‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 11

[ 12  ]

யக்‌ஷவனத்திலிருந்து வில்லுடன் கிளம்பிய அர்ஜுனன் எங்கும் நில்லாமல் புரவிகளிலும் படகுகளிலுமாக பயணம்செய்து மூன்றாம்நாளே சப்தஃபலத்தை சென்றடைந்தான். அச்சிற்றூரைச்சுற்றி மண்குவித்து எழுப்பப்பட்டிருந்த சிறியகோட்டைவாயிலில் அவனை காவலர்தலைவன் சதமன் தடுத்தான். சதமனை நன்கறிந்திருந்த அர்ஜுனன் திகைப்புடன் “என்ன செய்கிறீர்? நீர் என்னை அறியமாட்டீரா?” என்றான். “எவராயினும் நிறுத்துக என்று எனக்கு ஆணை, பாண்டவரே” என விழிதிருப்பி சதமன் சொன்னான்.

சினத்தை அடக்கியபடி  “நான் இளைய யாதவரை பார்த்தாகவேண்டும், இப்போதே” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர் எவரையும் சந்திக்கவிரும்பவில்லை என்பது மாறா ஆணை. தேவியருக்கும் படைத்துணைவருக்கும் ஒற்றருக்கும்கூட முகம் மறுக்கப்படுகிறது” என்றான் சதமன். “மறுக்கவே முடியாத முகம் என்னுடையது, மூடா” என்று அர்ஜுனன் சீறினான். “விலகு, நான் அவரைச் சந்திக்கும் உலகில் பிறமானுடர் இல்லை” என்று சொல்லி வாயில் கடக்கப்போனான்.

சதமன் வாளை உருவி குறுக்கே நின்று “என் தலையறுத்திட்டபின்னரே நீங்கள் உள்ளே நுழைய முடியும், பாண்டவரே” என்றான். “அரசரின் ஆணைக்காக உயிர்கொடுப்பதே இப்போது என் கடன்.” அர்ஜுனன் திகைத்து நின்று அவனைக் கூர்ந்து நோக்கியபின் “என்ன இது? இதுபோல் ஒருநாளும் நிகழ்ந்ததில்லை” என்றான்.  அப்பாலிருந்து வந்த முதிய யாதவ வீரராகிய கலிகர் “மூத்தவர் பிரிந்துசென்றபின் அரசர் தன்னிலையில் இல்லை, பாண்டவரே. உடலுக்குள் அவர் அகம் மாறிவிட்டிருக்கிறது” என்றார்.

“நான் அறியாத அகம் ஒன்று அவரிடமில்லை. எனக்கு அதில் ஐயமே இல்லை. சென்று சொல்லுங்கள், நான் வந்திருக்கிறேன் என்று” என்று அர்ஜுனன் கூவினான். “அவரின்றி நான் இல்லை என்பதனாலேயே நானின்றி அவரும் இருக்கலாகாது. சென்று சொல்லுங்கள் நான் வந்துள்ளேன் என்று.” கலிகன் “எச்செய்தியும் தன்னருகே வரலாகாதென்றே அரசாணை உள்ளது. அதை நாங்கள் மீறமுடியாது” என்றான். “என் வருகையை அறிவிக்கவில்லை என்றால் உங்கள் அனைவருக்கும் அவர் அளிக்கும் தண்டனை எழும்” என்றான் அர்ஜுனன்.

“ஆணையை நிறைவேற்றுவதே எங்கள் பணி. அரசரின் சொல்லெண்ணி ஆய்ந்து நோக்குவதல்ல” என்றான் சதமன். அர்ஜுனன் பற்களை கடித்துக்கொண்டு  “நான் கடந்துசெல்கிறேன். யாதவநாட்டில் எனக்கு எல்லைகளில்லை என்று அவன் சொன்ன சொல் என் செவிகளில் உள்ளது” என்றான். அவன் அவர்களைக் கடந்துசெல்ல முயல வாளை உருவிய கலிகன் “தங்களை எதிர்கொண்டுநிற்க என்னாலோ யாதவப்படைகளாலோ இயலாது, பாண்டவரே. ஆனால் உங்கள் முன் தலையற்று விழ எங்களால் முடியும்” என்றான்.

