’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71

[ 16 ]

காகவனத்திலிருந்து சண்டனும் இளவைதிகர் நால்வரும் கிளம்பும்போது உக்ரன் கிளர்ச்சியுடன் அங்குமிங்கும் பாய்ந்துகொண்டிருந்தான். முடிச்சு போட்டுவைத்த தோல்மூட்டையை அவன் பிரித்துக்கொண்டிருப்பதைக் கண்ட பைலன் “என்ன செய்கிறீர், சூதரே?” என்றான். பொதியிலிருந்த ஆடைகளை எடுத்து வெளியே போட்டபடி “என்னுடைய அரணிக்கட்டை, உள்ளே வைக்கிறேன்” என்றான் உக்ரன். “எங்கே அரணிக்கட்டை?” என்றான் பைலன்.

அரணிக்கட்டை தன் கையில் இல்லை என்பதை அப்போதுதான் உக்ரன் உணர்ந்தான். “என் அரணிக்கட்டை… என் அரணிக்கட்டை…” என்று கைகளை உதறியபடி அழத்தொடங்கினான். “அஞ்சவேண்டாம், இதோ எடுத்துத்தருகிறேன்” என்றான் ஜைமினி. “என் அரணிக்கட்டை எங்கே?” என்று உக்ரன் அழுதபடி கால்களால் தரையை உதைத்தான். அரணிக்கட்டையை குடிலெங்கும் தேடினார்கள். “நாய் தோண்டி வெளியே போடுவதுபோல மூட்டையை குதறிவிட்டார்” என்றான் ஜைமினி. “இதென்ன புதிய குழப்பம்? எங்கு வைத்தீர், சூதரே?” என்றான் சுமந்து.

“நீங்கள் என் அரணிக்கட்டையை திருடிவிட்டீர்கள்” என்று கண்ணீருடன் கைசுட்டி உக்ரன் சொன்னான். “நான் ஊர்த்தலைவரிடம் சொல்வேன்… அவர் உங்களை அடிப்பார்.” வைசம்பாயனன் “அவர் ஏதேனும் மூட்டைக்குள்தான் செருகியிருப்பார். அவிழ்த்துப்பாருங்கள்” என்றான். “மீண்டும் நான்கு மூட்டைகளையும் அவிழ்ப்பதா?” என சுமந்து சலித்துக்கொண்டான். “என் அரணிக்கட்டை!” என உக்ரன் வீரிட்டான். “செவி ரீங்கரிக்கிறது… ஏதாவது செய்யுங்கள். இனி இந்தக் குரலைக் கேட்டால் என் காது உடைந்துவிடும்” என்றான் வைசம்பாயனன். ஜைமினி ஒவ்வொரு மூட்டையாக பார்த்தபோது சுமந்துவின் மூட்டைக்குள் அது இருந்தது.

“நீ என் அரணிக்கட்டையை திருடினாய்… நீ கள்வன்” என்றான் உக்ரன். “சரி, இதோ வைத்துக்கொள்ளுங்கள்” என்றான் சுமந்து. அதை வாங்கி மார்போடணைத்தபடி இமைமயிர் ஒட்டியிருக்கும் கன்னங்களுடன் சுமந்துவை சீற்றத்துடன் நோக்கிய உக்ரன் அவன் கண்களை சந்தித்ததும் உதட்டைப்பிதுக்கி பழிப்பு காட்டினான். “அனைத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் அல்லவா?” என்றான் வைசம்பாயனன். அவன் போ என தலையசைத்தான். “அப்படியே விட்டுவிடுங்கள். அவரிடம் பேசவேண்டாம்…”

அவர்கள் மீண்டும் பணிகளில் விசைகொள்ள “வைதிகரே, இதை எங்கே வைப்பது?” என்று உக்ரன் மெல்லிய குரலில் கேட்டான். மறுமொழி சொல்லவேண்டாமென விழிகளால் பைலன் சொல்ல எவரும் அதை கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் அங்குமிங்கும் செல்வதனூடாக நடந்த உக்ரன் “அந்தணரே, இதை எந்த மூட்டையில் வைப்பது?” என்றான். பைலனைத் தொட்டு “இதை உங்கள் மூட்டையில் வைக்கலாமே” என்றான். அவன் ஒன்றும் சொல்லாதது கண்டு வைசம்பாயனனிடம் “இதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள், அந்தணரே” என கெஞ்சும் குரலில் சொன்னான்.

