ஊட்டி காவிய முகாம் – 2017 நினைவுகள்

 

siva

அன்பின் ஜெ,

 

சென்ற(2016) ஃபிப்ரவரியில், குருகுலத்திற்கு வருகையில், எங்கிருந்தென்று தெரியாமல், பசுஞ்சாணத்தின் மணத்தினை, உணர்ந்தேன். இம்முறையும், ஊட்டி பேருந்து நிலையத்தில் இறங்கும்போதே, இயல்பாக அதைத் தேடியது நாசி.

 

இரு சக்கர வாகனத்தில் வருவதாகத் திட்டமிட்டிருந்தேன். முதலிருநாள், கடுமையான ஜுரத்தினால், உடல் ஒத்துழைக்காமல், பேருந்திலேயே செல்ல முடிவெடுத்து, வந்து சேர்ந்தேன்.

சென்ற முறை போல், முதல் நாளிரவு முழுக்க பயணித்து, மறு நாள் உடல் அலுப்புடன் அமரவேண்டிய தேவையில்லாமல், முகாமுக்கு முதல் நாள் மாலையே குருகுலம் வந்தடைந்தேன். அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. மாலை நடையில் உங்களுடன் கலந்து கொள்ள முடியுமே, என்பதுதான். ஆனால், நீங்கள் அடுத்த நாள் காலைதான் வருகிறீர்கள் என்ற தகவலையறிந்து, சற்றே சோர்வடைந்தேன், என்றாலும், நண்பர் சுஷில்(கோவை) அறிமுகம் கிட்டி, கடைசி பென்ச் மாணவனாய் அவர் வீட்டுப் பாடத்தை ஆரம்பித்தார். மறுநாள் அமர்வுக்கான, முன் தயாரிப்பை மேற்கொள்ள ஆரம்பித்தார், உடன் நானும் இன்னும் சிலரும் இணந்தோம். கோகோலின் மனைவியைப் பற்றிய விவாதம் முதல் நாளிரவே ஆரம்பித்தாயிற்று. பிறகு தண்ணீர் கதையைப் பற்றி ஒரு நீண்ட விவாதம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய, அடுத்த நாள் அமர்வில், உறங்கி விடக்கூடதென்பதற்காக, கம்பளி துணையுடன் சற்று நேரம் குளிருடன் போராடிவிட்டு உறங்க துவங்கினேன்.

காலையில், நண்பர் சுஷில், முதல் நாளிரவே சொல்லியிருந்த விஷயம் நினைவுக்கு வர, விடியும் தருணம் எழுந்து, கோட்டை அடுப்பை பற்றவைக்க சிறிது நேரம் போராடி, முதலில் ஒரு அடுப்பை பற்ற வைத்தோம். அதிலேயே துவங்கியது, புதியன கற்றல். இரண்டு அடுப்பை பற்ற வைப்பதில், சுஷிலுக்கு நான் துணைபுரிய, மூன்றாவது அடுப்பை அவரே தனியாக சென்று பற்ற வைத்தார். வரும் நண்பர்களுக்கு, சுடச்சுட(?!) வெந்நீர் தயார். ஆனால், வெந்நீரை,  வாளிக்கு மாற்றிய சில நிமிடங்களிலேயே, அது தண்ணீர் ஆகும் மாயமும் நிகழ்ந்தது.

 

அமர்வில் எப்படி விவாதத்தை, மையக் கருத்திலிருந்து விலகாமல், செல்வது என்பதை, நேரடியாக கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்டேன், என்பதை தனித்து சொல்லத்தான் வேண்டும். ஏனென்றால், ’தண்ணீர்’ சிறுகதையை பற்றிய விவாதத்தில், இயல்பாக, உரையாடல், தற்கால வறட்சி மிகுந்த இடங்களைப் பற்றிய தகவல்களுக்கு தாவ, நீங்கள் இடைமறித்து, மீண்டும் மைய கருத்துக்கு கொண்டு வந்த விதம், பின் மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றில்,(அப்படி ஆட்டு என் செல்லமே) அதை விவாதித்த விதம், போன்றவைகள், இயல்பாகவே, சிறுகதையை, கவிதையைப் பற்றிய விவாதம் இப்படித்தான் நிகழவேண்டும், என்பதை உணர்த்தின.

 

எதிர்பார்த்திருந்த மாலை நடையில், கற்றுக் கொண்ட விஷயங்களைப்பற்றி, ஒரு நீண்ட கடிதம் எழுத வேண்டும்.

கம்பனைப் பற்றிய அமர்வில், நாஞ்சில் நாடனின், அற்புதமான சொல்லாடலோடு, சொற்களின் தாண்டவத்தைக் கண்டு ரசித்தோம். ஒரே பொருளுக்கு, எத்தனை விதமான சொற்கள், என்பதைப் பற்றிய விளக்கங்கள், அப்போது, இயல்பாகவெ, அரங்கினரால், வெண்முரசில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும், புதிய சொற்கள், மற்றும் அதன் பொருள், பற்றியும், ஒவ்வொரு பகுதியிலும், வெண்முரசு பற்றிய உரையாடல் நிகழ்ந்தது பற்றியும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

 

கம்பனை மீண்டும் மீண்டும் படிக்க, ஆர்வம் ஏற்பட்டது.

 

எத்தனை முறை, முகாமில் கலந்துகொண்டாலும், ஒவ்வொரு முறையும் புதிதாக கற்றுக்கொள்ள, நிறைய இருக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்த முகாமை எதிர் நோக்கி,

 

என்றும் அன்புடன்,

 

எழிலனின் தந்தை சிவக்குமரன்.

 

 

ஊட்டி புகைப்படங்களின் தொகுப்புகளின் லிங்க்குகள்

https://goo.gl/photos/6VmPDArPsMxtRsVe8

https://goo.gl/photos/5vt5CdAgpFqsJpTo8

https://goo.gl/photos/r6J3BuYjn9mUnWC2A

 

ஜானகிராமன்.

 

முந்தைய கட்டுரைஎம்.ஜி.ஆர்,ஜெயலலிதா, சசிகலா- ஒரு கிசுகிசு வரலாறு
அடுத்த கட்டுரைவரலாற்றின் வண்டலில்…