‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13

13. எண்கற்களம்

“தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே கொள்க!” என்றான் முண்டன். உச்சிப்பொழுது எட்டியதும் அவர்கள் கோமதி வளைவுதிரும்பும் முனை ஒன்றை அடைந்து அங்கிருந்த அன்னசாலையில் உணவுண்டபின் அருகிருந்த ஆலமரத்தடியில் படுத்திருந்தனர். மரத்திற்குமேல் பறவைகள் ஓசையிட்டுக்கொண்டிருந்தன. அவ்வப்போது ஓர் எண்ணத்துளி என இலையொன்று சுழன்றிறங்கியது.

“முற்றிலும் அறியப்படாமலிருக்கவும் மானுடரால் இயல்வதில்லை. சொல்லியும் உணர்த்தியும் அறிவிக்கிறார்கள். அவ்வாறு அறியப்பட்ட ஒன்று நிலைக்கவும் நீடிக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. சொன்னதை வரைந்ததை உடனே கலைத்து நீ அறிந்ததல்ல நான் என்கிறார்கள். தன்னை முன்வைத்து பிறருடன் பகடையாடுவதே மானுடர் தொழில். உடனுறைவோரை அறிய எண்ணுபவன் நீரில் அலையெண்ணுபவன்.” வேர்க்குவை ஒன்றுக்குள் உடலை ஒடுக்கிப் படுத்து கால்மேல் கால் வைத்து ஆட்டியபடி முண்டன் சொன்னான்.

“அதைவிட தற்செயலாக சந்தித்து உடனே பிரியும் வழிப்போக்கனை அறியமுயல்வது எளிது. குறைந்தது, அவன் அமைத்துச் செல்லும் பொய்க்காட்சியை அழித்தெழுத அவனுக்கு நாம் வாய்ப்பளிப்பதில்லை” என்று அவன் தொடர்ந்தான். “ஆகவே அவ்விரவில் அரசி உங்களிடம் சொன்னதென்ன, நீங்கள் அறிந்ததென்ன, இருவரும் சேர்ந்து சமைத்ததென்ன, அவ்விடம் விட்டு நீங்கிய பின்னர் எஞ்சியதென்ன என்பது எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கதல்ல.” பீமன் சலிப்புடன் “அவ்வாறென்றால் எதுதான் பொருட்படுத்தத் தக்கது?” என்றான். “அக்கணம், அதை சரிவர கையாள்கிறோமா இல்லையா என்பது மட்டும்” என்றான் முண்டன். “ஏனென்றால் மானுடர் வாழ்வது நிகழ்காலத்தில் மட்டுமே.”

“எதிர்காலத்தை அறிய முடியாதென்கிறோம். பாண்டவரே, மானுடரால் இறந்தகாலத்தை மட்டும் அறிந்துவிடமுடியுமா என்ன?” என்று முண்டன் சொன்னான். “இறந்தகாலம் என மானுடர் சொல்வதெல்லாம் அவர்கள் நினைவுகூர்வதை மட்டும்தானே? நினைவுகூரச் செய்வது எது? விழைவும் ஏக்கமும் ஆணவமும் தாழ்வுணர்வும் என அவனாகி அவளாகி நின்றிருக்கும் உணர்வுநிலை மட்டும்தானே? இறந்தகாலமென்பது புனையப்படுவதே. பகற்கனவுகளில் ஒவ்வொருவரும் புனைவதை பாடகரும் நூலோரும் சேர்ந்து பின்னி ஒன்றாக்குகிறார்கள். நீங்களிருவரும் சேர்ந்து ஒன்றை முடைந்து மகிழ்ந்தீர்கள். அவ்வாடல் முடிந்தது, அதன் உவகை மட்டுமே அதன் கொள்பொருள்.”

“மணத்தை தேடிச்செல்பவர் நீங்கள். ஒன்று உணர்க, காட்சிகளை நினைவுகூரலாம். ஒலிகளை மேலும் குறைவாக நினைவுகூரலாம். தொடுகையை இன்னும் மெலிதாக. சுவையை அதனினும் சிறிதாக. மாமல்லரே, எவரேனும் மணத்தை நினைவுகூர முடியுமா?” என்றான் முண்டன். “மணத்தை அடையாளம் காணமட்டுமே முடியும். விழியும் நாவும் இணைந்து அளிக்கும் அகப்பதிவுக்கேற்ப மணம் உருவாவதை அறிந்திருக்கிறீர்களா? முல்லைமணம் கொண்ட தாமரையை உங்கள் கையில் அளித்தால் என்ன மணத்தை முகர்வீர்கள் என்று தெரியுமா?”

