தாயார்பாதம்- கடிதம்

feet

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கடிதங்களின் பயனாக அறம் தொகுதியில் ஏழு கதைகள் வாசித்தேன். தெளிவான சித்தரிப்பு, சிந்தனைக்கு விருந்து.

1967-70இல் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் என் அலுவலக பணியறையை பகிர்ந்துகொண்டவர் D G R செல்வநாயகம். என் தந்தை வயது. நாகர்கோவில்காரர். முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே பணிக்கு வந்த எனக்கு அவர் நட்பு , வழிநடத்துதல் பெரிய பேறு.

தொடர்ந்த ஆண்டுகளில் குமரி மாவட்ட இனிய நண்பர்கள் பலர். அவர்கள் சொல்லத்தயங்கிய, சொல்லாமல் விட்ட தகவல்களை உங்கள் குமரிமாவட்டக் கதைகளில் சொல்லி விட்டீர்கள். பல புதிர்கள் விளங்கிவிட்டன.

சோற்றுக்கணக்கு, யானை டாக்டர், தாயார் பாதம் மூன்றும் ஒரு ரகம். சமூக கொடுமையால் வாழ்வின் விளிம்பில் ஊசலாடும் பாத்திரங்கள் மூன்றிலும் உண்டு .

இந்த மூன்றும் எனக்குள் கலந்து ஒன்றாகிவிட்டன. கோவில் யானைகள் நீண்ட காலம் வாழ்கின்றனவே என்று எழுத நினைத்தேன், உடன் நினைவு வந்தது. எனக்கு சிறு வயதிலேயே சில “தாயார் பாதம் பாட்டி”கள் தெரியும். அவர்களில் (அழகிலும், அறிவிலும் நிறைந்தவர்) ஒருவர் 94 ஆண்டு வாழ்ந்தார். மற்றவர்கள் முறையே 76,47 வயது வாழ்ந்தனர். கடைசி நபரை, தான் ஒரு வேண்டாத குழந்தை என்ற எண்ணமே குன்றவைத்துவிட்டது.

மூன்று கதைகளிலும் ஒரு குறுக்கிடும் தெய்வம் தேவை. யானை டாக்டரிடம் அன்பும், புரிதலும் ,நம்பகமும் பூரணம். ஆனால் மக்களின் பொறுப்பின்மையைப்பற்றி பொருமுகிறார். கெத்தல் சாயபு இன்னும் ஒரு படி மேலே. யார் பேரிலும் குறை இல்லை, தேவையானால் direct action! ஒரு சிறு சொல் ,செயல் விருந்தாளிகளிகளின் வயிற்றையும் உள்ளத்தையும் கண்களையும் நிறைத்துவிடும்.

தாயார் பாதத்தில் அந்த தெய்வம் தென்படவில்லை. இரண்டு கொடுமை பாத்திரங்களான தாத்தாவும், அவருடைய தந்தையும் இசைக்கலைஞர்கள், நாத உபாசகர்கள் அல்ல. மென்மையான கலை உணர்வும், மிருக உணர்வும் எப்படி சேரும் என்பதற்கு உளவியல் மற்றும் வேதாந்தம் இரண்டு விளக்கங்கள் கொடுக்கின்றன.

Johari window முறை நம்மை நான்கு கூறாக நோக்குகிறது. ஒரு முகம் நான் அறிந்தது, பிறருக்கும் வெளிப்படை. இரண்டாவது, எனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் சந்தேகப்படாத முகம். மூன்றாவது, உலகம் அறிந்த என் முகம், எனக்கு மட்டும் புலப்படாதது. இவை எல்லாவற்றையும் விட அபாயகரமானது நான்காவது, எனக்கும் பிறருக்கும் தெரியாத இருண்ட முகம். முதல் மூன்றையும் பெருக்கி, நான்காவதை சுருக்குவதே சுய அறிதலின் நோக்கம்.

வேதாந்தம் வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சியால் எழும் உணர்ச்சி அலைகளை காண்கிறது. ரஜஸ் என்கிற குணம் காம, க்ரோத, லோப உந்துதல்களை செய்கிறது. தமஸ் என்கிற குணம் மோக, மத, மாத்ஸர்ய விளைவுகளை செய்கிறது.இந்த ஆறும் ஷடூர்மிகள் என்று அழைக்கப்படும்.

தமஸ் இல்லாவிட்டால் ஓய்வு,உறக்கம், மறதி இவை இல்லாமல் மனிதன் அழிவான். மதம் என்ற பெருமிதம் புத்துணர்வு கொடுக்கும். மாத்ஸர்யம் என்ற பொறாமை, திருப்தியின்மை சலிப்பை போக்கும். ஆனால் மிகுதியான தமஸ் உலகை இருண்டதாக்கிவிடும். தமஸுக்கு ஒரே நிவாரணம் ரஜஸ்.

காமம் என்னும் இச்சைகள்தான் இவ்வுலகத்தின் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் ,அறிவுக்கும், அழகுக்கும், படைப்புக்கும், ஆன்மீகத்துக்கும்கூட காரணம். க்ரோதம் அதன் மறுவடிவம். லோபம் உலகியல் முன்னேற்றத்துக்கும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் தேவை. ஆனால் மிகுதியான ரஜஸ் ,மோகம் என்கிற தமஸ் நிலைக்கு தள்ளிவிடும். மோகம் என்பது மயக்கம், குழப்பம், துக்கம், சோகம், கவலை, பீதி, வெறுப்பு, போன்ற ஒரு கலவை கஷாயம்.

ரஜஸுக்கு நிவாரணம் ஸத்வம் எனும் தெளிந்த ஒடுங்கிய நிலை, தீவிர ஸாதகர்களால் எட்டப்படுவது.ஆனால் அறம் என்னும் moderator எல்லோராலும்

கடைப்பிடிக்கத்தக்கது.தர்மத்தின் வழியில் வாழ்க்கை சக்கரம் சுழலும், யாரையும் அறுக்காது.

அறம் வீட்டிலும் பள்ளியிலும் விடாமல் போதிக்கப்படவேண்டும். இளைய தலைமுறையினரின் அனைத்து உடல் உள்ள நோய்களுக்கும் இதுவே மருந்து.

அன்புடன்,

சாம கிருஷ்ணன்

***

முந்தைய கட்டுரைவெற்றி -கடிதங்கள் 9
அடுத்த கட்டுரைஇரு காந்திகள்.