ஒளிர்பவர்கள்

illumina

திரு ஜெயமோகன்

உங்களுக்கு வந்த கடிதம் எப்படி எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. நீங்கள் நகைச்சுவையாக ஆக்கி கடந்துசெல்கிறீர்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரியத்தான் செய்யும். இதைவேண்டுமென்றால் வெளியிடுங்கள்.

உங்களை இலுமினாட்டி என்று யாரும் சொல்லவில்லை. நீங்கள் அந்தளவுக்கு பெரிய ஆள் இல்லை. இல்லுமினாட்டி என்பது ஒரு சிலந்தி. அதன் வலை உலகம் முழுக்க உள்ளது. அந்த வலையிலே ஒரு கண்ணி நீங்கள். தமிழக அளவிலே நீங்கள் அதிலே முக்கியமானவர்.

நீங்கள் இதுவரை மீடியாவிலேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் முதல்நாவலுக்கே விருது. அந்த நாவலுக்கே அன்றைக்கிருந்த பெரிய பத்திரிக்கைகளில் நாலு பேட்டிகள் வந்தன. அப்போதே இவரை பெரிய அளவிலே தூக்கப்போகிறார்கள் என நான் எழுதினேன். நான் அன்றைக்கு மார்க்ஸிஸ்ட். உங்கள் கோவை ஞானிக்கு நெருக்கம்.

அதன்பின் என்னென்ன நடந்தது என்று பார்த்தால் தெரியும். சுபமங்களா ஆரம்பித்தபோது உங்கள் பெரிய படத்துடன் முதல் இதழிலேயே கதை [ஜகன்மித்யை என்றகதை என்னும் ஞாபகம்] உங்கள் எல்லா சிறுகதை நூல்களுக்கும் மிகநீண்ட விமர்சனங்கள் வந்தன. உங்களை எல்லாரும் கொண்டாடி எழுதினார்கள். மூத்த விமர்சகர்கள் அப்படிக் கொண்டாடியபோதே என்ன இது என ஆச்சரியப்பட்டேன். அன்றைக்கே சொன்னேன்.

அப்போதுதான் விஷ்ணுபுரம். அது முழுக்கமுழுக்க இலுமினாட்டி குறியீடுகளால் ஆனது. அந்நாவலின் தொடக்கத்தில் ஸ்ரீசக்கரம் என்று ஒரு சக்கர அடையாளம் வரைவதுபோல வருகிறது இல்லையா? அந்தச் சக்கரம் என்ன? அந்த சக்கரத்துக்கும் ஸ்ரீசக்ரததுக்கும் ஏதாவது ஸ்நானப்ராப்தி உண்டா என்பதை யாராவது ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்களா?

free masons

புகைமூட்டமாகச் சொல்லியிருக்கும் செய்திகளை ஒருவர் வரைந்து பார்த்தாலே அது இலுமினாட்டிகளின் சின்னம் என்பது தெரியவரும். அதை அத்துமீறி தோண்டி எடுப்பவர்கள் அதில் முட்டித் தலையுடைந்து சாகிறார்கள் இல்லையா? அந்தச்சடங்கு எந்த இந்துமதநூலிலே உள்ளது? அது பேகன் சடங்கு. அது இலுமினாட்டிகளின் சடங்கு. நேரடியாக அப்பட்டமாகவே அது சொல்லப்பட்டுள்ளது.

அதிலுள்ள விஷ்ணு சிலைக்கு இந்திய சிற்பமரபிலே என்ன இடம்? அது குறித்துவரும் குறியீடுகள் எல்லாம் என்ன? கடைசியிலே ஒரு சிற்பி அந்த கோபுரத்தின் உச்சியிலே உள்ள அந்த சிற்பமுடிச்சை அவிழ்க்கப்போகிறார். அந்த முடிச்சு என்ன? அவர் ஏன் அதை அவிழ்க்கவில்லை?

விஷ்ணுபுரத்திலே இலுமினாட்டிகளின் அத்தனை குறியிடுகளும் உள்ளன. அதன் வழியாக நீங்கள் மற்ற இலுமினாட்டிகளுக்குச் செய்தி சொல்கிறீர்கள். அவர்களால் நீங்கள் நிலைநிறுத்தப்படுகிறீர்கள். அது எப்படி என்பதை எளிதிலே கண்டுபிடிக்கலாம். நீங்கள் படிப்பை விட்டுவிட்டு அலைந்தபோது எந்த நிறுவனத்தில் எல்லாம் இருந்தீர்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லவேண்டும். அதைப் பரிசோதனை செய்யவேண்டும்.

நீங்கள் மகேஷ் யோகி நிறுவனத்திலே இருந்திருக்கிறீர்கள். கோடிக்கணக்கான பணம் கையாண்டிருக்கிறீர்கள். மகேஷ் யோகி இலுமினாட்டி என்பதை நிரூபிக்கவேண்டியதில்லை. இன்றைக்கு அவருடைய வழிவந்தவர்களான ஜக்கி வாசுதேவ், ரவிஷங்கர் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சேர்ந்தவர்தான் ஓஷோ. நீங்கள் அவர்களை எல்லாம் பாதுகாக்க முயல்கிறீர்கள். இன்றைக்குவரை உங்கள் வேலை அதுதான்.

