‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2

1. குருதிச்சாயல்

flowerபுலர்காலையில் காலடிச் சாலையின் ஓரமாக கட்டப்பட்டிருந்த வழிவிடுதி ஒன்றிலிருந்து பாண்டவர்களும் திரௌபதியும் கிளம்பினார்கள். முந்தையநாள் இரவு செறிந்த போதுதான் அங்கே வந்துசேர்ந்திருந்தனர். அது அரசமரத்தின் அடியில் கட்டப்பட்டிருந்த சிறிய மரப்பட்டைக்கூரையிடப்பட்ட மண் கட்டடம். வழியருகே அது விதர்ப்ப அரசன் அமைத்த விடுதி என்பதைச் சுட்டும் அறிவிப்புப்பலகை அரசமுத்திரையுடன் அமைந்திருந்தது. செம்மொழியிலும் விதர்ப்பத்தின் கிளைமொழியிலும் எழுதப்பட்டிருந்த அறிவிப்புக்குக் கீழே மொழியறியா வணிகர்களுக்காக குறிவடிவிலும் அச்செய்தி அமைந்திருந்தது.

அது ஆளில்லா விடுதி. உயரமற்ற சோர்ந்த மரங்களும் முட்புதர்களும் மண்டிய காட்டை வகுந்து சென்ற வண்டிப்பாதையில் ஒருபொழுதுக்குள் அணையும்படி அரசன் அமைத்த பெருவிடுதிகள் இருந்தன. அங்கே நூறுபேர் வரை படுக்கும்படி பெரிய கொட்டகைகளும் காளைகளையும் குதிரைகளையும் இளைபாற்றி நீர்காட்டும் தொட்டிகளும் அவற்றை கட்ட நிழல்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தன. சில விடுதிகளில் பத்து அடுமனையாளர்கள்வரை இருந்தனர். எப்போதும் உணவுப்புகை கூரைமேலெழுந்து விடுதியின் கொடி என நின்றிருந்தது. பறவைகள் கூடணைந்த மரம்போல அவ்விடுதிகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. பிரிந்து விலகிய சிறிய கிளைப்பாதைளில்தான் பேணுநர் இல்லாமல் விடுதிகள் மட்டுமே அமைந்திருந்தன. அப்பாதைகளில் பலநாட்களுக்கு ஒருமுறையே எவரேனும் சென்றனர்.

பாண்டவர்கள் பெரும்பாலும் பெருஞ்சாலைகளை தவிர்த்து கிளைப்பாதைகளிலேயே நடந்தார்கள். தொலைவிலேயே உயர்மரம் ஏறி நோக்கி பெருஞ்சாலையில் எவருமில்லை என்பதை பீமன் உறுதிசெய்த பின்னரே அவற்றில் நடக்கத் தலைப்பட்டனர். கிளைச்சாலைகளிலும் காலடிகளை தேர்ந்து வழிச்செலவினர் இருக்கிறார்களா என்பதை பீமன் அறிந்தான். எவரையும் சந்திப்பதை அவர்கள் தவிர்த்தனர். அவர்களை சொல்லினூடாக அறிந்தவர்களே ஆரியவர்த்தமெங்கும் இருந்தனர். அனைவரிடமிருந்தும் விலகிவிடவேண்டுமென்று தருமன் ஆணையிட்டிருந்தார். “நானிலம் போற்றும் புகழ் என்று சூதர் சொல்லலாம். தெய்வங்களின் புகழைவிடவும் பெரியது இப்புவி. நாம் எவரென்றே அறியாத மானுடர் வாழும் நிலங்களை அடைவோம். எளியவர்களாக அங்கிருப்போம். அது மீண்டுமொரு பிறப்பு என்றே நமக்கு அறிவை அளிப்பதாகட்டும்.”

இமயமலைச்சாரலில் இருந்து அவர்கள் கிளம்பி ஆறு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன. மலையிலிருந்து திரிகர்த்த நாட்டின் நிகர்நிலத்துக்கு இறங்கினர். திரிகர்த்த நாட்டின் பெரும்பகுதி கால்தொடாக் காடுகளாகவே இருந்தமையால் அவர்கள் விழிமுன் நிற்காமல் அதைக் கடந்து உத்தர குருநாட்டுக்குள் வரமுடிந்தது. அங்கே விரிந்த மேய்ச்சல் நிலங்களில் கன்றுகள் பகலெல்லாம் கழுத்துமணி ஒலிக்க மேய்ந்தன. ஆயர்களின் குழலோசை காட்டின் சீவிடுகளின் ஒலியுடன் இணைந்து கேட்டுக்கொண்டிருந்தது. மணியோசைகள் பெருகி ஒழுகத்தொடங்குகையில் கன்றுகள் குடிதிரும்புகின்றன என்று உணர்ந்து அதன் பின்னர் நடக்கத் தொடங்கினர்.