வைசம்பாயனன் சிரித்துவிட்டான். “கொடுங்கள்… ஆனால் நான் கொடுக்கும்வரை இதை கேட்கக்கூடாது” என்றான். “இல்லை, நான் முழவை மட்டும்… ஆ! என் முழவு! என் முழவு!” என உக்ரன் கூவினான். “என் முழவை காணவில்லை…” பைலன் “முழவு உங்கள் தந்தையிடமிருக்கும்… சென்று எடுத்துவாருங்கள்” என்றான். உக்ரன் “என் முழவு” என்றபடி வெளியே ஓடினான். அதை நோக்கிவிட்டு புன்னகையுடன் திரும்பி “இவரையும் கூட்டிச்செல்லப் போகிறோமா என்ன?” என்றான் பைலன். “அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்” என்றான் சுமந்து. “அவர் நம்முடன் அவரது தந்தையும் தாயும் வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்…” என்று ஜைமினி சொன்னான்.

முழவுடன் பாய்ந்து உள்ளே வந்த உக்ரன் மூச்சிரைத்தபடி “என் முழவு… இதில் காற்று இருக்கிறது” என்றான். “அரணிக்கட்டையில் அனல். இருபெரும் பூதங்களையும் இரு கைகளாக கொண்டிருக்கிறார்” என்றான் பைலன். அதை வாங்கி தன் மூட்டையில் வைத்த ஜைமினி “இனிமேல் கேட்கக்கூடாது… இது இங்கேதான் இருக்கும்” என்றான். “நான் எப்படி பாடுவது?” என்று உக்ரன் கேட்டான். “பாட்டு வரும்போது கேளுங்கள் சூதரே, எடுத்துத் தருகிறேன்.” உக்ரன் கவலையுடன் “எனக்கு இப்போது பாட்டு வருகிறதே” என்றான். “இவருக்கு சிறுநீரும் பாட்டும் ஒன்று. வந்துகொண்டே இருக்கும்” என்றான் பைலன்.

“பேசாமல் இரும், சூதரே… எங்களுக்கு பணிகள் உள்ளன” என்று ஜைமினி சொன்னான். உக்ரன் வைசம்பாயனனைத் தொட்டு “அந்தணரே, என்னுடைய அரணிக்கட்டையை எடுத்துக்கொடுங்கள்” என்றான். “பிடித்து வெளியே போட்டுவிடுவேன், தெரிகிறதா?” என வைசம்பாயனன் அதட்ட அவனை விழித்து நோக்கியபின் “நீ பன்றி” என்றான் உக்ரன். “நீர் எலிக்குஞ்சு…” என்றான் வைசம்பாயனன். “பிடித்து எலிவளைக்குள் போட்டுவிடுவேன்.” உக்ரன் ஆர்வம் கொண்டு “எலிவளைக்குள்ளா?” என்றான். நெருங்கிவந்து “உள்ளே என்ன இருக்கும்?” என்றான். “அய்யோ, ஜைமின்யரே இவரை கொஞ்சம் அப்பால் கொண்டுசெல்லமுடியுமா?” என்றான் வைசம்பாயனன் தலையில் அடித்துக்கொண்டு.

“எலிவளைக்குள் பூனை நுழையுமா?” வைசம்பாயனன் “இதற்குமேல் என்னால் தாளமுடியாது” என்றான். “எலிவளைக்குள் நான் போவேன்.” ஜைமினி “நான் உங்களை எலிவளைக்குள் கொண்டுசெல்கிறேன் சூதரே, வருக!” என்று தூக்கிக்கொண்டு சென்றான். “அப்பாடா… இது என்ன வார்ப்பு என்று எனக்கு பிடிகிடைக்கவே இல்லை” என்றான் வைசம்பாயனன். “கல்வி ஞானம் அனைத்தையும் தெய்வங்கள் இப்படி அவ்வப்போது கேலிசெய்வதுண்டு” என்றான் சுமந்து. “இது கொடுமையான கேலி. ஞானம் என்பது குரங்குக்கு வால் என கூடவே பிறந்து தன்விருப்பப்படி செயல்படும் என்றால்…” என்றான் பைலன்.

