‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6

5. கரியெழில்

flowerவிதர்ப்பத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கையில் தருமன் சொன்னார் “நாங்கள் இன்பத்துறப்பு நோன்பு கொண்டவர்கள், சூதரே. இன்னுணவு உண்பதில்லை. மலர்சூடுவதில்லை. எனவே செவ்வழியே செல்வதும் எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. செல்வர் முகம் காண்பதும் நெறிப்பிழைவு என்றே கொள்ளப்படும்.” பிங்கலன் புன்னகைத்தபடி “நல்ல நோன்பு, முனிவரே. ஆனால் செல்வர் முகம் காண மறுப்பது துன்பத்துறப்பு அல்லவா?” என்றான். தருமன் புன்னகைத்து “கதையை தொடர்க!” என்றார்.

அவர்கள் பெரும்பாதையிலிருந்து கிளைபிரிந்து குறுங்காடு வழியாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். ஒருவர் பின் ஒருவரென்றே அங்கே நடக்கமுடிந்தது. வில்லுடன் அர்ஜுனன் முன்னால் செல்ல பிங்கலனின் மைந்தர் தொடர்ந்தனர். தருமனுக்குப் பின்னால் திரௌபதி நடந்தாள். அவர்களுக்குப் பின்னால் பிங்கலன் கதை சொன்னபடி செல்ல நகுலனும் சகதேவனும் பிங்கலனின் குடிமகளிரும் நடந்தனர். இறுதியாக பீமன் சூதர்களின் குழந்தைகளை தோளிலேற்றியபடி வந்தான்.

பிங்கலன் கதையை தொடர்ந்தான். விந்தியமலைகளுக்கு அப்பால் குடியேறிய நிஷாதர்கள் காகங்களை குடித்தெய்வமென கொண்டிருந்தார்கள். அன்னையரும் மூதாதையரும் மின்கதிர்தேவனும் காற்றின் தெய்வங்களும் நிரையமர்ந்த அவர்களின் கோயில்களில் இடது வாயிலின் எல்லையில் காகத்தின் மீதமர்ந்த கலிதேவனின் சிலை கண்கள் மூடிக்கட்டிய வடிவில் அமர்ந்திருந்தது. கலியே அவர்களின் முதன்மைத்தெய்வம். அத்தனை பலிகளும் கொடைகளும் கலிதேவனுக்கே முதலில் அளிக்கப்பட்டன. கலியின் சொல்பெற்றே அவர்கள் விதைத்து அறுத்தனர். மணந்து ஈன்றனர். இறந்து நினைக்கப்பட்டனர்.

ஆண்டுக்கொருமுறை கலிதேவனுக்குரிய ஆடிமாதம் கருநிலவுநாளில் அவன் கண்களின் கட்டை பூசகர் அவிழ்ப்பார். அந்நாள் காகதிருஷ்டிநாள் என்று அவர்களால் கொண்டாடப்பட்டது. அன்று காலைமுதல் கலிதேவனுக்கு வழிபாடுகள் தொடங்கும். கள் படைத்து கரும்பன்றி பலியிட்டு கருநீல மலர்களால் பூசெய்கை நிகழ்த்துவார்கள். இருள்விழித் தேவனின் முன் பூசகர் வெறியாட்டுகொண்டு நிற்க அவர்களின் காலடியில் விழுந்து துயர்சொல்லி கொடைகோருவார்கள் குடிகள். அந்தி இருண்டதும் அனைவரும் தங்கள் இல்லங்களுக்குள் சென்று கதவுகளை மூடிக்கொள்வார்கள். பூசகர் பின்னின்று கலியின் கண்கட்டை அவிழ்த்தபின் பந்தங்களைப் பற்றியபடி ஓடிச்சென்று தன் சிறுகுடிலுக்குள் புகுந்துகொள்வார். பின்னர் முதல்நிலவுக்கீற்று எழுவதுவரை எவரும் வெளியே நடமாடுவதில்லை. கலி தன் விழி முதலில் எவரைத் தொடுகிறதோ அவர்களை பற்றிக்கொள்வான் என்பது வழிச்சொல்.

