‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5

5. இனிதினிது

குரங்குகள்தான் முதலில் அறிவித்தன. அவற்றின் ஓசை நூறு முழவுகளின் தாளம்போல கேட்டது. நகுலன் அதைக் கேட்டு ஒருகணம் திகைத்து உடனே புரிந்துகொண்டு எழுந்துசென்று குடில்முகப்பில் நின்று “வந்துவிட்டார்!” என்று கூவினான். அவன் கைகள் பதறின. என்ன செய்வதென்று அறியாமல் “வந்துவிட்டார்” என்று கூவியபடி அடுமனை நோக்கி ஓடி வழியிலேயே நின்று திரும்பி ஓடிவந்து கயிறேணியைத் தவிர்த்து கழுக்கோலில் தொங்கி கீழே பாய்ந்து வாயில்படல் நோக்கி ஓடி அதைத் திறந்தான். உடனே அதை மூடி, ஏன் அதைச் செய்கிறோம் என வியந்து மீண்டும் திறந்து காட்டுக்குள் ஓடினான்.

சகதேவன் உள்ளறையிலிருந்து கையில் ஒரு சிறு கோடரியுடன் ஓடிவந்து குடில்முகப்பில் நின்று “நெடுந்தொலைவில் வந்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்” என்றான். கோடரியை கொக்கியில் மாட்டிவிட்டு அறையிலிருந்து எழுந்துவந்து நின்ற தருமனிடம் “வந்துசேர ஒரு நாழிகையாவது ஆகும்” என்றான். “இவன் எங்கே?” என்றார் தருமன் புருவங்களைச் சுளித்தபடி. “யார்?” என்றான் சகதேவன். “மந்தன்தான்…” என்றார் தருமன். “காலையில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டுச் சென்றார்” என்றான் சகதேவன். “அவனிடம் இருநாட்கள் எங்கும் செல்லாமல் இங்கே இருக்கும்படி சொல்லியிருந்தேனே?” என்றார் தருமன்.

சகதேவன் நூலேணி வழியாக இறங்கிச்செல்வதை ஆர்வமில்லாமல் நோக்கியபடி நின்றபின் தருமன் பெருமூச்சுவிட்டார். பின் நிலையழிந்து அறைக்குள் சென்று அங்கே அமரமுடியாமல் மீண்டும் வந்து குடில் விளிம்பில் கைகளைக் கட்டியபடி நின்று வெளியே நோக்கினார். மூங்கில் நடைபாதை முனக அடுமனையிலிருந்து ஓடிவந்த திரௌபதி “வந்துவிட்டாரா?” என்றாள். “வருகிறான் என்கிறார்கள்” என தருமன் திரும்பிநோக்காமலேயே சொன்னார். “நடந்தா வருகிறார்?” என்றாள் திரௌபதி.

தருமன் திரும்பிநோக்கி ஏளனத்துடன் “இல்லை, தேர்யானைபுரவிகாலாள் படைசூழ வருகிறான். அவன் எங்கு சென்றான் என நினைக்கிறாய்?” என்றார். திரௌபதி “அவர் அரசணிக்கோலத்தில் வருவதாக நான் கனவுகண்டேன்” என்றாள். தருமன் “கனவு நன்று. இந்தக் காட்டில் வேறேது உள்ளது?” என்றபடி திரும்பிக்கொண்டார். அவள் ஆடைகள் மந்தணமூச்சுபோல ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டார். அவள் மூச்சொலி உடன் இணைந்தது. கையிலணிந்திருந்த சங்குவளையல்கள் அடிக்கடி குலுங்கின. அவளைத் திரும்பிப்பார்க்க விழைவு எழுந்தாலும் அடக்கிக்கொண்டார். அது முறையல்ல, ஒருவகை அத்துமீறல் எனத் தோன்றியது.

முண்டன் பின்னால் வந்துநின்று “அடுமனையில் அத்தனை சமையலும் பாதியில் நிற்கிறது. இங்கே என்ன செய்கிறீர்கள், அரசி?” என்றான். “போ, நீயே சமைத்து வை. அள்ளிக்குழைத்து தின்கிறாய் அல்லவா?” என்றாள் திரௌபதி. “நான் என்ன அரசியா சமைப்பதற்கு?” என்றபடி அவன் உள்ளே சென்றான். “நானெல்லாம் சந்தையில் நின்றாலே பொன்னாகக் கொட்டும். வணிகர்கள் சிரிப்புக்கெல்லாம் பணம் கொடுப்பார்கள்” என்றான்.

