள். யாரும் புகுந்து தேடும் பல தங்க சுரங்கங்கள் அங்கு உண்டு. ராம் தம்பதியரும் ஒரு சுரங்கத்தை தேர்ந்தெடுத்து, தேடி சலிக்கிரார்கள். இறுதில் ஒரு தேவ கணத்தில் இதோ இதோ என ராம் கெட்டவார்த்தை சொல்லி மகிழ்ச்சியில் கூவுகிறார். அவர் தேடியதை கண்டடைந்து விட்டார். போவா எனும் அந்த நிலத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் அபூர்வ நச்சரவம்.

கர்நாடகாவில் ராம் தம்பதியர் இரு நாகங்கள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மல்யுத்தத்தில் இருக்கும் நிலையை வேடிக்கைபார்த்தபடி நிற்கின்றனர். யுத்தத்தில் தோற்ற நாகம் விரைவில் பின்வாங்கும் பாதையில், தடையாக ராம். அவரது கால்களுக்கு இடையே புகுந்து எழுந்த அரவம், ராமின் புட்டத்தை கடித்து விட்டு ஓடி விடுகிறது. அவசரமாக ராம் உடைகளை களைகிறார்.. ஜீன்ஸ் முரட்டு துணி, அல்லது பலவீனமடைந்த அரவத்தின் தாக்குதல், அரவத்தின் பற்கள் பதியவில்லை. ”நல்லவேளை என் புட்டத்தை கடித்து குருதி உருஞ்சும் துர்பாக்கியம் உனக்கு நிகழவில்லை ” என்றபடி ஜானகியை நோக்கி சிரிக்கிறார் ராம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபது ராம் ஆகும்பே இலிருந்து சென்னை ரயில் ஏறுகிறார். ஒரு சிறுவன் அவரது பையின் சிறிய ஓட்டை வழியே தலையை நீட்டுவது என்னவாக இருக்கும் எனும் ஆவலோடு பார்க்கிறான். அவனது கண்ணின் ஆவலைக் கொண்டு ராம் பையை பார்க்கிறார். வெளியே தலை நீட்ட முயன்று கொண்டிருக்கிறது கரு நாகம். சூ என்றபடி அதனை மூக்கில் தட்டி உள்ளே தள்ளி விட்டு, சிறுவனை சும்மா அது ஒரு நாய்க்குட்டி என சமாதானப்படுத்துகிறார். சென்னை பாம்புப் பண்ணையின் பல பாம்புகளில் ஒன்று இவ்வாறு பயணித்து வருகிறது.

ராம் என்று அறியப்படும் ராம்லஸ் ஏல் விட்டேகர் சென்னை பாம்பு மற்றும் முதலை பண்ணைகளின், ஆகும்பே ராஜ நாக ஆராய்ச்சி மையத்தின், மழைக்காடுகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு இருளர் கூட்டமைப்பு ஆகிவற்றின் தோற்றுவாய்களின் மூலமுதல்வன். இந்தியப் பாம்புகள் அடிப்படைக் கையேடு நூலின் ஆசிரியர்.[தமிழில் தேசிய புத்தக நிறுவன வெளியீடாகவும் கிடைக்கிறது] இந்திய ராஜ நாகங்கள் ஆவணப் படத்தின் மூலவர். இவரது மனைவி ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கமே [தமிழில் கே ஆர் லெனின்] எனது கணவனும் ஏனைய விலங்குகளும் என்ற வாழ்வனுபவங்களின் தொகுப்பு நூல்.

ro

சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில், ஊருக்கு வெளியே புதர்க்காட்டில் நிலம் வாங்கி, இருளர் குடியின் நட்பு சூழ, எளிய பண்ணை வீடு கட்டி அதில் ஜானகி குடி வருவதில் துவங்குகிறது நூல். நூலின் வெவ்வேறு தருணங்களில் அந்தப் பண்ணை வீடு, உலர்நில பசுமைக்காட்டு மரங்கள் சூழ, சிப்பிப்பாறை, ஜெர்மன்ஷெப்பெர்டு உள்ளிட்ட ஆறு நாய்கள், லப்பி எனும் வராகி, மூன்று கீறி, பலவகை பாம்புகள், எலிகள், தவளைகள்,தேரைகள், குளவிகள், குரங்குகள்,பறவைகள் குடியேறி மெல்ல மெல்ல உயிர் கொண்டு வளர்கிறது.