எவரும் இல்லத்திலிருந்து வெளியே வரப்போவதில்லை என்றே எண்ணியிருப்பார்கள். ஆனால் ஆண்டுதோறும் ஒருவர் வெளிவந்து கலியின் நோக்கு தொட்டு இருள் சூடி அழிவது தவறாமல் நிகழ்ந்தது. கலி வந்து நின்ற நாள்முதல் ஒருமுறையும் தவறியதில்லை. கலிநிகழ்வின் கதைகளை மட்டும் சேர்த்து பூசகர் பாடிய குலப்பாடல் ஆண்டுதோறும் நீண்டது. அவ்வரிசையில் அரசகுடிப் பிறந்தவர்கள் எழுவர் இருந்தனர். அவர்கள் கலியடியார் என்றழைக்கப்பட்டனர். “கலி தன்னை விரும்பி அணுகுபவர்களை மட்டுமே ஆட்கொள்ளமுடியும் என்ற சொல்பெற்றவன்” என்றனர் மூத்தோர். “விழைந்து கலிமுன் தோன்றுபவர் எவர்?” என்றனர் இளையோர்.

“மைந்தரே, ஆக்கத்தையும் அழகையும் இனிமையையும் விழைவது போலவே மானுடர் அழிவையும் இழிவையும் கசப்பையும் தேடுவதுண்டு என்று அறிக! சுவைகளில் மானுடர் மிகவிழைவது இனிப்பை அல்ல, கசப்பையே. சற்று இனிப்போ புளிப்போ உப்போ கலந்து ஒவ்வொரு நாளும் மானுடர் கசப்பை உண்கிறார்கள். நாதிருந்தும் சிற்றிளமை வரைதான் இனிப்பின் மேல் விழைவு. பின் வாழ்நாளெல்லாம் கசப்பே சுவையென்று உறைக்கிறது” என்று மறுமொழி இறுத்தார் மூத்த நிமித்திகர் ஒருவர். ஊழ்வினை செலுத்திய தற்செயலால், அடக்கியும் மீறும் ஆர்வத்தால், எதையேனும் செய்துபார்க்கவேண்டுமென்ற இளமைத்துடிப்பால், எனையென்ன செய்ய இயலும் என்னும் ஆணவத்தால், பிறர்மேல் கொண்ட வஞ்சத்தால், அறியமுடியாத சினங்களால் அக்குடிகளில் எவரேனும் கலியின் கண்ணெதிரே சென்றனர். அனைத்தையும்விட தன்னை அழித்துக்கொள்ளவேண்டும் என்று உள்ளிருந்து உந்தும் விசை ஒன்றால்தான் பெரும்பாலானவர்கள் அவன் விழி எதிர் நின்றனர்.

கலி விழியைக் கண்டவன் அஞ்சி அலறி ஓடிவந்து இல்லம்புகும் ஓசை கேட்கையில் பிறர் ஆறுதல் கொண்டனர். “எந்தையே, இம்முறையும் பலி கொண்டீரா?” என்று திகைத்தனர். கலி கொண்டவன் ஒவ்வொருநாளும் நிகழ்வதை எதிர்நோக்கி சிலநாட்கள் இருந்தான். சூழ இருந்தவர் நோக்காததுபோல் நோக்கி காத்திருந்தனர். ஒன்றும் நிகழாமை கண்டு ஒன்றுமில்லை என்று அவர்கள் உணரும்போது ஒன்று நிகழ்ந்தது. அவன் அழிந்த பின்னர் அவர்கள் எண்ணிச்சூழ்ந்தபோது அவன் அதுவரை வாழ்ந்த வாழ்க்கையின் விளைவாகவும் உகந்த முடிவாகவுமே அது இருப்பதை கண்டார்கள். “கலி பழி சுமப்பதில்லை” என்றனர் பூசகர். “கலி கண் பெறுபவன் அத்தருணம் நோக்கியே அத்தனை செயல்களாலும் வந்துகொண்டிருந்தான்.”

flowerவீரசேனனுக்கு மைந்தனில்லாமையால் நிஷாத குலமுறைப்படி சினந்த நாகங்களுக்கும் மைந்தர்பிறப்பைத் தடுக்கும் கானுறை தெய்வங்களுக்கும் பூசனை செய்து கனிவு தேடினான். மூதன்னையருக்கும் மூத்தாருக்கும் பலிகள் கொடுத்தான். எட்டாண்டுகள் நோன்பு நோற்றும் குழவி திகழாமை கண்டு சோர்ந்திருந்தான். ஒருமுறை தன் குலத்தின் ஆலயத்திற்குச் சென்று பூசனைமுறைகள் முடித்து திரும்பும்போது இடப்பக்கம் வீற்றிருந்த கலியின் சிலையை பார்த்தான். சிலகணங்கள் நோக்கி நின்றபின் “நான் நம் தெய்வங்களில் முதன்மையானவராகிய கலியிடம் மட்டும் ஏன் கோரவே இல்லை, அமைச்சரே?” என்றான்.