இருளுக்குள் சிற்றூர்களை கடந்து சென்றனர். பீமன் மட்டும் கரிய கம்பளி ஆடையால் உடலைமூடி மரவுரியை தலையில் சுற்றிக்கட்டி ஊர்களுக்குள் நுழைந்து “சுடலைச் சிவநெறியன். மானுட முகம் நோக்கா நோன்புள்ளவன். என்னுடன் வந்த ஐவர் ஊரெல்லைக்கு வெளியே நின்றுள்ளனர். கொடை அளித்து எங்கள் வாழ்த்துக்களை பெறுக! இவ்வூரைச் சூழ்ந்த கலி அகல்க! களஞ்சியங்களும் கருவயிறுகளும் கன்றுகளும் பொலிக! சிவமேயாம்! ஆம், சிவமேயாம்!” என்று கூவினான். அவன் இரண்டாவது சுற்று வரும்போது வீடுகளுக்கு முன்னால் அரிசியும் பருப்பும் வெல்லமும் வைக்கப்பட்டிருந்தன. அவன் அவற்றை தன் மூங்கில்கூடையில் கொட்டி எடுத்துக்கொண்டு திரும்பிவந்தான்.

இரவில் காட்டுக்குள் அனல்மூட்டி அவற்றை சமைத்து உண்டு சுனைநீர் அருந்தினர். பகல் முழுவதும் சோலைப்புதர்களுக்குள் ஓய்வெடுத்தனர். இரவுவிலங்குகள் அனைத்தையும் விழியொடு விழி நோக்க பழகினர். பகலொளி விழிகூசலாயிற்று. அயோத்தியை அடைந்தபோது அவர்களின் தோற்றமும் கடுநோன்பு கொள்ளும் சிவநெறியர்களைப்போலவே ஆகிவிட்டிருந்தது. சிவநெறியர்களுடன் சேர்வது பின்னர் எளிதாயிற்று. எவரென்று எவரையும் உசாவாது தானொன்றே ஆகி தன்னை கொண்டுசெல்லும் தகைமை கொண்டிருந்த சிவநெறியர்களுடன் எவராலும் நோக்கப்படாமல் செல்ல அவர்களால் இயன்றது. கங்கைக் கரையோரமாக காசியை அடைந்தனர். கங்கைக்கரைக் காடுகளில் சிவநெறியினரின் சிறுகுடில்களில் தங்கி மேலும் சென்றனர்.

கங்கையைக் கடந்து சேதிநாட்டை அடைந்தபோது மற்றொரு உரு கொண்டனர். சடைகொண்ட குழலும் தாடியும் கொண்டு மரவுரியாடை அணிந்து கோலும் வில்லும் தோல்பையும் கொண்டு நடக்கும் அவர்களை எவரும் அறிந்திருக்கவில்லை. மேகலகிரி அருகே மலைப்பாதையைக் கடந்து விந்தியமலைச்சாரலை அடைந்தபோது மீண்டும் மானுடரில்லா காட்டுக்குள் நுழைந்தனர். விந்தியமலையின் பன்னிரு மடிப்புகளை ஏறி இறங்கி மீண்டும் ஏறிக் கடந்து குண்டினபுரிக்குச் செல்லும் வணிகப்பாதையில் ஒரு மானுடரைக்கூட முகம் கொள்ளாமல் அவர்களால் செல்லமுடிந்தது.

கோடைக்காலமாதலால் விந்தியமலைகளின் காடுகள் கிளைசோர்ந்து இலையுதிர்த்து நின்றன. காற்றில் புழுதி நிறைந்திருந்தது. குரங்குகளின் ஒலியைக்கொண்டே நீரூற்றுகள் இருக்குமிடத்தை உய்த்தறிய முடிந்தது. கனிகளும் கிழங்குகளும் அரிதாகவே கிடைத்தன. எதிர்ப்படும் விலங்குகளெல்லாம் விலாவெலும்பு தெரிய மெலிந்து பழுத்த கண்களும் உலர்ந்த வாயுமாக பெருஞ்சீற்றம் கொண்டிருந்தன. பன்றிகள் கிளறியிட்ட மண்ணை முயல்கள் மேலும் கிளறிக்கொண்டிருந்தன. யானைகளின் விலாவெலும்புகளை அப்போதுதான் தருமன் பார்த்தார். “நீரின்றியமையாது அறம்” என்று தனக்குள் என முணுமுணுத்துக்கொண்டார்.

விடுதியின் முகப்பில் சுவரில் எழுதப்பட்டிருந்த சொற்களைக் கொண்டு தாழ்க்கோல் இருக்கும் கூரைமடிப்பை அறிந்து அதை எடுத்து பீமன் கதவை திறந்தான். நெடுநாட்களாக பூட்டிக்கிடந்தமையால் உள்ளிருந்த காற்று இறந்து மட்கிக்கொண்டிருந்தது. பின்கதவையும் சாளரங்களையும் திறந்தபோது புதுக்காற்று உள்ளே வர குடில் நீள்மூச்சுவிட்டு உயிர்ப்படைந்தது. அருகே கிணறு இருப்பதைக் கண்ட பீமன் வெளியே சென்று அதற்குள் எட்டிப்பார்த்தான். ரிப் ரிப் என ஒலிகேட்க மரங்களில் குரங்குகள் அமர்ந்திருப்பதை கண்டான். அன்னைக்குரங்கு அவன் கண்களைக் கண்டதும் “நல்ல நீர்தான்…” என்றது. “ஆம்” என்றான் பீமன். “நீ எங்களவனா?” என்றாள் அன்னை. “ஆம், அன்னையே” என்றான் பீமன்.