ஐயா, இலுமினாட்டிகளுக்காக நீங்கள் செய்யும் பணி என்ன? நீங்கள் என்ன செய்கிறீர்கள். பாரம்பரியமான மதஞானத்தையும் பாரம்பரியமான சடங்குகளையும் குழப்பி இல்லாமலாக்குகிறீர்கள். இலுமினாட்டிகள் அதை எதிர்ப்பதில்லை. அதையெல்லாம் ஆழமாகப் படித்து அதற்குள் ஆதரவாளர் போலப்புகுந்து குழப்பி அடிப்பார்கள்.

அவர்கள் கிறிஸ்தவ போதகர் போலவோ இந்துஞானி போலவோ தெரிவார்கள். ஆனால் நடைமுறையில் அத்தனை அடிப்படைகளையும் கலந்துகட்டி எதுவுமே ஆழமாக நிலைகொள்ளாமல் செய்துவிடுவார்கள். எல்லாவற்றையும் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று எடுத்து எதுவுமே மிஞ்சாமல் செய்வார்கள்.

ஓஷோ செய்தது அதைத்தான். ஓஷோவை வாசித்தவர்களுக்கு உண்மையான பதஞ்சலியோகமோ தம்மபதமோ புரியாமல் போய்விடும்.

ஆதியோகி சிலை எதுக்காக? அது சிவன் என்ற ஞானரூபத்தை காலப்போக்கிலே குழப்பிவிடும். சிவன் என்றாலே ஆதியோகிதானே என்று நாளைய குழந்தைகள் கேட்பார்கள். இப்போதே கேட்கிறார்கள். ஆகவேதான் இத்தனை பணச்செலவில் அதைக் கட்டமுடிகிறது. அதற்கு பிரதமரையே கொண்டுவர முடிகிறது.

நீங்கள் செய்துவருவது அதைத்தான். காந்தியம் பேசுவீர்கள். ஆனால் கூடவே காந்தியின் பெண் தொடர்புகளை எல்லாம் பிரபலப்படுத்தி அவரை நுணுக்கமாக கவிழ்த்துவிடுவீர்கள். இந்துமெய்ஞானம் பேசுவீர்கள். ஆனால் உங்களை வாசிப்பவர்களுக்கு அதன்மேல் மரியாதையே வராது. எல்லா இந்து ஞானிகளையும் கட்டுடைக்கிறேன் என்று கவிழ்ப்பீர்கள்.

நீங்கள் இந்து சாஸ்திரம் பற்றிப் பேசியிருக்கும் எல்லாமே குழப்பம். நுட்பமான குழப்பம். எல்லாவற்றையும் பாதிசொல்லி மிச்சத்தை குழப்பிவிட்டிருக்கிறீர்கள். இதுதான் உங்கள் வேலை. இதற்காக ஆராய்ச்சி செய்கிறீர்கள். உங்களுக்கு ஒரு டீம் இருக்கிறது.

நீங்கள் முற்போக்கு பேசுவதுபோல தோன்றும். தீண்டாமையை எதிர்ப்பீர்கள். கூடவே சாதியமைப்பை எதிர்ப்பீர்கள். அந்த பாவனையில் சந்திரசேகரர் போன்ற ஞானிகளை வசைபாடுவீர்கள். ஹிந்து சம்ப்ரதாயங்கள் மேல் புழுதிவாரிப்பூசுவீர்கள்.அதிலெல்லாம் நம்பிக்கையை இழக்கவைப்பீர்கள்.

நீங்கள் யோகஞானம் பேசுவீர்கள். ஆனால் பலவகையான அறிவார்ந்த குட்டிக்கரணங்கள் அடித்து யோகத்தை நாஸ்திகவாதத்தின் ஒரு பகுதியாக ஆக்குவீர்கள். அதை நிரீஸ்வர ஸாங்யத்தின் ஒரு பகுதி என்பீர்கள்

நீங்கள் கீதையைப்பேசுவீர்கள். ஆனால் அது ஞானநூல் அல்ல, மதநூல் அல்ல, தியானநூல் அல்ல, புனிதமானநூல் அல்ல என்கிறீர்கள். அது ஒரு தத்துவநூல் அவ்வளவுதான் என்பீர்கள். அது கடவுளின் சொல் இல்லை. அது நாலாம் நூற்றாண்டு இடைச்செருகல் என்று சந்தடி சாக்கில் சொல்வீர்கள்.இப்படி எல்லாவற்றையுமே நுட்பமாக திரிக்கிறீர்கள்.

நீங்கள் ஆலயங்களை பற்றி எழுதுகிறீர்கள். ஆலயங்கள் தோறும் போகிறீர்கள். ஆனால் என்ன எழுதுகிறீர்கள்? ஆலய ஸம்ப்ரதாயங்களைப் பற்றியோ ஞான நுட்பங்களைப் பற்றியோ எழுதுகிறீர்களா? இல்லை. நீங்கள் எழுதுவது அவையெல்லாம் வெறும் பழமையான ஆர்ட் கேலரிகள் மட்டும்தான் என்ற அர்த்தத்திலேதானே?