அமைச்சராகிய பரமர் பணிவுடன் “கலியிடம் எவரும் எதையும் கோருவதில்லை, அரசே” என்றார். “ஏன்?” என்றான் வீரசேனன். “கோருவன அனைத்தையும் அளிக்கும் தெய்வம் அது. ஆனால் முழுமுதல் தெய்வம் அல்ல. பெருவெளியின் வெறுமையை நிறைத்துள்ளது சொல்லப்படாத சொல். அச்சொல்லில் ஒரு துளியை அள்ளி பொருளும் உயிருமாக்கி அளிக்கின்றனர் பிரம்மனும் விண்ணோனும் சிவனும் அன்னையும். கலியால் அவ்வண்ணம் சொல்லள்ள இயலாது. இங்குள்ள ஒன்றை எடுத்து உருமாற்றி நமக்களிக்கவே இயலும். துலாவின் மறுதட்டிலும் நம்முடையதே வைக்கப்படும்” என்றார் பரமர்.

“ஆயினும் கோருவது வந்தமையும் அல்லவா?” என்றான் வீரசேனன். “ஆம் அரசே, ஐயமே வேண்டியதில்லை. பெருந்தெய்வங்கள் அருந்தவம் பொலிந்த பின்னரே கனிபவை. அத்துடன் நம் ஊழும் அங்கு வந்து கூர்கொண்டிருக்கவேண்டும். கலியை கைகூப்பி கோரினாலே போதும்” என்றார் பரமர். ஒருகணம் கலி முன் தயங்கி நின்றபின் அரசன் “கருமையின் இறையே, எனக்கு அருள்க! என் குலம் பொலிய ஒரு மைந்தனை தருக!” என்று வேண்டினான். பெருமூச்சுடன் மூன்றுமுறை நிலம்தொட்டு வணங்கிவிட்டு இல்லம் மீண்டான். அன்றிரவு அவன் கனவில் எட்டு கைகளிலும் பாசமும் அங்குசமும் உழலைத்தடியும் வில்லும் நீலமலரும் காகக்கொடியும் அஞ்சலும் அருளலுமாகத் தோன்றிய கலி “நீ கோரியதைப் பெறுக!” என்றான்.

விழிகசியும்படி மகிழ்ந்து “அடிபணிகிறேன், தேவே” என்றான் வீரசேனன். “உனக்கு ஒரு மைந்தனை அருள்வேன். அக்கணத்தில் எங்கேனும் இறக்கும் ஒருவனின் மறுபிறப்பென்றே அது அமையும்” என்றான் கலி. “அவ்வாறே, கரியனே” என்றான் வீரசேனன். “அவன் என் அடியவன். எந்நிலையிலும் அவன் அவ்வாறே ஆகவேண்டும். என்னை மீறுகையில் அவனை நான் கொள்வேன்” என்றபின் கலி கண்ணாழத்துக் காரிருளுக்குள் மறைந்தான். விழித்தெழுந்த வீரசேனன் தன் அருகே படுத்திருந்த அரசியை நோக்கினான். அவள்மேல் நிழல் ஒன்று விழுந்திருந்தது. அது எதன் நிழல் என்று அறிய அறையை விழிசூழ்ந்தபின் நோக்கியபோது அந்நிழல் இல்லை. அவள் முகம் நீலம் கொண்டிருந்தது. அறியா அச்சத்துடன் அவன் அன்றிரவெல்லாம் அவளை நோக்கிக்கொண்டிருந்தான்.

