அறம் – வாசிப்பின் படிகளில்…

Aram-Jeyamohan-1024x499

அறம் விக்கி

எழுத்தாளர் அவர்களுக்கு வணக்கம்.

எனக்கு 35 வயது ஆகிறது, தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டென்றாலும் அது தொடர்ச்சியாக இருப்பதில்லை. நிறைய படித்தலும் ஆழ படித்தலும் குறைவே, மிக பெரும்பாலானவர்கள் போல சுயநல வாழ்வே வாழ்க்கை என்று இருக்கும் தமிழன்.அறம் படித்தபின் இனி நிறைய படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டு செய்தது.

அறம் சிறுகதை தொகுப்பு என்னுள் மிக பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.  இப்படியொரு படைப்பை தந்தமைக்கு என் நன்றிகள். அனைத்து கதைகளும் அருமை, வாசிப்பை இத்தனை சுவாரசியமானதாக புத்தகம் முழுதும் கொண்டு செல்ல முடியும் என்பதே பெரிய வியப்பு, அதிலும் ஒவ்வொன்றும் மனம் நெகிழும்படி இருந்ததை என்சொல்லி பாராட்ட தெரியவில்லை.

நூறு நாற்காலிகள் தர்மபாலனின் மனோநிலையை புரிந்துகொண்டாலும் அப்படிபட்ட மனிதர்கள் இந்த நவீன டிஜிட்டல் உலகில் அதே போன்றதொரு நிலையில் இருப்பதை செறித்துகொள்ள முடியவில்லை. கதையில் பல இடங்களில் சொல்லொன்னாத் துயரமும் ஆற்றாமையும் கோபமும் மாறி மாறி வந்தன. மனிதன் நோக மனிதன் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ என்று சொன்னவன் விரைவிலேயே இறந்ததை புரிந்துகொள்ள முடிகிறது.

கோட்டி கதை முழு கற்பனை என்றே எண்ணி இருந்தேன், இப்படியும் நம் முன்னோர்கள் வாழ்ந்தவர்கள் என்பதே வியப்பாக இருக்கிறது.

மார்ஷல் நேசமணி இன்னொரு வியப்பு.

அனைத்து கதைகளுமே மிக சிறப்பு, கதை மாந்தர்கள் போலவே நீங்கள் பயன்படுத்திய உள்ளூர் வழக்கு அவற்றை மேலும் அழகாக்கின.

அறத்தை இந்த வயதில் படிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சியும் உண்டு, அறம் ஒரு நல்ல பொக்கிஷம் எனக்கு, உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்.

நன்றி

மதியழகன்.மீ

***

அன்புள்ள மதியழகன்,

மீண்டும் வாசிப்பதில் மகிழ்ச்சி. ஒரு கட்டத்தில் நாம் உறவுகளை, இன்னும் குறிப்பாக ஆண்பெண் உறவை- புரிந்துகொள்ளவே பெரும்பாலும் வாசிக்கிறோம். அரசியல்கொள்கைகளைச் சார்ந்து வாசிக்கிறோம். அவற்றைக் கடந்து சாராம்சமானது என்ன, எஞ்சுவது என்ன என்னும் வினாவுக்கான வாசிப்பு இரண்டாவது தொடக்கம். அறம் அதை தொடங்கிவைக்கட்டும்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89
அடுத்த கட்டுரை“ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்