ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் –

sila-nerangalil-sila-manithargal

ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை
கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர் 
ஜெயகாந்தன் தமிழ்விக்கி

அன்புள்ள ஜெமோ

உங்கள் தளத்தில் வெளிவந்த கங்கா ஈஸ்வர் எழுதிய கட்டுரையை இரண்டுமுறை வாசித்தேன். முதலில் அந்தக்கட்டுரையின் நீளமும் செறிவான மொழியும் நீங்களே எழுதியதோ என்று எண்ணவைத்தன. ஆனால் இன்னொரு முறை வாசித்தபோது அதில் பெண் என்னும் தன்னிலை இருந்தது. அது ஒரு பெண் எழுதியது என்பதை உறுதியாக உணர்ந்தபோதுதான் அக்கட்டுரை தமிழுக்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்தது. இப்படி ஒரு அழுத்தமான மொழியில் ஆழமாக தன் மனம் ஒரு புனைவை எப்படி எதிர்கொள்கிறது என்று தமிழில் பெண்கள் எழுதியதில்லை. தமிழில் பெண்கள் விமர்சனமாக எழுதி நான் வாசித்தவை ஏதுமில்லை. எளிமையான மதிப்புரைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. மீனாட்சி முகர்ஜி அவர்கள் யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவலுக்கு எழுதிய விமர்சனத்தை முன்பொருமுறை வாசித்திருக்கிறேன். அப்போது தோன்றியது தமிழில் என்றைக்கு இப்படி ஒரு அசலான ஆழமான பெண்குரல் எழும் என்று. அதை இப்போது கண்டேன். கங்கா ஈஸ்வர் என்பது புனைபெயர் அல்ல என்றால் அவர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார். உற்சாகத்துடன் தொடர்ந்து எழுதவேண்டும் அவர். அருமையான கட்டுரை. முழுமையானது. என் வாழ்த்துக்கள்

 எஸ். ஆர்.கோமதிநாயகம்

***

அன்புள்ள ஜெ

கங்கா ஈஸ்வர் எழுதிய நீளமான கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்தேன். மிகமிக முக்கியமான கட்டுரை. அக்கட்டுரையின் தனிச்சிறப்பு என்ன என்று யோசித்தேன். அது சிலநேரங்களில் சில மனிதர்கள் என்னும் நூலுக்கு இன்றுவரை அளிக்கப்பட்டுள்ள வாசிப்புகளில் இருந்து ஒரு முக்கியமான அம்சத்தை நீக்கம்செய்துவிட்டது. அதாவது அது ஒழுக்கம் என்ற கோணத்தில் பேசவே இல்லை. தப்பா சரியா என்றே யோசிக்கவில்லை. Passion என்ற கோணத்தில் மட்டுமே அந்தக்கதையை வாசிக்கிறது. கங்காவுக்கு பிரபுவுடன் உருவாகும் உறவின் அடித்தளம் என்ன என்பதை மட்டுமே முக்கியமான கேள்வியாக எடுத்துக்கொள்கிறது. இது மிகமிக முக்கியமான ஒரு கோணம் என நினைக்கிறேன்

இது ஏன் நிகழ்கிறதென்றால் இந்தக் கட்டுரையாளர் தன்னை கங்காவுடன் மிக நுட்பமாக அடையாளம் கண்டுகொள்கிறார் என்பதனால்தான் .அவர் கங்கா பிரபுவை ஏற்றுக்கொண்டதை ஒரு வகை சுயம்வரமாகவே பார்க்கிறார். அல்லது காந்தர்வ மணமாக. ஏனென்றால் அவன்தான் அவளுடைய man. அவள் அவனை அப்போது அப்படி வெளிப்படையாக உணரவில்லை. அது ஓர் உள்ளுணர்வு. பின்னர் அப்படி உணர்கிறாள். அதை அவனும் புரிந்துகொள்ளவில்லை. முழுக்கமுழுக்க passion வழியாகவே செல்லும் இந்த வாசிப்பு தமிழுக்கு மிகமிக முக்கியமான ஒரு கோணத்தை திறந்து தருகிறது என நினைக்கிறேன்

மகாதேவன்

***

அன்புள்ள ஜெ,

கங்கா ஈஸ்வர் எழுதிய கங்கை எப்படி போகிறாள் மிகமிக முக்கியமான கட்டுரை. தமிழில் எந்த ஓர் இலக்கியப்படைப்பைப் பற்றியும் இப்படி ஒரு ஆழமான உணர்வுபூர்வமான அலசல் பெண்களிடமிருந்து வந்ததில்லை என நினைக்கிறேன். வழக்கமான முரண்பாடுதான். அன்புக்கும் ஒழுக்கத்துக்கும் நடுவே. ஒழுக்கமாக பிறர் பார்க்கிறார்கள். அன்பு என்று அவள் பார்க்கிறாள். அவள் fate ஆல் அப்படி ஆனாள் என்று நாம் வாசித்தோம். அது destiny என்று கட்டுரையில் கங்கா ஈஸ்வர் சொல்கிறார். கூர்மையான வாசிப்பு. அதோடு மையக்கதாபாத்திரத்தை அத்தனை பரிவோடு அணுகியிருக்கிறார் கட்டுரையாசிரியர்.

எம்.சிவசுப்ரமணியம்

***

அன்புள்ள ஜெ,

கங்கா ஈஸ்வரின் கட்டுரை மிகச்சிறப்பான ஒன்று. அவருக்கு என் வாழ்த்துக்கள். வழக்கமாக விமர்சகர்களில் நான் எப்படி கூர்மையாகக் கவனிக்கிறேன் பார் என்ற தோரணை இருக்கும். தீர்ப்புசொல்லும் முனைப்பும் இருக்கும். இரண்டுமே இல்லாமல் புனைவை ஒரு வாழ்க்கை மட்டுமே என எடுத்துக்கொண்டு அதில் மிகுந்த உணர்ச்சிபாவத்துடன் ஈடுபட்டுச்செல்கிறார் கட்டுரையாளர். அதுதான் இந்தக்கட்டுரையை ஒரு தனித்தன்மைகொண்ட சிறந்த கட்டுரையாக ஆக்குகிறது

மகேஷ்

***

முந்தைய கட்டுரைசபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்
அடுத்த கட்டுரைவாசிப்பின் வெற்றி