அப்பால் நின்றிருந்த ஈச்சைமரத்திலிருந்து ஓலைவெட்டி இறுக்கிப்பின்னி தோண்டி செய்தான். ஈச்சைநாராலான கயிற்றில் அதைக் கட்டி இறக்கி நீரை அள்ளினான். குரங்குகள் குட்டிகளுடன் அவனருகே வந்து குழுமின. “நான்… நான் நீர் அருந்துவேன்” என்றபடி ஒரு குட்டி பிசிறிநின்ற தலையுடன் பாய்ந்துவர இன்னொன்று அதன் வாலைப்பற்றி இழுத்தது. அதனிடம் “அப்பால் போ!” என்றது தாட்டான் குரங்கு. “நீ எப்படி இப்படி பெரியவனாக ஆனாய்?” என்று பீமனிடம் கேட்டது. பீமன் புன்னகையுடன் நீரை அதற்கு ஊற்ற அது “குழந்தைகளுக்குக் கொடு!” என்றது.

பீமன் இலைத்தொன்னைகள் செய்து அதில் நீரூற்றி வைத்தான். குட்டிகள் முட்டிமோதி அதை அருந்தின. அன்னையரும் அருகே வந்து நீர் அருந்தத் தொடங்கின. அப்பால் இலந்தை மரத்தடியில் அமர்ந்திருந்த ஐவரும் அதை நோக்கிக்கொண்டிருந்தார்கள். பீமன் நீரை தொன்னையில் கொண்டுசென்று தருமனுக்கு அளித்தான். “பெருங்குரங்கு இன்னமும் அருந்தவில்லை” என்றார் தருமன். “குடி அருந்திய பின்னரே அது அருந்தும்” என்றான் பீமன். “அவன் அருந்தட்டும். இக்காட்டின் அரசன் அவன். அவன் மண்ணுக்கு நாம் விருந்தினர். முறைமைகள் மீறப்படவேண்டியதில்லை” என்றார் தருமன்.

தாட்டான் குரங்கும் நீர் அருந்திய பின்னரே தருமன் நீரை கையில் வாங்கினார். மும்முறை நீர்தொட்டு சொட்டி “முந்தையோரே, உங்களுக்கு” என்றபின் அருந்தினார். ஒரு மிடறு குடித்தபின் திரௌபதிக்கு கொடுத்தார். அவள் அதை வாங்கி ஆவலுடன் குடிக்கத் தொடங்கினாள். பாண்டவர்கள் நால்வரும் நீர் அருந்திய பின்னர் பீமன் நீரை அள்ளி நேரடியாகவே வாய்க்குள் விட்டுக்கொண்டான். கடக் கடக் என்னும் ஒலியை குரங்குகள் ஆவலுடன் நோக்கின. “இன்னொருமுறை காட்டுங்கள்” என குட்டி ஒன்று ஆர்வத்துடன் அருகே வந்து கோரியது. பீமன் அதன்மேல் நீரைச் சொட்டி புன்னகை செய்தான்.

நீரை அள்ளித்தெளித்ததும் குடில் புத்துணர்ச்சி கொண்டது. பின்னறைக்குள் உறிகளில் அரிசியும் பருப்பும் உப்பும் உலர்காய்களும் இருந்தன. கலங்களை எடுத்து வைத்து நீர்கொண்டுவந்து ஊற்றினான் பீமன். மூங்கில் பெட்டிகளில் மரவுரிகளும் ஈச்சைப்பாய்களும் இருந்தன. அவற்றைக் கொண்டுவந்து விரித்ததும் தருமன் அமர்ந்தார். நகுலனும் சகதேவனும் மல்லாந்து படுக்க வாயிலருகே சுவர்சாய்ந்து அமர்ந்த அர்ஜுனன் மடியில் வில்லை வைத்துக்கொண்டான்.

வெளியே ஓசையெழுந்தது. பீமன் அங்கே நான்கு யானைகள் வந்து நின்றிருப்பதை கண்டான். “நீர் போதுமான அளவுக்கு உள்ளதா, மந்தா?” என்றார் தருமன். “அருந்துவதற்கு போதும்” என்றான் பீமன். “அருந்தும் நீரில் குளிக்கலாகாது” என்று சொன்னபின் தருமன் விழிகளை மூடிக்கொண்டார். திரௌபதி உரைகல்லை உரசி அனலெழுப்பி அடுப்பை பற்றவைத்தாள். பானையில் நீரூற்றி உலையிட்டாள். அடுமனைப்புகை அதை இல்லமென்றே ஆக்கும் விந்தையை பீமன் எண்ணிக்கொண்டான். நெடுநாட்களாக அவர்கள் அங்கே தங்கியிருப்பதைப்போல உளமயக்கெழுந்தது.

