ஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்

index

ஜெ

வணக்கம். ஜக்கி கட்டுரை ஒரு அருமையான கட்டுரை. அதை Swarajyaவில் மொழி பெயர்த்தவர் அதள பாதாலத்தில் தள்ளி விட்டார்.

தமிழ் வாக்கிய மொழியை அப்படியே ஆங்கிலாக்கம் செய்துள்ளார். கட்டுரை முழுதும் pronoun அள்ளி தெளித்துள்ளார். அதுவும் உங்கள் பெயரிலேயே கட்டுரை வெளியாகியுள்ளது. மொழி பெயர்பாளர் பெயரும் இல்லை.

அந்த கட்டுரையின் முக்கிய பகுதி; உங்களுக்கு வந்த கேள்விகளை தொகுத்து, நீங்கள் அதற்கு அளித்த பதில்கள். அந்த பகுதி இல்லை.

அ.நீ அவரது முகநூலில், நீங்கள் கிரும்பானந்த வாரியார் பற்றி எழுதியதை, முற்றும் தவறான(குதர்கமான) கோணத்தில் புரிந்து கொண்டு ஒரு ஆட்சேபனை பதிவு செய்தார். அதனால் ஆங்கில மொழியாக்கத்தில் கிருபானந்த வாரியார் பெயர் இல்லை.

உங்களிடம் அனுமதி வாங்கி தான் வெளியிடுகிறார்களா?

இறுதியில் இதை ஆங்கிலத்தில் மட்டும் படிப்பவர்; ஜக்கியை ஆதரித்து இவ்வளவு மோசமான ஆங்கிலத்தில் கட்டுரை என்றால், ஜக்கி அவர்களின் நிறுவனம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்ற சற்று நினைக்க தான் செய்வார்

அன்புடன்

சதிஷ்
(பெயரில் குறில் உங்களுக்கு மட்டும்)

*

அன்புள்ள சதிஷ்

அது மொழியாக்கக் கட்டுரை. அனுமதி பெற்றது. அப்படி மொழியாக்கம் செய்தவரின் பெயருடன்தான் வெளிவந்திருக்கவேண்டும். இல்லையேல் அது பிழை. நான் பார்க்கவில்லை.

ஜெ

***

ஜெமோ

ஜக்கி அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டுவதாக தமிழக அரசே நீதிமன்றத்தில் சொல்லிவிட்டதே, உங்கள் சப்பைக்கட்டு என்ன?

திருநாவுக்கரசு

*

அன்புள்ள திருநாவுக்கரசு

முதல் கட்டுரையிலேயே இதைத் தெளிவாகச் சொல்லியிருந்தேன். விதிமீறல் இருக்கும் என்றே நினைக்கிறேன், அதற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை வரவேற்கிறேன் என. ஏனென்றால் இங்கே விதிமீறலில்லாத பெரிய அமைப்புக்கள் ஏதும் இல்லை. அனேகமாக ஒரு பொறியியல்கல்லூரி கூட இருக்காது. சென்னையிலுள்ள ஒரு வணிகவளாகம்கூட மிஞ்சாது. இத்தகைய நடவடிக்கைகள் எந்நோக்கம் கொண்டவை என்றாலும் வரவேற்கத்தக்கவை.

அவரது கட்டிடங்கள் பஞ்சாயத்து அனுமதியுடன் கட்டப்பட்டவை. அவை சட்டபூர்வமாகப் போதாதவை என்பது முன்னரே சிலரால் எழுதவும்பட்டுவிட்டது. சட்டப்படி நிகழட்டும்.