சண்டன் குடில்வாயிலில் வந்து நின்று “ஒருங்கிவிட்டீர்களா?” என்றான். “ஆம், கிளம்பிக்கொண்டிருக்கிறோம்” என்றான் பைலன். “ஜைமின்யர் எங்கே?” என்று சண்டன் கேட்டான். “அவர் சூதமைந்தரை கொண்டுவிட்டுவிட்டு வரச்சென்றிருக்கிறார். இங்கே அவரால் எதையுமே செய்யமுடியாத நிலைமை” என்று பைலன் சொன்னான். “அவரும் நம்முடன் வரவிருப்பதாக எண்ணுகிறார்” என்றான் சுமந்து. “அவனும் வரவேண்டியதுதானே? வேறெங்கே செல்வது?” என்றான் சண்டன்.

“அவரா?” என்று சுமந்து பைலனைப் பார்த்தான். “அவருடைய பெற்றோர் வருகிறார்களா?” சண்டன் “இல்லை, சுதைக்கு கரு தாழ்ந்துவிட்டது. பத்து நாட்களுக்குள் குழவியிறங்கலாம். இங்கேயே தங்கி மகவுக்கு விழி தெளிந்தபின் கிளம்புவதுதான் அவர்களின் எண்ணம்” என்றான். சுமந்து “அப்படியென்றால்…?” என்றான். “நீங்கள் எண்ணுவது புரிகிறது, அந்தணர்களே. உக்ரன் நம்முடன் மட்டுமே வரமுடியும். அவன் தேடியடையவேண்டியது ஆசிரியரை. தந்தையுடன் இருக்கும் அகவை முடிந்துவிட்டது.”

வைசம்பாயனன் “ஐந்தாண்டுகள் வரை தந்தையே ஆசிரியன் என்பார்கள்” என்றான். “அது பிறருக்கு. இவன் அனலென்றே எழுந்தவன்” என்றான் சண்டன். சுமந்து “அது உண்மை. ஆனால் எப்போது அனல் எப்போது பைதல் என்று சொல்லமுடியவில்லை. அதுதான் சிக்கலே” என்றான். “பார்ப்போம்” என்று சொன்னபின் சண்டன் “நீங்கள் சொன்னபின்னர்தான் நினைவுகூர்கிறேன். அவன் மட்டும் நம்முடன் வருகிறான் என்பதை அவனிடம் நாம் இன்னமும் சொல்லவில்லை. நேற்றுமுன்னாளே அவன் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன்” என்றான்.

சுமந்து “அன்னைக்கு உவப்புதானா?” என்றான். “அன்னை அவன்மேல் கொண்டிருக்கும் விலக்கம் வியப்பூட்டுவது. சிம்மத்தைப் பெற்ற அன்னைமானின் மருட்சி அது. அவளால் அவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாத எதையும்போல அவளுக்கு அவன் அச்சமூட்டுகிறான். அச்சம் விலக்கமாகி விலக்கம் வெறுப்பாகிவிட்டது.” சுமந்து “நாம் விலகிச்செல்லும் ஒவ்வொன்றின்மேலும் நாம் கொள்ளும் வெறுப்பு வியப்பூட்டுவது” என்றான். “வெறுப்பை உருவாக்கியே விலகிச்செல்கிறோம்” என்றான் பைலன்.

“அவள் நாம் அவனை எவ்வளவு முந்தி அழைத்துச்செல்கிறோமோ அவ்வளவு நன்று என நினைக்கிறாள். அவர்களின் சீர்வாழ்வொழுக்கில் அவன் பெரிய இடர். அவன் விலகிச் சென்றபின் அவள் அறிந்த வாழ்க்கையின் இனிமைகளில் திளைக்க முடியும்” என்றான் சண்டன். ஜைமினி உள்ளே வந்து “ஒரே அழுகை… அவருடைய முழவு இங்குதான் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு நம்முடன் வருவேன் என்று சொல்கிறார்” என்றான். பின்னால் ஓடிவந்து குடிசைக்குள் புகுந்த உக்ரன் “நானும் வருவேன், நானும் வருவேன், நானும் வருவேன்” என உச்சகட்ட கீச்சுக்குரலில் கூவினான். “ஷுத்ரசிரவஸ் என்று பெயரிட்டிருக்கவேண்டும். என்ன ஒரு குரல்” என்றான் பைலன் செவிகளில் விரல் நுழைத்து.