உங்களுக்குச் சிற்பங்கள் முக்கியம். ஆனால் அதிலே உள்ள குறியீடுகள் மட்டுமே உங்கள் ஆர்வம். அதிலேயே உங்கள் அக்கறை என்னவென்று தெரிகிறது. எல்லா ஊர்களிலும் அங்குள்ள ஸம்ப்ரதாயங்களையும் அர்ச்சகர்களையும் கடுமையாக நக்கலடித்து திட்டி எழுதியிருக்கிறீர்கள். கோயில்களை பழுதுபார்ப்பதைக்கூட வசைபாடுகிறீர்கள்.

ஏன் திருக்குறளையே நுட்பமாகப் பேசுவீர்கள். ஆனால் அது தமிழ்வேதம் இல்லை. அது ஜைன நூல் என்பீர்கள். அதாவது எந்த நூலுமே எந்தச் சமூகத்திலுமே ஆழமாக வேரோடிவிடக்கூடாது என்பதே உங்கள் நோக்கம்.

உங்கள் எழுத்துக்களிலே மிக அபாயமானது நீங்கள் எழுதிய பனிமனிதன் இப்போது எழுதும் வெள்ளிநிலம். ரெண்டுமே குழந்தைகள் மனதில் இன்றைக்கு இருக்கும் மதங்கள் மேல் அவநம்பிக்கையையும் குழப்பங்களையும் அறிவுபூர்வமாக உருவாக்கும் நோக்கம் கொண்டவை.

இப்போது வெண்முரசு எழுதுகிறீர்கள். எதுக்காக இவ்வளவு பெரிய வேலை? எல்லா கதையையுமே மாற்றிவிட்டீர்கள். ஒருகதைகூட பழைய வடிவிலே இல்லை. எல்லாவற்றிலும் உங்கள் குறியீடு. இப்போது தேவயானி கதை. அதில் எப்டி புலி வந்தது? எத்தனை குறியீடுகள் அதிலே என பார்த்தால் மிக ஆச்சரியம்.

நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? நிறையவேதம் இருந்தது, அதில் நான்குதான் இந்துவேதம் இல்லையா? இதுக்கு என்ன ஆதாரம்? அதாவது இந்த நூலின் நோக்கம் வேதங்களின் யூனிக்னெஸ், ஆதன்டிசிடி ஆகியவற்றை இல்லாமலாக்குவது மட்டும்தானே? அதைத்தான் விஷ்ணுபுரத்தில் மையமுடிச்சை அவுப்பது என எழுதியிருக்கிறீர்கள்.

இதைத்தான் கிறிஸ்தவ மதத்துக்கும் செய்தார்கள். பைபிளை ஆதண்டிக் இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள். நாக் அம்மாதி என்னும் இடத்தில் கிடைத்ததாக சில ஸ்க்ரோல்களை உண்டுபண்ணி பரப்பினார்கள். தாமஸ் காஸ்பல், மேரி மக்தலீனா காஸ்பல் என்று பல பொய் காஸ்பல்களை எழுதினார்கள். அவற்றைச் சேர்த்து ட்ரூ பைபிள் என்று பரப்பி வருகிறார்கள். பைபிளின் தெய்வீகத் தன்மையையே அழித்தார்கள்.

பார்த்தீர்கள் என்றால் இந்த போலி பைபிள்கள் நிஜபைபிளின் வரிகளை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி குழப்பியடிப்பதுபோல இருக்கும். இந்த முயற்சி அங்கே மிகப்பெரிய வெற்றி. அங்கே ஜேம்ஸ் கேமரூன் மாதிரி பெரிய ஆட்கள் எல்லாம் அதைச் சொல்கிறார்கள். பல டாக்குமெண்டரிகள் வந்தன. டாவின்ஸி கோட் மாதிரி நாவல்கள் வந்தன. அந்த முயற்சி மிகப்பெரியவெற்றி.

அதைத்தான் இங்கேயும் செய்கிறீர்கள் நீங்களும் உங்கள் டீமும். இங்கே இனிமேல் அசுரவேதம் நாகவேதம் எல்லாம் தோண்டி எடுப்பீர்கள். இந்த வேலை சிந்தனையில் செய்யப்படும் ஒரு பெரிய இடிப்புவேலை. இதுக்குத்தான் இலுமினாட்டி உங்களை இங்கே உட்கார வைத்திருக்கிறது. அறிவுள்ளவர்கள் புரிந்துகொள்ளட்டும்.

என் பெயர் வேண்டாம். நான் புகழுக்காக இதைச் சொல்லவில்லை.

எஸ்

***

மேசன்களின் உலகம்

சாங்கியமும் வேதங்களும்

கீதை இடைச்செருகலா?

கடவுளின் உருவம்-கடிதம்

முந்தைய கட்டுரைஅ.மி – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64