மறுநாள் கண்விழித்த அவன் மனைவி உவகைப்பெருக்குடன் அவன் கைகளை பற்றிக்கொண்டு “அரசே, நான் ஒரு கனவு கண்டேன். எனக்கு மைந்தன் பிறக்கவிருக்கிறான்” என்றாள். “என்ன கனவு?” என்றான் வீரசேனன். “எவரோ எனக்கு உணவு பரிமாறுகிறார்கள். அறுசுவையும் தன் முழுமையில் அமைந்து ஒன்றை பிறிதொன்று நிகர்செய்த சுவை. அள்ளி அள்ளி உண்டுகொண்டே இருந்தேன். வயிறு புடைத்து வீங்கி பெரிதாகியது. கை ஊன்றி எழுந்தபோது தெரிந்தது நான் கருவுற்றிருக்கிறேன் என்று. எவரோ என்னை அழைத்தார்கள். நான் வெளியே வந்து பார்த்தேன். கரிய புரவி ஒன்று வெளியே நின்றிருந்தது. அதன் மேல் ஏறிக்கொண்டு விரைந்தேன். ஒளிமட்டுமே ஆன சூரியன் திகழ்ந்த வானில் குளிர்காற்று என் குழலை அலைக்க சென்றுகொண்டே இருந்தேன்.”

நிமித்திகர் அதைக் கேட்டதுமே சொல்லிவிட்டனர் “அரசாளும் மைந்தன். கரிய தோற்றம் கொண்டவன்.” பத்துமாதம் கடந்து அவள் அவ்வண்ணமே அழகிய மைந்தனை பெற்றாள். அந்நாளும் தருணமும் கணித்த கணியர் “இறுதிவரை அரசாள்வார். பெரும்புகழ்பெற்ற அரசியை அடைந்து நன்மக்களைப் பெற்று கொடிவழியை மலரச்செய்வார்” என்றனர். குழவிக்கு ஓராண்டு நிறைகையில் அரண்மனைக்கு வந்த தப்தக முனிவர் “அரசே, இவன் கருக்கொண்ட கணத்தில் இறந்தவன் உஜ்ஜயினியில் வாழ்ந்த முதுசூதனாகிய பாகுகன். அவனுடைய வாழ்வின் எச்சங்கள் இவனில் இருக்கலாம். திறன் கொண்டிருப்பான், இறுதியில் வெல்வான்” என்றார்.

மைந்தனுக்கு தன் மூதாதை பெயர்களில் ஒன்றை வைக்க வீரசேனன் விழைந்தான். ஆனால் கலிதேவனின் முன் மைந்தனைக் கிடத்தியபோது பூசகன்மேல் வெறியாட்டிலெழுந்த கலிதேவன் “இவன் இங்கு நான் முளைத்தெழுந்த தளிர். என் முளை என்பதனால் இவனை நளன் என்றழையுங்கள்” என்று ஆணையிட்டான். ஆகவே மைந்தனுக்கு நளன் என்று பெயரிட்டார்கள். மலையிறங்கும் அருவியில் ஆயிரம் காதம் உருண்டுவந்த கரிய கல் என மென்மையின் ஒளிகொண்டிருந்தான் மைந்தன். இரண்டு வயதில் சேடியருடன் அடுமனைக்குச் சென்றபோது அடம்பிடித்து இறங்கி சட்டுவத்தை கையில் எடுத்து கொதிக்கும் குழம்பிலிட்டு சுழற்றி முகம் மலர்ந்து நகைத்தான். மூன்று வயதில் புரவியில் ஏறவேண்டும் என அழுதவனை மடியிலமர்த்தி தந்தை முற்றத்தை சுற்றிவந்தார். சிறுவயதிலேயே தெரிந்துவிட்டது அவன் அடுதொழிலன், புரவியறிந்தவன் என்று.

flowerவளர்ந்து எழுந்தபோது பாரதவர்ஷத்தில் நிகரென எவரும் இல்லாத அடுகலைஞனாகவும் புரவியின் உள்ளறிந்தவனாகவும் அவன் அறியப்படலானான். நிஷாதருக்கு கைபடாதவை அவ்விரு கலைகளும். காட்டில் சேர்த்தவற்றை அவ்வண்ணமே சுட்டும் அவித்தும் தின்று பழகியவர்கள் அவர்கள். சுவை என்பது பசியின் ஒரு தருணம் மட்டுமே என்றுதான் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுக்கு உண்பதென்பது தன் உடலை நாவில் குவித்தல் என்று அவன் கற்பித்தான். உடலுக்குள் உறைவது, இப்புவியை அறிவதில் முதன்மையானது சுவைத்தலே என்று தெரியச்செய்தான். அன்னை முலையை சுவைத்ததுபோல் புவியிலுள்ள அனைத்தையும் அறிக என்று அறிவுறுத்தினான்.