அர்ஜுனன் தயங்க குரல் தழைத்து அவன் சொன்னான் “இளவயதில் உங்கள் வேட்டைத்துணைவனாக வந்தவன் நான். இதுவே நம் உறவின் முடிவென்றால் அவ்வண்ணமே ஆகுக!” .அர்ஜுனன் தளர்ந்த குரலில் “நான் என்ன செய்யவேண்டும் இப்போது?” என்றான். சதமன் பேசாமல் நின்றான். “என் பொருட்டு ஒன்றை மட்டும் செய்யுங்கள். நான் வந்திருக்கும் செய்தியை மட்டும் அவருக்கு அறிவியுங்கள்…” என்றான் அர்ஜுனன்.

கலிகரின் விழிகள் மெல்ல கனிந்தன. “அதுவே ஆணைமீறலாகும். ஆயினும் தங்களுக்காக அதைச்செய்து அதற்குரிய தண்டனையை அடைய நான் சித்தமே” என்றார்.  அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். கலிகர் கோட்டைக்குள் செல்ல அர்ஜுனன் வெளியே நிலையற்ற உடலுடன் காத்து நின்றான். அந்தச் சிறுகோட்டையும் சூழ்ந்துள்ள மரங்களுமெல்லாம் இருளால் மூடப்பட்டுள்ளதாகத் தோன்றியது. கரிப்புகை படிந்த சுவரோவியம்போல. அது என்ன விழிமயக்கு என எண்ணிக்கொண்டான். மழைமூட்டமிருக்கிறதா என வானைநோக்கினான். கண்கூசவைக்கும் வெயிலே வானில் வளைந்திருந்தது.

இருநாழிகை கடந்தபின் கலிகர் திரும்பி வருவதை அவன் கண்டான். நெடுதொலைவிலேயே என்ன விடை எனத் தெரிந்துவிட்டது. அவன் அறிந்துவிட்டதை உணர்ந்த கலிகரின் நடையும் மாறுபட்டது. அருகே வந்ததும் கலிகர் அர்ஜுனின் வளைந்த புருவத்தின் முன் தலைவணங்கி “பொறுத்தருள்க பாண்டவரே, எவரையும் சந்திக்கும் நிலையில் இல்லை யாதவ மாமன்னர்” என்றார். “நான் வந்துள்ளேன் என்று சொன்னீரா?” என்றான் அர்ஜுனன், அவ்வினாவின் பொருளின்மையை உணர்ந்தபடியே.

“ஆம், அவர் காட்டிலிருந்தார். நான் அருகே சென்று பின்னால் நின்று தலைவணங்கி  ‘அரசே, தங்கள் தோழர் இளையபாண்டவர் முகம்காட்ட விழைவுகொண்டு வந்து நின்றிருக்கிறார்’ என்றேன். சீறித்திரும்பி ‘யார் நீ? உன்னிடம் ஆணையிட்டிருக்கிறேன் அல்லவா, எச்செய்தியும் என்னிடம் வரலாகாதென்று? ஆணையை மீற எப்படி துணிவுகொண்டாய்?’ என்று கூவினார். நான் பணிந்து ‘ஆம், ஆணையை மீறியமைக்கான தண்டம் என் தலைமேல் விழுக! இளைய பாண்டவர் என்பதனால்தான் நான் வந்தேன். அவர் தங்களில் ஒருபாதி என்று அறிந்த முதியவன் என்பதனால்’ என்றேன்.”