உக்ரனிடம் கைசுட்டி “சத்தம் போடாதே! நீயும் வருகிறாய்” என்றான் சண்டன். “நானுமா?” என அவன் விழிவிரிய கேட்டான். “ஆம், உன் மூட்டையை எடுத்துக்கொள். நாம் கிளம்புகிறோம்.” அவன் மெல்ல ஐயம் கொண்டு “தந்தை?” என்றான். “அவர் வரவில்லை.” அவன் புருவம் சுருக்கி “அன்னை?” என்றான். “அவளும் வரமுடியாது.” அவன் தலைசரித்து சற்றுநேரம் சிந்தனை செய்தபின் “அன்னையின் உள்ளே இருக்கும் குழவி?” என்றான். “அதை எப்படி கொண்டுசெல்லமுடியும்?”

உக்ரன் பெருமூச்சுவிட்டான். பின்னர் பின்னகர்ந்து சுவருடன் முதுகைச் சேர்த்தபின் “நானும் வரமாட்டேன்” என்றான். “குருவைத் தேடி போகவேண்டாமா?” என்றான் ஜைமினி. “வேண்டாம்… நான் வரமாட்டேன்” என்று கூவியபடி அவன் திரும்பி வெளியே ஓடினான். “வருவான். தகுந்த தருணங்களில் அவனுள் இருந்து அந்த வரலாற்றுமானுடன் வெளியே எழுவான்… நாம் கிளம்புவோம்” என்றான் சண்டன்.

அவர்கள் மூட்டைகளுடன் வெளியே வந்தபோது ஊர்த்தலைவரும் குடிமூத்தவர்களும் பிறரும் வெளியே காத்து நின்றிருந்தனர். ஊர்த்தலைவர் “எங்கள் சிறுகுடியில் இனி சொல்பெருகும், அந்தணர்களே. மகாசூதர் காலடிபட்ட நிலம் இது என எங்கள் குலங்கள் பெருமிதம்கொள்ளும்” என்றார். குடிமூத்தார் ஒருவர் “உங்கள் எழுத்தாணி தொட்ட எங்கள் மைந்தர்நாவுகளில் கலைமகள் வாழ்வாள். இந்த மலைக்குடி உங்களால் வாழ்த்தப்பட்டது” என்றார். பைலன் “எங்கள் உடலில் இந்த நிலத்தின் உப்பு கலந்துவிட்டது, குடியினரே. அது எப்போதும் அங்கிருக்கும்” என்றான்.

குடிப்பெண்டிர் அன்னம், நீர், மலர், விளக்கு, ஆடி எனும் ஐந்து மங்கலங்கள் கொண்ட தாலங்களுடன் இருநிரைகளாக நின்றிருந்தனர். குலத்தலைவர் குடுவைகளிலிருந்து மஞ்சள்நீரை எடுத்து அவர்களின் கால்களை கழுவினார். மலர், கனி, ஆடை, நறுமணம், பொன் என்னும் ஐந்து மங்கலங்கள் பரப்பிய தாலங்களை எடுத்து அந்தணர் நால்வருக்கும் அளித்தார். சண்டனுக்கு ஆடையும் நறுமணமும் பொன்னும் கொண்ட தாலத்தை அளித்து வணங்கினார். பெண்களின் குரவையோசையும் ஆண்களின் வாழ்த்தொலிகளும் சூழ எழுந்தன.

அவர்கள் கிளம்பிச் செல்லும்போது பைலன் திரும்பிப்பார்த்து “எங்கே சூதர்?” என்றான். “அம்மாவின் ஆடைக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறார்” என்றான் சுமந்து. கூட்டமாக அவர்களை குடியினர் ஊர்ச்சுற்றுக்கு அப்பால் கொண்டுசென்றனர். பைலன் திரும்பிப்பார்த்தான். அவன் விழிகளை சந்தித்ததும் சுதையின் சேலைக்குள் இருந்து நோக்கிக்கொண்டிருந்த உக்ரன் முகத்தை மூடிக்கொண்டான். அவன் புன்னகையுடன் “நாம் அழைக்கவேண்டுமென எதிர்பார்க்கிறாரோ?” என்றான். “சண்டர் அழைப்பார் என நினைக்கிறார் போலும்” என்றான் சுமந்து.