“ஆமாம், எழுத்துக்கு லட்சம் அளித்தார்கள்… பேசாமல் போ” என்று அவள் சொன்னாள். “வணிகர்கள் பொய்யாகச் சிரித்துச் சிரித்து முகமே சிரிப்புக்கோடுகளுடன் இருக்கும். நான் என்ன சொன்னாலும் அறியாமல் சிரிப்பு வந்துவிடும் அவர்களுக்கு” என்றான் முண்டன். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரர் என ஒருமுறை சொன்னேன். நூறுபேர் விழுந்துவிழுந்து சிரித்தனர்.” திரௌபதி “போகிறாயா இல்லையா?” என்றாள். “நான் சென்று நெடுநேரமாகிறது” என்றான் முண்டன்.

“நல்ல துணை உனக்கு” என்றார் தருமன். “உண்மையிலேயே நல்ல துணை. ஓர் இனிய வீட்டுவிலங்கு போல.” தருமன் “அவ்வப்போது பிராண்டும்” என்றார். “அதுவும் தேவையாக உள்ளது…” என்றாள் திரௌபதி. கீழே நின்ற நகுலன் “சரிவில் ஏறிவருகிறார். கோமதியின் கரையில் குரங்குகளின் ஒலிகள் கேட்கின்றன” என்றான். சகதேவன் “சென்று அழைத்து வருவோம்” என்றான். நகுலன் “நான் செல்கிறேன். நீ இங்கு இரு… அவர் வரும்போது மூத்தவருடன் நில்” என்றபடி வெளியே சென்றான்.

“நான் அவனை ஒவ்வொருநாளும் எண்ணிக்கொண்டிருந்தேன்… அவன் வருவதை ஆயிரம் முறை நெஞ்சில் நிகழ்த்தி நோக்கிவிட்டேன். ஆகவேதான்போலும் அவன் நேரில் வருகையில் அதுவும் ஓர் உளநாடகமாக ஆகி இயல்பாகத் தெரிகிறது” என்றார் தருமன். அவள் ஒன்றும் சொல்லாமல் தூணைப்பற்றியபடி நோக்கி நின்றிருந்தாள். அவளை விழி சரித்து நோக்கி “இந்நாட்களில் நீ மிகவும் மாறிவிட்டாய்” என்றார் தருமன். “அங்கிருக்கையிலும் அவர் ஒவ்வொருமுறையும் எங்கிருந்தாவது திரும்பிவருவது இனிதாகவே இருந்தது” என அவள் சொன்னாள்.

அவள் கன்னங்களில் முற்றத்தின் ஒளி மின்னுவதை தருமன் நோக்கினார். விழிகள் பெரிய நீர்த்துளிகள்போல நீர்மைகொண்டிருந்தன. “ஆனால் இங்கிருக்கையில் எளிய பெண்ணாக ஆகிவிட்டதுபோலத் தோன்றுகிறாய்” என்றார். “இக்காட்டில் அப்படி ஆகாமலிருக்க முடியுமா என்ன?” என்றாள் திரௌபதி. “ஆம், லோமசர் இங்கு வந்தபோது அதை என்னிடம் சொன்னார். காடு ஒவ்வொன்றாக உதிர்க்கவேண்டிய இடம் என்று.” அவர் பெருமூச்சுவிட்டு “இங்கிருந்து மீண்டும் நகர்களுக்குச் செல்ல என்னால் இயலுமா என்றே ஐயமாக இருக்கிறது. நேற்றெல்லாம் நான் எண்ணிக்கொண்டிருந்தது அன்னையை மட்டும் இங்கு கொண்டுவந்துவிடலாம் என்று. இதுவே நம் வாழ்வென நிறையலாகும் என தோன்றியது” என்றார்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. சற்றுநேரத்தில் தருமன் மெல்ல உடல்நெடுக்கு தொய்ந்து “நான் சென்று எதையாவது படிக்கிறேன். இங்கு வெறுமனே நிற்பது சோர்வளிக்கிறது” என்று அறைக்குள் சென்றார். அவர் செல்வதை திரும்பி நோக்கி வெறுமனே புன்னகைத்த பின் அவள் காட்டுப்பாதையை நோக்கியபடி ஆடையை விரலால் சுழற்றிக்கொண்டு தூணில் உடல்சாய்த்து நின்றாள். தருமன் உள்ளே சென்று பீடத்திலமர்ந்து ஒரு சுவடியை எடுத்து விழியோட்டினார். உள்ளம் எழுத்துக்களில் நிலைக்கவில்லை என உணர்ந்ததும் பிறிதொரு சுவடியை எடுத்து அதில் எழுதத் தொடங்கினார். எழுத்து அவரை ஈர்த்துக்கொண்டது. ஏட்டை எழுத்தாணி கீறிச்செல்லும் ஒலி தெளிவாகக் கேட்டது.