“இளையவர் குரலை அவ்வண்ணம் நான் கேட்டதேயில்லை, பாண்டவரே. ஒவ்வொருநாளும் அவர் உடலும் குரலும் விழிகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. ‘என்னுடன் எவரும் இல்லை. அவன் எவனாயினும் கிளம்பிச்செல்லும்படி சொல். ஆணை!’ என்றார். மீண்டும் ஒரு சொல்லெடுக்க எனக்கு துணிவிருக்கவில்லை. ஆயினும் என் உள்ளம் பொறாது  ‘அன்னையைத்தேடும் கன்றென வந்துள்ளார் பாண்டவர். அவர் கண்களின் துயர்கண்டே வந்தேன்’ என்றேன்.  ‘இங்குள்ள எம்மானுடருடனும் எனக்கு உறவில்லை. செல்… இக்கணமே செல்லவில்லை என்றால் உன் தலையை வெட்டி உருட்டுவேன்’ என்று கூவினார்.”

“அவர் முகம் வெறுப்பிலென சுளித்திருந்தது. கண்களில் பித்தெழுந்திருந்தது. உடல் நோய்கொண்டதென நடுங்கியது. தலைவணங்கி நான் மீண்டேன்” என்றார் கலிகர்.  அர்ஜுனன் நம்பாதவன் போல அச்சொற்களை கேட்டுநின்றான். பின் அவர் சொன்ன அனைத்தையும் ஒற்றைக்கணத்தில் தன்னுள் மீட்டெடுத்தான். “அவருக்கு என்ன ஆயிற்று?” என்றான். “அவரில் கூடிய தெய்வங்களே அதை அறியும்” என்றார் கலிகர். நீள்மூச்சுடன் “நான் திரும்பிச்சென்றேன் என்று அவரிடம் சொல்க!” என்றான் அர்ஜுன்ன். அவர்கள் மெல்ல தளர்ந்தனர்.

அர்ஜுனன் திரும்பிநடக்க கலிகர் “இளவரசே…” என்று பின்னால் நின்று அழைத்தார். திரும்பிய அர்ஜுனனிடம் “பொறுத்திருங்கள். அனைத்து மானுடர் வழியாகவும் அறியாத்தெய்வங்கள் கடந்துசெல்கின்றன. விண்பறப்பவரும் இருளூர்பவரும்…” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான். “இது ஒரு பருவம். இது கடந்துசெல்லும்.” அர்ஜுனன் “நான் வந்தது உடனடியாக அவர் போருக்குச் செல்லவிருக்கிறாரா என்று அறிவதற்கே” என்றான். “அறியேன். அவர் உள்ளம் செல்லும் வழியென்ன என்று எவராலும் உணரமுடியவில்லை” என்றார் கலிகர். “காலவர் வந்துசென்றபின்னரும் அவர் எதுவும் சொல்லவில்லை.”

அன்றிரவு மாற்றுருக்கொண்டு இருளுக்குள் காகமென அக்கோட்டைவாயிலை அர்ஜுனன் கடந்துசென்றான். நூறு புற்கூரைவீடுகள் மட்டும் கொண்ட அச்சிற்றூரின் தெருக்களினூடாக இருளிலும் நிழலிலும் கரந்து சென்று  ஊரின் மையமாக அமைந்த மரப்பட்டைக்கூரையிட்ட மாளிகையை அடைந்தான். அதனுள் புகுவது அவனுக்கு மிக எளிதாக இருந்தது. அங்கே விளக்கெரிந்த மாடியறையே யாதவருக்குரியது என உய்த்து படிகளைத் தவிர்த்து உத்தரச் சட்டங்களில் தொற்றி அங்கே சென்றான்.

அறை வாயிலருகே நின்றிருந்த காவலனை ஒலிகாட்டி திரும்பச்செய்து அவன்  விழிசலித்த கணத்தில் உள்ளே நுழைந்தான். அவன் காலடியோசை கேட்டு இளைய யாதவர் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தார். அவர் அமர்ந்திருந்த மஞ்சமெங்கும் ஏடுகள் சிதறிக்கிடந்தன. எழுந்தபோது அவை தரையில் விழுந்து பரவின. இளைய யாதவரின் உடல் நடுங்கிக்கொண்டிருக்க கண்கள் நிலையற்று உருள்வதைக் கண்ட அர்ஜுனன் “இளையவரே, நான்… தங்கள் தோழன்” என்று தணிந்த குரலில் சொன்னான்.  “எவர் உன்னை உள்ளே விட்டார்கள்? எப்படி வந்தாய்? யாரது?” என்று இளைய யாதவர் பதறினார்.

