‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–95

95. மழைமணம்

குரங்குகள்தான் முதலில் பீமனை அடையாளம் கண்டுகொண்டன. அவன் காட்டின் எல்லைக்கு நெடுந்தொலைவில் ஒரு பாறையைக் கடந்து வந்தபோது காலையின் நீள்ஒளியில் அவன் நிழல் எழுந்து விரிந்திருந்தது. உச்சிக்கிளையிலிருந்த காவல்குரங்கு அவன் உருவைக் காண்பதற்கு முன் அந்நிழலைக் கண்டது. அதன் அசைவிலிருந்தே அது பீமன் எனத் தெளிந்தது. கிளையை உலுக்கியபடி எம்பி எம்பிக் குதித்து உப் உப் உப் உப் என்று கூச்சலிட்டது.

அவ்வொலியைக் கேட்டதுமே பெருங்குரங்குகள் அனைத்தும் பீமன் வந்துவிட்டதை உணர்ந்தன. மரங்களிலிருந்து பலாக்காய்கள் உதிர்வதுபோல நிலத்தில் குதித்து நான்கு கால்களில் பாய்ந்து விழுந்த மரங்களிலும் புதர்களிலும் தாவி ஏறி முன்னால் சென்றன. சிறியவை கிளைகளில் கைகளாலும் வாலாலும் பற்றி ஆடித் தாவி காற்றில் பறந்தன. அவை சென்ற அசைவால் காட்டுக்குள் கூரிய காற்று புகுந்து ஓடையென வழிவதைப்போல பசுமையின் அலை எழுந்தது.

கோதவனத்தின் எல்லையாக அமைந்த ஓடையின் கரையில் அவை ஒன்றன்பின் ஒன்றென நிரைவகுத்தன. அப்பகுதியே அவற்றின் உடல் கருமையால் பாறைக்கூட்டங்கள் மண்டியதுபோல ஆயிற்று. குட்டிகள் இரு கால்களில் எழுந்து நின்று வாய்மேல் கைவைத்து கண்களைச் சிமிட்டியபடி பொறுமையிழந்து நோக்கின. முதிய குரங்குகள் உடலைக்குவித்து அமர்ந்து தலைமேல் கைகளை வைத்தபடி காத்திருந்தன.

கோமதி இடப்பக்கம் ஒளியலைகளாக பெருகிச் சென்றுகொண்டிருந்தது. அதன் கரைச்சேற்றில் முதலைகள் ஒதுங்கியிருக்க அவற்றின் மேல் சிறுகுருவிகள் எழுந்தும் அமர்ந்தும் கொத்திக்கொண்டிருந்தன. வெண்சால்வை பறந்தமைவதுபோல கொக்குக்கூட்டம் ஒன்று சேற்றுப்படுகைமேல் வந்து அமர்ந்தது. அவற்றின் வெண்ணிழல் நீருள் வந்து அவற்றை அணுகியது. நீர்ப்பரப்பில் மீன்கள் எழுந்து ஒளிவிட்டு விழுந்தமைந்துகொண்டிருந்தன. பீமன் முன்னரே குரங்குகளை கண்டுவிட்டான். அவன் உள்ளம் பாய்ந்து அவற்றுடன் சேர்ந்துவிட்டிருந்தது. உள எழுச்சியை ஒத்திப்போட அவன் பார்வையை ஆற்றைநோக்கி திருப்பிக்கொண்டு நடந்துவந்தான். ஆகவே நடை இயல்பற்றதாக இருந்தது.

அவன் அணுகியதும் இளங்குரங்கு ஒன்று எழுந்து நின்று ஹுஹுஹு என கூச்சலிட்டது. இளையவர்கள் கூச்சலிடத்தொடங்க அது பரவி அனைத்துக் குரங்குகளும் எழுந்தும் நின்றும் குரலெழுப்பின. முதிய குரங்குகள் தலைதாழ்த்தி பற்களைக் காட்டி ர்ர்ர்ர்ர் என ஒலித்தன. குட்டிகள் உவகைதாளாமல் துள்ளிக்குதித்து திரும்பி ஓடித்தாவி அன்னையை கட்டிக்கொண்டு மீண்டும் பாய்ந்து நிலத்தில் விழுந்து தலைகீழாகச் சுழன்று வாலைச் சொடுக்கித் தூக்கி எழுந்து நின்று உதட்டை நீட்டி ஈஈஈ என ஓசையிட்டன.

அவன் தங்கள் எல்லைக்கு அருகே வந்ததும் ஒரு சிறுகுட்டி பாய்ந்து சென்று அவன்மேல் தொற்றி தோளிலேறிக்கொண்டது. அவன் தலைமயிரைப்பிடித்து உலுக்கி காதைக் கடித்தது. தோளிலிருந்து தலைமேல் ஏறி நின்று கைவிரித்து ஹுஹுஹு என கூச்சலிட்டது. பிற குட்டிகளும் சற்று தயங்கியபின் பாய்ந்து அவன் மேல் ஏறிக்கொண்டன. உடலெங்கும் குரங்குகளுடன் அவன் தள்ளாடியபடி நடந்தான். தோளில் தொங்கியவற்றை கைகளைச் சுழற்றி காற்றில் பறக்கவைத்தான். குரங்குகளின் ஒலியுடன் அவன் சிரிப்பொலியும் சேர்ந்து எழுந்தது.