அவர்கள் சற்றுதொலைவுக்குச் சென்றதும் “பெரிய தந்தையே” என்று அழைத்தபடி உக்ரன் ஓடி அவர்களுக்குப் பின்னால் வந்தான். அனைவரும் சிரித்தபடி திரும்பிப்பார்த்தனர். சண்டன் “வருக, மைந்தா!” என்றான். பாதி வழி வந்ததும் நின்று “என் முழவு…” என்றபடி திரும்ப ஓடினான். “முழவு இங்கே இருக்கிறது” என்றான் சண்டன். “அம்மா?” என்றான் உக்ரன். “நீ மட்டும்தான் வருகிறாய்” என்றான் சண்டன். “அம்மா வரவேண்டும்” என்றான் உக்ரன். சண்டன் “நீ மட்டும்தான் வருகிறாய்… வா!” என்றபடி திரும்ப நடந்தான்.

உக்ரன் விம்மி அழுதபடி “அம்மாவும் வரவேண்டும்” என்று முனகிக்கொண்டு வந்தான். அவர்களை நெருங்கியதும் ஜைமினி அவனை தோளில் தூக்கிக்கொண்டான். “அம்மா அம்மா” என உக்ரன் கைநீட்டி கூவி அழுதான். சுதை திரும்பி உள்ளே சென்றுவிட்டாள். “அம்மா அம்மா” என்று அவன் கைகளை உதறி அழுதான். “இறக்கிவிடுங்கள், ஜைமின்யரே” என்றான் சண்டன். ஜைமினி இறக்கிவிட்டதும் உக்ரன் சுதை சென்றவழியை நோக்கியபடி நின்றான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சிறியகரிய நெஞ்சு ஏறியமைந்தது.

“இளையவர். அவருக்கு இன்னமும் அன்னையைப் பிரியும் வயதாகவில்லை” என்றான் வைசம்பாயனன். “உறவுகளிலிருந்து வெட்டிக்கொள்ளாமல் அறிவுப்பயணம் இல்லை. அது எப்போதேனும் நிகழ்ந்தே ஆகவேண்டும்” என்றான் சண்டன். உக்ரன் அவர்களுக்குப் பின்னால் மெல்ல நடந்துவந்தான். புல்வெளியைக் கடந்து அவர்கள் மலைப்பாதையை அடைந்தனர். உக்ரன் “அந்தணரே, என்னை தூக்கிக்கொள்ளுங்கள்” என்றான். ஜைமினி அவனை தூக்கிக்கொண்டான். அவன் தோளில் முகம்புதைத்து கண்ணீர்விட்டபடி உக்ரன் வந்தான்.

“மகாசூதரே” என்று ஜைமினி மெல்ல அழைத்தான். “வருந்துகிறீரா?” உக்ரன் “ஆம்” என்றான். “அன்னையிடம் திரும்ப விரும்புகிறீர்களா?” என்றான் ஜைமினி. “ஆம்” என்றான் உக்ரன். “நான் உங்களை நாளையே திரும்ப கொண்டுசென்று விட்டுவிடவா?” உக்ரன் மறுமொழி சொல்லவில்லை. “சொல்லுங்கள், செல்கிறீர்களா?” உக்ரன் பெருமூச்சுவிட்டான். “உங்கள் கண்ணீர் என்னை வருத்துகிறது, சூதரே.” உக்ரன் “நான் திரும்பிச் செல்லமுடியாது” என்றான். “ஏன்?” என்றான் ஜைமினி. “அன்னை என்னை வெறுக்கிறாள்” என்றான் உக்ரன்.

ஜைமினி சற்று அயர்ந்துபோனான். “ஏன் அப்படி சொல்கிறீர்கள்? அவர் உங்கள் அன்னையல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அன்னையானாலும் விருப்பும் வெறுப்பும் உண்டு.” இது யார் சொல்வது என ஜைமினி வியந்தான். குழந்தையின் முகத்தை பார்க்கவேண்டுமென விழைந்தான். “ஆனால் அவர் உங்கள் மேல் பெரும்பற்று கொண்டிருக்கவேண்டும் அல்லவா?” என்றான் ஜைமினி. மறுமொழிக்காக காத்தபோது அவன் நெஞ்சு அறைந்தது. “அறிவுடையோர் பாமரரை வெறுக்கிறார்கள்” என்று உக்ரன் சொன்னான். “ஆனால் பாமரர் அறிவுடையோரை மும்மடங்கு வெறுக்கிறார்கள்.”

