ஜக்கி -கடிதங்கள் 5

adi

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 1

ஜக்கி அவதூறுகள் வசைகள் ஐயங்கள் 2

 

இனிய ஜெயம்,

அவர் அளிக்கும் ஞானத்தை குறைசொல்ல உங்களுக்கு என்ன தகுதி?

உங்கள் ஆணவத்தைக் களைந்து யோசித்துப்பார்க்கவும்

நேற்றைய இடுகையில் சீனிவாசன் என்பவரது பதிலில் இருந்த இதே வரிகளை கொஞ்சமும் பிசகாது அதற்க்கு முந்தையநாள் ராதாகிருஷ்ணனுடன் விவாதிக்கும்போது ராதாகிருஷ்ணன் என்னை கேட்டார்.

வரலாற்று, பண்பாட்டு பின்புலத்தில் வைத்து ஜக்கியின் பங்களிப்பை மதிப்பிடுகையில் அதை வாட்ஸப்பில் பரப்பி உய்யும் பக்தாள், அவரது ஆளுமையை வரையறை செய்தால், உங்களது அகங்காரத்தை களைந்து சரணகதி அடைந்து உய்யுமாறு தக்க தருணத்தில் தடுத்தாட் கொள்கிறார்கள்.

எளிய பதில். ஆனால் வெகுமக்களுக்கு ஒரு போதும் புரியாத பதில். பார்வையற்றவன்தான் சூரியனை நம்ப வேண்டும். பார்வை கொண்டவனுக்கு வேறு அறிதல். தடவிப்பார்த்து ஒளியை அறிவார்கள், கண்களால் கண்டு ஒளியை அறிபவர்களின் அறிதலை எங்கனம் அடைய முடியும்?

உங்களில் சுடர் எரியாமல், இது சூரியன், இது எரிமலை என நீங்கள் வகுக்கும் எதற்கும் பொருளில்லை. எழுத்துக்கூட்டியே வாசிக்கத் தெரியாத ஒருவன் தேவத்தவனை பார்த்து விட்டால் கவிதை வாசகன் ஆகி விட முடியுமா என்ன?

ராதா கிருஷ்ணன் இலக்கிய வாசகர் என்பதால் இலக்கியம் கொண்டே உதாரணம் சொன்னேன். பாலகுமாரன் எழுத்தாளர். அவரும் கர்ணனின் கதை என்ற தலைப்பில் கர்ணன் குறித்து எழுதி இருக்கிறார். ஒரு ஒரு லட்சம் பேராவது வாசகர்கள் அவருக்கு இருப்பார்கள். ஜெயமோகன் எழுத்தாளர். அவரும் கர்ணன் குறித்து வெய்யோன் என்ற தலைப்பில் நாவல் எழுதி இருக்கிறார். அவருக்கு ஒரு ஐம்பது ஆயிரம் வாசகர்கள் இருப்பார்கள். இலக்கிய ரசனை மதிப்பீட்டு அடிப்படையில் ஜெயமோகன் மேலானவர். அதை மறுக்க இயலாது அல்லவா?

அது போலவே ஜக்கியின் ஆளுமையும். அவர் ”ஆகி அமர்ந்த ” ரமணர் அல்ல. சகலருக்குமான ”யோகா குரு ” மட்டுமே. வெய்யோனின் உள்ளடக்கம் ஜெயமோகன் வசம் இருப்பதால் அவர் வெய்யோன் எழுதுகிறார். வெய்யோனின் உள்ளடக்கம் பாலகுமாரனிலும் இருக்கிறது அவர் ”மக்களுக்காக” கர்ணனின் கதை நாவல் எழுதுகிறார் என நீங்கள் சொன்னால் அது உங்கள் நம்பிக்கை. அவ்வளவே.

இவை போக, அகங்கார கருத்தியல் அதிகாரம் வேறு, வரையறை செய்து கொள்ளல் வேறு. எனக்கு உடலில் எதோ சிக்கல். குறிப்பிட்ட யோக முறையை தினமும் பயில்வதின் மூலம் அப் பிணியில் இருந்து மீள இயலும் எனில், ஈஷா போன்றதொரு அமைப்பில் இணைந்து அதை மேற்கொள்ள எனக்கு எந்த தடையும் இல்லை. சத்குரு என்பது நம்பிக்கை. யோகா செயல்பாட்டு வழிமுறை. என இவற்றின் ஒவ்வொரு அலகும் நான் அறிவேன். அகங்காரி இந்த வழிமுறையை மறுத்து சீரழிவான். என்னை போன்ற ஆட்கள் சந்தப்பவாதிகள் என ”எள்ளி ”நகையாடப் பெறுவர்.

இந்து நாளிதழில், மக்கள் கருத்து என்றொரு பகுதி வரும். மூன்றே வாய்ப்பு. உதாரணம். ஜக்கி செயல்பாடுகள். ஒன்று. . . சரி, இரண்டு. . . தவறு, மூன்று. . . கருத்துக்கள் ஏதும் இல்லை. இதில் வாக்களிக்க வேண்டும். கருத்துச் செயல்பாட்டாளன் இந்த மூன்றில் ஒருவன் அல்ல, என்று ஒரு போதும் புரிந்துகொள்ள இயலாத சீனிவாசன்கள் மத்தியில்தான் நீங்கள் பேச வேண்டியது இருக்கிறது.

அன்றைய எனது நிலையில் உள்ள சிக்கலில்தான் நீங்கள் என்றும் செயல்பட்டு வருகிறீர்கள் என்பதைக் காண்கிறேன். வாழ்த்துக்கள்.

கடலூர் சீனு

***

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் நேற்று நீண்ட கட்டுரைகளை வெளியிட்டபோதுகூட தோன்றவில்லை. இன்று இணையத்தில் அக்கட்டுரையை ‘அற்புதமாக’ புரிந்துகொண்டு எழுதப்படும் ‘ஆழமான’ எதிர்வினைகளைப் பார்க்கையில்தான் நீங்கள் ஏன் எழுதவேண்டும் என்று புரிந்தது. இல்லையேல் இதே மூடத்தனத்துக்குள் உழன்று உழன்று வேறுஒருவகை சிந்தனைமுறை இருக்கிறது என்றே அறியாமலிருந்துவிடுவோம்

நீங்கள் வாசிக்கமாட்டீர்கள் என்பதனால் மாதிரிக்கு ஒன்று. [ ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடியாது ] இதேமாதிரியான அசட்டுத்தனங்கள், இன்னும் கூட கீழே நின்றிருக்கும் நையாண்டிகள் நக்கல்கள் – இவ்வளவுதான் ஒட்டுமொத்த இணையஎதிர்வினை. என்ன ஒரு தன்னம்பிக்கையுடன் இதையெல்லாம் பதிவுசெய்கிறார்கள். இவர்கள் ஜக்கியை என்ன உலகத்தையே அறிவுரைசொல்லித் திருத்தும் மேதைகள் அல்லவா?

ஜக்கி மாதிரி ஏன் இப்படி எளிமையிலும் எளிமையாகப்பேசவேண்டும் என நினைப்பதுண்டு. இந்தக்கும்பலுக்கு எளிமைக்கும் கீழே ஏதாவது இருந்தால் அதுதான் பிடிகிடைக்கும். எவ்வளவு அசட்டு உலகம்! இணையம் இதையெல்லாம் இப்படியே பதிவுசெய்வதனால்தான் இப்படித்தான் இவர்களின் லெவல் என்று தெரிகிறது. இல்லையேல் நம்பியிருக்கவே மாட்டோம்

கூடவே, இப்படியெளிமல்லாம் புரிந்துகொள்ளும் சூழலில் என்னத்தைப்பேசி என்ன என்றும் தோன்றுகிறது

மகேஷ்

***

அன்புள்ள மகேஷ்

நானும் பல எதிர்வினைகளைப் பார்த்தேன். ஒன்று உண்மையிலேயே நான் எழுதிய கட்டுரையில் எதுவுமே புரியாமல் எழுதப்பட்டவை. மேலே சொன்ன கட்டுரைபோல. அவையே அதிகம். இரண்டாவது வகை சொல்வதற்கு ஒன்றுமில்லாத வசைகள்

இணையம் செய்த பெரிய தீங்கு நம் ஆட்களின் உண்மையான புரிந்துகொள்ளும் திறன் என்ன, சிந்தனைத் தரம் என்ன என்பதை அப்பட்டமாகக் காட்டியதுதான். சோர்வளிப்பது அது. சுந்தர ராமசாமித் தலைமுறை அதிர்ஷ்டம் செய்தது. தெரிந்து கொள்ளாமலேயே ஒரு கற்பனையில் முன்னால் சிலரை உருவகித்து பேசிக்கொண்டு சென்றுவிட முடிந்தது அவர்களால்

ஜெ

***

ஜக்கி கடிதங்கள் விளக்கம் 1

ஜக்கி கடிதங்கள் விளக்கம் 2

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28
அடுத்த கட்டுரைஜக்கி கடிதங்கள் -6