மதுரைக்காண்டம் -கடிதம்

 

HSShivaprakash

இனிய ஜெயம்,

எச். எஸ். சிவப்பிரகாஷ்  எழுதிய மதுரைக்காண்டம்

மற்றும் ஒரு புதிய அனுபவம். சேர மண்ணின் மனோஜ் குரூர் போல, தமிழ்ப் பண்பாட்டின் சாரமான ஒன்றுடன் பிணைந்த கன்னட நாடக ஆசிரியர் சிவப்ரகாஷ். மொழி வழி மாநிலம் என்ற இன்றைய அரசியல் பண்பாடு விதித்த எல்லைகளை கைப்பற்ற எத்தனை தியாகக் கதைகள்? நிலை நிறுத்த எத்தனை பாசிச அதிகார வெறிக் கூச்சல்கள்? பாரதப் பண்பாட்டு வரலாறே புலம் பெயர்தல் எனும் ஒற்றை சொல்லில் அடங்கி விடும். மொத்த புலம் பெயர் பாரதத்தினருக்கும் தமிழ்நாடுதான் முன்னம்பு. எனில் இது தமிழ் நாடு மட்டுமல்ல, தெலுங்கு, கன்னட, மலையாள, நாடும் கூடத்தான். இங்கே தமிழ்ப் பெரும்பான்மை நோக்கி எழும், அதிகாரக் கூச்சல் எல்லாம், நம்மில் ஒற்றுமை நீக்கி, அனைவருக்கும் சாவு கொண்டு வரும் நஞ்சே. இந்தகைய சூழலில் இத் தகு மூடப்பிரிவினைகளுக்கு எதிராக செயல்படும் எந்த இலக்கியப் பிரதியும், அதன் ஆசிரியர் மீது எனது மாளாத பிரியத்தை வெல்கிறது.

கொற்றவை நாவலின் சிலம்புடைப்பு நிகழ்வு, அதன் வழி அரசன் கொள்ளும் தரிசனம் முற்றிலும் தனித்துவமான ஒன்று. வெளியே மதுரையே பஞ்சத்தில் அழிகிறது. அரசன் அந்தப்புரத்தில் கிடக்கிறான். அவனது பட்டத்து அரசியின் சிலம்பு அவனுக்கு வெறும் சிலம்பல்ல, அவனது, வெற்றியின், குடிப் பெருமையின் அடையாளம் அது. கண்ணகியின் சிலம்பு உடையும் கணமே அவன் அறிகிறான், அங்கும் இங்குமென இருந்தது ஒரே சாரத்தின் இரு முகங்களே. அந்த தரிசனத்தில் இருந்து அரசன் என தனது அத்தனை பிழைகளையும் அறிகிறான். உயிர் துறக்கிறான்.

பாம்பும் கீரியும் கதையின் நாயக்கிக்கு கீறி இறந்த கணம் முதல் இட முலை நிற்காமல் பாலை உகிக்கிறது, அவள் கணவன் இறந்த பின்னோ, அது குருதி பெருக்குகிறது.

ஹளபேடு சிவம், இடக்கையின் மூவிரலால் உமையின் இடமுலை பாரம் ஏந்தி, அவளது முலைச் சுட்டை தொட்டு உறைந்திருக்கிறது சிவத்தின் இடக்கை சுட்டு விரல்.

இனி எந்நாளும் அன்னையாகி மகவுக்கு முலையளிக்க மாட்டேன். உண்ணாமுலையம்மை இடது முலை திருகி எறிந்து மதுரையை அழிக்கிறாள்.

கண்ணகி மறுத்து ஒதுக்கும் தாய்மையை அவள் முன் நிறுத்தி அவளை வினவுகிறது இக் கதை.

கோவலன் பேசும் முதல் உரையாடலே அவன் கவுந்தி வசம் கேட்கும் ஆசியுடன்தான் துவங்குகிறது. நிச்சயமின்மையின் வாசலில் நின்று அனு தினமும் அல்லாடும் தனக்கு நிலைத்த புத்தி அருளுமாறு வேண்டுகிறான். தவ வாழ்வை தேர்ந்த கவுந்தியோ கோவலன் கண்ணகி வசம் பற்றில் விழுந்து விடுவோமோ எனும் நிலையின்மையில் இருக்கிறாள். கோவலனுக்கு முன்பு இரண்டு பாதை ஒன்று மதுரைக்கு, ஒன்று இன்னும் அவன் எடுத்துக் கொஞ்சாத மணிமேகலை தவழும் மாதவியின் இல்லத்துக்கு. நிலைத்த புத்தி கொண்ட கண்ணகி இந்த இருமை இக்கட்டை ஒரு போதும் சந்தித்தவள் அல்ல? அப்படி ஒரு இருமை அவள் முன் நின்றிருந்தால்?

அவள் முன் நிற்கும் அவள் மகனும் பாண்டிய ராஜன்தான், கள்வன்தான். அவன் களவில் அவள் கொழுனனுடன் உண்டு உயிர்த்திருக்கிறாள். திருட்டு தவறெனில், அங்கே வசதிக்கு திருட்டு, இங்கே வயிற்றுக்கு திருட்டு, என்ன செய்யப் போகிறாள்?

இவ புத்திசாலியா இருக்கா, பாக்க நல்லா இல்ல, பொண்டாட்டி பாக்க அழகா இருக்கா புத்தியே இல்ல என்ன செய்யலாம்? புலம்பும் பொற்கொல்லன் கூட இருமை முன் தான் நிற்கிறான்.

கல்லின் இதயத்தை உடைத்து, உள்ளிருக்கும் மனத்தை பார்ப்பவர்கள் நாங்கள். கல் உடைப்பவர்கள் நாங்கள். நாடகத்தில் வரும் எல்லா பாடல்களுமே அழகு. முதற் கனல் நாவலில் அம்பைக்கு அல்லல்பட்டு அழியும் தட்சனின் மகள் கதை சொல்லப்படுவது போல, இங்கே கண்ணகிக்கு மும்முலை கொண்டு, நெருப்பிலிருந்து ஜனிக்கும் மீனாக்ஷி கதை சொல்லப் படும்போது, கண்ணகிக்கு கோவலனின் படுகொலை செய்தி வருகிறது.

மிக நல்ல நாடகம். முடிவை நோக்கி ஆசிரியர் விரைந்து ஓடுகிறார், தடுமாற்றங்களில் இன்னும் ஆழமாக நின்று நிலைத்திருக்கலாம்.

எல்லாக் குழந்தையும் மை பாதர் இஸ் தி ஒன்லி பெஸ்ட் என்றே மனதுக்குள் கூவும். எனக்கு ஜெயமோகனும் அதேதான். கோவலனின் வெட்டுண்ட தலையுடன் அரண்மனைக்குள் நுழையும் கண்ணகி எனும் படிமம் கொண்டு அந்த ஒரு நாடகீய எல்லையில் ஷிவப்ரகாஷ் அவர்கள் ஜெயமோகனை மிஞ்சுவதை சற்றே பொறாமையுடன் ஏற்றுக் கொண்டேன்.

சொல்புதிது சீனு

மதுரைக்காண்டம்

எச் எஸ் சிவப்பிரகாஷ்

எச் எஸ் சிவப்பிரகாஷின் மதுரைக்காண்டம்

எச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்

 

 

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57
அடுத்த கட்டுரைஇன்குலாபின் புரட்சி