பலாப்பழம் விழுவதுபோல கிளைகளை ஊடுருவியபடி ஒரு குரங்கு பாய்ந்து வந்து திரௌபதி முன் விழுந்து எழுந்து இரு கைகளாலும் விலாவை வருடியபடி ஹுஹுஹு என்றது. எம்பி எம்பி குதித்து தன்னைத்தானே சுற்றி வாலைத்தூக்கி வளைத்தபடி “ர்ர்ர்ர்” என்றது. “வருகிறாரா? பார்த்தாயா?” என்றாள் திரௌபதி உவகைப்பதற்றத்துடன். மேலும் குரங்குகள் வந்து அவள் முன் நின்று எம்பி எம்பி கூச்சலிட்டன. சற்றுநேரத்தில் முற்றம் முழுக்க குரங்குகள் நிறைந்தன. மரக்கிளைகளில் அவற்றின் ஓசையும் அசைவும் கொந்தளித்தன. அவள் உதடுகளை அழுத்தியபடி மூச்சடக்கி நோக்கிநின்றாள்.

தொலைவில் அசைவு தெரிந்தது. திரும்பி “வருகிறார்கள்” என்றாள். “நன்று” என்றபடி தருமன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். “தெரிகிறார்கள்” என்று அவள் மீண்டும் சொன்னாள். “வரட்டும்…” என்றபடி தருமன் தொடர்ந்து எழுதினார். அவள் நகுலனைத்தான் முதலில் கண்டாள். அவன் அணிந்திருந்த மான்தோல் மேலாடையின் மஞ்சள் நிறம் பச்சையிலைகள் நடுவே தெரிந்து தெரிந்து மறைந்தது. அவள் திரும்பி தருமனிடம் “வாருங்கள், தெரிகிறார்” என்றாள். பின் இயல்பாகத் திரும்பியபோது அவனை கண்டுவிட்டாள். “இங்கேதானே வருகிறான்?” என தருமன் சொன்னதை அவள் கேட்கவில்லை.

அவர்கள் நடைவழியில் தோன்றியபோது திரௌபதி உரக்க “வந்துவிட்டார்கள்” என்று கூவியபடி மெல்ல குதித்தாள். ஆடைநெகிழ ஓடி தொங்குபடிகளில் இறங்கி தோட்டத்தினூடாக விரைந்தாள். வாயிலில் நின்றிருந்த சகதேவனும் அவளுக்கு முன்னால் சென்று நின்றான். அர்ஜுனன் மெலிந்து களைத்து நரைகலந்த நீண்ட தாடியும் குடுமியாகக் கட்டிவைத்த குழலுமாக இளமுனிவன் போலிருந்தான். அவள் வேலிமரத்தைப் பற்றியபடி நின்றாள். சிரிப்பும் அழுகையுமாக உடல் ததும்பியது. நகுலனின் கைகளைக் கோத்து பற்றியிருந்த அர்ஜுனன் “நலமா, இளையோனே?” என்று சகதேவனிடம் கேட்டான். சகதேவன் வெறுமனே விம்மினான். அருகே வந்த அர்ஜுனன் அவன் தோளைத் தொட்டதும் தளர்ந்து அவன் தோளில் முகம்சேர்த்துகொண்டான். அர்ஜுனன் அவன் இடைவளைத்து அணைத்து மெல்ல தோளில் தட்டியபடி திரௌபதியை நோக்கினான்.

நகுலன் “தொலைவில் வருவதைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. பிற எவருக்குமில்லை இந்த நடை” என்றான். இரு தம்பியரையும் இரு கைகளால் அணைத்தபடி அர்ஜுனன் அணுகி அவளை நோக்கி புன்னகைத்தான். விழியொளிரும் அப்புன்னகையின் வழியாக அவன் முதன்முதலாக அவள் கண்ட அந்த இளைஞனாக மாறினான். “நலமா, தேவி?” என்ற குரலில் மேலும் இளமை இருந்தது. “நலம்” என அவள் சொன்னாள். ஆனால் குரல் எழவில்லை. விழிகளில் நீர் நிறைய தலைகுனிந்தாள். “மூத்தவர் மேலே இருக்கிறாரா?” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்று அவள் தலையை அசைத்தாள்.

