ஜக்கி கடிதங்கள் 8

ja

 

அன்புள்ள ஜெ

நம்மாழ்வாரின் தோற்றத்தை வேடம் போடுகிறார் என்று சொன்ன ஜெயமோகன் ஜக்கியின் தோற்றம் குறியீடு என்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உங்கள்மேல். இது புதிது

மகேஷ்

*

அன்புள்ள மகேஷ்,

நான் சொல்லும் விளக்கங்களை எதிர்கொள்ளமுடியாத தவிப்பு. இதற்கும் ஏராளமான முட்டாள்கள் கிளம்பி வருவார்கள் என்னும் நம்பிக்கை –வேறென்ன?

நம்மாழ்வார் எங்கள் வழிகாட்டி. இந்த தளத்தில் இலக்கிய நிகழ்வுகளைத் தவிர்த்தால் இன்றும் அவர் மரபு சார்ந்த இயற்கை வேளாண்மை சார்ந்த நிகழ்ச்சிகளின் அறிவுப்பு மட்டுமே வெளிவரும். அவருக்குத்தான் இறுதிநாள்வரை அதிகாரபூர்வமாக நிதி திரட்டி அளித்தோம். பலநூறுபேரை நானே அவரிடம் ஆற்றுப்படுத்தியிருக்கிறேன்.

ஜக்கி என் ஆசிரியரோ, அணுக்கமானவரோ அல்ல. அவரிடம் எவரையும் ஆற்றுப்படுத்துவதுமில்லை. ஜக்கியின் மீதான வசைகளில் உள்ள காழ்ப்பையும், அரசியல் – மதப்பின்னணியையும் அடையாளம் காட்டுவது மட்டுமே என் பணி.

ஜக்கி அளிப்பது ஓர் அகவயப்பயிற்சி. ஆகவே அதற்கு குறியீடுகளும் பிம்பங்களும் தேவையாகலாம். அவரே உருவாக்கிக்கொண்ட ஒரு வழி அது. அதற்கான குறியீடுகளை அவரே உருவாக்கலாம். அது மதம், மதம் எப்போதுமே அடையாளங்கள் சார்ந்தது.

நம்மாழ்வார் ஓர் அறிவியலாளர். அவர் பேசியது சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட அறிவியல் அணுகுமுறை ஒன்றை. அதை அவர் காலப்போக்கில் ஒருவகை மதம்போல, வெறும் நம்பிக்கையாக ஆக்கியதையே ஏற்புடையது அல்ல என்றேன். அது தவறான முன்னுதாரணமாக ஆகி இயற்கை வேளாண்மையின் அடிப்படையை அழித்துக் கொண்டுள்ளது என்றேன். மாற்று மருத்துவம், இயற்கைவாதம் போல இன்று நிலவும் பலவகையான அறிவியல் அடிப்படை அற்ற நம்பிக்கைகளின் பகுதியாக அதை ஆக்கிக்கொண்டிருக்கிறது என்றேன்.

நம்மாழ்வார் தன் அறிவியலை வெறும் அரசியல் காழ்ப்பு ஆக, மொழி-இனவாதமாக, குறுங்குழு அரசியல்வாதிகளின் கருத்துக்களின் பக்கவாத்தியமாக இறுதியில் மாற்றினார். அதன்வழியாக அதன் பெறுமானத்தை அழிக்க காரணமானார். அது கண்டிக்கத்தக்கது. ஆனாலும் அவருடைய பங்களிப்பு முன்னத்தி ஏர் போன்றது. ஆகவே அவர் முக்கியமான ஆளுமைதான். நான் எழுதியது இதையே.

அவருடைய தோற்றமும் குறியீடு என்றே சொல்லியிருந்தேன். வேடம் என்று அல்ல. அதன் அவசியமும் எனக்குத் தெரிந்தது. அதை காந்தியின் தோற்றத்துடன்தான் அந்தக் கட்டுரையிலேயே ஒப்பிட்டிருக்கிறேன். மக்களிடம் சென்று சேர அக்குறியீடு அவருக்கு உதவியது என்றே சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இன்று இயற்கை வேளாண்மையை அப்படி ஒரு மரபு சார்ந்த தோற்றத்துடன், மரபு சார்ந்த மொழியில் முன்வைக்கக்கூடாது என நினைக்கிறேன். ஏனென்றால் மரபு என்ற பேரில் சொல்லப்படும் அத்தனை மூடநம்பிக்கைகளுடனும் அதுவும் சென்று சேர்கிறது. அதை நவீனஅறிவியலின் ஓர் உச்சநிலையாகவே கொண்டு செல்லவேண்டும். அந்தத் தோற்றத்துடன் – நான் நம்மாழ்வாரிடமே சொன்னது இது.

அதற்கு இத்தனை திரிபுகள். இத்தனை ஒற்றைவரிகள். இங்கு எத்தனை முட்டாள்களிடம்தான் பேசுவது!