வெளியே சென்று நிலத்திலிருந்த பள்ளமான பகுதியை தெரிந்து அங்கே குழி ஒன்றை எடுத்தான். அதன்மேல் இலைகளையும் பாளைகளையும் நெருக்கமாகப் பரப்பி அது அழுந்திப்படியும்பொருட்டு கற்களைப்பரப்பி மண்ணிட்டு மூடியபின் அதன்மேல் கிணற்றுநீரை அள்ளி நிறைத்தான். யானைகள் துதிக்கையால் நீரை அள்ளி வாய்க்குள் சீறல் ஒலியுடன் செலுத்தி நீள்மூச்சுவிட்டு அருந்தின. நீர்ச்சுவையில் அவற்றின் காதுகள் நிலைத்து நிலைத்து வீசின. அடுமனையிலிருந்து திரௌபதி எட்டிப்பார்த்து “உணவு, இளையவரே” என்று சொல்லும்வரை அவன் நீர் இறைத்துக்கொண்டிருந்தான்.

பாண்டவர்கள் உள்ளே உணவுண்டுகொண்டிருந்தனர். அவனுக்கு அடுமனையிலேயே தனியாக இலைகளைப் பரப்பி உணவை குவித்திருந்தாள். அவன் அமர்ந்ததுமே குரங்குகள் வந்து சூழ்ந்துகொண்டன. “குழந்தைகளுக்கு மட்டும் போதும்” என்று தாட்டான் ஆணையிட்டது. குட்டிகள் வந்து பீமனைச் சூழ்ந்து அமர்ந்து சோற்றில் கைவைக்க முயன்று வெப்பத்தை உணர்ந்து முகம் சுளித்தன. ஒன்று சினத்துடன் பீமனின் காலை கடித்தது. ஒரு பெண்குட்டி பீமனின் மடியில் ஏறி சாதுவாக அமர்ந்துகொண்டிருந்தது. அதன் காதுகள் மலரிதழ்கள்போல ஒளி ஊடுருவும்படி சிவப்பாக இருந்தன. மென்மயிர் உடலும் மலர்ப்புல்லி போலவே தோன்றியது.

முதல்பிடி சோற்றை அள்ளி உள்ளங்கையில் வைத்து ஊதி ஆற்றியபின் அதன் வாயில் ஊட்டினான் பீமன். அது வாய்க்குள் இருந்து சோற்றை திரும்ப எடுத்து உற்று நோக்கி ஆராய்ந்தபின் அன்னையிடம் “சுவை” என்றது. அன்னை பற்களைக் காட்டி “உண்” என்றது. “தந்தையே தந்தையே” என்று அழைத்த குட்டிக்குரங்கு ஒன்று அவன் தாடையைப் பிடித்து திருப்பி “நான் மரங்களில் ஏறும்போது… ஏறும்போது…” என்றது. இன்னொரு குட்டி “இவன் கீழே விழுந்தான்” என்றது. “போடா” என்று முதல்குட்டி அவனை கடிக்கப்போக இருவரும் வாலை விடைத்தபடி பாய்ந்து குடிலின் கூரைமேல் தொற்றி ஏறிக்கொண்டார்கள்.

“நீங்கள் குறைவாகவே உண்கிறீர்கள், இளையவரே” என்றாள் திரௌபதி. “எனக்கு இது போதும்… நான் நாளை ஏதேனும் ஊனுணவை உண்டு நிகர்செய்கிறேன். சுற்றத்துடன் உண்ட நாள் அமைந்து நெடுங்காலமாகிறது” என்றான் பீமன். திரௌபதி சிரித்து “அன்னையருக்கும் பசி இருக்கிறது. நீங்கள் வற்புத்தவேண்டுமென விழைகிறார்கள்” என்றாள். பீமன் நகைத்து “பெரும்பசி கொண்டவன் தாட்டான்தான். தனக்கு பசியையே தெரியாது என்று நடிக்கிறான்” என்றான். இருட்டு வந்து சூழ்ந்துகொண்டது. காட்டின் சீவிடு ஒலி செவிகளை நிறைத்தது.

குரங்குகள் அவர்களின் குடிலைச் சுற்றியே அமர்ந்துகொண்டன. பீமன் திண்ணையிலேயே வெறும்தரையில் படுத்து துயில்கொண்டான். அவனருகே இரு குட்டிக்குரங்குகள் படுத்தன. “நான் நான்” என்று நாலைந்து குட்டிகள் அதற்காக சண்டையிட்டன. “சரி, எல்லாரும்” என்றான் பீமன். அவன் மார்பின்மேல் அந்தப் பெண்குட்டி குப்புற படுத்துக்கொண்டது. அதைக் கண்டு மேலுமிரு குரங்குகள் அதனருகே தொற்றி ஏற அது பெருஞ்சினத்துடன் எழுந்து பற்களைக் காட்டி சீறியது. ஏறியவை இறங்கிக்கொண்டன. நகுலன் நகைத்து “எல்லா குடிகளிலும் தேவயானிகள் பிறக்கிறார்கள்” என்றான்.