உண்ணுதலின் நிறைவை நிஷதகுடிகள் உணர்ந்தனர். ஒவ்வொரு சுதியையும் தனித்தனியாகக் கேட்டு ஓசையிலுள்ள இசையை உணர்வதுபோல அறுசுவை கொண்ட கனிகளையும் காய்களையும் மணிகளையும் உப்புகளையும் அறிந்தபின் சுதி கலந்து பண்ணென்றாவதன் முடிவற்ற மாயத்தை அறிந்து அதில் திளைத்து ஆழ்ந்தனர். சுவை என்பது பருப்பொருள் மானுட ஞானமாக கனிவதே. சுவை என்பது இரு முழுமைகள் என தங்களை அமைத்துக்கொண்டு இங்கிருக்கும் பொருட்கள் ஒன்றையொன்று அறியும் தருணம். சுவையால் அவை இணைக்கப்படுகின்றன. எனவே சுவைவெளியே அவை ஒன்றென இருக்கும் பெருநிலை. பொருள்கள் புடைத்தெழுந்து கடுவெளி புடவியென்றாகிறது. கடுவெளியில் பொருளின் முதலியல்பென தோன்றுவது சுவை. இன்மை இருப்பாகும் அத்தருணமே சுவை. சுவையே பொருளென்றாகியது. பொருளை சுவையென்றாக்குபவன் புடவியை பிரம்மம் என்று அறிபவன்.

நளன் கைபட்ட பொருளனைத்தும் தங்கள் சுவையின் உச்சத்தை சூடி நின்றன. அவன் சமைப்பவற்றின் சுவையை அடுமனை மணத்திலேயே உணர்ந்தனர் நிஷதத்தின் குடிகள். பின்னர் அடுமனையின் ஒலிகளிலேயே அச்சுவையை உணர்ந்தனர். அவனை நோக்குவதே நாவில் சுவையை எழுப்புவதை அறிந்து தாங்களே வியந்துகொண்டனர். அவன் பெயர் சொன்னாலே இளமைந்தர் கடைவாயில் சுவைநீர் ஊறி வழிந்தது. அவன் சமைத்தவற்றை உண்டு நகர்மக்களின் சுவைக்கொழுந்துகள் கூர்கொண்டன. எங்கும் அவர்கள் சுவை தேடினர். ஆகவே சமைப்பவர்கள் எல்லாருமே சுவைதேர்பவர்களென்றாயினர்.

நிஷதத்தின் உணவுச்சுவை வணிகர்களின் வழியாக எங்கும் பரவியது. அங்கு அடுதொழில் கற்க படகிலேறி வந்தனர் அயல்குடிகள். அடுமனைகளில் தங்கி பொருளுடன் பொருள் கலந்து பொருளுக்குள் உறைபவை வெளிவரும் மாயமென்ன என்று கற்றனர். அது கற்பதல்ல, கையில் அமரும் உள்ளம் மட்டுமே அறியும் ஒரு நுண்மை என்று அறிந்து அதை எய்தி மீண்டனர். நாச்சுவை தேர்ந்தமையால் நிஷதரின் செவிச்சுவையும் கூர்ந்தது. சொற்சுவை விரிந்தது. அங்கே சூதரும் பாணரும் புலவரும் நாள்தோறும் வந்திறங்கினர். முழவும் யாழும் தெருக்களெங்கும் ஒலித்தன. நிஷதகுடிகள் குன்றேறி நின்று திசைமுழுக்க நோக்குபவர்கள் போல ஆனார்கள். தொலைவுகள் அவர்களை அணுகி வந்தன. அவர்களின் சொற்களிலெல்லாம் பொருட்கள் செறிந்தன.

விழிச்சுவை நுண்மைகொள்ள விழியென்றாகும் சித்தம் பெருக அவர்களின் கைகளில் இருந்து கலை பிறந்தது. எப்பொருளும் அதன் உச்சநிலையில் கலைப்பொருளே. நிஷதத்தின் கத்திகள் மும்மடங்கு கூரும் நிகர்வும் கொண்டவை. அவர்களின் கலங்கள் காற்றுபுகாதபடி மூடுபவை. அவர்களின் ஆடைகள் என்றும் புதியவை. அவர்களின் பொருட்கள் கலிங்க வணிகர்களின் வழியாக தென்னகமெங்கும் சென்று செல்வமென மீண்டு வந்து கிரிப்பிரஸ்தத்தை ஒளிரச்செய்தன. தென்னகத்தின் கருவூலம் என்று அந்நகரை பாடலாயினர் சூதர்.