பண்ணை வீட்டில்அலமாரிகளில் தேரைகள், நூல் அடுக்குகளில் தேள்கள், ஜன்னல் மற்றும் இன்ன பிற இடங்களில் பாம்புகள் இவைகள் மத்தியில் இனிக்க இனிக்க ராமும் தானும் வாழும் வாழ்வை விவரித்து செல்கிறார் ஜானகி. ஸ்லைடு காட்சி போல சட்சட் என காட்சி மாறும் அனுபவக் கட்டுரைகளின் வழியே, ராமின் வம்ச வரலாறு தொட்டு [ராமின் அப்பா, ராம்லஸ் ஏல் விட்டேகர் ஜுனியர், ராமின் தாத்த்தா ராம்லஸ் ஏல் விட்டேகர் சீனியர்] முதலைப்பண்ணை, அதன் முதலைகள், பாம்புகள், மரங்கள், சிறுத்தைகள், வேறு பல ஊர்வன பறப்பன, ஆளுமைகள், உணவுகள், பயணங்கள், நிலங்கள், மையமாக ராம் என தனித்துவமான நிகழ்வுகளை சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறார் ஜானகி.

சிறுவனாக மும்பையில் கைக்காசுக்காக குருவிகள் பிடிப்பதன் வழியே வாரம் மூன்று ரூபாய் சம்பாதிக்கிறார் ராம். [இன்று குருவி அபூர்வ உயிரினம்], வியட்நாம் போர் முடிந்து இந்தியா திரும்ப காசு குறைய, ராம் அங்கும் பாம்புகள் பிடித்து விற்கிறார், அங்கே ஒரு பெண், இந்த ஆளைக் குறித்து அறியாதவள், ராமின் பையை திருடி, தலைகீழாக கவிழ்த்துகிறாள், பொத்தென ஒரு நச்சரவம் கீழே விழுந்து, அதன் வால் கிலுகிலுப்பையை சிலுசிலுவென சிலம்ப, இவள் பீதியில் அலற, சயாம் பாம்புப் பண்ணை நிறுவனர் வில்லியம் பில்ஹாஸ்ட், கொஞ்சம் கொஞ்சமாக தனது குருதியில் நஞ்சு கலந்து, தன்னை பாம்பின் நஞ்சுக்கு ஆட்படாதவராக மாற்றிக் கொண்டவர், நிறைய பாம்புக் கடி வாங்கியவர், முதிய வயதிலும் வேலியை துள்ளி சாடும், துடிப்புள்ளவர், நூறு வயது கண்டவர். இவரே ராமின் குரு. இவர் போலவே ப்ளோரிடாவின் அட்டிலர் அரவங்கள் குறித்த விர்ப்பன்னர் ராமின் நண்பர். அட்டிலர் பாம்பு இருக்கும் இடங்களை துல்லியமாக கணிக்கும் சுவாரஸ்யமான அத்யாயம் ஒன்று நூலில் வருகிறது. அட்டிலர் யூகத்தின் படி ராம் மரமேறி, ஒரு ஆரஞ்சு வண்ண அபூர்வ பாம்பை பிடிக்கிறார்.

முன்பின்னாக ஆங்காங்கே , பாம்புகளை மிக அருகே வைத்து, [ராஜ நாகமே எனினும்] அதன் விழியோர செதில்கள், தலை மேல் செதில்கள், உடல் செதில்கள் கொண்டு பாம்புகளை துல்லியமாக வகைப்படுத்தும் முறைமைகள் குறித்த சித்திரங்கள் வருகிறது. பாம்புகள் பெரும்பாலும் இருபால் புணர்ச்சியாளர்கள். ஆண் பாம்புகளுக்கு இரண்டு ஜனன உறுப்புகள் உண்டு [அநியாயம்], புணர்ச்சி நிறைந்ததும் ஆண் பெண்ணின் ஜனனவாயை தனது உறுப்பில் இருந்து வெளியாகும் திரவம் கொண்டு சீல் செய்து விடும்.[கற்பு அரண்] குருதிச் சுத்தம் கொண்ட அடுத்த தலைமுறை. என பலப்பல சுவாரஸ்ய தகவல்கள்.