திகைப்புடன் அவருடைய அழுக்குடலையும் சிக்குகொண்ட கூந்தலையும் மெலிந்த தோள்களையும் தாடிபடர்ந்த முகத்தையும் நோக்கிய அர்ஜுனன் “இளையவரே, தங்களை சந்திப்பதற்காக வந்தேன்” என்றான். “நான் எவரையும் சந்திப்பதாக இல்லை. என்னை தனிமையில் விடுக! செல்…” என்று அவர் வெளியே கைசுட்டி சொன்னார். “நீங்கள் இருக்கும் நிலை புரிகிறது, இளையவரே. உங்கள் உள்ளம் இருள்கொண்டிருக்கிறது. நானும் கடந்துசென்ற இருள்தான் அது… ஆனால் ஒளியிலும் இருளிலும் நான் உங்களுடன் இருந்தாகவேண்டும்..” என்றான் அர்ஜுனன்.

“வெளியே போ… வெளியே போ” என்று கைசுட்டி பித்தன்போல இளைய யாதவர் கூச்சலிட்டார். “யாரங்கே? இவனை உள்ளே விட்டது யார்? யாரது?” வாயிலில் வந்து நின்ற காவலன் அர்ஜுனனைக்கண்டு திகைத்து வெளியே சென்று கூவி தோழர்களை அழைத்தான். அர்ஜுனன் மேலும் அமைதிகொண்டு “என்ன நிகழ்கிறதென புரிகிறது, யாதவரே. தனிமையை விழைந்தால் அதிலிருங்கள் சின்னாள். நான் பின்னர் வந்து பார்க்கிறேன். ஆனால் இத்தருணத்தில் பெருமுடிவுகள் ஏதும் தேவையில்லை” என்றான்.

அவன் அருகே செல்ல இளைய யாதவர் பற்களைக் கடித்தபடி பின்னால் சென்றார். “அரசே, கந்தர்வன் ஒருவனைக் கொல்ல நீங்கள் வஞ்சினம் உரைத்தீர்கள் என்று அறிந்தேன். ஆராயாது எடுத்த முடிவு அது. வேண்டாம். அவன் பிழையேதும் செய்யவில்லை. அது காலவ முனிவர் கொண்ட பிழைப்புரிதல். அதை அவரிடமே நான் பேசுகிறேன். அவன் அவர் கால்தொட்டு சென்னிசூடி மன்னிப்பு கோருவான்…” என்றான்.

“நீ எதற்கு இதைப்பேசுகிறாய்? நீ யார் இதைச் சொல்ல?” என்றார் இளைய யாதவர். “அவன்தேவி என்னை வந்து கண்டு அடைக்கலம் கோரினாள். அவன்பால் பிழையில்லை என்று கண்டு நான் அவளுக்கு சொல்லளித்தேன்.” பற்கள் தெரிய இளிப்பதுபோல் சீறியபடி “எது பிழை என்று முற்றறிந்துவிட்டாயா? உன் புல்லறிவை எனக்கு அளிக்கும்பொருட்டு வந்தாயா?” என்றார் இளைய யாதவர். படீரென தன் நெஞ்சை ஓங்கியறைந்தபடி உரத்த குரலில் “துவாரகையின் அரசன் உன் சொல்கேட்டுத்தான் மெய்யும் பொய்யும் அறியவேண்டுமா?”

அர்ஜுனன் என்ன நிகழ்கிறதென்றே அறியாதவனாய் தவித்தபடி “இல்லை, அவ்வாறில்லை. யாதவரே, என்னை நீங்கள் அறியமாட்டீர்களா? இதை நாம் பேசி முடிவுசெய்வோம். தாங்கள் முந்தி படையாழி கைக்கொள்ளவேண்டியதில்லை” என்றான். “கைக்கொண்டால் நீ என்ன செய்வாய்?” என்றபடி இளைய யாதவர் அருகே வந்தார். வெறிச்சிரிப்பு போல சினம் கொண்ட முகம் சுளித்திருந்தது. “என்னை நீ என்ன செய்வாய்? அவ்விழிமகனுக்கு அடைக்கலம் கொடுக்கையில் நீ அறிந்தாயல்லவா அவனை நான் கொல்வேன் என வஞ்சினம் உரைத்தேன் என்று?”

