ஜல்லிக்கட்டும் மரபும் – கண்ணன்

ஜெ

திரு கண்ணன் தன் முகநூலில் எழுதிய பதிவு இது. அதை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். இதிலுள்ள வினாக்கள் மிகச்சங்கடமானவை. குறிப்பாக இவர் இயற்கைவேளாண்மை போன்றவற்றில் ஈடுபடுபவர் என்கிறார்கள். அவரது குரல் முக்கியமனாது

 

சத்யன்

 

 

index

 

ஜல்லிக்கட்டின் மீதான தடை வெளிநாட்டு நிறுவனங்களின் சதி — நமது நாட்டுக் காளையினங்களை அழிக்கத் திட்டம் — இது நமது பாரம்பரியத்துக்கு எதிரான போர்
சரிதான். வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டுப் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிக்கின்றன என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அது பீட்டா மட்டுமா?

கூட்டுக்குடும்பம், பெற்றோரைப் பேணுதல், சகோதர பாசம், ஆடை, பண்டிகைகள், உணவு இதெல்லாம் கூட நமது பாரம்பரியம்தானே… இதனை எதிர்த்த தாக்குதல்களைக் கண்டித்த போதெல்லாம் இதற்கு வேறு சாயம் பூசின ஈயங்கள் இப்போது மட்டும் பாரம்பரியம் என்று கோஷமிடுவது ஏன்?

தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காதே என்று தடை செய்தபோது பாரம்பரியம் தெரியவில்லை.
பொங்கல் வாழ்த்து அனுப்பிய தமிழன் இப்போது காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் கட்டிப் பிடித்துக் கொள்ளும்போதும் முத்தம் கொடுக்கும்போதும் பாரம்பரியம் தெரியவில்லை.

கூட்டுக்குடும்பத்தை ஒழித்தபோது பாரம்பரியம் தெரியவில்லை.
மேல்நாட்டைக் காப்பியடித்து அரைகுறை ஆடைகளை பழக்கப்படுத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியத்தைத் துறந்து பலர் என்பது சர்வ சாதாரணமானபோது பாரம்பரியம் தெரியவில்லை.
திருமண வாழ்வை விடுத்து லிவிங் டுகெதர் என்ற கண்றாவியைக் கைக்கொண்டபோது பாரம்பரியம் தெரியவில்லை.
ஒருவனுக்கு ஒருத்தியை விட்டுத் தள்ளுங்கள் – இப்போது ஒருவனுக்கு ஒருவன், ஒருத்திக்கு ஒருத்தி என்ற பாதையில் போய்க்கொண்டிருக்கிறதே அதற்கென்ன செய்வது?

நமது உணவு வகைகளைக் கைகழுவிவிட்டு பிஸா, பர்கர், கே எஃப் ஸி என்று கடை பரப்பியபோது நமது உணவு வகைகளைக் கேலி செய்து விட்டு வெளிநாட்டு குப்பை உணவுகளை இருகரம் நீட்டி வரவேற்ற போது பாரம்பரியம் தெரியவில்லை.
நமது பாரம்பரிய விவசாய மக்களின் உற்பத்திப்பொருளான பதநீர், இளநீர், நன்னாரி இவற்றை ஏளனம் செய்து விட்டு கோக்கையும் பெப்சியையும் குடிக்கும்போது பாரம்பரியம் தெரியவில்லை.

கோமாதா எங்கள் குலமாதா என்றால் கொக்கரித்து விட்டு மாட்டிறைச்சி சாப்பிடும் விழா நடத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை. மாடுகள் துன்புறுத்தப்பட்டு, கண்களில் மிளகாய்ப்பொடியைத் தேய்த்து, லாரிகளில் அடைத்து வைக்கப்பட்டு, கொம்புகள் குத்திக் கண்களில் ரத்தம்வழிய அடிமாடுகளாக ஏற்றிச் செல்வதைப் பார்க்கும்போது நமக்கு மாடுகள் மேல் பாசம் பரிதாபம் வரவில்லை. பாரம்பரியம் தெரியவில்லை.