கோதவனத்திற்குள் அவன் நுழைந்ததும் அத்தனை குரங்குகளும் சேர்ந்து கூச்சலிட்டு அவனைச் சூழ்ந்தன. ஒன்றன்மேல் ஒன்றென ஏறி அவனை தொட்டுத்தாவின. அவன் உடையைப்பிடித்து இழுத்தும் கால்களில் முத்தமிட்டும் கொண்டாடின. அவன் கூவியபடி ஓடிச்சென்று மரத்தில் தொற்றிக்கொண்டு கிளைகள் வழியாகவே சென்றான். அவனுடன் குரங்குப்படையும் ஓசையிட்டபடி சென்றது. கிளைகள் உலைந்து எழுந்தமைந்தன. கனிகள் உதிர்ந்தன. மான்கள் திகைத்து துள்ளிப்பாய பறவைகள் ஓசையுடன் இலைக்கூரைக்குமேல் எழுந்தன.

முனிவர்கள் குரங்குகளின் ஓசையை முன்னரே கேட்டிருந்தார்கள். என்ன என்று வந்து நோக்கியவர்கள் கடந்துசென்ற கிளையுலைவைக் கண்டனர். “காற்றுபோல செல்கிறார்கள்…” என்றார் சௌரபர். ஒரு முனிவர்மைந்தன் “பீமர்! பீமசேனர்” என கைசுட்டி கூச்சலிட்டான். அக்கணமே அத்தனை இளையோரும் அவனை கண்டுவிட்டனர். “மாவலர்! விருகோதரர்|!” என கூச்சல்கள் எழுந்தன. “எங்கே? எங்கே?” என பெண்கள் ஓடிவருவதற்குள் அவர்கள் கடந்துசென்றுவிட்டிருந்தார்கள்.

காட்டுக்குள் குரங்குகளின் ஓசையைக் கேட்டு தன் அறைக்குள் இருந்து தருமன் வெளியே வந்தபோது நகுலனும் சகதேவனும் வெளியே சென்று நோக்கிக்கொண்டிருந்தார்கள். திரௌபதி அடுமனையில் இருந்து கையைத் துடைத்தபடி ஓடிவந்து “அவர்தானா?” என்றாள். அவள் முகம் வியர்வையில் பளபளத்தது. தலைமயிர் கலைந்து நெற்றியிலும் காதுகள்மீதும் சரிந்திருந்தது. நகுலன் “அவரேதான்… ஐயமில்லை. குரங்குகள் தெளிவாகவே சொல்கின்றன” என்றான்.

தருமன் “பலமுறை அவன் என நினைத்து ஓடிவந்திருக்கிறோம்” என்றார். “அப்போது அவர்தானா என்ற ஐயமும் எதிர்பார்ப்பும்தான் இருந்தது, மூத்தவரே. அவராக இருக்கலாகாதா என எண்ணினோம். இது அவரேதான்… உறுதியாகத் தெரிகிறது” என்றான் சகதேவன். திரௌபதி மெல்ல உடல் தளர்ந்து இடை ஒசிய மூங்கில் தூணைப் பற்றியபடி அதில் முகம் சாய்த்து நின்றாள். குடில்விளிம்புக்குச் சென்று நோக்கி நின்ற சகதேவன் “அதோ மூத்தவர்” என்றான். “தன் கூட்டத்துடன் கிளைகளினூடாக வருகிறார்.” நகுலன் எட்டிப்பார்த்துச் சிரித்து “அவர் உடல்மேல் ஏழு குட்டிகள் அமர்ந்திருக்கின்றன” என்றான். திரௌபதி புன்னகை புரிந்தாள்.

பீமன் குடில் முற்றத்தில் குரங்குகளுடன் குதித்தான். அவனைச் சூழ்ந்து குரங்குகள் விழுந்தபடியே இருந்தன. அவன் கொடிஏணியை அடைந்து இரண்டே தாவலில் மேலே வந்தான். அவன் தலைமேல் இருந்த குட்டிக்குரங்கு துள்ளி வந்து குடில்கூடத்தில் விழுந்து வாலைத்தூக்கியபடி ஈஈஈஈ என ஓசையிட்டு தன்னைத்தானே சுழன்றது. என்ன செய்வதென்றறியாமல் எம்பிக்குதிக்க அதன் வால் பலகையில் மாட்டிக்கொண்டது. அதை இழுத்தபின் அந்த வலி தருமனால்தான் என்பதுபோல அவரைப் பார்த்து ர்ர்ர்ர்ர் என சீறி பற்களைக் காட்டியது.

குட்டிகள் உடல்விட்டு உதிர பீமன் வந்து நின்றான். கீழே விழுந்த குட்டிகள் திகைத்து பாய்ந்துசென்று நகுலன் மேல் ஏறிக்கொண்டன. உடனே அவனல்ல என உணர்ந்து அவனிடமிருந்து தாவி மீண்டும் பீமனை அணுகி அவன்மேல் தொற்றின. ஒரு குட்டிக்குரங்கு நகுலனை நோக்கி சீறியது. பீமன் தருமனின் கால்களைத் தொட்டு சென்னிசூடி “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். “நன்று! நீயும் ஒரு நிலம்காணலுக்குச் சென்று மீண்டுவிட்டாய்” என்றார் தருமன். பீமன் புன்னகைத்து “ஆம், நல்ல பயணம்” என்றான். குரங்குகள் கூரைவிளிம்பிலும் உத்தரங்களிலும் சாளரங்களிலும் தரையிலுமாக செறிந்திருந்தன.