அர்ஜுனன் கைநீட்டி அவர் கைகளை பற்றப்போனான். “இல்லை இளையவரே, உண்மையிலேயே எனக்குத்தெரியாது தாங்கள் அவ்வாறு வஞ்சினம் உரைத்தீர்கள் என்று. அறத்தைச் சொல்லி அவர்கள் கோரியமையால் மட்டுமே வாக்களித்தேன். மங்கலம் நிறைந்த பெண்ணின் முகம் கண்டு அவ்வறத்தை நான் உறுதிசெய்துகொண்டேன்” என்றான்.

அவன் கையைத் தவிர்த்து “எப்படி அந்த வாக்கை அளித்தாய் நீ? இழிமகனே சொல், எப்படி அளித்தாய் அந்த வாக்கை? அவனைக் கொல்வதாக வஞ்சினம் உரைத்தவர் எவரென அறியாமல் அவ்வாக்கை அளிக்கும் துணிவை எப்படி கைக்கொண்டாய்?” என்றார் இளைய யாதவர். அவன் கண்கள் விரிந்து அதற்குள் விழிகள் உருண்டன. “இப்புவியில் எவர் வந்தாலும் எதிர்நிற்கமுடியும் என நினைத்தாய் அல்லவா? நீ இப்புவியின் அறமனைத்தையும் காக்கப்பிறந்தவன் என்று எண்ணினாய் அல்லவா? சிறுமதியனே, நீ யார்? அஸ்தினபுரி என்னும் சிற்றரசின் இளவரசன். அதையும் இழந்து காடுசேர்ந்து இரந்துவாழும் கோழை. எப்படி அந்த உறுதியை அவளுக்களித்தாய்? உனக்குமேல் இப்புவியில் எவருமில்லை என்று எண்ணினாயா?”

அர்ஜுனன் பற்களைக் கடித்து ஒருகணம் தன்னை இறுக்கி கட்டுப்படுத்திக்கொண்டு பின் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்தான். “இவை ஏன் நிகழ்கின்றன என்று நானறியேன். எங்கோ எதுவோ பிழைபட்டுவிட்டது. இச்சொற்கள் உங்களுக்குரியவை அல்ல” என்றான். திரும்பிச்செல்ல அவன் உடல் அசைந்ததும் அவன் தோளைத்தொட்டு திருப்பி தன் முகத்தை அவன் முகமருகே கொண்டுவந்து உற்றுநோக்கி இளைய யாதவர் சொன்னார் “அஞ்சி ஓடாதே. நீ ஆண்மகனுக்குப்பிறந்தவன் என்றால் அஞ்சி பின் திரும்பாதே. அடைக்கலம் கொடுக்கையில் நீ அறிந்திருக்கவில்லை நானென்று. இன்று என் ஆழி எதிர்எழுகிறதென அறிந்ததும் என்னிடம் வந்து மன்றாடுகிறாய்.”

“நான் எவரையும் அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம் நீ அஞ்சமாட்டாய். ஏனென்றால் நீ மாவீரனான பாண்டுவின் மைந்தன் அல்லவா? ஆண்மையின் உச்சத்தில் நின்று அவன் பெற்ற மைந்தன் அல்லவா?” என்று வெறுப்புடன் இளைய யாதவர் நகைத்தார். உடல்நடுங்க அவர் கைகளைப்பற்றியபடி “இளையவரே, வேண்டாம். இதற்குமேல் சொல்லெடுக்கவேண்டாம்” என்றான். அக்கைகளை வீசியடித்து உரக்க “சொல்லெடுத்தால் என்ன செய்வாய்? வில்லெடுத்து என் தலைகொய்வாயா? முடிந்தால் அதைச்செய். செய் பார்ப்போம்” என்று கூவினார் இளைய யாதவர்.