அப்பால் அதை நோக்கிக்கொண்டிருந்த தருமன் “நம் மைந்தர் நலமுடன் இருக்கிறார்களா, நகுலா?” என்றார். “ஆம், மூத்தவரே. திரிகர்த்த நாட்டில்தான் இறுதியாக செய்தி வந்தது” என்றான். சகதேவன் “அபிமன்யூ வில்லுடன் வங்கம் கடந்து சென்றிருக்கிறான். உடன் சதானீகனும் சுதசோமனும் சென்றிருக்கிறார்கள். பிரதிவிந்தியன் நூல்நவில்வதற்காக துரோணரின் குருநிலையில் இருக்கிறான். சுருதகீர்த்தியும் சுருதகர்மனும் அவனுடன் உள்ளனர்” என்றான். தருமன் பெருமூச்சுவிட்டபடி “நலம் திகழ்க!” என வாழ்த்தினார்.

அவர்கள் துயிலத்தொடங்கினர். இருளுக்குள் தருமனின் நீள்மூச்சு ஒலித்தது. பின்னர் நகுலனும் சகதேவனும் நீள்மூச்செறிந்தனர். இருளுக்குள் மூச்செறிந்து மார்பில் கிடந்து துயில்கொண்டிருந்த பைதலை மெல்ல அணைத்தபடி ஒருக்களித்த பீமன் மீண்டும் அவர்களின் நீள்மூச்சுகளை கேட்டான். அவர்கள் மூச்செறிந்தபடி புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள். பீமன் அர்ஜுனனின் பெருமூச்சு கேட்கிறதா என்று செவிகூர்ந்தான். நெடுநேரம். அர்ஜுனன் இருளுக்குள் மறைந்துவிட்டவன் போலிருந்தான். அவன் எங்கிருக்கிறான்? உடல் உதிர்த்து எழுந்து சென்றுவிட்டிருக்கிறானா? பின்னர் அவன் அர்ஜுனனின் நீள்மூச்சை கேட்டான். அது அவனை எளிதாக்கியது. பிறிதொரு நீள்மூச்சுடன் அவன் புரண்டுபடுத்தான். துயிலுக்குள் ஆழ்ந்துசெல்லும்போதுதான் திரௌபதியின் நீள்மூச்சை கேட்கவேயில்லை என நினைவுகூர்ந்தான்.

flowerவெயில் வெண்ணொளி கொண்டு மண்ணை எரிக்கத் தொடங்குவதற்கு முன்பே பாதித்தொலைவை கடந்துவிடலாமென்று எண்ணியிருந்தனர். ஆனால் மிக விரைவிலேயே சூரியன் தழலென மாறிவிட்டிருந்தான். கூழாங்கற்கள் அனல்துண்டுகளென்றாயின. மணல்பரப்புகள் வறுபட்டவை என கொதித்தன. புல்தகிடிகளை தேடித்தேடி காலடி வைத்து செல்லவேண்டியிருந்தது. அவர்களின் கால்கள் பன்னிரு ஆண்டுகாலம் கற்களிலும் முட்களிலும் பட்டு தேய்ந்து மரப்பட்டைகளென ஆகிவிட்டிருந்தன. ஆயினும்கூட அங்கிருந்த வெம்மை அவர்களை கால்பொத்திக்கொண்டு விரைந்து நிழல்தேடச் செய்தது.

கானேகிய முதனாட்களில் ஒருமுறை பீமன் மரப்பட்டையால் மிதியடிகள் செய்து திரௌபதிக்கு அளித்தான். கூர்கற்களில் கால்பட்டு கண்ணீர் மல்கி நின்றிருக்கும் திரௌபதியைக் கண்டு அவன் அவளை பல இடங்களில் சுமந்துகொண்டு வந்திருந்தான். கொல்லைப்பக்கம் கலம் கழுவிக்கொண்டிருந்த அவள் முகம் மலர்ந்து அதை வாங்கி “நன்று… இவ்வெண்ணம் எனக்கு தோன்றவேயில்லை” என்றாள். அப்பால் விறகுகளை வெட்டிக்கொண்டிருந்த நகுலன் கோடரியைத் தாழ்த்தி புன்னகை செய்தான். குடில்திண்ணையில் அமர்ந்திருந்த தருமன் நோக்கை விலக்கி மெல்லிய குரலில் “காடேகலென்பது தவம். நாம் அறத்தால் கண்காணிக்கப்படுகிறோம்” என்றார். திரௌபதி விழிதாழ்த்தி கையால் மிதியடியை விலக்கிவிட்டு குடிலுக்குள் திரும்பிச்சென்றாள். பீமன் கசப்புடன் அதை நோக்கிவிட்டு வெளியே சென்று காட்டுக்குள் வீசினான்.

வழிநடையின் வெம்மையும் புழுதியும் கொண்டு அவர்கள் விரைவிலேயே களைப்படைந்தார்கள். புழுதிநிறைந்த காற்று மலைச்சரிவில் சருகுத்துகள்களுடன் வந்து சுழன்று வீசிக்கொண்டிருந்தது. அவர்களின் குழல்கள் புழுதிபரவி வறண்டு நார் போலிருந்தன. வியர்வை வழிந்த உடல்களுடன் களைப்பால் நீள்மூச்சுவிட்டு அவ்வப்போது நிழல்தேடி நின்றும் பொழுதடைவதைக் கண்டு எச்சரிக்கை கொண்டு மீண்டும் தொடங்கியும் அவர்கள் சென்றனர்.