ஜைமினி மெல்ல உடல்தளர்ந்தான். தோளிலிருந்த சிறுமைந்தனின் உடல் பலமடங்கு எடைகொண்டதுபோல் தோன்றியது. “ஏனென்றால், அறிவுடையோர் தங்கள் விருப்பப்படி பாமரர் வாழ்வை ஆட்டிவைக்கிறார்கள்” என்றான் உக்ரன். “அப்படியென்றால் ஏன் பாமரரை அறிவுடையோர் அஞ்சுகிறார்கள்?” என்றான் ஜைமினி. “பெருந்திரளாக ஆகும்போது பாமரர் மாபெரும் வல்லமை கொண்டவர்கள். ஒற்றைநிலைபாடு கொள்கையில் அவர்கள் அறிவுடையோரை பேரலை சிறுதுரும்பை என அள்ளி அடித்துச்செல்கிறார்கள்.”

ஜைமினி பெருமூச்சுவிட்டான். “இதை எங்கே அறிந்தீர்கள்?” என்றான். “குருகுலோதயம் என்னும் சிறுநூலில் அரசு சூழ்தல் பற்றி வரும் பகுதிகளை ஒரு முதுசூதர் பாடினார். நான் அதை கேட்டபோது இப்படி எண்ணிக்கொண்டேன்” என்றான் உக்ரன். “அதை யாத்தவர் யார்?” என்றான் ஜைமினி. “அவர் குருகுலத்து மூத்தவரான கிருஷ்ணதுவைபாயன மகாவியாசர்” என்றான் உக்ரன். ஜைமினி “அவர் மறைந்துவிட்டார் என்கிறார்களே?” என்றான். “அவர் மறையமுடியாது. அவருக்காகவே இங்கே அரசரும் முனிவரும் அந்தணரும் வீரரும் மக்களும் இணைந்து இவையனைத்தையும் நடிக்கிறார்கள். அவர் தெய்வங்களின் ஆடலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.”

ஜைமினி “அவர் பெயரில் வந்துகொண்டிருக்கும் பாடல்கள் சூதர்களே பாடுபவை என்கிறார்கள்” என்றான். “இல்லை, அவற்றை பிறர் பாடமுடியாது” என்றான் உக்ரன். “நீங்கள் கூடவா?” என்றான் ஜைமினி. சிலகணங்களுக்குப்பின் “நான் பாடலாம்” என்றான் உக்ரன். ஜைமினி மீண்டும் பெருமூச்சுவிட்டு அவன் முதுகை கையால் வருடி “ஆம் மகாசூதரே, தாங்கள் மட்டுமே பாடமுடியும்” என்றான்.

[ 17 ]

அன்று உச்சிப்பொழுதில் அவர்கள் சுகவாணி என்னும் சிறிய சோலையை சென்றடைந்தனர். நெடுந்தொலைவிலேயே அங்கே ஒலித்த பறவைக்குரல்களை கேட்டார்கள். களைத்துப்போயிருந்த சுமந்து “நாம் அங்கே ஒரு நல்ல சோலையை காணமுடியுமென நினைக்கிறேன்” என்றான். “ஆம், அங்கே முன்னர் தண்டக முனிவரின் குருநிலை இருந்தது. இன்றும் அவருடைய மாணவர்கள் அங்கே வாழ்கிறார்கள். இனிய சுனை ஒன்றும் சுற்றும் அழகிய மலர்மரங்களும் உள்ளன” என்றான் சண்டன்.

பைலனின் தோளில் இருந்த உக்ரன் துயில்கொண்டிருந்தான். அவன் எச்சில் பைலனின் தோளில் வழிந்தது. “தூங்கிவிட்டாரா?” என்றான் ஜைமினி. “ஆம்” என்றான் பைலன். “நான் வைத்துக்கொள்ளவா?” என்றான் ஜைமினி. “வேண்டாம்… எடையே இல்லாமலிருக்கிறார்” என்றான் பைலன். சுமந்து “நாம் எவ்வளவு விரைவாக நீர் அருந்துகிறோமோ அவ்வளவு நன்று” என்றான். “ஏன்?” என்றான் வைசம்பாயனன். “எனக்கு நீர்விடாய் இருக்கிறது, அதனால்தான்” என்றான் சுமந்து. வைசம்பாயனன் சினந்துநோக்க பைலன் சிரித்தான்.