“என்ன அடைந்தாய்?” என்று தருமன் கேட்டார். “அறியேன், ஆனால் சிலவற்றைத் துறந்தேன்” என்றான் பீமன். தருமன் ஒருகணம் கூர்ந்து நோக்கியபின் “நலம் விளைக!” என்று கைதூக்கி வாழ்த்தினார். “உன்னை மீண்டும் கண்டது உவகை அளிக்கிறது, இளையவனே. உன் இளையோன் இங்கே அருகிலுள்ள வேள்விச்சாலை ஒன்றுக்கு சென்றுள்ளான். சிலநாட்களில் அவன் மீள்வான். அதன்பின் நாம் இங்கிருந்து கிளம்பலாமென எண்ணுகிறேன். இங்கு வந்து நெடுநாட்களாகின்றன” என்றார். பீமன் மீண்டும் தலைவணங்கினான்.

தருமன் திரும்பி அறைக்குள் சென்றபின்னரே அவன் தம்பியரை நோக்கி திரும்பினான். குரங்குகள் அவன் காட்டுக்கு திரும்பப்போகிறான் என எண்ணி திரும்பிப் பாய சித்தமாயின. அவன் தம்பியரிடம் பேசக்கண்டு ஏமாற்றம் கொண்டு சலிப்புடன் முகம் வலித்தபடி அமர்ந்தன. நகுலனும் சகதேவனும் பீமன் கால்களைத் தொட்டு தலைசூடினர். அவன் அவர்களின் குழல்தொட்டு வாழ்த்தினான். நகுலனின் தோள்களை வளைத்து “பெருத்துவிட்டாய். இங்கே நல்லுணவு என நினைக்கிறேன்” என்றான். சகதேவன் “அடுமனை எப்போதும் புகைந்துகொண்டே இருக்கிறது, மூத்தவரே” என்றான்.

பீமன் அப்போதுதான் திரௌபதியை பார்த்தான். அவள் விழிகள் விரிந்து அவனை நோக்கிக்கொண்டிருந்தன. இடமும் தருணமும் மறந்தவை. விருப்பு நீர்மையாக ஒளியாக நிறைந்தவை. நகுலன் “இன்று முனிவர்களின் இல்லங்களுக்குச் செல்வதாக ஒப்புக்கொண்டிருக்கிறோம், மூத்தவரே” என்றான். இருவரும் தலைவணங்கியபின் வெளியே சென்றனர். அவர்கள் செல்வதை நோக்கியபின் ஒரு முதுகுரங்கு அதேபோல ஏணி வழியாக கீழிறங்கிச் செல்ல குரங்குகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சென்றன.

பீமன் திரௌபதியின் அருகே அணுகி “நீ கேட்ட மலரை கொண்டுவந்துள்ளேன்…” என்றான். அவள் “கல்யாணசௌகந்திகமா?” என்றாள். “உண்மையில் நான் அதை மறந்தேபோனேன்… எங்கே?” பீமன் தன் இடைக்கச்சையிலிருந்த மூங்கில்குழாயை திறந்தான். அதற்குள் இருந்து அந்த மலரை வெளியே எடுத்தான். அப்போது கொய்யப்பட்டதுபோலிருந்தது அது. ஆனால் காம்பில் பால் உறைந்துவிட்டிருந்தது. அறையை நறுமணம் நிறைத்தது. அசோகமா நீலமா பாரிஜாதமா செண்பகமா? அல்ல, பிறிதொன்று. அவன் அதுவரை அறியாத மணம்.

வரும்வழியெங்கும் அந்த மணம் மாறிக்கொண்டே இருந்தது. அவன் தலைக்குமேல் அந்த மலர்மரம் நின்றுகொண்டிருப்பதுபோல எப்போதும் உடனிருந்தது. எண்ணங்களிலும் மணம் சேர்த்தது. துயில்கையில் புதிய மணமாக எழுந்து கனவுகளுக்குள் புகுந்தது. விழித்தெழுகையில் வந்த முதலெண்ணத்துடன் அந்த மணமும் கலந்திருந்தது. ஒவ்வொருநாளும் அதை எடுத்து நோக்கி அந்த மலர்தானா என ஐயுற்றான். அத்தனை ஐயங்களுக்கும் சொல்லில் இடமிருந்தது, உள்ளத்தை அவை அடையவில்லை.

அவள் அதை குனிந்து நோக்கியபோது பெரிய இமைகள் சரிந்திருப்பதன் அழகையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். இமைகள் எழ அவள் அவனை நோக்கி புன்னகைத்து “பாரிஜாதம்போல” என்றாள். அவன் புன்னகை செய்தான். “அந்த நறுமணம் உண்மையில் எப்படி இருந்தது என்று என்னால் நினைவுகூரவே இயலவில்லை. அன்று இரவு ஏதோ பொருளற்ற அக எழுச்சி ஒன்றை அடைந்தேன். இரவில் தனிமையில் கடந்தகால ஏக்கம் பெருகியெழுந்து ஆட்கொள்வது இந்த அகவையில் இயல்புதானே? அதுதான் அந்த மணம்போலும் என பின்னர் எண்ணிக்கொண்டேன். மாயமணம் ஒன்றுக்காக உங்களை ஏன் அனுப்பினேன் என எண்ணி வருந்திக்கொண்டே இருந்தேன்” என்றாள் திரௌபதி.