நிஷதமண்ணுக்கு புரவி வந்தது எட்டு தலைமுறைகளுக்கு முன்னர் கலிங்க வணிகர்களின் வழியாகத்தான். கிரிசிருங்கம் பெருநகரென்று உருவானபோது படைவல்லமைக்கும் காவலுக்கும் புரவிகளின் தேவை உணரப்பட்டபோது அவற்றை பெரும்பொருள் கொடுத்து வாங்கினர். உருளைக் கூழாங்கற்கள் நிறைந்த அந்த மண்ணில் அவை கால்வைக்கவே கூசின. படகுகளில் நின்று அஞ்சி உடல்சிலிர்த்து குளம்பு பெயர்க்காமலேயே பின்னடைந்தன. அவற்றை புட்டத்தில் தட்டி ஊக்கி முன்செலுத்தினர். கயிற்றை இழுத்து இறக்கி விட்டபோது கால்களை உதறியபடி மூச்சு சீறி தரைமுகர்ந்தன. அவற்றைத் தட்டி ஊக்கி கொட்டகைகளுக்கு கொண்டுசென்றனர்.

அவை அந்நிலத்தை ஒருபோதும் இயல்பென உணரவில்லை. எத்தனை பழகிய பின்னரும் அவை அஞ்சியும் தயங்கியும்தான் வெளியே காலெடுத்து வைத்தன. ஆணையிட்டு, தட்டி, குதிமுள்ளால் குத்தி அவற்றை ஓட்டியபோது பிடரி சிலிர்த்து விழியுருட்டி கனைத்தபின் கண்மூடி விரைவெடுத்தன. கற்களில் குளம்பு சிக்கி சரிந்து காலொடிந்து புரவிகள் விழுவது நாளும் நிகழ்ந்தது. அதன் மேல் அமர்ந்து ஓட்டுபவன் கழுத்தொடிந்து மாய்வதும் அடிக்கடி அமைந்தது. எனவே புரவியில் ஏறுபவர்கள் அஞ்சியும் தயங்கியுமே ஏறினர். அவர்களின் உளநடுக்கை புரவிகளின் நடுக்கம் அறிந்துகொண்டது. புரவிகளும் ஊர்பவரும் இறக்கும்தோறும் நிஷதபுரியில் புரவியூர்பவர்கள் குறைந்தனர். புரவியில்லாமலேயே செய்திகள் செல்லவும் காவல் திகழவும் அங்கே அமைப்புகள் உருவாயின. பின்னர் புரவிகள் நகரச்சாலைகளில் அணிநடை செல்வதற்குரியவை மட்டுமே என்னும் நிலை அமைந்தது.

நளன் எட்டு வயதில் ஒரு புரவியில் தனித்து ஏறினான். கொட்டகையில் தனியாக கட்டப்பட்டிருந்த கரிய புரவியின் அருகே அவன் நின்றிருந்தான். சூதன் அப்பால் சென்றதும் அவன் அதை அணுகி முதுகை தொட்டான். அச்சமும் அதிலிருந்து எழும் சினமும், கட்டற்ற வெறியும் கொண்டிருந்த காளகன் என்னும் அப்புரவியை கட்டுகளில் இருந்து அவிழ்த்து சிறுநடை கொண்டுசெல்வதற்குக்கூட அங்கே எவருமிருக்கவில்லை. தசைப்பயிற்சிக்காக அதன்மேல் மணல்மூட்டைகளைக் கட்டி சோலையில் அவிழ்த்துவிட்டு முரசறைந்து அச்சுறுத்துவார்கள். வெருண்டு வால்சுழற்றி அது ஓடிச் சலித்து நிற்கும். அதுவே பசித்து வந்துசேரும்போது பிடித்துக்கட்டி தசையுருவிவிட்டு உணவளிப்பார்கள்.