பசுவைக் கொல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற போது மாடுகளின் மேல் பாசமோ பரிதாபமோ எழவில்லை. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்ய வேண்டும் என்று வெட்டி நியாயம் பேசினோம்.

இன்றைக்கு நமது பாரம்பரியத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் தடை போட்டிருக்கிறது என்று பொங்கும் நாம், பாரம்பரிய உடைகளையே அணிந்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று பாரம்பரியத்துக்கு ஆதரவாக ஒரு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியபோது அதனை எதிர்த்து அப்பீல் செய்து பாரம்பரியத்தைக் காக்கத் தேவையில்லை என்று தடை வாங்கியது நம்ம போராளிகள்தானே.
அப்புறம் இப்போ எந்த முகத்தோடு பாரம்பரியம் என்று நீதிமன்றத்தில் போய் நிற்க முடியும்?

இப்படி படிப்படியாக நமது பாரம்பரியம் என்பது பன்முகத்தாக்குதலுக்கு உள்ளானபோது இது அந்த சாதிக்கு ஆப்பு, அது இந்த மதத்துக்கு ஆப்பு, இது எனது சுதந்திரத்துக்கு ஆப்பு, அது அவனது விருப்பத்துக்கு ஆப்பு என்று பல சுயநலக் காரணங்களால் பாரம்பரியத்தை நாமும் கைவிட்டோம். அப்புறம் இப்போ பாரம்பரியம் என்று கத்தி என்ன பிரயோஜனம்?

இன்றைக்கு ஜல்லிக்கட்டையே தடை செய்யும் தைரியமும் ஆதரவும் பீட்டாவிற்கு எங்கிருந்து வந்தது என்று தெரிகிறதா?

எல்லாம் நமது இரட்டை வேஷம்தான்.
சரி… ஜல்லிக்கட்டு தடையால் நாட்டுக்காளையினங்கள் அழிந்து விட்டன. அப்படியா? ஏற்கெனவே தமிழ்நாட்டுக் காளையினங்கள் நாயினங்கள் ஆகியவை ஏகமாக அழிந்து விட்டன. இதெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்த காலத்திலேயே அழிந்து விட்டன. ஆனால் ஏதோ இந்த நாங்கைந்து வருடத்தில்தான் அழிந்து விட்டது போலப் பேசுவது காளைகளைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லை என்பதைக் காட்டுகிறது.

சமீபத்தில் நாட்டு நாயினங்களை வளர்த்து வரும் கடைசி இடமான சைதாப்பேட்டை அரசு நிறுவனத்தை மூடச்சொல்லி உத்தரவு வந்து விட்டது. பார்த்துக் கொண்டு சும்மாதானே இருந்தோம்? வெளிநாட்டு நாயினங்களை வளர்த்து அதிக காசுக்கு விற்கும் நிறுவனங்கள் லாபம் கொழிக்க நமது நாட்டு நாயினங்களை பலி கொடுத்து விட்டோம். வெளிநாட்டுப் பசு இனங்கள் – நமது சீதோஷ்ணத்துக்கு ஒவ்வாத, தரங்குறைந்த பாலைத் தருகின்ற, எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய இனங்களை இறக்குமதி செய்து நம்மிடம் கொழுத்த லாபம் பார்க்க இது ஒரு வழி,
தமிழ்நாட்டில்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை. ஆந்திரா, குஜராத், மஹாராஷ்ட்ரா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் முதலிய மாநிலங்களில் ஜல்லிக்கட்டே இல்லையே? அப்போது அந்த மாநிலங்களுக்குச் சொந்தமான காளையினங்கள் அழிந்து போயிருக்க வேண்டுமே? அங்கே மட்டும் எப்படித் தழைத்திருக்கிறது?