பண்ணைக்கு வரும் முதலைகள் கொண்டு, வித் விதமான முதலைகளின் அவற்றின் குணாதிசயங்களின், சித்திரங்கள் நூல் நெடுக. எண்பத்து ஐந்தில் ஒரு பெரிய புயல் வெள்ளம். முதலைப்பண்ணையின் முதலைகள் எல்லாம் வெளியேறி விட்டன என ஊருக்குள் வதந்தி பரவுகிறது. அப்போது, அந்த புயல் பொழுதில் அந்த பண்ணைக்குள் ராம், முதலைகள் வெளியேறா வண்ணம் நடத்தும் போராட்டம் இந்த நூலின் தனித்துவமான பல தருணங்களில் ஒன்று.

பாம்புகளையும், முதலைகளையும் தேடி உலகெங்கும் அலைகிறது இந்த ஜோடி. அந்தமானுக்கு ஒரு குறிப்பிட்ட முதலையை காண செல்ல விழைகிறார் ராம். அங்கே வெளிநாட்டினர் செல்ல சில சிக்கல்கள். அதை எத்ர்கொள்ள ராம் அமெரிக்க குடியுரிமையை துறந்து, இந்தியக் குடியுரிமையை பெறுகிறார். மெக்சிகோ பாலை நிலத்தில் பாம்பு தேடுகையில், ராம் ஒரு காவலதிகாரியால் விசாரிக்கப்படுகிறார். ராம் ஒரு அமெரிக்கன். ஆனால் இந்தியன். இந்த குழப்பத்தை அந்த அதிகாரியால் இறுதிவரை விளங்கிக் கொள்ளவே இயலவில்லை.

போதை, மிருகங்கள் கடத்துபவர்கள் முதல் சத்யஜித் ரே வரை முதலைப் பண்ணைக்கு வந்த சென்ற வித விதமான ஆளுமைகள், ஆரோவில் நிலத்தில் ட்ராப்பிக்கல் ட்ரை எவர்க்ரீன் பாரஸ்ட் எனும் வனத்தை உருவாக்கிய பால், பல்வேறு உயிர் சூழல் சார்ந்த ஆளுமைகள், இந்திய, இந்தோனேஷிய,தமிழ் பழங்குடிகள் என இவர்களை தொட்டு விரிகிறது நூல்.

இரண்டு வருடம் மனிதர்கள் கண்ணில் தென்படாமல் நகருக்குள் நடமாடிய அஜோபா எனும் சிறுத்தை, பண்ணைக்கு வந்து பண்ணையை தனது ஆளுகைக்கு கொண்டு வரும் பதினெட்டு அடி நீள ஜாஸ் என பெயரிட்ட முதலை, யானைச்சொரியன் என்ற விஷச் செடி, பறவைகளை, ஊர்வனவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒட்டுண்ணிகள், விஷக் காய்ச்சல் கொண்டு வரும் கிருமிகள் என ஒரு வண்ணமயமான உயிர் உலகை முன்னிருத்துகிறது இந்த நூல்.

நமது கோழிமுட்டை வாழ்வுக்கு, வெளியே உயிர்த்துடிப்பு கொண்டு விளங்கும் ஒரு பல்லுர்யிர் இயக்கத்தை வண்ணமயமாக முன்வைக்கிறது இந்த நூல். சர்க்கஸில் இருந்து கிடைக்கிறது ஒரு முள்ளம்பன்றிக் குட்டி. நாட்களுக்குப் பிறகு முகாமை காலி செய்யும் தருணம், அந்த முள்ளம்பன்றிக் குட்டி வெளியேறி காட்டுக்கு செல்ல மறுக்கிறது, எங்கு கொண்டு விட்டாலும், திரும்ப அவர்களிடமே வருகிறது. ஜானகி நினைவாக சேர்த்து வைத்திருக்கும் பலவற்றில் மயிர் சுருள் அடங்கிய சிறிய பையும் ஒன்று. தான் ஆசை ஆசையாக வளர்த்து, சிறுத்தைக்கு பலி கொடுத்த ஜெர்மன்ஷெப்பெர்டு நாயின் முடிச் சுருள் அது. இப்படி பல உணர்சிகர தருணங்கள்.

முதலையின் இரக்கமே அற்ற கொல்லும் தன்மையை ஒரு அத்யாயத்தில் விவரிக்கும் ஜானகி, பிரிதெங்கோ,வேறொரு அத்யாயத்தில் முதலை டொமஸ்டிக்கேட் ஆகும் அழகை, அதன் அறிவை விவரித்துப் போகிறார். பாம்புகள், தவளைகள், முதல் எறும்புகள் வரை இந்த நூலுக்குள் வரும் அத்தனை உயிர்களையும் இந்த எதிர் எதிர் நிலையின் சமன்வயத்தில் வைத்தே சித்தரித்துக் காட்டுகிறார்.

மானுடம் மேல், உயிர்த் தொகுதி மேல் எந்த விலக்கமும் கொள்ளாத ஜானகியின் அகத்தை ஒரு வாசகன் இந்த நூலில் சென்றடைய முடிகிறது. நூலின் தலையாய அத்யாயங்கள் இரண்டு. ஒன்று இந்தோனேஷியாவில் ராம் கலந்துகொள்ளும் கிறிஸ்துமஸ் விருந்து. இரண்டு அந்த செங்கல்பட்டு புதர்க்காட்டில் படையெடுக்கும் ஈசல் கூட்டத்தை விருந்தாக்கி மகிழும் ஊர்வன மற்றும் பறப்பன குறித்த சித்திரம்.

ஈசல்களை ஒரு பெரு விருந்தென அள்ளி அள்ளி உண்கின்றன ஊர்வனவும் பறப்பனவும். மாபெரும் களியாட்டம், உயிர் சுழலின் ஊற்று முகம், மெல்ல மெல்ல ஓய்கிறது, ஒரு செந்தேளின் வாயில் எஞ்சி நிற்கிறது ஈசல் ஒன்றின் இறக்கை. எந்தப் புனைகதை எழுத்தாளனுக்கும் சவால் விடும் சித்தரிப்பு.

தொண்ணூறு சிறிய சிறிய கட்டுரைகள். பக்கக் கட்டுப்பாடுகளாக இருக்கக் கூடும். ஆகவே நிலம் மற்றும் ஆளுமைகளின் சித்தரிப்புபை சட சட என சில கோட்டு இழுப்புகளில் சித்தரிக்கிறார் ஜானகி. சிற்சில கோடிழுப்புகள் பார்த்தாலே சொல்லி விடுவோம் இது காந்தி, இது சே குவேரா என, அந்த மாயம் இந்த எழுத்தளிலும் நிகழ்ந்திருக்கிறது. இந்த நூலின் உணர்வுக் கட்டமைப்பின் வெற்றியில் முக்கிய பங்கு இதில் அவ்வப்போது தெறிக்கும் நகைச்சுவை. ஆ. முத்துலிங்கத்தின் அதே நகைச்சுவை.

ஜானகி ஒருவரை நான்சென்ஸ் என சொல்கிறார். அந்த நபர் மிக மிக புன்பட்டுவிடுகிறார். ஜானகிக்கு இதில் இந்த அளவு புண்பட என்ன இருக்கிறது என்றே புரியவில்லை. வெளியே, மிக, மிக வெளியே, நேரு திராவிட நாடு கோரிக்கையை நான்சென்ஸ் எனும் ஒற்றை சொல்லில் நிராகரிக்கிறார். அந்த நான்சென்ஸ் திமுகா வழி இங்கே பாமரனுக்கும் பரவுகிறது. மிக மிக பிந்தி இதை ஜானகி அறிய வருகிறார்.

முக நூலில் மட்டுமே உயிர்த்துக் கிடக்கும் ஜீவராசிகள், இந்த நூலை படிக்க நேர்ந்தால், நெஞ்சிடிப்பு கூட சாத்தியம். [என்னது முகநூலுக்கு வெளியே உலகம் இவ்ளோ பெரிசா?] சரளமான மொழிபெயர்ப்பில் மிக சுவாரஸ்யமான, தனித்துவமான நூல்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபெண்களின் எழுத்துக்கள்
அடுத்த கட்டுரைவாஞ்சியும் தலித்துக்களும்