ஏழாம் உலகம் -கடிதம்

PicsArt_10-22-01.25.41

வணக்கம் ஜெ…

உங்கள் ஏழாம் உலகம் புத்தகம் படித்தேன், எப்படி உங்களால் அவர்கள் வாழ்கையை ஊடுருவி கண்டு எழுதினிர்கள் என்று வியப்பாக உள்ளது, எத்தனை குறையிருந்தாதுல் எப்படி அவர்களால் அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ முடிகிறது, நமக்கு எல்லாம் இருந்தும் எதோ ஒரு குறை சொல்லி வருத்தப்பட்டு கொண்டே இருக்கிறோம். குறிப்பாக குய்யன். அவர்களுக்கு ஒரு காதல் இருக்கிறது, அவர்களுக்குள்ளும் ஒரு தாய் இருக்கிறாள், இதை நாம் எப்போதாவது உணர்ந்து இருக்கிறோமா?

உங்கள் புத்தகம் எனக்கு அந்த உலகத்தை காட்டியது, எங்கள் பகுதியில் ஒரு பிச்சைக்காரன் இல்லை ஒரு உருப்படி இருகிறார் அவர் எப்போதும் அம்மா, சித்தப்பா, பெரியப்பா, 2000 நோட்டு போடுங்க என்று நக்கல் அடிப்பார், நான் தினமும் அந்த வழியாகத்தான் போகிறேன் ஆனால் ஏழாம் உலகம் படித்த பிறகுதான் அவரின் கிண்டல் என் காதிற்கு எட்டியது. நாம்ம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம் என்று வெகுளியாக பண்டாரத்தின் மனைவியை சொல்வது எதிலும் நிறுத்தி எடை போடுவது என்றே தெரியவில்லை. எருக்குவை காவல்துறையே கற்பழித்தால் வேறு எங்கும் போய் முறையிடுவது? எருக்கு அதுக்கு காலு இல்ல, அதுக்கு எதுக்குடா காலு தூக்கி கேரியரில் வை என்று சொல்லும் காவல்துறை அதிகாரி என்றைக்கும் இருக்க தானே செய்கிறார்கள். (அதுவும் இடுப்பு ஒடையும் அளவுக்கு).

Ezham-Ulagam-Wrapper---final

இடையே வரும் பாடல்கள் அற்புதம். அதில் இந்த வரியை எனக்காக எடுத்து கொண்டேன்.

“சித்தம் உலையல்லோ
சீவன் தீயல்லோ
நித்தம் எரியுதடி-என் கண்ணம்மா
நின்று கொதிக்குதடீ. “”

மாங்காண்டி சாமியாரை கார்ப்பரேட் சாமியராக மாற்ற எவ்வளவு முயற்சிகள், எல்லாவற்றையும் மௌனம் என்னும் ஆயுதத்தால் முறியடித்து வெற்றுவிட்டாரே அகிம்சை எத்தனை உறுதியானது.

முத்தம்மை பீ காட்டில் கற்பழிக்கபடுகிறாளே, மனிதன் மகளிருக்கு என்று கண்டு பிடித்த மகத்தான ஒன்று அவளுக்கும் தானே இருக்கிறது, அது கற்பழிப்பு தானே? பதினெட்டு ஈனி இருக்காளே எத்தனை கற்பழிப்பு நடந்து இருக்கிறது, இந்த சமூகத்திற்காக எருக்கு, முத்தம்மை இருவரின் வாழ்க்கை என்ன செய்தி சொல்கிறார்கள் என்று நினைத்தால் சிந்தனை எங்கெங்கோ முட்டி மோதி உடைபட்டு போகிறது. உயிர் வாழ்வதன் மகத்துவத்தை இந்த ஏழாம் உலகத்து மனிதர்கள் இடம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது எல்லாம் சாலை ஓரம் இருக்கும் அந்த ஏழாம் உலகத்து மனிதர்களை பார்க்காமல் கடந்து போக முடியவில்லை. வட்டார வழக்கு சொல்லுக்கு அகராதி கொடுத்தது சிறப்பு…

ஏழுமலை

***

அன்புள்ள ஏழுமலை,

அந்நாவலில் இருந்து நீண்டதொலைவுக்கு வந்துவிட்டேன். திரும்பிப்பார்க்கையில் அதை எழுதியநாட்கள் எங்கோ தெரிகின்றன. ஆனால் அந்தப் பாடல்வரி வேறு எவரோ பாடிக்கேட்டதுபோல உளமுருகச்செய்கிறது

ஜெ

***

http://ezhumalaimfm.blogspot.in

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
அடுத்த கட்டுரைவாசிப்புக் குற்றமும் விமர்சனத்தண்டனையும்