“அந்த மணத்தை நானும் உணர்ந்த ஒரு தருணம் அமைந்தது” என்றான் பீமன். “ஆம், அது நீங்கள் என் மீதுகொண்ட காதலால் அடைந்த ஓர் உச்சம். நம் இருவர் உள்ளங்களும் ஒன்றையே உணர்ந்தன.” பீமன் புன்னகையுடன் “அதுவல்ல இந்த மணம் என்கிறாயா?” என்றான். அவள் தத்தளிப்புடன் “அறியேன். அந்த மணம் என்ன என்று நினைவுகூரவே என்னால் இயலவில்லை. இது அந்த மணம் என உங்களால் உறுதியாக உணரமுடிகிறதா?” என்றாள். பீமன் சிரித்து “ஆம் என்று இதுவரை நம்பியிருந்தேன். இப்போது நானும் ஐயம் கொள்கிறேன்” என்றான். “இந்த மணத்தை நோக்கி செல்லும் வழியில் பலவகையான மணங்களினூடாக என் அகமும் மூக்கும் கடந்துசென்றன.”

“இதை அடைந்த உளநிலையே இதுவே என எண்ணவைத்ததா? அப்போது அடைந்த மணத்தைத்தான் இப்போது இந்த மலரில் அறிகிறேனா? உண்மையில் இந்த மலரை உன்னிடம் கொடுப்பதற்கு முந்தைய மணம் கொடுத்தபின்னர் மாறிவிட்டது என்று தோன்றுகிறது. பாரிஜாதம் என நீ சொன்னதுமே இது அவ்வாறு ஆகிவிட்டது.” அவள் மீண்டும் அதை முகர்ந்து பெருமூச்சுடன் “நெஞ்சம் அறியா ஏக்கத்தால் நிறைகிறது. மணங்களாக இங்கே நிறைந்திருப்பவை நாம் ஒருபோதும் அறியாத ஏதோ சில போலும். நாம் உணர்வுகளையும் நினைவுகளையும் அவற்றின்மேல் ஏற்றி அந்தப் பொருளையே அவை என உணர்கிறோமா?” என்றாள்.

பீமன் “சரி, இதை பேசிப்பேசி நாம் கீழிறங்கவேண்டியதில்லை. நான் உன்னிடம் சொன்னது அந்த மணமெழும் மலரை கொண்டுவருவேன் என. இது அடைகையிலோ கொய்கையிலோ கொணர்கையிலோ கொடுக்கையிலோ ஒரு கணமேனும் அந்த மலரென இருந்திருக்கிறது. நாம் மானுடர் செய்யக்கூடுவது இதுமட்டுமே” என்றான். அவள் புன்னகையுடன் “ஆம்” என்றபின் அதை மீண்டும் முகர்ந்து “செண்பகம்” என்றாள். “தலையில் சூடிக்கொள்” என்றான் பீமன். “ஒருநாள் சூடவா?” என்று திரௌபதி கேட்டாள். “வேண்டாம், இச்சிமிழுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன்.”

பீமன் “இது வாடாமலர் அல்ல. பால்கொண்ட மலர் என்பதனால் இத்தனைநாள் வாடாமலிருக்கிறது” என்றான். அவள் “இதன் மணம் சற்றேனும் உள்ளே எஞ்சியிருக்கும்” என்றபடி அதை அக்குழாய்க்குள் போட்டு மூடினாள். “நான் அடுமனைக்குச் செல்கிறேன். உங்களுக்காக சமைக்கவேண்டும். இளையவரே, இவர்களுக்காக சமைப்பதைப்போல ஏமாற்றமூட்டும் விளையாட்டு பிறிதொன்றில்லை. இன்றுதான் என் கையும் உள்ளமும் நிறையும்படி சமைக்கவிருக்கிறேன்” என்றாள். பீமன் “நான் நீராடிவிட்டு வருகிறேன்” என்றான்.

tigerபீமன் சோலைக்கு வந்தபோது நகுலன் அமைத்த பாத்தியில் சகதேவன் விதைகளைப்போட்டு மூடிக்கொண்டிருந்தான். கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி வந்த பீமன் “நீராடவேண்டும்” என்றான். “ஆம், உங்கள் உடலெங்கும் குரங்குமணம்” என்றான் நகுலன். பீமன் அருகே குந்தி அமர்ந்தபடி “நாம் உடனே கிளம்புகிறோம் அல்லவா?” என்றான். “ஆம், விதை சேர்த்துவைத்திருந்தேன். இன்று விதைத்தால் கிளம்புவதற்குள் எட்டிலை கிளம்பியிருக்கும். அதற்குள் மழையும் தொடங்கிவிடும்” என்றான் நகுலன்.

பீமன் புன்னகைத்தான். “நாம் இங்கு கொய்து உண்டிருக்கிறோம், மூத்தவரே. ஆகவே விதைத்துச்செல்லும் கடன்கொண்டிருக்கிறோம்” என்றான் சகதேவன். “ஆம்” என்றபடி பீமன் எழுந்தான். “உங்கள் குலத்தார்தான் உண்ணப்போகிறார்கள்” என்று நகுலன் சிரித்துக்கொண்டே சுட்டிக்காட்டினான். அப்பால் சில குரங்குகள் மிகுந்த ஆர்வத்துடன் நோக்கி அமர்ந்திருந்தன. “விதைக்க சொல்லிக்கொடுத்துவிடாதே. உரிமைகொள்ளவும் கற்றுக்கொள்ளப் போகின்றன” என்றான் பீமன். அவன் சென்றபோது சகதேவன் “நானும் வருகிறேன், மூத்தவரே” என்று மண்வெட்டியுடன் எழுந்தான்.