“அறிக, ஐம்புலன்களில் புறத்திற்கு மிகஅருகே அகம் பூசி நின்றிருக்கிறது விழி. அகத்திற்கு மிக அருகே புறம் நோக்கி திகைத்து அமைந்துள்ளது மூக்கு. மணம் என்பது மணமெனும் தன்னுணர்வு எழுந்து பருப்பொருளைத் தொடுவதன்றி வேறல்ல” என அவன் தொடர்ந்தான். “நீங்கள் தேடிச்செல்லும் மலர்மீது உங்கள் அகம் அந்த மணத்தைப் பூசி அதை தான் அறிந்துகொள்ளவேண்டும். ஆடிக்குள் புகுவதற்கு உகந்த வழி விலகுவதே. அகம்புக உகந்த வழி அணுகுவதே.” பீமன் நீள்மூச்சுடன் “ஆம். ஆனால் நான் தேடிச்சென்றாகவேண்டும். அதை அறிகையில் நான் என்னை உணர்வேன்” என்றான்.

“தான் என்று உணர்வோர் அறிவதெல்லாம் தான் நிகழும் தளங்களை மட்டுமே” என்றான் முண்டன். “ஆட்டக்களமும்  சூழ்கையும் அன்றி காய்களுக்குப் பொருளென்ன இருக்கக்கூடும்? இரண்டாமவரே, ஐவரையும் அறியாமல், ஐவருக்கு நடுவே அமைந்தவளை அறியலாகுமா? அவளை அறியாமல் அவள்நோக்கி உளம் மலர்ந்த உங்களை அறியக்கூடுமா?”

முண்டன் எழுந்தமர்ந்து சுற்றிலும் நோக்கி ஒரு சிறுகல்லை எடுத்து வைத்தான். “இது பெண்” என்றபின் அதைச் சூழ்ந்து இரு சிறுகற்களை வைத்தான். “இது தந்தை. அரசுசூழ்பவன், நூலாய்பவன், முதியவன். இது உடன்பிறந்தான், பெருவீரன், களித்தோழன், இணையுள்ளம் கொண்டவன்.” அவன் அந்த இரு கற்களையும் எடுத்து கையிலிட்டு குலுக்கினான். “இரண்டு ஐந்தாகுக! ஆம், அவ்வாறே ஆகுக!” அவன் கைகளை விரித்தபோது அங்கே ஐந்து கற்களிருந்தன. “ஆ, ஐந்து!” என்றான். பீமன் கைகளைக் கட்டியபடி சிறிய கண்கள் கூர்கொள்ள நோக்கி அமர்ந்திருந்தான்.

முண்டன் முதல்கல்லை வைத்து “இது தந்தையெனும் கல்லில் உடைந்த பெருந்துண்டா?” என்றான். பிறிதொன்றை வைத்து “இது உடன்பிறந்தானிலிருந்து எழுந்த பெருந்துண்டுபோலும். இரு சிறுசில்லுகள் இவை. முதற்சில்லில் உடைந்தது இறுதிக்கல். இரண்டாவதில் உடைந்தது முந்தைய சிறுகல்” என்றான். ஒரு பெரிய கல்லை எடுத்துக்காட்டி “அவ்வாறென்றால் இது எங்கிருந்து வந்தது? மூடிய கைக்குள் எங்கிருந்து முளைத்தது இது?” என்றான். அவன் கைகளை புரட்டியும் திருப்பியும் காட்டினான். “காற்றில் திரண்டு கைக்குள் எழுந்துள்ளது. சூழ்ந்துள்ள காற்றில் அருவமாக இருப்பது போலும். விழைவு முதிர்கையில் திரண்டு உருக்கொள்கிறது போலும்… எத்தனை பெரிது…! ஆம், பெரிதாக மட்டுமே இருக்கமுடியும். கரந்திருப்பவை அறியாது வளரும் வல்லமை கொண்டவை அல்லவா?”

அவன் முதற்கல்லை சுட்டுவிரலால் முன்னோக்கி நகர்த்தினான். “அறிவுளோனை பெண் விழைகிறாள். அவனுடன் இருத்தலால் தானும் அறிவுடையள் ஆவதை அறிகிறாள். விழித்திருக்கையில், மேலே சூரியன் கதிர்விரிக்கையில், எளிய விழிகளால் சூழப்பட்டிருக்கையில் அதையே அணியென சூடிக்கொள்கிறாள். ஆனால் அவள் கொண்ட படைக்கலங்கள் எவையும் பயன்தராக் களம் அது. கூர்கொண்டவை அனைத்தும் குருதிசூட விழைகின்றன. வலிமை கொண்டவை வெற்றியை வேண்டித் தவிக்கின்றன. தனிமையில் சலிக்கிறாள். எங்கு தொடங்குகிறது சலிப்பு? எங்கு எழுகிறது விருப்பு? சலிப்பென்பதே அடித்தளம். எழுச்சிகளெல்லாம் விழுந்தமைந்தாகவேண்டும் அதில்.”