சிறுவனாகிய நளன் அதன் கட்டுகளை அவிழ்த்து வெளியே கொண்டுசெல்வதை எவரும் காணவில்லை. அவன் அதன்மேல் சேணம் அணிவித்துக் கொண்டிருந்தபோதுதான் சூதன் அதை கண்டான். “இளவரசே…” என்று கூவியபடி அவன் பாய்ந்தோடி வந்தான். அதற்குள் நளன் புரவிமேல் ஏறிக்கொண்டு அதை கிளப்பிவிட்டான். அஞ்சி தயங்கி நின்ற காளகன் பின்னர் கனைத்தபடி பாய்ந்து வெளியே ஓடியது. நெடுந்தொலைவு சென்றபின்னர்தான் தன்மேல் எவரோ இருக்கும் உணர்வை அடைந்து சினம்கொண்டு பின்னங்கால்களை உதைத்து துள்ளித்திமிறி அவனை கீழே வீழ்த்த முயன்றது. கனைத்தபடி தன்னைத்தானே சுழற்றிக்கொண்டது.

நளன் அதற்கு முன் புரவியில் ஏறியதில்லை. ஆனால் புரவியேறுபவர்களை கூர்ந்து நோக்கியிருந்தான். புரவியேற்றம் பயில்பவர்களை சென்று நோக்கி நின்றிருப்பது அவன் வழக்கம். சேணத்தை அவன் சரியாக கட்டியிருந்தான். கடிவாளத்தை இறுகப்பற்றி கால்வளைகளில் பாதம்நுழைத்து விலாவை அணைத்துக்கொண்டு அதன் கழுத்தின்மேல் உடலை ஒட்டிக்கொண்டான். துள்ளிக் கனைத்து காட்டுக்குள் ஓடிய புரவி மூச்சிரைக்க மெல்ல அமைதியடைந்தது. மரக்கிளைகளால் நளன் உடல் கிழிபட்டு குருதி வழிந்தது. ஆனால் அவனால் அப்புரவியுடன் உளச்சரடால் தொடர்பாட முடிந்தது. அதை அவன் முன்னரே அறிந்திருந்தான்.

“நான் உன்னை ஆளவில்லை. இனியவனே, நான் உன்னுடன் இணைகிறேன். நாம் முன்னரே அறிவோம். நீ என் பாதி. என் உடல் நீ. உன் உயிர் நான். நீ புல்லை உண்ணும்போது நான் சுவையை அறிகிறேன். உன் கால்களில் நான் அறிவதே மண். உன் பிடரிமயிரின் அலைவில் என் விரைவு. நீ என் பருவடிவம். நம் உள்ளங்கள் ஆரத்தழுவிக்கொண்டவை. இனியவனே, என்னை புரவி என்றுணர்க! உன்னை நான் நளன் என்று அறிவதைப்போல” புரவி விழியுருட்டிக்கொண்டே இருந்தது. நீள்மூச்செறிந்து கால்களால் நிலத்தை தட்டியது. அவன் அதன் கழுத்தைத் தட்டி “செல்க!” என்றான்.

அது அஞ்சுவது கூழாங்கற்களையும் பாறையிடுக்குகளையும்தான் என அவன் அறிந்தான். அதன் கால்கள் கூசுவதை அவன் உள்ளம் அறிந்தது. சிலகணங்களுக்குப்பின் அவன் கூழாங்கற்களை தான் உணரத்தொடங்கினான். இடுக்குகளை அவன் உள்ளம் இயல்பாக தவிர்த்தது. அதை புரவியும் அறிந்தது. அதன் பறதி அகன்றது. அவர்கள் மலைச்சரிவுகளில் பாய்ந்தனர். புல்வெளிகளை கடந்தனர். கோதையின் பெருக்கில் நீராடியபின் மீண்டும் ஓடிக்களித்தனர். புரவியாக இருப்பதன் இன்பத்தை காளகன் உணர்ந்தது.

NEERKOLAM_EPI_06
திரும்பி அரண்மனை முற்றத்திற்கு வருகையில் அவனை எதிர்பார்த்து அன்னையும் தந்தையும் அமைச்சரும் காவலரும் பதைப்புடன் காத்திருந்தனர். அவனைக் கண்டதும் அன்னை அழுதபடி கைவிரித்து பாய்ந்துவந்தாள். அவன் புரவியிலிருந்து இறங்கியபோதே தெரிந்துவிட்டது, அவன் புரவியை வென்றுவிட்டான் என்று. வீரர்கள் பெருங்குரலில் வாழ்த்தினர். எங்கும் வெற்றிக்கூச்சல்கள் எழுந்தன. அவன் புரவியை வென்ற கதை அன்று மாலைக்குள் அந்நகரெங்கும் பேசப்பட்டது. மாலையில் அவன் காளகன் மேல் ஏறி நகரில் உலா சென்றபோது குடிகள் இருமருங்கும் பெருகிநின்று அவனை நோக்கி வியந்து சொல்லிழந்தனர். எழுந்து வாழ்த்தொலி கூவினர்.