அவன் அவளைக் கடந்துசெல்ல அவள் நகுலனை நோக்கி புன்னகை செய்தாள். சகதேவன் “இரண்டாமவர் காட்டுக்குள் சென்றார். நீங்கள் வரும் செய்தி அவருக்கு சென்றிருக்கும். இக்காடு முழுக்க அவரது குடிகளால்தான் ஆளப்படுகிறது” என்றான். அர்ஜுனன் கயிற்றேணியில் ஏறினான். அவனைத் தொடர்ந்து ஏறியபடி நகுலன் “மூன்றாண்டுகளாக இங்கு வாழ்கிறோம், மூத்தவரே. மூத்தவருக்கு இவ்விடம் சலித்துவிட்டது. நாங்கள் இங்கு இருந்தது இவ்விடம் முனிவரனைவருக்கும் தெரியும் என்பதனால்தான். எந்த குருநிலையில் கேட்டாலும் அவர்கள் உங்களை இங்கே ஆற்றுப்படுத்திவிடுவார்கள் என எண்ணினோம்” என்றான்.

சற்றே பின்தங்கி நின்ற திரௌபதியிடம் “அருகே செல்வதுதானே?” என்றான். அவள் நெற்றியும் மேலுதடும் வியர்த்திருந்தன. கழுத்துக்குழியில் மூச்சு துடித்தது. “விழிகளும் குரலும் மட்டுமே அறிந்தவைபோலுள்ளன” என்றாள் அவள். “அவைதான் பார்த்தர். வில்லறிந்த கைகளும்” என்றான் நகுலன். அவள் “ஆம்” என மூச்சுத்திணறுவதுபோல சொன்னாள். அவன் அண்ணாந்து நோக்கி “மூத்தவர் அறைக்குள்ளேயே இருக்கிறார் போலும்” என்றான். “ஆம், அவர் தன்னை காட்டிக்கொள்ளக்கூடாதென்று எண்ணுகிறார்” என்றாள். “ஆம், இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசர்…” என்று நகுலன் சொல்ல “அதை அவர் கடந்து நீணாளாகிறது. இன்று விண்விளிம்பில் மண்ணில் நின்றிருக்கும் மூதாதை மட்டுமே” என்றாள்.

imagesஅவர்கள் மேலே ஏறிச்சென்றபோது அர்ஜுனன் தன் தோல்மூட்டையையும் அம்புத்தூளியையும் வில்லையும் வைத்துவிட்டு கைகளைக் கூப்பியபடி தருமனின் அறைக்குள் நுழைவதைக் கண்டார்கள். உடன்சென்ற சகதேவன் “மூத்தவரே” என்று தருமனை அழைத்தான். கையில் எழுத்தாணியுடன் சுவடியை நோக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்த தருமனின் தோளில் மெல்லிய அதிர்வு ஏற்பட்டது. அர்ஜுனன் ஓசையில்லாது நடந்து உள்ளேசென்று குனிந்து தமையனின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் தலைதிருப்பாமல் இடக்கையை அவன் தலைமேல் வைத்து “நீள்வாழ்வும் புகழும் நெடுங்குலமும் திகழ்க!” என்றார். வலக்கையில் எழுத்தாணியை கட்டாரிபோல பற்றியிருந்தார். கழுத்தில் நரம்பு ஒன்று இறுகி அசைந்தது.

அர்ஜுனன் மெல்லிய மூச்சொன்றை விட்டபின் கைகூப்பி இன்னொருமுறை வணங்கிவிட்டு பின்காலடி எடுத்துவைத்து வெளியே வந்தான். தருமன் மெல்ல விசும்பிய ஒலி அனைவரையும் கூர்வாள்முனை என தொட்டது. நகுலன் மெல்லிய சிலிர்ப்பை அடைந்து கைநீட்டி திரௌபதியின் தோளை தொட்டான். அவள் நோக்கியபோது ஏட்டுச்சுவடிகளின்மேல் விழிநீர்த்துளிகள் உதிர்வதைக் கண்டாள். அந்த மெல்லிய ஒலிகூட அனைவருக்கும் கேட்டது. தருமன் உதடுகளை மடித்து அழுகையை அடக்கிக்கொண்டார். நகுலன் ஏதோ சொல்லமுயல திரௌபதி வேண்டாம் என தலையசைத்துக்காட்டி விழிகளால் பின்னுக்கு அழைத்தாள்.