இயல்பாக அந்தக் கல்லை பின்னுக்கு நகர்த்தியபடி “சலிப்பே தெய்வங்கள் விரும்பும் உணர்வு. பாண்டவரே, நோக்குக! தேவர்களும் தெய்வங்களும் சலிப்பில் உறைந்து அமைந்திருக்கின்றனர். முடிவிலியைப்போல் சலிப்பூட்டுவது பிறிதேது?” என்றான் முண்டன். “அதை வெல்லவே ஆடல். இதோ!” என அவன் அந்த மூன்றாம் கல்லை முன்னகர்த்தினான். “ஆடல் இனிது. இடர்மிக்க ஆடல் மேலும் இனிது. பேரிடரோ பேரின்பமே ஆகும். கூருடன் ஆடல். நஞ்சுடன் ஆடல். எரியுடன் ஆடல். பெண்வலனை பெண்விழைகிறாள். அவனை முற்றிலும் வெல்ல கனவுகாண்கிறாள். முயன்று முயன்று தோற்கிறாள். வெல்லப்பட்ட பெண்வலன் வெறும் சருகு. வெல்லப்படாதவனோ புற்றுறை நாகம்.”

அக்கல்லை முன்னும் பின்னும் நகர்த்தி விரல்கள் ஆட சொற்கள் அவனையறியாமல் எழுந்து இலைநாவுகளிலிருந்து ஒலித்து அப்பகுதியைச் சூழ்வதுபோலிருந்தன. “வென்றாடல், கொன்றாடல், நின்று தருக்கல், ஐயுற்றுச் சரிதல்… எத்தனை தருணங்கள்! தருணங்களை மானுடர் விரும்புகிறார்கள். வெற்றிருப்பு என அல்லாதிருக்கும் கணங்கள் அல்லவா அவை?” மூன்றாம் கல்லை பின்னிழுத்து நான்காம் கல்லை முன் செலுத்தினான். “மின்னை வெல்லாதபோது வெல்கிறார்கள் ஒரு செம்மணியை. உறைந்த ஒளி, கைக்குள் அடங்கும் எரி. பொன்னில் பதிந்து அணியென்றாகி அழகு கூட்டி அமையும் சிறுகல். ஆனால் அவளறிவாள், அது மின்னல்ல என. மின்னிச் செல்லும் தொலைவு அருமணிக்குள் சுழன்று துளியாகியிருக்கிறதென்றாலும் மின்னறியும் வெளியின் முடிவிலி வேறென்று.”

ஐந்தாம் கல்லை நீக்கி அருகே கொண்டுசென்று அவன் சொன்னான் “நிகரிகள் எளியவை. அவை நாம் விரும்பும்படி நடிப்பவை. நமக்குரியவை என்பதனாலேயே அன்புக்குரியவை. அறிக, வெல்லப்படாத காட்டுவிலங்கை வேட்டையாடுகிறார்கள். காலடியில் அமைந்த வீட்டுவிலங்கை வருடி மகிழ்கிறார்கள்.” இரு சிறுகற்களையும் இரு பக்கமும் நிறுத்தியபடி அவன் நிமிர்ந்து புன்னகை செய்தான். “இணையர். அரியணையின் காலென அமைந்த சிம்மங்கள். செம்மணிவிழிகள். வெண்கல் பற்கள். குருதியுகிர்கள். அவையும் சிம்மங்களே!” அவன் விரல்கள் சுழல எல்லையில் இரு பெரிய கற்களும் அண்மையில் இரு சிறிய கற்களும் அமைய மையமென முதல்கல் நின்று ஒரு வட்டமாகி சுழலத் தொடங்கியது.

“ஆனால் உள்ளமறியாதா என்ன, அருமணி எத்தனை எரிந்தாலும் ஒரு பஞ்சையும் பற்றவைக்காதென்று?” என்றான் முண்டன். “வெல்லப்படாதவை இரண்டு. எட்டப்படாதது ஒன்று. எட்டியும் அடங்காத உருக்கொண்ட பிறிதொன்று.” பெரிய கல்லை அவன் முன்னால் நகர்த்தினான். “வெறும்பாறை. மலைப்பாறையை நோக்குந்தோறும் மலைக்கிறது மானுட உள்ளம். அதன் வடிவின்மையும் அமைதியும் நம்முள் உறையும் எதையோ கொந்தளிக்கச் செய்கின்றன. உடைத்தும் செதுக்கியும் அதை வடிவங்களாக்க வெம்புகிறோம். அதை முரசுத்தோல் என அறைந்து பிளிறச்செய்ய முயல்கிறோம். பாறையை அணுகுபவர்கள் அனைவரும் கைகளால் அதை அறைகிறார்கள். உள்ளத்தால் அதன்மேல் மோதுகிறார்கள்.”

“பாறை நம் உலகுக்கு அப்பால் உள்ளது” என்று முண்டன் தொடர்ந்தான். “அதன் மேல் எப்போதும் மோதிக்கொண்டே இருக்கிறாள்” என மையத்தை அதை நோக்கி செலுத்தினான். மையக்கல் பெரிய பாறைக்கல்லை சுற்றிவரத்தொடங்கியது. “உள்நுழையமுடியாத மண்டபமா கரும்பாறை? மழையோ வெயிலோ மணலோ சருகோ அதன்மேல் நிலைப்பதில்லை. எதையும் சூடாது எதுவுமென ஆகாது இங்கு நின்றிருக்கும் பெரும்பொருளின்மை அது.” அவன் அதை மேலும் சுழற்றிக்கொண்டே இருந்தான். “ஆற்றல் என உணரப்படுபவை பல. அறிவும் திறனும் விரிவும் கூரும். இளமையும் எழிலும் விரைவும் துள்ளலும். அவையனைத்தும் பிறிதொரு அலகால் மதிப்பிடப்படுபவை மட்டுமே. மாமல்லரே, வெறும் ஆற்றல் என்பது உடலே. சொல்மாயங்களால் உளமயக்குகளால் கடக்கப்பட ஒண்ணாதது. ஐம்புலன்களும் அறிவதனால் அறிவாலோ உணர்வாலோ கனவாலோ மாற்றொன்று கருத முடியாதது.”

“ஆற்றலை எதிர்கொள்ளும் பெண் அஞ்சுகிறாள். ஏனென்றால் ஒருபோதும் தன் உடலோ அறிவோ உள்ளமோ உரையாட முடியாத ஊமை அது என எண்ணுகிறாள். ஆகவே தவிர்க்க முயல்கிறாள். தவிர்த்தால் மறைவதல்ல அது என்று உள்ளாழம் அறிகிறது. எனவே எப்போதும் ஓரவிழியால் நோக்கிக்கொண்டும் இருக்கிறாள். அதைவிட்டு விலகியே அத்தனை திசைகளுக்கும் செல்கிறாள். அனைத்திலும் முட்டிமுட்டி அங்குதான் திரும்பிவருகிறாள். பருப்பொருளில் எழும் ஆற்றலே பிறிதில்லாதது என்று இறுதியில் உணர்கிறாள். அதன் முன் அடிபணிவதனூடாக வெல்லமுடியுமா என முயல்கிறாள்” என்றான் முண்டன்.

அந்தப் பாறையை அசையாது நிறுத்திவிட்டு தன் கைகளை எடுத்தான். மையக்கல் சுழலத் தொடங்கியது. “உங்கள் கையை அந்தப் பாறைக்கல் மேல் வையுங்கள், பெருந்தோளரே” என மிகத்தாழ்ந்த குரலில் சொன்னான். பீமன் தயங்க “வையுங்கள்” என்றான். “வையுங்கள்” என்று அவன் காதுக்குள் மட்டும் ஒலித்தான். பீமன் அதை மெல்ல தொட்டான். மையக்கல் சுவரில் முட்டி கீழே விழுந்த வண்டென ரீங்கரித்தபடி சுழன்றுகொண்டே இருந்தது. “நீங்கள் விழைவதை கேளுங்கள்” என்றான் முண்டன்.

பீமன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “கேளுங்கள்” என்றான். “வாயால் அல்ல. உள்ளத்தால், எண்ணத்தால்.” பீமன் கண்களை மூடினான். அவன் கை அதிர்ந்தது. உடல் காய்ச்சலென நடுங்கியது. அவன் பிறிதொருவனாக ஆனதுபோல உடலின் நிமிர்வும் வளைவும் மாறின. அவன் மெல்ல முனகினான். இமைகள் தட்டாரப்பூச்சியின் இறகுகள் போல அதிர்ந்தன.