ஆனால் இதனால் ஜக்கி காட்டை அழிக்கிறார், நிலம் மோசடியானது, அவருடைய யோகா முறைபோலியானது, அவர் ஏமாற்றுக்காரர் என்று ஆகாது. வசைபாடித்தள்ளுவது நியாயப்படுத்தவும்படாது. இத்தனைவசைபாடிவிட்டு கடைசியில் இதைவைத்துக்கொண்டு பார்த்தீர்களா என்று தாண்டிக்குதிப்பதைக் கண்டு பரிதாபமே எஞ்சுகிறது. பிழைத்துப்போங்கள்

ஜெ

***

அன்புள்ள ஜெ,

நீங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

அருண். எஸ்

*

அன்புள்ள அருண்,

நான் எனக்குத் தெரிந்த, ஏதேனும் சொல்வதற்கு இருக்கும் விஷயங்களில் மட்டுமே பேசமுற்படுகிறேன். பொதுவான கருத்தே எனக்கும் என்றால் ஏதும் சொல்வதில்லை.

எரிபொருள் எடுப்பது, அதன் விளைவுகள் குறித்து அறிவியலாளர்தான் சொல்லவேண்டும். ஆனால் நான் நன்கறிந்த ஒன்று உண்டு. இந்திய யதார்த்தம். அதனடிப்படையில் நான் ஒன்றைச் சொல்லமுடியும்

பொதுத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது அளிக்கப்படவேண்டிய இழப்பீட்டை அரசு எப்போதும் ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கிறது. அந்த பணம் முறையாக அளிக்கப்படுவதுமில்லை. ஆகவே கிட்டத்தட்ட நிலம் பறிக்கப்படுகிறது என்பதே உண்மை

சென்னை அருகே நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மிகச்சிறிய தொகையைக்கூட பல பகுதிகளாகப்பிரித்து ஒரு பகுதியை மட்டுமே அளித்திருக்கிறார்கள். எஞ்சிய பகுதிக்காக ஐந்தாண்டுக்காலமாக அந்த மக்கள் அமைப்பு சேர்ந்து மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரிடம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது சிலநாட்களுக்கு முன்னால் வந்த செய்தி. இந்த அராஜகமே இந்தியாவில் எந்த அரசுத்திட்டமும் எதிர்ப்புக்குள்ளாக காரணம்.

1998ல் நான் பலியபாலின் பாடங்கள் என்னும் சிறுநூலை மொழியாக்கம் செய்தேன். அதை ஞானி வெளியிட்டார். ஒரிசாவில் பலியபால் என்னுமிடத்தில் ஏவுகணைத்தளம் அமைக்க வளமான விளைநிலம் கையகப்படுத்தப்பட்டது. அம்மக்களின் போராட்டம் ஒடுக்கப்பட்டது. இழப்பீடு அளித்து முடிக்க இருபதாண்டுகளுக்கும் மேல் ஆகியது. பெரும்பாலான பயனாளிகள் அதற்குள் அடையாளம் காணமுடியாமல் எங்கெங்கோ சிதறிப்போனமையால் அந்நிதியை வாங்கவுமில்லை. இந்த கதியே இந்தியாவின் பெரும்பாலும் அனைத்து ‘வளர்ச்சி’த்திட்டங்களிலும் உள்ளது.

இந்த அராஜகம் இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. அதிகாரிகளின் ஆணவம், ஊழல், அரசியல்வாதிகளின் அறியாமை, மூர்க்கம். இரண்டும் இணைந்து உருவாக்கும் அழிவு. இத்தனைக்குப்பின்னரும் எவரும் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தப்போராட்டமும் உண்மையில் அடிப்படைக்காரணமாக இதையே கொண்டுள்ளது

இங்குள்ள அனைத்து நிலம் கையகப்படுத்தல், இயற்கைவளங்களை எடுத்தல் திட்டங்களிலும் ஊழல் அதிகாரிகளின் நேரடிக்கொள்ளையே முதன்மையான தடை. அதை இங்குள்ள எந்த அரசும் எதுவும் செய்யமுடியவில்லை. அவர்களின் உதவியில்லாமல் செய்துமுடிக்கமுடியாதென்றே நினைக்கிறார்கள். இதுவே உண்மை

ஜெ

***

கூடங்குளம் விவாதம்

மீண்டும் அண்ணா- பாஜக அரசின் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக

 

முந்தைய கட்டுரைநிச்சயமாக?
அடுத்த கட்டுரைஇன்னும் அழகிய உலகில்…