அடுத்தது – இப்போது நடப்பது ஜல்லிக்கட்டா? இதுதான் வீரமா? அடப்பாவிகளா.. ஏறு தழுவுதல் என்ன என்பதை அந்தக் காலத்து எம் ஜி ஆர் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தனி ஒரு மனிதனாக கூண்டுக்குள் விடப்பட்டு அங்கே இருக்கும் காளையைத் தனியாக அடக்குவதுதான் ஏறுதழுவுதல், அதுதான் வீரம். மொத்தமாகப் பத்திருபது பேர் வாசலைத் தாண்டி வெளியே வரும் காளையின் மீது விழுவதும் அது ஓடும்போது கொம்பில் இருப்பதை அவிழ்த்து எடுப்பதுமா வீரம்?

இப்போது உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறியதாக மார்தட்டிக் கொள்கிறோம். மகிழ்ச்சி. அடுத்தது மாணவர்களின் போராட்டம் வலுத்து மத்திய அரசைப் பயமுறுத்திப் பணியவைத்து அவசர சட்டம் பிறப்பிக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம்.

அதன் பின் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது, தமிழகம் சுடுகாடு ஆகும். பணம் படைத்தவர்களும் அதிகாரம் படைத்தவர்களும் மட்டுமே வாழ முடியும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் செத்து சுண்ணாம்பாக வேண்டியதுதான். அதற்கு முன்னாடி விவசாயி என்ற இனமே தமிழகத்தில் இருக்காது.

என்ன பயமுறுத்துகிறேன் என்று பார்க்கிறீர்களா?
மாணவர்கள் போராட்டம் நடத்தினால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என்று நாம் செய்து காட்டினால்….
1. அடுத்த வாரம் கர்நாடகாவில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் நடக்கும். அதனையடுத்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரத் தேவையில்லை என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்
2. அதற்கடுத்த வாரம் கேரளாவில் மாபெரும் மாணவர் போராட்டம் நடைபெறும். அதனையடுத்து முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.
3. அதற்கும் அடுத்த வாரம் ஆந்திராவில் மாணவர் போராட்டம் வலுக்கும். அதனையடுத்து கிருஷ்ணா நதியில் தண்ணீர் விட வேண்டாம் என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.
4. இப்படியே சிறுவாணியில் தடுப்பணை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை என்று தமிழ்நாட்டுக்கு நீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய அனைத்து ஆறுகளையும் அடைத்து விட அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்படும்
சந்தோஷமா?

அப்புறம் எல்லாம் அடுத்தது என்ன படம் ரிலீஸ் என்று ஆவலுடன் திரையரங்கில் வாசலில் ஆயிரம் ரூபாய் குடுத்து டிக்கெட் வாங்கக் காத்திருக்கலாம்.
இந்த சட்ட சிக்கலைத் தீர்க்க அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறதா? இருக்கிறது. உச்ச நீதிமன்றம் 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்று கூறியதை மதித்தோமா?

போராட்டத்தின் நோக்கம் பெரியது. ஆனால் போராடத் தேர்ந்தெடுத்திருக்கும் களமும் வழிமுறைகளும் இமாலயத் தவறு. போராட வேண்டிய இடம் இங்கல்ல… உச்ச நீதிமன்றம்.

இனிமேல் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை – நீதிமன்ற அவமதிப்பு என்று பேச முடியுமா?

நீதிமன்றத்தில்தான் வாதாட முடியுமா?
மொத்தத்தில் காவிரிப் பாசன விவசாயிகளின் வயிற்றில் அடித்து அவர்களைப் படுகுழியில் தள்ளியாயிற்று. மாடுகளை வளர்க்கும் விவசாயிகளை அழித்து விட்டு இவர்கள் மாடுகளைக் காக்கப் போகிறார்களாம்.

விவசாயம் லாபகரமானது இல்லை என்பதோடு வயிற்றுப்பாட்டுக்கே போதவில்லை என்பதுதான் நிலைமை. இந்த நிலையில் விவசாயிகள் மாடுகளை எங்கே பராமரிப்பது? இதனால் மாடுகள் அடிமாடுகளாக கேரளாவிற்குப் போய்க்கொண்டிருக்கின்றன.

