இணையதளம் வருவாய்

dog

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

தினமும் மாமலர் படிப்பதால் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு ஆவலுடன் காத்திருப்பது எனக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப் 16 – வியாழன் அன்று தங்கள் இணையதளம் அப்டேட் ஆக தாமதம் ஆனது. பிறகு நேற்று இரவு. இதன் பொருட்செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சந்தாவாக கட்டணம் நிர்ணயிக்கப்படுமாயின் மகிழ்வேன்.

தஞ்சை சந்திப்பின் போதும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கபட்டிருக்கலாம் என்று தோன்றியது. மாமலர் நூலாக வரும் முன்னரே அதை முழுவதுமாக படித்து முடித்திருப்பேன். இது உங்கள் உழைப்பு. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகம் படித்து வருகிறேன். ஒவ்வொரு நூலையும் புதிதாகவே வாங்குகிறேன். இணையத்தில் நீங்கள் கட்டணம் அற்று வழங்கினாலும் ஓசியில் படிக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படவே செய்கிறது – அத்துடன் கேபிள் டிவிக்கு கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டு எழுத்து இலக்கியம் இலவசம் வேண்டும் என்பது எழுத்துக்கு ஒரு அவமதிப்பாகவும் தோன்றுகிறது.

பத்திரிகைகள் – வார இதழ்கள் பெரும்பாலும் தரமுடையவையாக இல்லை. தேடுபவர்கள் இயல்பாக வந்தடையும் இடமாக உங்கள் இணையதளம் உள்ளது. கட்டணம் நிர்ணயிக்க விருப்பம் இல்லாவிட்டால் விருப்பமுடையவர்கள் நன்கொடை அளிக்கலாம் என்று அறிவியுங்கள் என்று கோருகிறேன். உங்கள் இணையதளம் எப்போதும் நிலைநின்று (உங்களுக்குப் பிறகும் கூட) தொடர்ந்து வளர்ந்து செல்லவேண்டும் என்பது என் பிரார்த்தனை.

அன்புடன்,

விக்ரம்

கோவை

***

அன்புள்ள விக்ரம்,

கட்டணம் அல்லது நன்கொடை நிர்ணயிக்கவேண்டுமா என்னும் குழப்பம் கொஞ்ச நாட்களாகவே சுழன்று கொண்டிருக்கிறது. கட்டணம் என எதையும் வைப்பது சரியல்ல, அது இதை ஒரு வணிகமாக ஆக்கிவிடுகிறது, இதைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து வாசிப்பவர்களைத் தயங்கச் செய்கிறது என்று ஓர் எண்ணம்.

நன்கொடை வைக்கலாம், ஆனால் பெரிய எதிர்வினை ஏதும் இருக்காது, அப்படியெல்லாம் நம்மவர் பணம் கொடுத்துவிடமாட்டார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதேசமயம் நன்கொடையாக லட்சக்கணக்கில் வசூல் என்று கெட்டபேரும் எஞ்சும். விளம்பரம் போடலாம். தொடர் விசாரிப்புகள் உள்ளன. ஆனால் அது தளத்தை வாசிக்க முடியாததாக ஆக்கிவிடும்.

அத்துடன் நம்மூரில் எல்லாவற்றையும் இலவசமாக அளிப்பதே நல்லவன் செய்யும் வேலை, கலைஞனும் இலக்கியவாதியும் வறுமையில் இருந்தாகவேண்டும் என்றெல்லாம் பல முன்முடிவுகள். காப்புரிமை பேசினார் என்று இளையராஜாவை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் முதன்மை எதிரி என்ற அளவில் வசைபாடித் தள்ளினார்கள் நம்மவர்கள்.

பார்ப்போம், ஓடும்வரை ஓடட்டும். ஆனால் எனக்குப்பின் இந்தத் தளம் இருக்கும் என்றெல்லாம் எனக்கு எண்ணமில்லை. ஆனால் தொழில்நுட்பவளர்ச்சி காரணமாக இந்த உள்ளடக்கம் மிகச்சுருக்கமாக அழுத்தப்பட்டு எங்கேனும் இருந்துகொண்டிருக்கும்

ஜெ

***

 

முந்தைய கட்டுரைகல்வி, தன்னிலை -கடிதம்
அடுத்த கட்டுரைபுதிய ஆகாசம் புதிய பூமி