பீமன் சுற்றிலுமிருந்த மரங்களை நோக்கிக்கொண்டு சென்றான். உடன் நடந்தபடி “மழைப்பறவை வந்திறங்கிவிட்டது, மூத்தவரே” என்றான் சகதேவன். காற்றில் தாவித்தாவி சுழன்று அமைந்துகொண்டிருந்த சிறு குருவிகளை அண்ணாந்து நோக்கிய பீமன் “ஆம்” என்றான். “நாலைந்து நாட்களாகவே வேழாம்பல் மழைகேருகிறது” என்றான் சகதேவன். “பிற்பகல்களில் புழுக்கம் தாளமுடிவதில்லை. இருண்டு இறுகி கிழிந்துவிடும்போலிருக்கிறது வானம்.” காற்றில் நீரின் மணம் எழுந்தது. நீரோசையும் அலையொளியும் இலைத்தழைப்புக்கு அப்பால் கேட்டன.

அவர்கள் ஓடைக்கரையை அடைந்தனர். பீமன் தன் புலித்தோலாடையை கழற்றிவிட்டு உள்ளே அணிந்த தோல்கோவணத்துடன் ஓடை சுழித்துச்சென்ற குழியில் இறங்கினான். கரையில் அமர்ந்து முழங்கால்கள்மேல் கைகளை வைத்துக்கொண்ட சகதேவன் “நீங்கள் தேடிச்சென்றதை அடைந்துவிட்டீர்களா, மூத்தவரே?” என்றான். பீமன் “என் வரையில்” என்றான். “அதுபோதும்” என்று சகதேவன் சொன்னான். “ஒருவர் அறிந்த மெய்மை பிறருக்கல்ல என்றுதான் பிரம்மம் மானுடருடன் விளையாடுகிறது.” பீமன் “ஆம்” என சிரித்தபடி மூழ்கி எழுந்தான். குழல்கற்றைகளை அவிழ்த்துவிட்டு மீண்டும் நீரில் மூழ்கி எழுந்து விரலால் அவற்றை நீவி அலசினான்.

மீண்டும் நெடுநேரம் நீரில் முழ்கிக்கிடந்தபின் எழுந்து “இளையோனே, நீர் சித்தத்தைக் குளிர்விக்கும்போது மேலும் தெளிவாகிறது. அந்த மணம்தான் நான் அறிந்தது, தேடிச்சென்றது, அவளுக்காக நான் ஏந்தியிருப்பது” என்றான். “அவளுக்கு அதை அளிக்கமுடியாதென்று இப்போது தோன்றுகிறது. எவளுக்கு எதை அளிப்பது? ஊர்வசி, அசோகசுந்தரி, தேவயானி, சர்மிஷ்டை…” அவன் நீரில் மீண்டும் மூழ்கி எழுந்தபோது அதே முகத்துடன் சகதேவன் காத்திருந்தான். “உளறுகிறேனா?” என்றான் பீமன். “நான் மிகச்சரியாக புரிந்துகொள்கிறேன்” என்றான் சகதேவன்.

பீமன் கரையோர மென்மணலை அள்ளி உடலை தேய்த்துக்கழுவத் தொடங்கினான். “ஐந்தாவதாக நீங்கள் எவரைக் கண்டீர்கள், மூத்தவரே?” என்றான் சகதேவன். பீமன் ஒன்றும் சொல்லாமல் உடலை தேய்த்துக்கொண்டிருந்தான். அவன் மீண்டும் மூழ்கி எழுந்தபோது சகதேவன் சிரித்து “நன்று, நான் கேட்கப்போவதில்லை” என்றான். “ஆனால் நம் ஐவருக்கும் ஒருவருக்கு மட்டுமென ஓர் உள்ளமில்லை, மூத்தவரே” என்றான். பீமன் சிரித்தபடி “உண்மை” என்றான்.

“நான் நிமித்தநூல் கற்கச்சென்றபோது ஆசிரியர் ஒருநாள் என் கைகளை பற்றிக்கொண்டு நேற்று புலரியில் வந்த கனவில் நீ ஒரு குரங்கு என்றும் உனக்கு நான் நூல்சொல்வதாகவும் தெரிந்தது. அந்த நிமித்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீ புரிந்துகொள்கிறாயா என்றார். ஆம் என்றேன்” என்றான் சகதேவன். பீமன் சிரித்து “மூத்தவரிலேயே குரங்கை கண்டுகொள்ள முடியும்போலும்” என்றான். “ஆம், அவர் நூல்விட்டு நூல்தாவுகையில்” என்று சகதேவன் சிரித்தான். பீமன் உடன் சேர்ந்து பெருநகைப்பெடுத்தான்.

கைகளால் தலையைக் கோதி நீரை உதிர்த்தபடி “அது மாமலர் என நான் அறிவேன். அதுபோதும் என நினைக்கிறேன்” என்றான் பீமன். “அந்த மணம் தேவியின் ஒரு தருணம். அந்தத் தருணத்தின் மலைமுனையிலிருந்து நீங்கள் எழுந்தீர்கள். மீண்டு வரும்போது அத்தருணம் அங்கில்லை” என்றான் சகதேவன். “ஆம்” என்று பீமன் சிரித்தபடி சொன்னான். “காலம் அப்படியே நிலைக்குமென்றால்தான் உணர்வுகளுக்கு மதிப்பு போலும்.”