அர்ஜுனனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவ்விழிகளில் இருந்த வன்மையை அவனால் விழிதொட்டு நோக்கமுடியவில்லை. “அறிவுடையவன் என்றால் ஆய்ந்து முடிவெடுக்கவேண்டும். ஆணென்றால் எடுத்த முடிவுக்காக உயிர்துறக்கவேண்டும். நீ பேடு. உன் தந்தைக்கு சிறந்த மைந்தன்தான். போ, போய் பெண்ணுருக்கொண்டு பெண்களுடன் புனலாடு. பெண்டிரின் ஆடை அணிந்து அரங்கேறி நடனமாடு. போ!”

ஒருகணம் அது இளைய யாதவரேதான் எனத் தோன்றிவிட்டது. உயிருடன் உறவுகொண்ட நண்பனே அப்படி உட்புகுந்து அறியமுடியும். உயிர்துடிக்கும்படி நரம்புமுடிச்சில் கைவைத்து கொல்லமுடியும். அப்படியென்றால் தோள்தழுவிக் களியாடுகையிலும் ஒரு உளமூலை இவற்றையெல்லாம் அள்ளி எண்ணிச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. சிரிப்புக்கும் கனிவுக்கும் அப்பால் படைக்கலம் கூர்கொண்டபடியே இருந்திருக்கிறது. இவரும் இவ்வாறென்றால் இப்புவியில் எஞ்சுவதுதான் என்ன? நெஞ்சுவிம்ம விழிநீர்திரள அவன் முற்றிலும் தளர்ந்து விழுபவன் போலானான்.

“என்ன சொன்னாய், பெண்ணுக்கு சொல்லளித்தாயா? அவைநடுவே தன் தேவியை இழிவடையவிட்டு நோக்கி நின்ற புல்லன். நீயா பிறிதொரு பெண்ணைக் காக்க உயிர்கொடுக்கப்போகிறாய்?” அர்ஜுனன் “இளையவரே, வேண்டாம். அளிகூருங்கள்… வேண்டாம்” என்று உடைந்த குரலில் சொன்னான். “ஆ! ஏன் நீ நின்றாய் என்று அறியாதவனா நான்? அவள் உளம்நிறைந்த கர்ணன் அவளை இழிவுபடுத்தட்டும் என்று காத்து நின்றாய். அவள்  பீமனைக் கடந்து உன் காலில் வந்து விழுந்து அடைக்கலம் கோரட்டும் என்று நோக்கி நின்றாய். அன்பும் அறமும் எங்கே? உன்னுள் மலமெனப் புளித்து நாறுவது ஆண்மையின் வெற்றாணவம் அல்லவா?”

அவன் இளைய யாதவரின் விழிகளையே பதைப்புடன் நோக்கினான். அவனறிந்த எவரும் அங்கில்லை. அவை ஒருகணமும் நிலைகொள்ளாமல் உருண்டன. காட்சியென எதையும் அள்ளமுடியாதவை போல. அவன் பற்களை இறுகக் கடித்து கைமுட்டிகளை முறுக்கி கண்களின் மென்நரம்புகள் வழியாக குருதி சூடாகப் பெருகிச்செல்ல நின்றான். “சொல், உன் குரல் எங்கு போயிற்று?” என்றார் இளைய யாதவர். அவன் இதழ்கள் மட்டும் வலியுடன் அசைந்தன. “நான் சொல்லவா? அவைநடுவே ஆடைகளையப்பட்டது உன் அன்னை. அவையமர்ந்து நோக்கி நின்றிருந்தவர் விதுரர்…” இளைய யாதவர் தன் தொடையில் ஓங்கி அறைந்தபடி வெடித்துச் சிரித்தார்.

