மோட்டார் சைக்கிள் பயணம்

motorcycle-tours-rs

 

அன்பின் ஜெ

 

எனக்கு வாசிப்பு அனுபவம் என்பது பெரிய அளவில் இல்லை என்றபோதும் ஒருசில சமயங்களில் இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் நேரம் போகாது இருக்கும் சமயங்களில் உங்களது வலைதளத்திற்கு வந்து நீங்கள் எழுதியிருக்கும் பத்தியோ அலது சிறுகதைகளையோ படிப்பேன்.

எனக்கு பயணிப்பது என்பது மிகவும் விருப்பமானது. எந்தளவிற்கு என்றால் என்னை ஒரு ஆண் என்றோ இன்ன ஜாதி அலது இன்ன மதத்தைச் சேர்ந்தவன் என்றோ என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை விடவும் என்னை ஒரு travellorராக அறிமுகபடுத்திக் கொள்வதில் தான் எனக்கு பெருமையும் அதிகம் பெருமிதமும் அதிகம்

 

நீங்கள் என்று இல்லை, இன்னும் பல தமிழ் இலக்கிய ஆளுமைகளின் வலைதளத்தில் அவர்களது பயண கட்டுரை அலது பயணத்தைக் கருவாக கொண்ட புனைவுகளை படித்திருக்கிறேன். அத்தனை பேரும் நடந்து சென்ற/ காரில் – ரயிலில் – பேருந்தில் – விமானத்தில் பயணித்த அனுபவங்களைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார்கள். பைக் பயணம் என்றவொன்றைப் பற்றி எவருமே எழுதியதாய் நான் பார்த்ததில்லை. (சாரு மட்டும் லடாக் பைக் ரேலி குறித்து எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். அதிலும் பைக் என்பது ஊறுகாய் அளவுக்கே பயன்படுத்தி இருந்ததாய் ஒரு ஞாபகம்)விஷயத்திற்கு வருகிறேன்

 

நான் நடைபயணம் துவங்கி பைக், கார், பேருந்து, ரயில், விமானம் என அனைத்திலும் பயணித்திருக்கிறேன். மற்ற எவற்றிலும் கிடைக்காத ஒரு அனுபவம் எனக்கு பைக்கில் மட்டுமே கிடைத்திருக்கிறது. எப்படியெனில் நாகர்கோவில் – சென்னை நெடுஞ்சாலையில் மதுரை தாண்டி எந்த இடம் என்றே தெரியாத ஒரு இடத்தில் ஓய்வுக்காக வண்டியை ஒதுக்கிவிட்டு அந்த உச்சி வெயிலிலும் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தபடியே சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாரென்றே அறியாத மற்றொரு பைக் பயணி நட்புடன் புன்னகைத்து கையசைத்து விட்டு சென்றான்.

 

மற்றொரு முறை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு வருகையில் விடியற்காலை நான்கு மணி சுமாருக்கு கோவில்பட்டியில் ஒரு நெடுஞ்சாலையோர தேநீர் கடையில் நான் குடித்த இஞ்சி டீக்கும் புகைத்த சிகரெட்டுக்கும் பணம் வாங்க மறுத்துவிட்டார் அந்த கடைக்காரர்

போலவே தான் நான் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஏதொவொரு டீக்கடையில் அலது நெடுஞ்சாலையோரத்தில் அறிமுகமே இல்லாத யாரோ ஒருவர், நான் வலிந்து சென்று எதுவும் பேசாத போதும் என்னிடம் வந்து நட்புடன் பேசுவது, பயணத்தை ஊக்குவிப்பது என்று அன்பு பாராட்டுகிறார்கள்

 

மனித மனத்திலிருக்கும் மனிதம் இன்னும் மரத்து போகவில்லை மனிதம் என்பதை எவரும் மறந்தும் போகவில்லை என்ற உண்மையினை ஒவ்வொரு பைக் பயணமும் எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. (feb 5 பறக்கையில் நாம் சந்திக்கும் பொழுது இன்னும் அதிகமாக என் அனுபவங்களைப் பகிர்கிறேன்)

 

இறுதியாக இந்த கடிதம் எதற்காகவென்று சொல்லி விடுகிறேன் .

பைக் பயணம் குறித்த கட்டுரையோ அலது ஒரு புனைவையோ நீங்கள் எழுத வேண்டுமென விரும்புகிறேன். அப்படி எழுத உங்களுக்கு ஒப்புதல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பும் இடத்திற்கு பைக்கில் அழைத்து செல்ல நானும் தயாராய் இருக்கிறேன்.

 

 

Never quit. winners never quit, quitters never wins…

thanks & regards

வாஸ்தோ

 

220px-Zen_motorcycle

அன்புள்ள நாகராஜன்

Zen and the Art of Motorcycle Maintenance என்னும் புகழ்மிக்க நூலை கேள்விப்பட்டிருப்பீர்கள். பயணம் என்பது பைக்கில்தான் மிகச்சிறப்பாக அமையும் என வாதிடும் நூல். அதில்தான் ‘உள்ளே இருக்கும்’ அனுபவம் ‘பறக்கும்’ அனுபவம் கிடைக்கிறது என்கிறது

 

ஆனால் நான் பைக்கில் பின்னால் அமர்ந்துதான் செல்லமுடியும். அது ஒரு நல்ல அனுபவம் அல்ல

 

ஜெ

முந்தைய கட்டுரைஊடகக் கறையான்கள்
அடுத்த கட்டுரைகுறளுரை கடிதங்கள் 3