திரௌபதி தன் மரவுரியாடையின் நுனியை எடுத்து தலைக்குமேல் போட்டு முகத்தை மூடி புழுதிக்காற்றை தவிர்த்தாள். சூழ்ந்திருந்த காடும் அப்பால் தெரிந்த மலைகளும் நோக்கிலிருந்து மறைந்து கால்கீழே நிலத்தில் ஒரு வாள்பட்டு காய்ந்த நீள் வடு எனத் தெரிந்த மண்சாலையை மட்டுமே அவளால் பார்க்கமுடிந்தது. அதில் விழுந்து எழுந்து விழுந்து சென்ற பீமனின் காலடிகள் மட்டுமே அசைவெனத் தெரிந்தன. ஓயாது பேசும் வாய் ஒன்றின் நா என அவ்வசைவு. வருக வருக என அழைக்கும் கைபோல. நினைத்து நினைத்து நெடுங்காலமாகி நினைப்பொழிந்த உள்ளம் எளிதில் வாய்த்தது அவளுக்கு.

நெடுவழி நடக்கும்போது ஒரு சொல்லும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. நிழலை அடைந்ததும் திரௌபதி தோல்பையிலிருந்த நீரை வாய்பொருத்தி அருந்திவிட்டு வெறும்தரையிலேயே உடல்சாய்த்து படுத்துக்கொண்டாள். நடக்கையில் வியர்வை புழுதியைக் கரைத்தபடி முதுகில் வழிந்தது. புருவங்களில் தேங்கி பின் துளித்துச் சொட்டி வாயை அடைந்து உப்புக் கரித்தது. நிழலில் அமர்ந்தாலும் நெடுநேரம் உடல்வெம்மை தணியவில்லை. இளங்காற்றும் வெப்பம் கொண்டிருந்தது. அமர்ந்தபின் மேலும் வியர்வை எழுவதாகத் தோன்றியது. பின்னர் உடல்குளிர்ந்தபோது கண்கள் மெல்ல சொக்கி துயிலில் ஆழ்ந்தன. எழுந்தபோது புழுதியும் வியர்வையின் உப்புமாக உடலில் ஒட்டியது.

அவளைச் சூழ்ந்து பாண்டவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தனர். நீரை அருந்துகையில் மட்டும் விழிகள் தொட்டன. அவ்வப்போது எவரேனும் அசைகையில் பிறர் திரும்பிப் பார்த்தார்கள். பிறர் முகங்கள் தோல்கருகி உதடுகள் உலர்ந்து புல்லின் வேர்த்தொகைபோல தாடியும் மீசையும் சலிப்புற்ற கண்களுமாக தெரிவதைக் கண்டு தங்கள் உருவத்தை உணர்ந்துகொண்டார்கள்.

கிளம்பும் முடிவை எப்போதும் தருமன்தான் எடுத்தார். அவர் எழுந்ததும் பீமன் தன் கைகளை விரித்து சோம்பல் முறித்தபின் நீர்நிறைந்த தோல்பையையும் உணவும் ஆடைகளும் கொண்ட பையையும் தோளிலேற்றிக்கொண்டான். அர்ஜுனன் நோக்கு மட்டுமாக மாறிவிட்டிருந்தான். நகுலனும் சகதேவனும் தங்களுக்குள் விழிகளாலும் தொடுகையாலும் ஓரிரு சொற்களாலும் உரையாடிக்கொண்டு பின்னால் வந்தார்கள்.

மீண்டுமொரு நிழலில் அவர்கள் அமர்ந்தபோது பீமன் திரௌபதியின் கால்களை பார்த்தான். குதிகால்வளைவு நெருக்கமாக வெடித்து உலர்களிமண்ணால் ஆனதுபோலத் தெரிந்தது. விரல்களின் முனைகளும் முன்கால் முண்டுகளும் காய்த்து விளாங்காய் ஓடுபோலிருந்தன. அவன் கைநீட்டி அவள் கால்களை தொட்டான். மரவுரியை முகத்தின்மேல் போட்டு துயின்றுகொண்டிருந்த திரௌபதி கனவுகண்டவள்போல புன்னகைத்தாள். அவன் அவள் கால்களை தன் கைகளால் அழுத்தி நீவினான். பின்னர் எழுந்துசென்று பசைகொண்ட பச்சிலைகளை எடுத்துவந்து சாறுபிழிந்து அவள் கால்களில் பூசி விரல்களால் நீவத் தொடங்கினான். புழுதி விலகியதும் இலைகளால் அழுந்த துடைத்தான். காய்த்த காலின் தோலில் முட்கள் குத்தியிறங்கி முனையொடிந்திருந்தன. அவன் நீண்ட முள் ஒன்றை எடுத்துவந்து முட்களை அகழ்ந்து எடுக்கத் தொடங்கினான். ஒவ்வொரு முள்ளையாக எடுத்து சுட்டுவிரல்முனையில் வைத்து நோக்கி வியந்தபின் வீசினான். முட்களை எடுக்கும்தோறும் முட்கள் விரல்முனைக்கு தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தன.

அவனை பாண்டவர் நால்வரும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார்கள். அர்ஜுனனின் விழிகள் சுருங்கி உள்ளே நோக்கு கூர்முனை என ஒளிகொண்டிருப்பதை பீமன் கண்டான். பெரிய முட்களை உருவி எடுத்த இடங்களில் இருந்து குருதி கசியத் தொடங்கியது. சற்றுநேரத்தில் அவள் உள்ளங்கால் குருதியால் சிவந்து தெரிந்தது. பீமன் பச்சிலைச்சாற்றை ஊற்றி கைகளால் வருடிக்கொண்டிருந்தான். குருதி நின்றபின் அவன் பெருமூச்சுவிட்டு கால்மடித்து அமர்ந்தான். நகுலனும் சகதேவனும் பெருமூச்சுவிட்டனர். அர்ஜுனன் முனகுவதுபோல ஏதோ ஒலியெழுப்பி வில்லுடன் எழுந்து சென்றான். பீமன் தருமனின் பெருமூச்சை எதிர்பார்த்தான். நீண்டநேரத்திற்குப்பின் “எந்தையரே…” என்றார் தருமன்.

flowerவிதர்ப்ப நாட்டில் சௌபர்ணிகை என்னும் சிற்றாற்றின் கரையில் மூங்கில்புதர் சூழ்ந்த சோலைக்குள் அமைந்திருந்த தமனரின் தவக்குடிலுக்கு பின்மாலைப்பொழுதில் பாண்டவர்களும் திரௌபதியும் வந்து சேர்ந்தார்கள். திரௌபதியை பீமன் ஒரு நார்த்தொட்டில் அமைத்து தன் முதுகில் அமரச்செய்து தூக்கிக்கொண்டு வந்தான். தொலைவிலேயே குருநிலையின் காவிக்கொடியை அர்ஜுனன் கண்டு சுட்டிக்காட்டினான்.

அங்கு செல்வதற்கான பாதை பொன்மூங்கில்காடுகளுக்கு நடுவே வளைந்து சென்றது. மூங்கில்புதர்களுக்குள் யானைக்கூட்டங்கள் நின்றிருந்தன. அவை பீமனை ஆழ்ந்த ஒலியால் யார் என வினவின. பீமன் அதே ஒலியில் தன்னை அறிவித்தான். அன்னை யானை “நன்று, செல்க!” என வாழ்த்தியது. காலடியில் ஒரு நாகம் வளைந்து சென்றது. சௌபர்ணிகையில் மிகக் குறைவாகவே நீர் ஓடியது. சிறிய பள்ளங்களில் ஒளியுடன் தேங்கிய நீர் ஒரு விளிம்பில் மட்டும் வழிந்தெழுந்து வளைந்து சென்று இன்னொரு சிறுபள்ளத்தை அணுகியது. ஆற்றுக்குள் மான்கணங்கள் நீர் அருந்திக்கொண்டிருந்தன. காலடியோசை கேட்டு அவை திடுக்கிட்டு தலைதூக்கி செவிகோட்டி விழித்து நோக்கி உடலதிர்ந்தன.

தமனரின் குடிலில் அவரும் நான்கு மாணவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள் சென்ற பொழுதில் தமனர் மாணவர்களுடன் மரநிழலில் அமர்ந்து இன்சொல்லாடிக்கொண்டிருந்தார். கைகூப்பி அருகணைந்த தருமனைக் கண்டதுமே தமனர் கைகூப்பியபடி எழுந்து அருகே வந்தார். “பாண்டவர்களுக்கும் தேவிக்கும் என் சிறுகுடிலுக்கு நல்வரவு” என்றார். தருமன் முகமன் சொல்லி அவரை வணங்கினார். பீமனின் தோளிலிருந்து இறங்கி நின்ற திரௌபதி நிலையழிந்து அவன் தோளை பற்றிக்கொண்டாள்.

“இங்கு நான் எந்த நல்லமைவையும் தங்களுக்கு அளிக்கவியலாது. கடுநோன்புக்கென்றே இக்காட்டுக்கு வந்தேன்” என்றார் தமனர். “ஆனால் குளிக்க சௌபர்ணிகையில் நீர் உள்ளது. போதிய உணவும் அளிக்கமுடியும்.” தருமன் சிரித்து “அவ்விரண்டும் மட்டுமே இப்புவியில் நாங்கள் விழையும் பேரின்பங்கள்” என்றார். “வருக!” என தமனர் அவர்களை அழைத்துச்சென்றார். அவர் அளித்த குளிர்நீரையும் கனிகளையும் அவர்கள் மரநிழலில் அமர்ந்து உண்டனர்.

திரௌபதி எழுந்து தமனரின் குடிலருகே சௌபர்ணிகையில் இருந்த ஆழ்ந்த கயத்தை பார்த்தாள். “இயல்பாக உருவான மணற்குழி அது. யானைமூழ்கும்படி நீர் உள்ளது அதில். நல்ல ஊற்றுமிருப்பதனால் நீர் ஒழிவதே இல்லை” என்றார். திரௌபதி “நான் நீராடி நெடுநாட்களாகின்றன” என்றாள். “நீராடி வருக, அரசி!” என்றார் தமனர். “அதற்குள் இங்கே தங்களுக்கு நல்லுணவு சித்தமாக இருக்கும்.” திரௌபதி “நீராடுவதையே மறந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றாள். பீமன் “வருக!” என அவள் கையை பிடித்தான். “இன்று நான் உன் நீராட்டறை ஏவலன்.” அவள் மெல்லிய உதட்டுவளைவால் புன்னகைத்து முன்னால் நடக்க மரவுரிகளை வாங்கிக்கொண்டு பீமன் பின்னால் சென்றான்.