சகதேவன் சிரித்த முகம் மாறுபட்டு தாழ்ந்த குரலில் “அவள் அந்த மலரை ஒருநாள் அறிவாள், மூத்தவரே” என்றான். பீமன் தன் மரவுரியை எடுத்து நீரில் முக்கியபடி நிமிர்ந்து நோக்கினான். “அதற்கு இன்னும் நெடுநாள் இருக்கிறது. பெருந்துயர்களை, வெறுமைவெளிகளைக் கடந்துசென்று அதை தொடுவாள். தெய்வத்தை நேர்முன் காணுதல்போல. உடல்திறந்து உயிர் எழுந்து பெருகி வான்நிறைப்பதுபோல” என்றான் சகதேவன். “அத்தருணத்தை அவளுக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.”

tigerதருமனின் அறைக்குள் நுழைந்த திரௌபதி பீமனிடம் “உணவு ஒருங்கிவிட்டது, இளையவரே” என்றாள். தருமன் “அனைவருக்கும்தானே?” என்றார். திரௌபதி “யானைக்கவளம் குருவிகளுக்கும்தான்” என்றபின் வளையல் ஒலிக்க சிரித்துக்கொண்டு “வருக!” என திரும்பிச்சென்றாள். தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பீமன் எழுந்து “அச்சொல் அரக்குக்காட்டை பற்றவைப்பதுபோல பசியெழுப்பிவிட்டது” என்றான். “ஆம், நான் உண்ணும் பொழுது கடந்துவிட்டது. இன்று உனக்கான ஊன் சமையல். வா…” என தருமன் எழுந்தார்.

அடுமனையில் பெரிய ஈச்சம்பாயில் பீமனுக்கான அன்னம் குவிக்கப்பட்டிருந்தது. மரத்தொட்டியில் பன்றியின் ஊன்கறியும் இரு மண்தாலங்களில் எட்டு சுட்ட பன்றித்தொடைகளும் நெய்யுருகி குமிழிவெடித்து ஆவியெழ காத்திருந்தன. கைகளை உரசிக்கொண்ட பீமன் “நல்லுணவு என்பதை மறந்து நெடுநாளாயிற்று” என்றபடி அமர்ந்தான். தருமன் “மூடா, முறைப்படி நான் அமர்ந்தபின்னரே நீ அமரவேண்டும்” என்று சிரித்தார். “அதை இந்திரப்பிரஸ்தத்தில் பார்த்துக்கொள்வோம். பசிக்குமுன் முறையெது நெறியெது” என்றபடி அவன் பன்றித்தொடையை எடுத்து கடித்தான்.

“கேட்கவேண்டும் என எண்ணினேன். உன் பேச்சில் அது தவறித்தவறிச் சென்றது. உன்னுடன் வந்த முண்டன் எங்கே? வழியிலேயே கிளம்பிச்சென்றுவிட்டானா?” என்றார் தருமன். “ஆம், அவர் காற்றுபோல கட்டற்றவர்” என்றான் பீமன். “எனக்கு இறுதிவரை வழிகாட்டிவிட்டு விலகி காட்டுக்குள் சென்று மறைந்தார்.” தருமன் உணவை உண்டபடி “அவன் ஒரு குரங்கு என எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. அசைவுகளால் மட்டும் அல்ல. அவன் விழிகளில் குரங்குகளுக்கு மட்டுமே உரிய கூரிய ஒளி இருந்தது” என்றார்.

“அவன் எளிய மானுடன் அல்ல, இளையோனே. அவன் ஏதோ தெய்வம் உருமாறிவந்த வடிவு. அவனுக்கு நிகரான ஆற்றல் பிறிதில்லை என்று தோன்றியது. எனக்கு ஒரு கனவு. அதில் அவன் மாமலைபோல எழுந்து நிற்க அவன் காலடியில் ஒரு எறும்புபோல நான் நின்றிருக்கிறேன். சுற்றிலும் அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் கூழாங்கல்பரப்புபோல… அஞ்சி நடுங்கி விழித்துக்கொண்டு கைகூப்பி வணங்கினேன்” என்றார் தருமன். சகதேவன் “ஆம், அவர் காட்டுத்தெய்வம்தான்” என்றபின் பீமனை நோக்கி புன்னகை செய்தான்.

மீண்டும் மீண்டுமென கேட்டு பீமன் உண்டான். அவர்கள் உண்டு எழுந்தபின் எஞ்சிய எலும்புகளையும் எடுத்து உண்டான். “போதவில்லையா?” என்றாள் திரௌபதி. “எஞ்சியிருக்கிறதா?” என்று அவன் எழுந்து பெருங்கலத்தை நோக்கினான். அருகே சிறுகலத்தில் உணவு இருந்தது. “அது எனக்கு என எடுத்து வைத்தது” என்று அவள் சொன்னாள். “நீ உண், எனக்குப் போதும்” என்று பீமன் கையை நக்கினான். “உண்ணுங்கள், இளையவரே” என அவள் அதை எடுத்து அளித்தாள். “உனக்கு வேண்டாமா?” என அவன் தயங்க அவள் சிரித்து “நான் எனக்கென சற்று புல்லரிசிச்சோறு சமைக்கிறேன். எவ்வளவு நேரமாகிவிடப்போகிறது?” என்றாள்.

“சரி, கொடு” என்று அதையும் வாங்கி பருக்கையில்லாமல் நக்கி உண்டபின் ஏப்பம் விட்டபடி “நல்லுணவு” என்றான் பீமன். “நல்லுணவில் அது விளைந்த மண்ணின் மணம் இருக்கும்… நான் மண்ணில் புதைந்தவனாக உணர்கிறேன்.” கைகளை நீட்டி சோம்பல் முறித்தபின் “நான் நீட்டிப் படுத்து உறங்கியும் நெடுநாட்களாகின்றன. சூழுணர்வுள்ள துயில் இதுவரை” என்றான். படியிறங்கிச்சென்று கைகளைக் கழுவும்போதே அவன் கால்கள் துயிலில் தள்ளாடத் தொடங்கிவிட்டிருந்தன.

