அன்னா கரீனினா -கடிதம்

 

111

ஜெ,

எல்லோரையும்போல பள்ளிக்கூட பாடபுத்தகங்களில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பட்டியலில்தான் முதன்முதலாய் லியோ டால்ஸ்டாய் அவர்களின் பெயரை நானும் மனப்பாடம் செய்திருக்கிறேன். அப்போதிலிருந்தே அவரின் பெயரை எனக்கு பிடிக்கும். பெயரிலேயே ஒருவித ஈர்ப்பு எனக்கு. கல்லூரியிலேயும் அவரின் பெயரை நினைவுபடுத்தினார்கள். ஆனால் அவர் என்ன அப்படி எழுதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார் என எண்ணி வியப்பதோடு என் தேடலும் ஆராய்ச்சியும் நின்றுவிட்டது. ஒருவேளை பாடபுத்தகங்களைப் படிக்காமல் கதைபுத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தால் மார்க் குறைந்துவிடும் என்ற பயம் கூட அவரைத் தேடாமலிருந்ததற்கு காரணமாக இருக்கலாம்.

பள்ளியும் முடிந்தது. கல்லூரியும் முடிந்தது. வேலைக்கும் வந்தாயிற்று. அதுவும் பதினைந்து வருடங்கள் வேலை வேலை என்று. அதை வேலை வேலை என்று சொல்ல முடியாது. தனிமைப்படுத்தப்பட்ட வேலைக்கு நானே என்னை ஆட்படுத்திக் கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். இங்கும் அதே பீடிப்பு. ஒருவேளை வேலை பார்க்காமல் கதை புத்தகம் படித்தால் அன்றன்றைய வேலையை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயம். கடைசி கடைசியாக நான் சிறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப்பட்டு விடுதலையளிக்கப்பட்டேன் என்றுதான் இப்போதுள்ள சூழலைச் சொல்லவேண்டும். ஆமாம். குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த நான் எல்லையில்லா பெருவெளியில் பாய ஆரம்பித்தேன்.

பலருடன் வேலை பார்க்கும் அனுபவம் எனக்கு புதிதாகவும் கடினமாகவும் இருந்தது. ஆனால் என் சிறுவயது ஈர்ப்புகள் என்னவென்று உணரவைத்த சூழல் இதுதான். ஏனெனில் என் பால்யகால விருப்பங்கள் தேடல்கள் ஆராய்ச்சிகள் இவையனைத்துக்கும் விடைகளை இப்பரந்த சூழலில்தான் கண்டடைந்தேன். பல மனிதர்களோடு பழகுகையில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் மகத்தானவை. ஏன் என்னை இத்துணை அருமை மனிதர்களிடமிருந்து இத்தனை வருடங்களாக ஒதுக்கி வைத்துக்கொண்டேன் என என்னை நானே நொந்துகொண்டேன். இதற்கெல்லாம் காரணம் அந்தப் பலரில் என் விருப்பத்தோடு ஒத்துப் போகின்றவர்களைக் கண்டதாலும் அவர்களோடு உரையாடி என் சிந்தனை வளத்தை மேம்படுத்திக் கொண்டதாலும்தான் என நான் சொல்லத் தேவையில்லை.

இப்படித்தான் மெல்ல நான் பல பயங்கள் காரணமாக விட்டுவிட்ட கதைப்புத்தகங்கள் வாசிப்பைத் தொடர்ந்தேன். ஆனால் இனி நான் வாசிப்பவற்றை கதைப்புத்தகங்கள் என சொல்லக்கூடாது என அறிந்தேன். அவை அனைத்தும் வாழ்க்கை அனுபவங்கள். அச்சிறுகதைகளில் அக்குறுநாவல்களில் அப்பெரும் புதினங்களில் வரும் மாந்தர்கள் கதைமாந்தர்கள் அல்ல. அனைவரும் கதாமாந்தர்கள் என உணர்ந்தேன். எந்த எந்த புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்று கூட அறியாமல் இருந்த எனக்கு என் புதிய அலுவலகம் வழிகாட்டியையும் தந்தது. நிறைய கேட்டேன். நிறைய பேசினேன். நிறைய வாசித்தேன். நிறையவே எழுதினேன். நிறைவும் அடைந்தேன். தமிழ்ப்பற்று, தமிழிலக்கியப்பற்று, இந்தியப்பற்று, உலக இலக்கியப்பற்று, உலகமயமாதல் என என சின்னஞ்சிறு குருவியைப் போன்ற பார்வை வானுயரே வட்டமிடும் வல்லூறுவினுடையதானது.

அப்போதுதான் உலகப்புகழ் வாய்க்குமாறு என்னதான் எழுதுகிறார்கள் என்ற என் நின்றுபோன தேடலும் ஆராய்ச்சியும் தொடங்கியது. அனைத்து புகழ்வாய்ந்த எழுத்தாளர்களெல்லாம் இனி உலகப்புகழ்பெறப்போகும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அவரின் உலகப்புகழை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் மகாபாரதத்தின் நவீனத்துவ வடிவம் கொண்ட வெண்முரசுவை வாசித்துக்கொண்டே அவரின் அறிமுகத்தினாலும் ஏற்கெனவே என் தேடலுக்கான விடையைத் தெரிந்து கொள்ளும் ஆவலினாலும் என் விடுபட்டுப்போன ஆராய்ச்சியை புதுப்பிக்க உற்றதுணையாய் ஆராய்ச்சியாளனாய் எழுத்தாளனாய் கிடைத்த அலுவலக நண்பனின் தூண்டுதலினாலும் புதுமைப்பித்தன், க.நா. சுப்ரமணியம், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களை வாசித்தேன். இன்னும் லா.ச.ராமமிர்தம், சுந்தர ராமமூர்த்தி, அசோகமித்திரன், தாராசங்கர் பானர்ஜி, வண்ணதாசன்….இன்னும் இருக்கிறார்கள் நான் வாசிப்பதற்கு. எவ்வளவு வாசித்தாலும் தீராத வாழ்வனுபவங்கள் கொட்டிக்கிடக்கின்றன