பின் அவன் விழித்தபோது அவன் முன் கற்கள் இருக்கவில்லை. கைகளை மார்பில் கட்டியபடி முண்டன் நோக்கி அமர்ந்திருந்தான். “என்ன நடந்தது?” என்றான் பீமன். “நாம் செல்லவேண்டிய திசை தெளிவாகியுள்ளது. கிளம்புவோம்” என்றபடி முண்டன் தன் மூட்டையையும் கோலையும் எடுத்துக்கொண்டான்.

imagesமூன்றுநாட்கள் மானுடச்சுவடே இல்லாத அடர்காட்டில் பன்றித்தடம் வழியாக நடந்து அவர்கள் சிறுசுனையைச் சுற்றிய சோலையை வந்தடைந்தனர். தொலைவில் புதர்வெளிக்கு நடுவே அடர்ந்த மரங்களின் பசுங்குவை ஒன்று தெரிவதைக்கண்டு பீமன் நின்று நோக்கினான். “அங்கு ஒரு சிறு சுனையுள்ளது. பிரீதம் என அது அழைக்கப்படுகிறது. அதைச் சூழ்ந்துள்ள இச்சுனைக்கு சம்மோகனம் என்று பெயர்” என்று முண்டன் சொன்னான். “நீங்கள் கனவில் கண்ட சோலை இதுதானா என்று பாருங்கள், பாண்டவரே!”

திகைப்புடன் “இவ்வளவு அருகிலா?” என்றான் பீமன். “அரியவை அருகிலிருக்காது என்பது ஒரு நம்பிக்கை. நாம் வாழ்வது எளிமையில் என்ற எண்ணத்திலிருந்து எழுவது அது” என்றான் முண்டன். “வருக!” என முன்னால் சென்றான். புதர்கள் நடுவே பாதைபோல விலங்குகள் சென்ற வகிடு இருந்தது. அணுகுந்தோறும் பீமன் பரபரப்படைந்தான். “இதுதான்… இங்குதான்!” என்றான். “நோக்குக!” என்றான் முண்டன். மேலும் அணுகியபோது சோலைக்குள் உயரம் குறைவான ஒரு கற்கோயில் இருப்பது தெரிந்தது. “இதே சிற்றாலயம்தான்… உள்ளே கரிய தேவி சிலை ஒன்று. முகப்பில் எண்ணைக் கசடுபடிந்த கல்விளக்கு” என்று பீமன் சொன்னான்.

பதற்றமான காலடிகளுடன் நடந்து முண்டனுக்கு முன்னதாகவே பீமன் சோலையைச் சென்றடைந்தான். இலைஎடையால் வளைந்த கிளைகள்கொண்ட உயரமற்ற சோலைமரங்கள் கிளைகள் பின்னிச் செறிந்த சோலைக்குள் பரவியிருந்த சருகுமெத்தைமேல் சிற்றுயிர்கள் சலசலத்தோடின. உதிர்ந்த மலர்கள் பலவண்ணக் கம்பளம்போல பரவியிருக்க அவற்றின் மட்கும் மணம் கிளைகளில் குலைகளாகவும் கொத்துகளாகவும் அடர்ந்திருந்த மலர்களின் மணத்துடன் கலந்து மூக்கை நிறைத்தது. நெஞ்சில் நிறைந்த சொற்களிலும் அந்த மணம் பரவிவிட்டதென்று தோன்றியது. “இதே இடம்தான்” என்றான் பீமன்.

மரங்கள் சுற்றி வளைத்திருந்த நீள்வட்டச் சிறுசுனை நீர்நிறைந்து குளிர்ந்த சிற்றலைகள் கரைதொட்டு நெளிய குழந்தையின் விழிபோல  தெளிந்து கிடந்தது. அதன் கரையோரச் சேற்றில் மான்களும் செந்நாய்களும் எருதுகளும் புலியும் சென்ற காலடித்தடங்கள் பதிந்திருந்தன. மென்நாணல்காற்றில் சாமரம் சிலிர்த்துச் சூழ்ந்த கரைகளில் வகிடென வழிந்த ஊற்றுநீரோடைகள் மெல்லிய வழிவோசையுடன் நீரொளி நலுங்காது இணைந்துகொண்டிருந்தன.

எங்கு எதை நோக்குவதென்றறியாமல் அவன் கண்கள் பதைத்து சுற்றிவந்தன. நெடுங்காலம் முன்பு விட்டுச்சென்றவற்றை தொட்டுத்தொட்டு அறிந்து இது இது இதுவே என துள்ளுவதுபோல பரபரப்பு கொண்டது உள்ளம். பின் அவன் விரைந்து அச்சிற்றாலயத்தின் முகப்புக்குச் சென்று குனிந்து நோக்கினான். உள்ளே இடக்கையில் மலரும் வலக்கையில் மின்படையும் கொண்டு அமர்ந்திருந்த தேவியின் கரியமுகத்தில் வாயிலினூடாக வந்த ஒளி மெல்லிய ஒளிர்நீர்மை என வழிந்திருந்தது. அவளுக்கு அணிவிக்கப்பட்ட மலர்மாலை சருகாகி நார்தெரிய முலைமேல் கிடந்தது. காலடியில் பூசனைப்பொருட்கள் வைக்கப்பட்ட தொன்னைகளும் தாலங்களும் உலர்ந்து காற்றில் சிதறியிருந்தன.