காளகனிடமிருந்து அவன் புரவியின் உடலை கற்றான். புரவியின் மொழி அதன் தசைகளில் திகழ்வதே என்றறிந்தான். அத்தனை புரவிகளுடனும் அவன் உரையாடத் தொடங்கினான். அவை அவனூடாக மானுடரை அறியலாயின. மிக விரைவிலேயே கிரிப்பிரஸ்தத்தில் புரவித்திறனாளர் உருவாகி வந்தனர். உருளைக்கற்களை புரவிக்குளம்புகள் பழகிக்கொண்டன. எந்தக் கல்லில் காலூன்றுவது எந்த இடைவெளியில் குளம்பமைப்பது என்பதை குளம்புகளை ஆளும் காற்றின் மைந்தர்களாகிய நான்கு மாருதர்களும் புரிந்துகொண்டனர்.

கிரிப்பிரஸ்தத்தின் புரவிப்படை பெருகியதும் அது செல்வமும் காவலும் கொண்ட மாநகர் என்றாயிற்று. செல்வம் பெருகும்போது மேலும் செல்வம் அங்கு வந்துசேர்கிறது. காவல் கொண்ட நகர் கரை இறுகிய ஏரி. தென்னகத்தில் இருந்த மதுரை, காஞ்சி, விஜயபுரி போன்ற நகர்களை விடவும் பொலிவுடையது கிரிப்பிரஸ்தம் என்றனர் கவிஞர். நிஷாதகுலத்தில் நளனைப்போல் அரசன் ஒருவன் அமைந்ததில்லை என்று குலப்பாடகர் பாடினர். அவன் கரிய எழிலையும் கைதிகழ்ந்த கலையையும் விண்ணில் விரையும் பரித்திறனையும் பற்றி எழுதப்பட்ட பாடல்கள் சூதர் சொல்லில் ஏறி பாரதவர்ஷமெங்கும் சென்றன.

கலியருளால் பிறந்த மைந்தன் அவன் என்று அன்னையும் தந்தையும் நளனுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருந்தனர். நாள்தோறும் முதற்கருக்கலில் அவன் நீராடி கரிய ஆடை அணிந்து நீலமலர்களுடன் சென்று கலிதேவனை வணங்கி மீண்டான். வெல்வதெல்லாம் கலியின் கொடை என்றும் இயற்றுவதெல்லாம் அவன் இயல்வதால் என்றும் எண்ணியிருந்தான். ஒவ்வொரு முறை உணவுண்ணும்போதும் முதற்கவளத்தை அருகே வந்தமரும் காகத்திற்கு வழங்கினான். ஒவ்வொரு இரவும் கலியின் கால்களை எண்ணியபடியே கண்மூடித் துயின்றான்.

“எண்ணியது நிகழும் என்ற பெருமை கதைகளுக்கு உண்டு” என்றான் பிங்கலன். “ஆகவே அஞ்சுவது அணுகாமல் கதைகள் முடிவதில்லை. ஒரு பிழைக்காக காத்திருந்தான் கலிதேவன். ஒற்றை ஒரு பிழை. முனிவரே, பிழையற்ற மானுடர் இல்லை என்பதனால்தான் தெய்வங்கள் மண்ணிலிறங்க முடிகிறது. பிழைகள் அவை புகுந்து களம் வந்து நின்றாடச்செய்யும் வாயில்கள்.” தருமன் “ஆம்” என்றார். சகதேவன் “நளன் செய்த பிழை என்ன?” என்றான்.

“பொன், மண், பெண் என மூன்றே பிழைக்கு முதற்பொருட்கள். ஆனால் அவற்றை பிழைமுதல் என்றாக்குவது ஆணவம்தான்” என்றான் பிங்கலன். “வேனனை வென்றது. விருத்திரனை, ஹிரண்யனை, மாபலியை, நரகனை அழித்தது. ஆணவமே மண்ணில் பெருந்தெய்வம் போலும்” என்ற பிங்கலன் கைமுழவை முழக்கி “ஆம்! ஆம்! ஆம்!” என்றான்.

முந்தைய கட்டுரைசாகித்ய அகாடமியும் நானும்
அடுத்த கட்டுரைபடங்கள்