ஒவ்வொரு நூலிலும். சரி. நான் தமிழச்சி. தமிழில் இருந்தால்தானே நான் ஈர்க்கப்பட்ட பெயரைக் கொண்டவரை வாசிக்கமுடியும். அவரோ ரஷ்யர். ஆவல் முடங்கிவிட்டது. ஆனால் என் ஆராய்ச்சியாள நண்பனோ விடவில்லை. நூலகத்தில் தேடி எடுத்துக்கொண்டு வந்துவிட்டான் லியோ டால்ஸ்டாயைத் தமிழில். நா.தர்மராஜன் அவர்களின் அரும்பாட்டால் தமிழில் வெளிவந்த லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளும குறுநாவல்களும் தொகுப்பே நான் முதலில் வாசித்தது. அட! இது உலகளாவிய எழுத்தேதான்! என என்னுள் நான் உணர்ந்தபோது நான் அடைந்த பரவசத்துக்கு அளவேயில்லை. அடுத்ததாக அதே அவரின் தமிழ் மொழிபெயர்ப்பு “அன்னா கரீனினா”. இதை வாசித்து முடிக்கையில்தான் லியோ டால்ஸ்டாயை ஏன் உலக எழுத்தாளர் எனவும் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் எனவும் அன்னா கரீனினா நாவலை ஏன் உலக சிறந்த நாவல் எனவும் புகழ்கிறார்கள் என புரிந்துகொண்டு ஆனந்தகண்ணீர் வடித்தேன்.

மொத்தம் 726 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல். ஏன் வாசித்து முடிக்கையில்தான் உணர்ந்தேன் என்றால் முதல் 600 பக்கங்கள் வரை என்ன இது என்ன இது என்று பல கேள்விகள். புரியாத புதிர்கள். இது என்ன வாழ்க்கையா ஏன் இந்த வாழ்க்கை இப்படிப்பட்ட வாழ்க்கை அவசியம்தானா இதுவும் வாழ்க்கையோ இப்படியும் வாழலாமா என குழப்பங்களும் சஞ்சலங்களும் சில நேரங்களில் சலனமின்மையும் சலிப்பும் தோன்றி விரக்தியின் வெறுப்பின் விளிம்பிற்கே கொண்டுவந்துவிட்டது இந்நாவல் என்னை. ஆனால் இத்தனை குழப்பத்திற்கும் சஞ்சலத்திற்கும் விடையளிக்கும் நேரம் வந்துவிட்டதை உணர்த்துமாறு 600 பக்கங்களுக்குப்பிறகு வரும் நூறு பக்கங்களில் வாழப்படும் வாழ்க்கை அதிவேகமாக அமைந்துள்ளது.

அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நொடியில் கட்டப்படுகின்றன. அல்லது சுக்குநூறாக்கப்படுகின்றன. என் கடந்த வாழ்க்கை- முதல் 36 வருட வாழ்க்கையானது இந்நாவலின் முதல் 600 பக்கங்கள் போல. கடந்த இரண்டாண்டு காலமாக நான் அறியும் வாழ்க்கை இந்நாவலின் கடைசி 100 பக்கங்கள் போல. நூல்களை வாசிக்க வாசிக்க வாழ்வின் வேகமும் அதிலுள்ள சுவையும் தெரிகிறது. அன்னா கரீனினா நாவலின் கதாமாந்தர்கள் வாயிலாக டால்ஸ்டாய் எனக்கு வாழ்க்கையின் அதுவும் மனித வாழ்க்கையின் ருசியைக் காட்டிவிட்டார். வாழ்வு என்பது இறப்பிற்கு பிறகுதான் என்பதை இதன்மூலம் நான் கண்டுகொண்டேன். இதைவிட வாழ்க்கையின் இனிமையை நான் வார்த்தைகளால் சொல்ல விரும்பவில்லை. வாழ்ந்து பார்க்க விரும்புகிறேன்! அன்பு நண்பர்களே! இயன்றால் இவர்களுடன் வாழ வாருங்கள். வாழ்வின் இனிமையை வாழ்ந்து காணுங்கள்!

அன்புடன்
கிறிஸ்டி

 

leo_3062020a

 

அன்புள்ள கிறிஸ்டி

நூறாண்டுகளுக்கும் மேலாக அன்னா கரீனினா உலக வாசகர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. அறிவுஜீவிகளின் ஆய்வுகள் மெல்ல நின்றுவிட்டன. அவர்களுக்கு வடிவம், மொழி ,பின்புலம் ஆகியவற்றுக்கு அப்பால் சென்று பேச ஏதுமில்லை. ஆனால் வாசகர்களுக்கு அவர்களின் வாழ்க்கை சார்ந்து அன்னா கரீனினாவில் நுண்ணிய தருணங்கள் சொல்வதற்கென வந்தபடியே உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் தலைமுறைகள் கண்டடைகின்றன. இலக்கியம் என்பது வாழ்க்கையை விளக்கும் ஒரு நிகர் வாழ்க்கை மட்டுமே, வேறொன்றுமே அல்ல என நிறுவும் படைப்பாக இன்று அன்னா கரீனினா உள்ளது

ஜெ

 

 

முந்தைய கட்டுரைவிவேக் ஷான்பேக்- மீண்டும் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஇரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி