தமிழ்ச்சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவரான மா.அரங்கநாதன் மறைந்தார்.
குமரிமாவட்டத்தில் திருப்பதிச்சாரம் என்னும் திருவெண்பரிசாரம் இலக்கியரீதியாக முக்கியமானது. இங்கே மையமாக திருவாழிமார்பனின் ஆலயம் உள்ளது. இச்சிற்றூரிலிருந்து பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். எம்.சிவசுப்ரமணியம் [எம்.எஸ்], குமரித்துறைவன், அச்சுதன் அடுக்கா என. கிருத்திகாவின் கணவர் பூதலிங்கம் இவ்வூர்க்காரர். இதுதான் வாசவேஸ்வரமாக கிருத்திகாவின் நாவலில் வெளிப்பட்டது. திருப்பதிச்சாரத்தில் எம்.சிவசுப்ரமணியத்தின் தம்பியாகப் பிறந்தவர் மா.அரங்கநாதன்.
பெரும்பாலும் திருப்பதிச்சாரத்தைச் சுற்றியே மா.அரங்கநாதனின் கதைகள் அமைந்தன. அவருடைய கதாபாத்திரங்களில் தன்னிலையில் பேசுபவை முத்துக்கருப்பன் என்ற மாறாப்பெயரில் விளங்கின. மெல்லியநகைச்சுவையும் கசப்புகலந்த விமர்சனப்போக்கும் கொண்ட படைப்புக்கள் அவருடையவை.
நெடுங்காலம் இலக்கியவாசகராகவே விளங்கிய மா.அரங்கநாதன் பிந்திய வயதில்தான் எழுத வந்தார். குறுகியகாலமே எழுதினாலும் ஆழமான சிறுகதைகளினூடாகத் தமிழிலக்கிய மரபில் இடம்பெற்றார்.
மா.அரங்கநாதனுக்கு அஞ்சலி
***