 MAMALAR_EPI_05

அவர்கள் நுனிக்கால்களால் நடந்து பேரறைக்கு வந்தனர். அங்கே இரு குரங்குகள் உள்ளேவந்து அர்ஜுனனின் மூட்டையைப் பிரித்து ஆராய்ந்துகொண்டிருந்தன. உள்ளே இரு பழைய மரவுரிகளும் ஒரு சுரைநீர்க்குடுவையும் மட்டும் இருந்தன. ஒரு குரங்கு மரவுரியை நீட்டி நோக்கி கீழுதட்டைப் பிதுக்க இன்னொன்று ஒழிந்த குடுவையை வாயில் கவிழ்த்து நீர் அருந்துவதுபோல நடித்தது. அப்பால் ஒரு பெரிய குரங்கு ‘பாவம், சிறுவர்கள்’ என்னும் முகக்குறியுடன் அமர்ந்து தன் வால்நுனியை தானே பேன் பார்த்துக்கொண்டிருந்தது.

“மூத்தவரின் குலத்தார்” என்று சகதேவன் சிரித்தபடி சொன்னான். “இங்கே அவர் ஒரு பேரரசை உருவாக்கிவிடுவார் என்றே அஞ்சுகிறார்கள் அரசர்கள்.” அர்ஜுனன் புன்னகைத்து “விலங்குகளில் குரங்குகளிடமிருக்கும் அச்சமின்மை வியப்பூட்டுவது. அறிவின் துணிவு அது” என்றான். குரங்கு அவனை நோக்கி குடுவையை நீட்டியது. “வேண்டாம்” என்றான் அர்ஜுனன். அது குடுவையை தலைமேல் கவிழ்த்துக்கொண்டு எழுந்து நின்றது. “அறிவிலிருந்து கேலியும் ஐயமும் எழுகின்றன” என்றான் நகுலன். சகதேவன் “குரங்குகளின் நினைவாற்றலும் வஞ்சமும் அச்சமூட்டுபவை” என்றான்.

திரௌபதி “இன்னீர் அருந்துகிறீர்களா?” என்றாள். அவள் தொண்டை சற்று அடைத்ததுபோலிருந்தது. “ஆம்” என்றான் அவன். அவள் ஆடையைச் செருகியபடி திரும்ப “இங்கு அடுமனைச்சேடியர் இல்லையா?” என்றான். “இல்லை. இங்கு நாங்கள் மட்டிலுமே” என்றான் சகதேவன். “அதனால்தான் தேவி மாறிவிட்டாளா?” என்று அர்ஜுனன் சிரித்தான். திரௌபதி “உண்மையிலேயே சமைப்பதும் விளம்புவதும் உள்ளத்தை மாற்றிவிடுகின்றன” என்றாள். அச்சிரிப்பினூடாக அவள் இயல்பானாள். “நீங்கள் விழைவதை எல்லாம் சமைக்கிறேன். என் கைச்சுவை அரிது என்கிறார்கள் முனிவர்” என்றாள். அர்ஜுனன் “ஆம், உண்பதற்காகவே வந்துள்ளேன்” என்றான். அவள் சட்டென்று நாணி முகம்சிவக்க “நன்று” என உள்ளே சென்றாள். அர்ஜுனன் முகத்திலும் அந்நாணத்தின் எதிரொளி இருந்தது. சகதேவனும் நகுலனும் அவன் முகத்தை நோக்குவதை தவிர்த்தனர்.

முண்டன் வந்து வாயிலில் நின்று தலைவணங்கி “நான் முண்டன். இங்கு வளர்க்கப்படுகிறேன்” என்றான். அர்ஜுனன் சிரித்துவிட்டான். “எதன்பொருட்டு?” என்றான். “வளர்ப்பவர்களின் ஆணவத்தின் பொருட்டுதான். எல்லா வளர்ப்புவிலங்குகளையும்போல. விஜயரே, உங்களுக்கு இன்னீரும் சுட்டகிழங்கும் சித்தமாக உள்ளது. உச்சிப்பொழுதுக்கு ஊனுணவு சமைக்கவேண்டும்… அதற்குமுன் பெருவயிறர் வருவாரா என உறுதிசெய்யவேண்டும்” என்றான்.