அவர்கள் சுகவாணிக்குள் நுழைந்தபோது சிறிய நீரோடை ஒன்று குறுக்காக கடக்கக் கண்டனர். தெளிந்த நீர் இன்மையின் ஒளி என அலைபாய ஓடிக்கொண்டிருந்தது. சுமந்து நீர் அள்ளி அருந்தினான். பிறரும் நீரிலிறங்க பைலன் மெல்ல உக்ரனை தரையில் படுக்கவைத்தான். விழித்துக்கொண்ட உக்ரன் “நான் நான்!” என்றான். “என்ன?” என்றான் பைலன். “நான்தான் தின்பேன்.” பைலன் சிரித்து “எதை?” என்றான். “பலாப்பழம்… மிகப்பெரியது.” பைலன் “சிறியவை கனவில்கூட வருவதே இல்லைபோலும்” என்றான்.

உக்ரன் எழுந்து இறங்கி நீரை அள்ளி தலைமேல் விட்டுக்கொண்டான். “குடுமியை நனைக்கவேண்டாம்” என்று சண்டன் கூரிய குரலில் சொல்ல அவன் “சரி” என கரையில் ஏறி நின்றுகொண்டான். அப்பால் முருங்கைமரங்களாலான ஒரு காட்டுச்செறிவு தெரிந்தது. விழுந்து விழுந்து முளைத்து பசுந்தளிர்க்கற்றைகளாக அசைந்துகொண்டிருந்தது அத்தழைப்பு. “முருங்கை” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “ஆனால் காய்களே இல்லை.” சுமந்து “காய்கள் அதோ மேலே நிற்கின்றன” என்றான். “இங்கே எவரோ அன்றாடம் வந்து கீரை கொய்து செல்கிறார்கள். சேற்றுக்குள் காலடிகள் தெரிகின்றன” என்று சுமந்து சுட்டிக்காட்டினான்.

KIRATHAM_EPI_71

உக்ரன் “முருங்கை” என்றான். குனிந்து ஒரு சிறிய முசுக்கட்டைப் புழுவை நோக்கினான். அது சிலிர்த்த உடலுடன் மெல்ல சென்றுகொண்டிருந்தது. “அது சிறிய குட்டி… முருங்கையின் குழவி” என்றான். திரும்பி ஜைமினியிடம் “முருங்கைக்குழவி” என்றான். அவன் கண்களில் மெல்ல பாலாடையென ஓர் மங்கல் நிகழ்வதைக் கண்ட ஜைமினி மெல்ல “யார்?” என்றான். அதற்குள் அவன் சொல்வதைக் கேட்க பிறரும் அருகணைந்தனர். “முருங்கைக்குட்டி என்று ஒரு சிறுகுழவி இருந்தது முன்பு” என்றான் உக்ரன். “அது அன்னையின் கையில் பிறந்தது. விரலிடுக்குகளுக்குள் வளைந்து ஒடுங்கி வாழ்ந்தது.” அவன் கைகளை இடுக்கி அதேபோல அமர்ந்துகாட்டினான். “மிகச்சிறிய குட்டி அது.”

“அன்னை அந்தக் குட்டிக்கு பாலும் சோறும் ஊட்டி அணைத்து வைத்துக்கொள்வாள். அது அன்னையிடம் பேசிக்கொண்டே இருக்கும்.” கைகளை விரித்து “ஒருநாள் பெரிய வேடன் ஒருவன் வந்தான். அவன் கருமையாக இருந்தான். மிகப்பெரிய மீசை. அவன் கண்கள் களாப்பழம் போல சிவந்தவை. அவன் அந்த முருங்கையன்னையை ஓங்கி வெட்ட முருங்கையன்னை அப்படியே கீழே விழுந்தது. அதை அந்த வேடன் கூட்டிக்கொண்டுவந்த பெரிய எருமை மேய்ந்தது.” சண்டன் கூர்விழிகளுடன் அருகணைந்து “எருமையா?” என்றான். “ஆம், அது அந்த முருங்கையன்னையை மேய்ந்தது” என்றான்.