செல்லும் வழியிலேயே சௌபர்ணிகை நோக்கி ஓடியிறங்கிய சிற்றோடைகளின் கரையிலிருந்து தாளியிலைகளைக் கொய்து தன் கையிலிருந்த மூங்கில்குடலையில் நிறைத்துக்கொண்டே சென்றான். மணல் சரிந்து ஆற்றை நோக்கி இறங்கிய பாதையில் கால்வைத்ததும் திரௌபதி “பஞ்சுச் சேக்கைபோல” என்றாள். பீமன் புன்னகை செய்தான். வெண்மணலில் பகல் முழுக்க விழுந்த வெயிலின் வெம்மை எஞ்சியிருந்தது. ஆனால் அதுவும் கால்களுக்கு இனிதாகவே தெரிந்தது.

கயத்தின் கரையில் மான்கூட்டங்களும் நான்கு காட்டெருமைகளும் நீர் அருந்திக்கொண்டிருந்தன. பீமன் புலிபோல ஓசையெழுப்பியதும் அவை அஞ்சி செவிகூர்ந்தன. உடல்விதிர்க்க நின்று நோக்கியபின் அவன் அணுகியதும் சிதறிப் பரந்தோடின. “அரசியின் குளியல். அது தனிமையிலேயே நிகழவேண்டும்” என்றான் பீமன் சிரித்தபடி. “புலியல்ல குரங்கு என்று கண்டதும் அவை மீண்டு வரப்போகின்றன” என்றாள் திரௌபதி தானும் சிரித்துக்கொண்டு.

கயத்தின் நீர் மெல்ல சுழன்றுகொண்டிருந்தது. ஒளியவிந்த வானின் இருள்நீலம் அதை இருளச்செய்திருந்தது. “இச்சுனைக்கு மகிழநயனம் என்று பெயரிட்டிருக்கிறார்கள்” என்றான் பீமன். அவள் “ஆம், பொருத்தமானது” என்றாள். மேலாடையை கழற்றிவிட்டு இடையில் அணிந்த மரவுரியுடன் நீரில் இறங்கினாள். “ஆ… ஆ…” என ஓசையிட்டாள். “என்ன?” என்றான் பீமன். “எரிகிறது” என்றாள். “உடலெங்கும் நுண்ணிய விரிசல்களும் புண்களும் இருக்கும். கோடையால் அமைந்தவை. நீர் அவற்றுக்கு நன்மருந்து” என்றான் பீமன்.

அவள் நீரில் திளைத்துக்கொண்டிருந்ததை நோக்கியபடி பீமன் தாளியிலைகளுக்குள் கற்களைப் போட்டு கைகளால் பிசைந்து கூழாக்கினான். அவள் குழல் நீரில் அலையடித்து நீண்டது. சிறுமியைப்போல சிரித்தபடி கைநீட்டி நீரில் துள்ளி விழுந்தாள். நீர்ப்பரப்பின்மேல் கால் உந்தி எழுந்து அமைந்து வாயில் நீர் அள்ளி நீட்டி கொப்பளித்தாள். சிரித்தபடி “இன்குளிர்நீர்… மண்ணில் பேரின்பம் பிறிதில்லை என்று உணர்கிறேன்” என்றாள். “வா, தாளிப்பசை பூசிக்கொள். குழலில் அழுக்கும் புழுதியும் விலகட்டும்” என்றான் பீமன்.

NEERKOLAM_EPI_02_UPDATED

அவள் நுங்கின் வளைந்த மென்பரப்பென ஒளிர்ந்த எழுமுலைகளிலிருந்து நீர் வழிய எழுந்து அருகே வந்தாள். அவன் “அமர்க!” என்றான். அவள் அவன் முன் குழல்காட்டி அமர அவன் அவள் குழல்பெருக்கை கைகளால் அள்ளி ஐந்தாக பகுத்தான். ஐம்புரிச்சாயல் நீரில் நனைந்து கரிய விழுதுகளாக சொட்டிக்கொண்டிருந்தது. தாளியிலை விழுதை அள்ளி அதில் பூசினான்.

அவள் “என்ன மணம்?” என்று திரும்பிப்பார்த்தபின் அவன் கைகளை பற்றினாள். அவனுடைய வலக்கை வாளால் என வெட்டுபட்டு குருதி வழிந்துகொண்டிருந்தது. “என்ன ஆயிற்று?” என்றாள். “தாளியை கூழாங்கற்களை இட்டு பிசைந்தேன். அதில் ஒன்று கூரியது” என்றான் பீமன். பின்னர் சிரித்தபடி “குழலுக்கு குருதி நன்று” என்றான்.

முந்தைய கட்டுரைநான் எண்ணும் பொழுது…
அடுத்த கட்டுரைஅமிர்தம் சூரியா உரைகள்