“இவன் அடுமனையாளனா?” என்றான் அர்ஜுனன். “இல்லை. அடிப்படையில் நான் பகடிக்கலைஞன். சமையலில் மட்டும்தான் பகடிக்கு இடமே இல்லை.” அர்ஜுனன் “வில்வித்தையில் உள்ளதோ?” என்றான். “மூத்த அரசர் அம்புவிடுவது வேறென்ன?” என்றான் முண்டன். “அய்யோ” என்றான் அர்ஜுனன் பதறி திரும்பிநோக்கியபடி. “தேன் கலந்த பழக்கூழ் இனிது. நான் சற்று முன்னர்தான் முதற்சுவை நோக்கினேன்” என்றபின் அவன் திரும்பிச்சென்றான்.

அர்ஜுனன் “எளியவன் அல்ல, ஆனால் நேர்மையானவன்” என்றான். “ஆம், அதை நானும் கணித்தேன்” என்றான் சகதேவன். மூங்கில்கூடையை கவிழ்த்திட்டு அர்ஜுனன் அமர்ந்தான். அவன் அருகே நகுலனும் சகதேவனும் அமர திரௌபதி அடுமனைக்குள் சென்றாள். “அனைவருமே மாறிவிட்டிருக்கிறீர்கள். தோற்றத்தில் மட்டுமல்ல. உள்ளேயும்” என்றான் அர்ஜுனன். “நீங்கள் மாறிவிட்டிருக்கிறீர்கள். அதைத்தான் பார்க்கிறீர்கள்” என்று நகுலன் சொன்னான்.

திரௌபதி உள்ளிருந்து கனித்தாலத்துடன் வந்து அவனருகே வைத்தாள். அர்ஜுனன் “தேவி நூறு பெயர்மைந்தர்களின் பேரன்னைபோல கனிந்திருக்கிறாள்” என்றான். திரௌபதி கண்கள் பொங்க சிரித்து “குருகுலத்தவரின் குருதியையும் சேர்த்தால் நூறென்ன, ஆயிரங்கள் கூட அமையும்” என்றாள். முண்டன் இரு கைகளிலும் இன்னீரும் அப்பத்தட்டுமாக ஓடிவந்தான். அவ்விரைவிலேயே இருமுறை தலைகீழாகச் சுழன்று நின்று “நெடுந்தொலைவு சென்றுவிட்டேன். மீண்டு வரவேண்டியிருந்தது” என்றான். அவன் கையிலிருந்தவை துளியும் சிந்தவில்லை.

அர்ஜுனன் “நீ நிகருடல் திறனுடையவன், ஒப்புகிறேன்” என்றான். “திறன் வளர்த்து ஒருநாள் உங்கள் அம்பொன்றை கையால் பற்றுவேன்” என்றான் முண்டன். “சற்றுமுன் நான் சென்ற தொலைவில் ஒரு மலைவேடன் உங்கள் அம்புகளை கையால் பற்றுவதைக் கண்டேன்.” அதை அவன் உள்ளே சென்றபடி சொன்னதனால் அர்ஜுனன் கேட்கவில்லை. அவன் தேன்பழநீரை அருந்தியபின் கிழங்கை உண்ணத் தொடங்கினான். முண்டன் மீண்டும் பலமுறை சுழன்று வந்து அவர்கள் முன் தேன்பழநீர் குடுவையையும் குவளைகளையும் வைத்தான்.

திரௌபதி குவளைகளில் ஊற்றி அவர்களுக்கு அளித்தாள். அதைச் சுவைத்தபடி “எங்கெல்லாம் சென்றீர்கள், மூத்தவரே?” என்றான் சகதேவன். “நான்கு திசைகளிலும் நெடுந்தொலைவு” என்றான் அர்ஜுனன். “மேற்கே நிலைக்கடல் முதல் கிழக்கே பறக்கும் மலைகள் வரை. திசைத்தேவர்களை வென்று நிகரற்ற படைக்கலங்களுடன் வந்துள்ளேன்.” அறைவாயிலில் தோன்றிய தருமன் “உன்னை வென்றாயா?” என்றார். அர்ஜுனன் தெளிந்த விழிகளுடன் அவரை ஏறிட்டுநோக்கி “ஆம்” என்றான். அவர் “நன்று” என்றார். கைகளைக் கட்டியபடி நின்று அர்ஜுனனை கூர்ந்து நோக்கினார். “நன்கு மெலிந்துள்ளாய்.”