“துயில்கிறீர்களா?” என்றாள் திரௌபதி. “என்ன?” என்று அவன் கோட்டுவாயிட்டபடி கேட்டான். “உள்ளறையில் துயில்க!” என்றாள். “என்ன?” என்றான் பீமன். “ஒன்றுமில்லை” என அவள் சிரித்தாள். அவன் சுவரில் முட்டி கதவிலும் தோள் தட்டி நடந்து உள்ளறைக்குச் சென்றான். மூங்கில்மஞ்சத்தில் மரவுரி விரிக்கப்பட்டிருந்தது. தலையணைகள் இரண்டை எடுத்துப்போட்டுக்கொண்டு மஞ்சம் முனக எடையுடன் விழுந்து அக்கணமே துயிலத் தொடங்கினான். சாளரக்காற்றில் தன் தலைமுடி முகத்தின்மேல் அசைவதை இறுதியாக உணர்ந்தான்.

tigerநிலம் முழுக்க நிறைந்திருந்தது அந்த மலர்மணம். அதன்மேல் அவன் நின்று துள்ளி சுழன்றமைந்து கூச்சலிட்டு கொந்தளித்துக்கொண்டிருந்தான். விழித்துக்கொண்டபோது அறைக்குள் இருள் நிறைந்திருந்தது. சாளரம் வழியாக குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. அறைக்குள் கொடியிலும் கொக்கிகளிலும் தொங்கிய அத்தனை ஆடைகளும் பறந்து துடித்தன. காற்றில் மழைமண்ணின் மணம். ஊன்மணமா? உப்புமணமா? இளம்பாசியின் மணமா? கருக்குழவியின் புதிய குருதியின் மணமா? எங்கிருக்கிறோம் என எண்ணியபடி அசையாமல் படுத்திருந்தான். உடல் அப்போதும் துயின்றுகொண்டிருந்ததனால் கைகால்களில் இனிய உளைச்சல்போல ஓர் எடை ததும்பியது.

மூங்கில் இடைவெளிகளினூடாக வந்த அகல்சுடரின் செவ்வொளிச் சட்டங்கள் அவன் மேல் விழுந்து வகுந்து சுழன்றன. கையால் சுடரைப் பொத்தியபடி திரௌபதி உள்ளே வந்தாள். அவள் முகம் செவ்வொளியில் உருகுவதுபோலத் தெரிந்தது. அவள் உள்ளே வந்து கதவை மூடியதும் காற்றில் அகல் சுடர் எழுந்து படபடத்து அணைந்தது. அவள் மேலாடை பறந்து படபடத்தது. அவள் அவனை நோக்கி “விழித்துக்கொண்டாயிற்றா?” என்றாள். அவன் “ஆம்” என்றான். சிறிய மின்னலுக்குப்பின் மிகத் தொலைவில் வானத்தின் செருமலோசை.

“பேய்க்காற்று… மரக்கிளைகள் முறியும் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது” என்றபடி அவள் அவனருகே வந்து மஞ்சத்தின் விளிம்பில் அமர்ந்து “விலகிக்கொள்ளுங்கள்” என்றாள். அவன் விலக அதில் நன்றாக அமர்ந்தபடி தன் இடையிலிருந்து அந்த மூங்கில் குழாயை எடுத்தாள். “பிச்சிபோல இதை முகர்ந்தபடியே இருக்கிறேன். இது எந்த மணம் என நினைவுகூர்ந்துவிட்டேன்” என்றாள். “ம்?” என்றான் பீமன். “இது எங்கள் காம்பில்யத்தின் இளவேனில்மாளிகையில் தென்கிழக்கு மூலையில் நின்ற நிசாகந்தி…” என்றாள். அவன் “ம்” என்றான்.

அவள் அவனருகே படுத்து அவன் தோள்களை கைகளால் வளைத்துத் தழுவியபடி துள்ளும் குரலில் “சிறுமியாக இருக்கையில் இளவேனில்நாட்களில் அங்கே சென்று தங்குவோம். இங்குபோலில்லை, அங்கே வேனிலில் புழுக்கம் மிகுதி. எல்லா சாளரங்களையும் திறந்து வைப்போம். இரவில் வெவ்வேறு மலர்மணங்களுடன் காற்று இரு திசைகளிலிருந்தும் சுற்றிக்கொண்டிருக்கும். இரண்டுவயதுவரை நான் தந்தையின் மஞ்சத்தில்தான் படுப்பது வழக்கம். அவர் மதுவுண்ட மயக்கில் முன்னரே துயின்றுவிடுவார். நானும் துயின்று கனவுக்குள் மலர்மணங்களை அறிந்துகொண்டிருப்பேன்” என்றாள்.

“இரவு செறிந்தபின்னர்தான் நிசாகந்தி மலரும்” என்றாள் திரௌபதி. அவள் குரல் இருட்டுக்குள் ஆழ்ந்து ஒலித்தது. அதன் சொற்களை காற்று அள்ளி அறைக்குள் தெளித்து விளையாடியது. “அதன் மணம் உயிருள்ளது. ஒரு யக்ஷி போல. நீண்ட குளிர்ந்த கைகளுடன் வந்து சூழ்ந்து பற்றிக்கொள்ளும். அச்சமும் உவகையுமாக உள்ளம் கொந்தளிக்கும். நான் கண்களை மூடிக்கொண்டு அதற்கு என்னை ஒப்புக்கொடுப்பேன். உடல் சிலிர்த்துக்கொண்டே இருக்கும்.”