“இவளேதான்… நான் அன்று கண்டது இவளையே!” என்று பீமன் திரும்பி காற்று இலையுலைக்கும் ஒலியில் முண்டனிடம் சொன்னான். முண்டன் புன்னகையுடன் கைகளைக் கட்டியபடி அங்கேயே நின்றான். பீமன் திரும்பி மரங்களை நோக்கினான். “அதே மரங்கள்… அதே மலர்க்கொத்துகள். ஐயமே இல்லை. தென்மேற்கு மூலையில் உள்ளது அந்த மலர்மரம்.” அவன் ஆலயத்தை சுற்றிக்கொண்டு அங்கே சென்றான். அவன் காலடியோசை கேட்டு ஒரு நாகம் புதருக்குள் இருந்து தலைதூக்கியது. எழுந்த அதன் தலைக்குப் பின்னால் உடல் வளைந்தது. அவன் அதை பொருட்படுத்தாமல் நடந்தான். தலையைப் பின்னிழுத்து அது வளைந்து ஒழுகியோடி புதருக்குள் இருந்த வளைக்குள் புகுந்தது.

தென்மேற்கு மூலையில் அந்த மரம் நின்றது. பீமன் “இதோ நின்றிருக்கிறது” என்று கூவினான். அல்லிபோல வெண்ணிற இதழ்கள் கொண்ட மலர்கள் கிளைதோறும் விரிந்து கிளைதொய்ந்து நின்றிருந்தது அந்த மரம். “இதுதான்… இதே மணம்தான்” என்றான் பீமன். “நோக்குக, இதன் கீழே ஒரு மலர்கூட உதிர்ந்திருக்கவில்லை!” முண்டன் வந்து அப்பால் நின்று “இதுவென்றால் நன்று” என்றான். பீமன் பாய்ந்து அதில் தாழ்ந்திருந்த ஒரு கிளையைப் பற்றி இழுத்து ஒரு மலரை பறித்தான். அதன் சிவந்த நெட்டுமுனையிலிருந்து நாய்முலைக்காம்பு போல பாலூறியது. பீமன் அதை மெல்ல வருடி “அழுத்தமான இதழ்கள் கொண்டது. ஆகவேதான் வாடாமலிருக்கிறது. புல்லிசெறிந்து பூம்பொடிநிறைந்துள்ளது. நெடுந்தொலைவு செல்லும் மணம் அவ்வாறு வருவதே” என்றான்.

அதை முகர்ந்து விழிசொக்கி முகம் மலர்ந்து மீண்டு “அரிய மணம்… ஒவ்வொரு கணமும் ஒருமலர் என மாயம் காட்டும் ஆடல்” என்றான். “பாரிஜாதம் அல்லது செண்பகம்.” மீண்டும் முகர்ந்தபடி முண்டனிடம் வந்து “இந்த மலர்தான். அன்னை காலடியில் வைத்து வணங்கி எடுத்துச்செல்வோம்” என்றான். அவனுடைய பரபரப்பை முண்டன் பகிர்ந்துகொள்ளவில்லை. “அவ்வாறே செய்க!” என்றான். “எளிதிலமையாது என்றே எண்ணினேன்” என்றான் பீமன். “ஏதோ காவியமலர் என்று உளம் சொன்னது. இப்படி எளிதில் கையகப்படுமென எண்ணவே இல்லை.”

அவன் அதை கொண்டுசென்று ஆலயத்தின் படியில் வைத்தான். கைகூப்பி வணங்கியபடி கண்மூடியவன் திடுக்கிட்டு விழிதிறந்தான். திரும்பி முண்டனை நோக்கியபின் கோயிலுக்குள் உற்றுநோக்கி நின்றான். “என்ன?” என்றான் முண்டன். “தேவி என்னை நோக்குவதுபோல் ஓர் உணர்வு… உளமயக்கல்ல, அங்கே உண்மையில் எவரோ அமர்ந்திருப்பதுபோல” என்றான் பீமன். “அவள் ஊர்வசி” என்றான் முண்டன். “இது உங்கள் குலமூதாதை புரூரவஸ் அவளுக்காகக் கட்டிய சிற்றாலயம்.” அவன் திகைப்புடன் நோக்கி “இதுவா?” என்றான். “ஊர்வசிக்கு ஆலயமா? நான் கேள்விப்பட்டதே இல்லை.”