ஜெ

***

நம்மாழ்வார் அஞ்சலி

நம்மாழ்வார் ஒரு முரண்பாடு

விமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்

நம்மாழ்வார் ஒரு மறுப்பு

நம்மாழ்வார் ஒரு கடிதம்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கடலூர் சீனுவின் நேற்றைய கடிதம் கண்டேன். அவர் என்ன சொல்கிறார்? ஒருவர் ஞானி அல்லது ஞானி அல்ல என்பதற்கு என்ன வரையறை உள்ளது? சத்குரு ஞானி அல்ல என்பது இவருக்கு எப்படித் தெரியும்? அல்லது ரமணர் ஞானி என்பது இவருக்கு எப்படித் தெரியும்? ஒன்று அவர் “நீங்கள் சத்குரு ஞானி என்று நம்புகிறீர்கள். நான் ரமணர் ஞானி என்று நம்புகிறேன்” என்று சொல்ல வேண்டும் அல்லது “நான் ரமணர் ஞானி என்று நம்புகிறேன். சத்குரு ஞானியா என்பது எனக்குத் தெரியாது” என்று சொல்ல வேண்டும்.

சத்குரு ஞானி அல்ல என்று அவர் வரையறுப்பதன் அளவுகோல் என்ன? என் அறிவுக்கு இரண்டே வழிதான் தோன்றுகிறது. ஒன்று சீனு தானே ஞானி என்று கூறிவிட வேண்டும் அதனால் ஞானியாகிய தனக்கு யார் ஞானி யார் ஞானி அல்ல என்று தெரியும் என்று கூறவேண்டும் (கிட்டத்தட்ட அவர் இந்த அடிப்படையில் கூறுவது போலவே தோன்றுகிறது – தான் கண் உடையவர், சத்குரு ஞானி என்று கருதுவோர் பார்வையற்றவர் என்கிறாரா?). இரண்டாவது வழி, அவருக்கு மிகவும் பிடித்த பகவான் ரமணர் கூறிய வரைவிலக்கணத்தைக் கொண்டு பார்க்க வேண்டும். “எக்காலத்தும் எவ்விடத்தும் அஞ்சாத தீரமுடைமை. தான் மட்டுமே ஞானி மற்றவர் தாழ்வு என்று கருதாத தன்மை.” முதல் வழியில் சீனுவை மறுக்க வழியில்லை. இரண்டாவது வழியை கொண்டால், சத்குரு ஞானி என்று உறுதியாக கூறுவேன். எக்காலத்தும் எவ்விடத்தும் அஞ்சாத தீரமுடைமையை அவரிடம் எப்போதும் காண்கிறேன். தான் மட்டுமே ஞானி மற்றவர் தாழ்வு என்று கருதாததன்மை – இதையும் எப்போதும் அவரிடம் காண்கிறேன்.

ஞானம் என்பது உடல்-மனம் கடந்த ஒன்று என்று கருதப்படும் நிலையில், ஜெயமோகன்-பாலகுமாரன் என்று இலக்கிய ரசனையை கொண்டு ஒப்பிட்டு ஞானத்தை விளக்க முற்படுவது பொருந்தாது. எவ்வளவு நுட்பமானதாயினும் இலக்கிய ரசனை மனதின் செயல்பாடே அல்லவா? மனதிற்கு அப்பாற்பட்ட ஒன்றை சீனு எதைக்கொண்டு வரையருக்கிறார்? ரமணர் கூட ஜனகர் பற்றி கூறி – ஞானி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் கூறமுடியாது அது அவரவர் இஷ்டம் என்கிறாரே? ஞானி இப்படித்தான் இருக்க வேண்டும் நீங்கள் எப்படி கட்டாயப்படுத்தலாம் என்பதாகவே அவர் கூறுகிறாரே?

எனக்கு இவரைப் பிடிக்கும் அவரைப் பிடிக்காது என்பது தாண்டி சீனு கூறுவது என்ன?

//அவரது ஆளுமையை வரையறை செய்தால், உங்களது அகங்காரத்தை களைந்து சரணகதி அடைந்து உய்யுமாறு தக்க தருணத்தில் தடுத்தாட் கொள்கிறார்கள்// – அப்படித்தானே செய்வார்கள்? அப்படி செய்தால் தானே அவர்கள் பக்தர்கள்?

ரமணரின் ஆளுமையை வரையறை செய்தால், சீனு தடுத்தாட்கொள்ள மாட்டாரா? ரமணரின் காலத்திலேயே அவரிடமே “இங்கு வந்ததால் நாங்கள் ஓன்றும் உணரவில்லை” என்று கூறியவர்கள் இருந்தார்கள் அல்லவா? முன்முடிவுகளுடன் இவர் நிச்சயம் ஞானி அல்ல முடிவு கட்டிவந்து அவரிடம் பேசிச்சென்று “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று வெளியே பேசி இருப்பார்கள் இல்லையா? அத்தகையவர்களை ரமணரை ஏற்றுக்கொண்ட பக்தர்கள் தடுத்தாட்கொள்ளவே செய்வார்கள் இல்லையா?