பீமன் வெறுமனே “ம்” என்றான். “அதைப்பற்றி நான் மாயையிடம் அன்றி எவரிடமும் சொன்னதில்லை” என்றாள். பின்னர் அவன் முகத்தில் முத்தமிட்டாள். அவள் கைகள் அவன் உடல்மேல் இரு நாகங்கள் என நெளிந்தன. “நான் இப்போது எப்படி உணர்கிறேன் தெரியுமா?” மெல்லிய மின்னல் ஒன்று வெட்ட அவன் அவள் விழிகளை கண்டான். இரு கைகளாலும் அவளை அள்ளி எடுத்துக்கொண்டான். இடியோசை தொடராக முழங்கி அமைந்தது.

வெறியுடன் முயங்கும்போது அவள் உதிரிச்சொற்களில் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தாள். தன் உதடுகளால் அவள் அவன் முகத்தை அழுத்தி வருடியமையால் அச்சொற்கள் கசங்கிய மலர்களின் மணம் கொண்டிருந்தன. உடல்கள் அதிர்ந்து அதிர்ந்து ஒன்றையொன்று நிறைத்து அமைய வேறெங்கோ இருந்து மீண்டபோது அவன்மேல் தன் மென்குளிர் வியர்வை படிந்த உடலை அழுத்தியபடி அவள் சொன்னாள் “இழந்துகொண்டே செல்கிறேன், இளையவரே. இளமையை இழப்பதே பெண்ணின் பெருந்துயர்.” பீமன் அவள் தோள்களை தடவினான். புறங்கழுத்தின் மென்மயிர்ப்பிசிறுகளை பிடித்து சுருட்டினான்.

“ஏக்கம் தாளாமல் நெஞ்சு தவிக்கிறது… நான் கற்ற காவியங்கள் எதைக்கொண்டும் இதை சொல்லிவிட முடியாது” என்று அவள் அவன் மார்பில் முகம்புதைத்து சொன்னாள். அவன் “ம்” என்றான். “இங்கிருந்து அனைத்தையும் அளித்துவிட்டால் அங்கு மீளமுடியும் என்றால் மாற்றெதையும் எண்ணமாட்டேன்.” அவன் மீண்டும் “ம்” என்றான். “பிச்சிபோலப் பேசுகிறேன்…” என்றபின் அவள் அவன்மேல் தன் பெருமுலைகள் அழுந்த கை நீட்டி மறுபக்கம் மஞ்சத்தில் கிடந்த மூங்கில் குழாயை எடுத்து அப்படியே முகர்ந்தாள்.

“அதே மணம்தான்… திறக்கவே வேண்டாம்” என்றாள். குரல் மிகத் தாழ்ந்திருந்தது. “எண்ணிக்கொண்டாலே போதும்போல” என்றாள். அதை தன் மூக்குடன் உருட்டியபடி “ஏன் சென்றுகொண்டே இருக்கிறோம்?” என்றாள். அவள் விழிகள் மூடுவதை அவனால் இருளுக்குள் காணமுடிந்தது. மூச்சு சீரடைந்தது. “தனிமையில்” என்றாள். உதடுகள் மெல்ல விரிசலிட்டன. மூச்சு வலுக்க முலைக்குவைகள் எழுந்தமைந்தன. விரல்கள் விரிந்து மூங்கில் குழாயை நழுவவிட்டன. அவன் அதை எடுத்து அப்பால் வைத்து அவளை மெல்ல தன் உடலில் இருந்து சரித்து மஞ்சத்தில் படுக்கச்செய்தான்.

அவன் அவளை நோக்கிக்கொண்டே இருந்தான். காற்று சுழன்று வீச தொலைவில் காட்டுமரங்களின் ஓலம் அலையலையென கேட்டது. மெல்லிய மின்னல். அவள் தன் குழல்விரிந்த கருநிழல்மேல் கிடந்தாள். மேலுதடு சற்றே வளைய அகவைகளை இழந்து குழவியென்றாகிவிட்டிருந்தாள். அனைத்தையும் வெள்ளிப்பரப்பென ஆக்கியபடி பெருமின்னல் ஒன்று அறையை அதிரச்செய்தது. பின் மிக அருகே பாறை ஒன்று வெடித்ததுபோல ஒலித்தது. அதன் எதிரொலி வானெங்கும் பரவியது.

அவள் உடல் அதிர்ந்தது. கண்கள் அதிர கைதுழாவி “இளையவரே…” என்றாள். அவன் குனிந்து “சொல்” என்றான். “என் தந்தையை உங்களால் மற்போரில் வெல்லமுடியுமா?” என்றாள். அக்குரல் சிறுமியின் உச்சரிப்புடன் இருந்தது. “ஆம்” என்றான். “களிப்போர் போதும்” என்றாள். “ஆம்” என்றான் பீமன். அவள் விழித்துக்கொள்ளவே இல்லை எனத் தெரிந்தது. மூச்சு சீராக ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு மின்னல். இடியோசைக்காக அவன் செவிக்கூர் காத்தது. இடியோசை எழுந்தபோது ஆம் ஆம் என்றது உள்ளம்.

எழுந்து சென்று காற்று பீரிட்ட சாளரத்தருகே நின்றான். தொலைவில் மரக்கூட்டங்கள்மேல் மழை அறைவதைக் கேட்டான். பெருகிப்பெருகி வந்து தழுவிமூடிக்கொண்டது முதல்மழை.

[மாமலர் நிறைவு]

முந்தைய கட்டுரைபாகுபலியின் வெற்றி
அடுத்த கட்டுரைபடைவீரன் -கடிதங்கள்