மாடுகளையெல்லாம் வெட்டித் தின்று விட்டு காளைகளைக் காப்போம் என்று ஒரு போராட்டம்.
நம்மாழ்வார் என்று ஒரு கிழவர். விஷத்தை விதைக்காதீர்கள். நமது பாரம்பரிய மாடு இனங்களைக் காப்பாற்றுங்கள். பசுவின் மூத்திரம், சாணம், பால், நெய், தயிர் இதை வைத்து தயாரிக்கப்படும் பஞ்ச கவ்யா மற்றும் பசுஞ்சாண உரங்களே போதும். இதனை விட்டு விட்டு விஷத்தைத் தூவி உண்ணும் உண்வை விஷமாக்காதீர்கள் என்று கத்திக் கத்தியே மாண்டு போனார். ஆனால் இன்னும் வெளிநாட்டுக் குப்பை உணவு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

உசுப்பேற்றி விடுவதற்கு ஒரு கும்பல். இதில் அரசியல் ஆதாயம் தேட ஒரு கும்பல். பிரிவினைவாதிகளின் ஊடுருவல். கலகம் விளைவிக்க ஒரு கும்பல். இவர்கள் கையில் மாணவர்கள்.

காவிரியில் தண்ணீர் விடாததை எதிர்த்து பாவப்பட்ட விவசாயிகள் போராடியபோது இந்த மாணவர்கள் எங்கே போனார்கள்? விவசாயிகள் இல்லாவிட்டால் மாடுகளை ஐ டி கம்பெனிகளில் வளர்ப்பார்களா? அல்லது மைக்ரோஸாஃப்ட் வளர்க்குமா? கொஞ்சமாது யோசிக்க வேண்டாம்?
முதலில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புக்களை ஒதுக்குங்கள். சுதேசி என்று சொன்னால் கெட்ட வார்த்தை மாதிரிப் பார்ப்பவர்கள் இன்று கோக் பெப்சியை எதிர்த்து கோஷம். ஆனால் பிஸாவையும் பர்கரையும் கே எஃப் ஸி யையும் ஏன் எதிர்க்கவில்லை?

நமது பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களுக்கு மாறுங்கள். இதனால் மழை பொய்த்தாலும் கர்நாடகம் மறுத்தாலும் விவசாயிக்கு நல்ல தானிய உற்பத்தியும் வாழ்வாதாரமும் உறுதிப்படும். இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் கொட்டமும் அடங்கும். விவசாயி நல்ல நிலைமைக்குத் திரும்பினால் மாடுகளின் வாழ்வும் பெருகும். தினமும் ஒரு வேளையாவது கம்பு கேழ்வரகு என்று பழகுங்கள். எல்லோரும் இப்படி மாறினால் எந்த நாதாரியிடமும் தண்ணீர் வேண்டிக் கை ஏந்த வேண்டியதில்லை.

கதராடையை உடுத்துங்கள் என்று பிரதமர் கூறியபோது கேலி செய்தவர்கள்தான் அதிகம். ஆனால் கிராமத்தில் கதர் உற்பத்தி செய்யும் நெசவாளிக்கு நீங்கள் வாங்கும் கதராடையினால் ஒரு நாள் உணவு கிடைக்கிறதென்றால் அதை விட வேறென்ன வேண்டும்? ஆனால் பன்னாட்டு நிறுவனங்களையும் பெருமுதலாளிகளையும் திட்டிக் கொண்டே இன்னொரு புறம் அவர்களிடமே போய் விழுகிறோம்.

இனியாவது நமது பாரம்பரியம் என்ன என்பதை உண்மையாக உணர்ந்து தொன்மையான நமது பாரம்பரியத்தை நோக்கித் திரும்புங்கள். சிந்தித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.

 

கண்ணன் கே

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–2
அடுத்த கட்டுரைமாமங்கலையின் மலை-2