சீனு ரமணரின் காலத்தில் இருந்தால் அவர் ரமணரை ஏற்றுக்கொண்டிருப்பார் என்பது என்ன நிச்சயம்? அதற்கும் காலத்தால் முந்திய ஒருவரே மெய்ப்பொருள் – இது பொய் எனக்கொள்ள மாட்டார் என என்ன நிச்சயம்? முன்முடிவுகள் அப்போது இருத்திருக்காது என்று எவ்வாறு கூறுவார்?

என்னைப் பொறுத்தவரையில் சத்குரு ஞானிதான் என்று நம்புகிறேன். அவரை எனக்குப் பிடிக்கும் அவரை நம்புகிறேன். என் போன்றவர்களாவது சத்குருவின் சமகாலத்தில் வாழ்ந்து அவரை அருகிருந்து பார்த்து ஞானி என்று நம்புகிறோம். சீனு ரமணரை நூல்களின் வாயிலாகவும் புகைப்படத்தின் வழியாகவுமே கண்டு ஞானி என்று நம்புகிறார்.

ரமணரை ஞானி என்று நம்புவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சீனு சத்குரு ஞானிதான் என்று ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயமும் இல்லை.

பிடிக்கும் பிடிக்காது என்பதைத் தாண்டி இதில் விவாதம் கொள்ள பெரிதாக என்ன இருக்கிறது?

சரியாகத் தெரிந்து கொள்ளாமல் தெரிந்தது போல் காட்டக்கூடாது என்பதற்கும் “ஏசுவே மெய்யான தேவன்” என்பது போல் ஒரு அடிப்படைவாதம் தேவையில்லை என்பதற்கும் தான் இதை எழுதுகிறேன். சீனுவின் மீது மிகுந்த அன்பு உண்டாகிறது – ரமண பக்தரான அவரைப் போற்றுவேன்.

அன்புடன்,

விக்ரம்,

கோவை

*

அன்புள்ள விக்ரம்,

பல்வேறு கோணங்களை விவாதிக்கவே அக்கடிதம். என் அபிப்பிராயம் இதுவே. பொதுவாக மெய்யறிதல் என்பது அகவயமானது. அதை விவாதித்து அறிய, நிறுவ முடியாது. தெளிவாகத்தெரியும் ஒரு நுண்ணுணர்வு மட்டுமே அதற்கு உதவும்

ஜெ

***

அன்புள்ள ஜெ,

ஏற்கனவெ பலர் எழுதியதுதான். நீங்கள் சொன்னது போல நானும் ஈஷா யோகா செய்யும், உங்கள் வாசகர்களில் ஒருவன் தான். பலமுறை குடும்பத்துடன் அங்கே தங்கியிருக்கிறேன். 500 ரூ. நிகழ்வுகளிலும், 20000 கட்டணம் கேட்கும் நிகழ்வுகளிலும் கலந்திருக்கிறேன். ஒருமுறைகூட கட்டணத்தின் பொருட்டு விதிமுறைகள் மாறியதில்லை. 20000 செலுத்தும்போதும் தாமதமாக வந்தால் வகுப்புக்குள் அனுமதியில்லை.

அவர்களின் நோக்கம் குறுக்கு வழியிலோ ஏமாற்றியோ பணம் சம்பாதிப்பது இல்லை என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். அவர்களின் யோகா பலனளித்தது என்பதற்கு நானும் ஒரு சாட்சி. மற்றபடி, தியானலிங்கம், பாதரசலிங்கம், லிங்கபைரவி போன்ற இடங்களில் எந்த அதிர்வும், அனுபவமும் எனக்கு ஏற்பட்டதில்லை. தியானலிங்கத்தில் அமாவாசை/பௌர்ணமி நள்ளிரவு தியானம் செய்வதற்கும், என் வீட்டின் அறையில் செய்வதற்கும் ஒரு வேறுபாடும் எனக்குத் தெரிவதில்லை. ஆனால், இதெல்லாம் ஒரு குறியீடுகள் என்ற அளவில் என்னைக் கவரவே செய்கின்றன.

நீங்கள் சொன்னதுபோல ஈஷா நிறுவனம் விதிமுறைகளை மீறியிருந்தால்
ஆதாரங்களுடன் வாதிடலாம். வசைகளும் அவதூறுகளும் அதைக் கூறுபவர்களின்தகுதிகளையே காட்டுகின்றன.

நன்றி,
ரத்தன்

*

அன்புள்ள ரத்தன்,

இந்த யோகமுறைகள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் ஒரு உளக்கூர்மையை அடைவதற்குரியவை. யோகம் என நம் மரபில் சொல்லப்படுவதை இன்னும் விரிவாக வரையறை செய்யவேண்டும். மெய்மையை அறிந்து உணர்ந்து அதுவாக ஆகவேண்டும். அதற்குத் தடையாக அமைவது நம் அறிதல் உணர்தல் ஒன்றுதல் தளத்தில் உள்ள தடைகள். அதை தொடர் பயிற்சியின் மூலம் அகற்றுவதே யோகம். அது மிக நெடிய ஒரு பயணம். யோகிகளுக்குரியதே யோகம்

ஜெ

***

முந்தைய கட்டுரைகல்வியழித்தல்
அடுத்த கட்டுரைஜக்கி -இறுதியாக…