“இங்குமட்டுமே உள்ளது. ஹஸ்தியின் காலம்வரைகூட இங்கு ஆண்டுக்கொருமுறை குருகுலத்தோர் வந்து வணங்கிச்செல்லும் முறையிருந்தது. பின்னர் முற்றிலும் மறந்துவிட்டனர். அருகிருக்கும் சிற்றூரிலிருந்து முதல் மகவு பெண்ணாகப் பிறந்தால் தந்தையும் துணையரும் மட்டும் வந்து வழிபட்டுச் செல்வதுண்டு” என்றான் முண்டன். பீமன் குழப்பத்துடன் குனிந்து அந்த மலரை எடுத்தான். சிறு ஐயம் ஏற்பட நெற்றி சுருக்கியபடி அதை முகர்ந்தான். திகைப்புடன் திரும்பி முண்டனை நோக்கிவிட்டு மீண்டும் முகர்ந்தான். “இல்லை, இது அந்த மலர் அல்ல” என்றான். “இந்த மணம் வேறு. இது வெறும் பாரிஜாதம்… அந்த பித்தெழச்செய்யும் கூர்மை இதில் இல்லை.” மீண்டும் முகர்ந்து “ஆனால்…” என்றான்.

“இது அதே மரம்தான்” என்றான் முண்டன். “ஆனால் நீங்கள் முகர்ந்த மலர் இந்த மரத்திலிருந்து எழுந்தது அல்ல.” பீமன் வினாவுடன் நோக்க “இளவரசே, இந்த மரத்தின் ஒவ்வொரு மலரும் தனிமணம் கொண்டது. நீங்கள் தேடிய மலர் இதுபோன்றதே, இது அல்ல” என்றான். பீமன் சோர்வுடன் அந்தப் படிகளில் அமர்ந்தான். “துயருற வேண்டியதில்லை. இது மலரிலிருந்து முளைக்கும் மரம். மலர்களை பறவைகள் கொண்டுசென்று வீழ்த்தி முளைக்கச் செய்கின்றன. இங்கு அந்த மலர் வந்து விழுந்துள்ளதென்றால் அருகே தாய்மரம் உள்ளது என்றே பொருள்…” என்றான் முண்டன்.

“அதை தேடிக்கண்டடைவோம்” என்றபடி பீமன் எழுந்தான். “அதற்கு முன் இந்த மலரை கூர்ந்தறிக! இந்த தேவியிடம் அதை உசாவுக!” என்று முண்டன் சொன்னான். பீமன் மீண்டும் அமர்ந்தான். “மாமல்லரே, உங்கள் மூதாதை புரூரவஸ் ஊர்வசியை மணந்த கதையை அறிந்திருக்கிறீர்களா?” என்றான். பீமன் “சூதர்பாடல்களை கேட்டுள்ளேன்” என்றான். “தேவருலகின் கன்னியர்களில் ஊர்வசியே பேரழகி என்பது கதைஞர் கூற்று. மேனகை, சகஜன்யை, கர்ணிகை, புஞ்சிகஸ்தலை, ரிதுஸ்தலை, ஹ்ருதாசி, பூர்வசித்தி, உல்லோஜை, பிரம்ளோஜை ஆகியோர் தேவர்குலப் பாடகியர். அனூசானை, அத்ரிகை, சோமகேசி, மிஸ்ரை, அலம்புஷை, மரீசி, சூசிகை, வித்யுல்பர்ணை, திலோத்தமை, அம்பிகை, க்ஷேமை, ரம்பை, சுபாகு, அஸிதை, சுப்ரியை, புண்டரீகை, சுகந்தை, சுரஸை, பிரமாதினி, காம்யை, சாரத்யுதி என்போர் நடன மங்கையர். அவர்களில் கலையாலும் ஊர்வசியே முதன்மையானவள்.”

“அழிவற்றவர்கள். ஒவ்வொரு கணமும் தங்கள் விழிதொடும் எதிர்பாவையிலிருந்து புதிதென பிறந்துவருபவர்கள். எனவே நேற்றிலாதவர்கள். காண்பவன் உளமெழுந்த விழைவிலிருந்தே அழகு திரட்டி எழுபவர்கள். எனவே தனக்கென உருவமொன்றில்லாதவர்கள். காமம் என்னும் தழலுடன் ஆடும் காற்று என அவர்களை சொல்கின்றன தொல்கதைகள்” என்றான் முண்டன். “முன்பொரு காலத்தில் நரர், நாராயணர் என்னும் இரு முனிவர்கள் கடுந்தவம் இயற்றினார்கள். வழுக்குப்பாறையில் இருவர் மாறிமாறி கையுதவி மேலேறிச் செல்வதுபோல் அமைந்திருந்தது அவர்களின் தவம். மூன்று உள்ளிருள்களையும் நரருக்கு அளித்துவிட்டு தன் தவவல்லமையால் மேலேறிச் செல்லும் நாராயணர் அங்கு நின்றபடி நரர் கொண்ட இருள்களை தான் பெற்றுக்கொள்வார். அவருடைய தவத்தில் அவை சிறுத்து சிறு மருவென்றாகிவிட்டிருக்கும். மேலும் ஏறிச்சென்ற நரர் நாராயணரை தன்னுடன் அழைத்துக்கொள்வார்.”

“அவர்களின் தவம் முழுமைகொள்வதைத் தடுக்கும்பொருட்டு விழைவின் இறைவனாகிய இந்திரன் தன் தேவர்களை அனுப்பி உலகின்பங்களை அளிப்பதாக மயக்குகாட்டினான். அவர்கள் இளகாமை கண்டு தேவர்குலப் பாடகிகளையும் நடனமங்கையரையும் அனுப்பினான். தங்கள் இசையாலும் அசைவாலும் அவர்கள் அவ்விரு முனிவர்களையும் சூழ்ந்து ஒரு களியுலகை சமைத்தனர்” என்று முண்டன் சொன்னான். “இசை அசைவுக்கு அழகு கூட்டியது. அழகு இசைக்கு பொருள் சேர்த்தது. இவ்வுலகு இன்பப்பெருக்கு. மண்ணின் இனிமை கனியென்றும் தேனென்றும் மரத்தில் ஊறுவதுபோல அவ்வின்பங்களை மட்டும் தொட்டுச்சேர்த்து ஒற்றைநிகழ்வென்றாக்குவது கலை. கூர்கொண்ட உலகின்பமே கலை.”

“அழகின் அழைப்பால் நரர் விழிதிறந்தார். முதற்கணம் தன் முழுவிசையால் சூழ்ந்த இன்பப்பெருக்கை விலக்க முயன்றார். அதை அஞ்சியமையால் விலக்கம் கொண்டார். விலக்கத்தை அருவருப்பென ஆக்கிக்கொண்டார். ஆனால் உயர்கலைக்கு அருவருப்பு அணியென்றே ஆகுமென அவர் அறிந்திருக்கவில்லை. அது மானுடப்புலன்களைச் சீண்டி சிலிர்க்கவைக்கிறது. எழுந்து கூர்ந்த புலன்நுனிகளில் கலை அமுதென படிகிறது. விழிகசிந்து மெய்சிலிர்த்து தன்னை இழந்த நரர் ‘இதுவே, இதுவொன்றே, இனியேதுமில்லை’ என உளமுருகினார். தன்னை உதறி உதறி அதிலாழ்ந்து சென்றார்.”

“அவர் விட்ட நீள்மூச்சால் நாராயணர் விழிதிறந்தார். தன் தவவல்லமையில் பாதி அழிந்துவிட்டதை உடனே உணர்ந்தார். அக்கணம் மீளவில்லையேல் பிறிதொரு வாய்ப்பில்லை என்று கண்டார். நரர் சென்றவழியின் இடரை அறிந்ததுமே பிறிதொரு நெறி தெளிந்தது அவருள். ஒரு விழிச்சுழற்சியால் அங்குள்ள அத்தனை அழகியரையும் நோக்கினார். அவர்களின் பேரழகின் உச்சகணங்களை மட்டும் தொட்டெடுத்தார். அவர் சூடிய இசையின் நுண்மைகளை மட்டும் கூட்டிச்சேர்த்தார். ‘எழுக என் மகள்’ என்று கூவி தன் தொடைமேல் அறைந்தார்.”

“அங்கிருந்து எழுந்து வந்தவள் பேரழகுக்கன்னியாக இருந்தாள். அவள் உடலில் இசைகூடி அசைவுகள் அனைத்தும் ஆடலென்றே நிகழ்ந்தன. விழிமலர்ந்து தன் மகளின் ஆடலை நோக்கி அமர்ந்திருந்த நாராயணரின் உளம் கலைக்க அங்கு வந்த தேவகன்னியரால் இயலவில்லை. தோற்று சலித்து வணங்கி அவர்கள் அமராவதிக்கு மீண்டனர். காமத்தைக் கடந்த நாராயணர் தன் மறுபாதியை கைபற்றி தன்னருகே எடுத்துக்கொண்டார். அறிவது அறிந்து அமைந்து அவர்கள் விடுதலைகொண்டனர்” என்றான் முண்டன்.

முந்தைய கட்டுரைசு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைகொலையிற்கொடியார்