“கொழுப்பதற்கு இங்கு நிறைய நாட்கள் உள்ளன, மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், இவள் இப்போது நன்கு சமைக்கிறாள்” என்று தருமன் சொன்னார். முகத்தை கடுமையாக வைத்துக்கொள்ளும்பொருட்டு பற்களைக் கடித்து வாயை இறுக்கியிருந்தார். “நீ கற்றவற்றில் சிலவற்றை இவர்களுக்கு சொல்லிக்கொடு. இங்கே தோட்டக்காரர்களாகவே ஆகிவிட்டிருக்கிறார்கள்” என்றார். அர்ஜுனன் “ஆணை” என்று சொல்லி நகுலனை நோக்கி சற்றே புன்னகைத்தான். அவர் உடல் விழியாகி அவனை பார்ப்பதுபோலிருந்தது. நோக்கு வேறெங்கோ இருந்தது. காற்று செடிகளில் என அவர் வருகை அங்கிருந்த அனைவர் உடலிலும் நிலைமாறுபாட்டையும் மெல்லசைவையும் உருவாக்கியது.

“உன் தமையன் இன்னும் வரவில்லையா?” என்றார் தருமன் வெளியே நோக்கியபடி. “வந்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்” என்றான் நகுலன். “எங்கு சென்றான்? மூடன்! இங்கேயே இருக்கும்படி நான்குமுறை நானே சொன்னேன்” என்றபடி மேலும் ஏதோ சொல்லவந்தார். பின்பு “சரி சரி, உண்ணுக!” என்றபின் மீண்டும் உள்ளே சென்றார். அவர்கள் இயல்புநிலைமீளும் அசைவுகள் ஏற்பட்டன.

முண்டன் வந்து “உரியநடிப்புகள் முடிந்துவிட்டன என்றால் இருவர் வந்து அடுமனையில் உதவவேண்டும். பெருவயிறருக்கு சமைக்க தனியாக என்னால் இயலாது” என்றான். நகுலன் “இவன் தலைகீழாகக் குதித்து காலத்தின் ஏடுகளை புரட்டத்தெரிந்தவன். நீங்கள் வரவிருப்பதை சரியாகச் சொன்னான்” என்றான். “இப்போது சற்றுமுன் தலைகீழாகப் பாய்ந்து வந்தானே?” என்றான் அர்ஜுனன். “நான் பலநாட்களுக்கு முன்னால் சென்றுவிட்டிருந்தேன்” என்றான் முண்டன். “எங்கே? என்ன கண்டாய்?” என்றான் அர்ஜுனன். “விஜயரின் வில்லுக்கு வேலை வந்துவிட்டிருப்பதைக் கண்டேன்” என்றான் முண்டன் கைதூக்கி. “அம்புகள் பறக்கும் ஒரு பெரும்போர்!” என்று கூவினான்.

அவன் குரல் மறையும்படி தடதடவென கூரைமேல் குரங்குகள் விழும் ஓசை கேட்டது. “இந்த இல்லத்தையே ஒருநாள் இழுத்து கீழே போட்டுவிடுவான் அறிவிலி!” என்றார் தருமன் அறைக்குள். பீமன் உள்ளே வந்தபோது கூடவே ஏழெட்டுக் குரங்குகளும் வந்தன. அனைத்துமே கைகளில் தேன்தட்டுகளை வைத்திருந்தன. பீமன் பாளையால் முடையப்பட்ட பெருங்கூடையில் தேன்கூடுகளை நிறைத்து எடுத்துவந்திருந்தான். அவன் உடலெங்கும் தேன் வழிந்தது. “இளையோனே” என்று கூவியபடி தன் பெரிய கைகளை நீட்டிக்கொண்டு ஓடிவந்து அர்ஜுனனை பற்றிக்கொண்டான். அர்ஜுனன் “எங்கு சென்றீர்கள்?” என்று சொல்லி அவன் தோள்களைத் தழுவினான்.

உரக்க நகைத்தபடி பீமன் அர்ஜுனனை அணைத்து தூக்கிச்சுழற்றினான். அவனை காற்றில் எறிந்து பிடித்தான். வெறிகொண்டவன்போல ஓங்கி ஓங்கி அறைந்தான். தேன் ததும்பி தரையில் விழ அதில் இருவரும் வழுக்கி நிலையழிந்து சிரித்தபடியே நின்றனர். அறைவாயிலில் வந்துநின்ற தருமன் “போதும், குடிலை சரித்துப்போடவேண்டியதில்லை” என்றார். பீமன் அர்ஜுனனை கீழே விட்டுவிட்டு “மலைத்தேனும் கனிகளும் எடுத்துவரச் சென்றேன், மூத்தவரே” என்றான். “ஏற்கெனவே அவனுக்கு மதுபர்க்கம் அளித்தாகிவிட்டது. நீ முதலில் குளி” என்றார் தருமன்.