“அந்த வேடன் முருங்கையன்னையின் தடியை வெட்டி சிறுதுண்டுகளாக ஆக்கி கட்டி கையில் எடுத்துக்கொண்டு சென்றான். அதிலிருந்த முருங்கைக்குட்டி அப்படியே விதை போல மண்ணில் உதிர்ந்தது. அதற்கு எங்கே செல்வதென்றே தெரியவில்லை. அழுதுகொண்டே இருந்தது. அதன்பின்னர் காற்றுசெல்லும் திசையிலேயே அதுவும் செல்ல ஆரம்பித்தது. அதற்கு யாருமே இல்லை அல்லவா?” என்றான் உக்ரன். “ஆம்” என்றான் ஜைமினி. “அந்த முருங்கைக்குட்டி அழுதுகொண்டே சென்றது. செல்லும் வழியில் இலைகளைத் தின்றது. தின்னும்போதும் அது அழுதது.”

“அது என்ன ஆயிற்று?” என்றான் ஜைமினி. “அந்த முருங்கைக்குட்டி காட்டிலேயே வாழ்ந்தது. ஒவ்வொருநாளும் இரவில் அது அன்னையை நினைத்து அழுதுகொண்டே இருந்தது. ஒருநாள் அது மேய்வதற்காக செல்லும்போது அன்னையின் மணம் வருவதை அறிந்தது. அன்னை அன்னை என்று கூவியபடி அது முடியைச் சிலிர்த்தபடி ஓடியது. ஓடி ஓடி…” அவன் கைகளை தரையில் ஊன்றி புழுபோல தவழ்ந்து காட்டினான். மூச்சிரைக்க எழுந்து “அது ஒரு பெரிய வயலை சென்றடைந்தது. அங்கே…” அவன் கைகளைத் தூக்கி சுட்டுவிரல் அசையாமலிருக்க கண்கள் செருக புன்னகைத்தான்.

ஜைமினி நெகிழ்ந்து அவனை அள்ளி தன் கையில் எடுத்துக்கொண்டான். “அங்கே அவன் என்ன கண்டான்?” என்றான் பைலன். “அந்த வேடன் முருங்கையன்னையை துண்டுதுண்டாக வெட்டி நட்டிருந்தான். அன்னை அத்தனை கணுக்களிலும் முளைத்து பல்லாயிரம் மரங்களாக வளர்ந்து ஒரு பெரிய காடாக ஆகிவிட்டிருந்தாள். முருங்கைக்குட்டி அந்தக் காட்டுக்குள் சென்று குடியேறியது.” அவன் கைகளை விரித்து “எங்கே பார்த்தாலும் அன்னை. நூறு ஆயிரம் இலக்கம் அன்னையர். அன்னைக்காடு… அது அன்னைக்காட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தது.”

அவன் பால்பற்கள் தெரிய சிரித்தான். ஜைமினி உளம் எழ அவனைத் தழுவி புன்மயிர் குடுமியை முத்தமிட்டான். “என் அரணிக்கட்டை எங்கே?” என்றான் உக்ரன். “ஆரம்பித்துவிட்டார்” என்றான் பைலன். சுமந்து சிரித்தான். ஐயத்துடன் சுமந்துவை நோக்கி “இவர் என் அரணிக்கட்டையை எடுத்துவிட்டார்” என்றான் உக்ரன். “இல்லை இளஞ்சூதரே, உள்ளே இருக்கிறது” என்றான் ஜைமினி. “எங்கே?” என்றபடி அவன் சென்று இறக்கி வைக்கப்பட்ட மூட்டைகளை பிரிக்கத் தொடங்கினான்.

“இதென்ன தொடர்பே இல்லாமல் ஒரு குழந்தைக்கதை?” என்றான் வைசம்பாயனன். “அது இப்போது குழந்தையாக இருக்கிறது” என்றான் சண்டன். பைலன் “ஆனால் அக்கதையினூடாக வெளியே வந்துவிட்டார். இனிமேல் திரும்ப மாட்டார்” என்றான். “ஆம்” என்றான் சண்டன். “ஆனால்…” என்றபின் “சுதை, பாவம்” என்றான். “என்ன?” என்றான் ஜைமினி. “அவன் சொன்னதை கேட்டீர்கள் அல்லவா?” அவர்கள் அதை ஒரு குளிர்காற்றென ஒருங்கே உணர்ந்தனர். “ஈன்று மீளமாட்டாளா?” என்றான் பைலன். “அறியேன். ஆனால் அவன் உணர்கொம்புகள் கொண்ட உயிர்” என்றான் சண்டன்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா-பகடி குசும்பன்,
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள்-10