அவன் தலையசைக்க “குரங்கு” என்றபின் பிற குரங்குகளை நோக்கி “இவை இவனைவிட பண்பறிந்தவை” என்றார். நகுலன் சிரிப்பை அடக்க அவர் திரும்பி உள்ளே சென்றார். ஒரு குரங்கும் அவரைப்போலவே தளர்நடையிட்டு உடன்சென்றது. அவர் கதவை மூடிக்கொண்டார். “என்ன செய்வதென்றே தெரியவில்லை அவருக்கு” என்றான் நகுலன். “அள்ளி மடியிலிட்டு சற்றுநேரம் அழுது பின் கொஞ்சி உணவூட்டினால் நெஞ்சமைவார். அதைச் செய்ய முடியாமையால் நிலையழிகிறார்” என்றான் சகதேவன்.

பீமன் தேன்கூட்டை எடுத்து “மலைத்தேன்! இனிய தேனிருக்கும் இடம் குரங்குகளுக்கு மட்டுமே தெரியும். இனிய கனிகளை அவைதான் தெரிவுசெய்யமுடியும்… இவற்றை உண்டு பார்” என்றபடி தேன்தட்டு ஒன்றை எடுத்து அர்ஜுனன் வாயில் ஊட்டப்போனான். “நான் பிழிந்து கொண்டுவருகிறேன்” என்றாள் திரௌபதி. “இதை இப்படியே உண்ணலாம்” என பீமன் தூக்கிக் காட்ட சொட்டிய தேனை அர்ஜுனன் நக்கிக்குடித்தான். “நன்று… இத்தனை இனிய தேனை உண்டதே இல்லை” என்றபடி இன்னொரு தட்டை எடுத்து திரௌபதியிடம் நீட்டினான். அவள் விழிகளில் பதற்றம் எழ வேண்டாம் என தலையசைத்தாள்.

“அருந்துக! இது அரிய மலைத்தேன்” என்றான் பீமன். அவள் தலையசைக்க சகதேவன் எழுந்து “நான் விறகு கொண்டுவரச் செல்லவேண்டும்… மூத்தவரே, வருகிறீர்களா?” என்றான். பீமன் “விறகு கொண்டுவருவதெல்லாம் ஒரு வேலையா? என் படையிடம் சொன்னால் போதுமே” என எழுந்துசென்றான். நகுலன் “முண்டன் என்ன செய்கிறான் என பார்க்கிறேன்” என்று எழுந்து உள்ளே சென்றான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விழிதொடுத்து நோக்கினர்.

திரௌபதி நோக்கில் எழுந்த கூரொளியுடன் “சென்ற இடங்களில் எத்தனை துணைவியர்?” என்றாள். “ஏன்? அதைத்தான் முதலில் கேட்கவேண்டுமா?” என்றான். “சொல்லுங்கள்!” அர்ஜுனன் “பலர்” என்றான். “ஆனால் அனைவரும் உன் வடிவங்களே.” அவள் சிரித்து “ஆம், பேசுவதை மட்டும் நன்கு பயின்று வைத்திருக்கிறீர்கள்” என்றாள். தாழ்ந்த குரலில் “அனைத்துக் கலைகளையும் கற்றவன் என்கிறார்கள் என்னை” என்று சொன்னபடி அவள் கையை அவன் பற்ற “அய்யோ, இது நடுஅறை” என்றாள் அவள். “அப்படியென்றால் உள்ளறைக்குச் செல்வோம்” என்றான் அர்ஜுனன். “இப்போதா?” என்றாள். “அதை உணர்ந்துதான் அனைவரும் சென்றுவிட்டார்கள்” என்றான். “அய்யோ, எண்ணவே கூச்சமாக இருக்கிறது” என்றாள். “இதென்ன, அச்சமும் நாணமும் மடமும் பயிர்ப்பும் எப்போது வந்தன?” அவள் “வந்தன… அவ்வளவுதான்” என்றாள்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி: க.சீ.சிவக்குமார்
அடுத்த கட்டுரைகவிதை மொழியாக்கம்