“போதும்!” என்று அர்ஜுனன் கூவினான். “போதும், இனி சொல்லில்லை” என்றான். “ஆம், சொல் இல்லை. சொல்லே வேண்டியதில்லை. செல். ஆணென்றால் வில்லுடன் வா” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் பற்களை கடித்துக்கொண்டு முகம்தூக்கி “வருகிறேன். சித்ரசேனன் என் காவலில் இருப்பான். எவரும் அவனை தொடப்போவதில்லை. எதிர்வரும் எவரும் என் எதிரிகளே. வில்லுண்டு, காண்டீபம் அதன் பெயர்” என்றபின் அர்ஜுனன் திரும்பி வாயிலில் நின்ற காவலரை விலக்கி அறையை விட்டு வெளியே சென்றான்.

அவனுக்குப்பின்னால் காலடிகள் ஒலிக்க ஓடிவந்த இளைய யாதவர் “நான் என் படையாழியுடன் வருகிறேன். முடிந்தால் அவனைக் காப்பாற்று. எதிரே நீ நின்றால் உன் தலையறுத்து உருட்டிவிட்டு அவனைக் கொன்று எரிப்பேன். அந்நீறை என் நெஞ்சிலும் நெற்றியிலும் சூடி நின்றாடுவேன். ஒரு பேடியை வென்று நிற்க என் படையாழிக்கு அரைக்கணமே போதும்” என்றான். உரக்க நகைத்தபடி “உன்னைக் கொல்லும்போதே நான் என் இறுதி முடிச்சையும் அவிழ்க்கிறேன். இங்கு என்னை கட்டிவைக்கும் ஏதுமில்லை பின்னர்” என்றார்.

KIRATHAM_EPI_11

திரும்பிப்பார்க்காமல்  அர்ஜுனன் படிகளில் இறங்கினான். வழியெங்கும் அவன் சந்தித்த அத்தனை யாதவர்விழிகளும் திகைப்புகொண்டிருந்தன. அரண்மனையைவிட்டு வெளியே வந்து இருண்ட முற்றத்தில் பந்தங்களின் செவ்வொளி சூழ்ந்த வெறுமையில் இறங்கி நின்றபோது அனைத்தும் கனவெனத் தோன்றியது. மறுகணமே நகைப்பும் எழுந்தது.

[  13  ]

அர்ஜுனன் யக்‌ஷவனத்திற்குத் திரும்பியபோது அவனிடம் ஏற்பட்டிருந்த மாறுதலை சகதேவன் மட்டுமே  உணர்ந்தான். பீமனும் அர்ஜுனனும் பிறரிடமிருந்து தனித்தலையும் வழக்கம் கொண்டவர்கள் என்பதனால் அவர்களின் துயரம் எப்போதுமே சொல்லில் பகிரப்படுவதில்லை. ஆயினும் மூத்தவர்களின் ஓரிரு அசைவுகளிலேயே அவர்களின் உள்ளறியும் ஆற்றல் சகதேவனுக்கு இருந்தது.

அர்ஜுனன் சென்றது எங்கு என அவன் அறியவில்லை. ஆனால் வந்து சேர்ந்த முதல்நாள் உணவருந்த கைகழுவி வந்து அமர்ந்தபோதே அவன் தமையனின் உள்ளத்துயரை உணர்ந்துகொண்டான்.

அன்றிரவு அர்ஜுனன் தன் வில்லுடன் காட்டுக்குள் சென்றபோது சற்றுதொலைவில் சகதேவனும் தொடர்ந்து சென்றான். நெடுந்தொலைவுவரை இளையவன் வருவதை அர்ஜுனன் உணரவில்லை. நீர்நிலையொன்றின் அருகே அவன் நின்றபோதுதான் விழிப்புகொண்டு பறவைக்குரல்களை அறிந்தான். வில்லுடன் திரும்பியபோது சகதேவன் அருகணைவதைக் கண்டு புருவம் சுருக்கி காத்து நின்றான். அவனை நெருங்கி வணங்கிய சகதேவன் “தாங்கள் தனிமையில் செல்வதால் உடன் வந்தேன், மூத்தவரே” என்றான்.

“நான் எப்போதும் தனிமையில்தான் செல்கிறேன்” என்றான் அர்ஜுனன். “இல்லை, எப்போதும் இளைய யாதவர் உடனிருக்கிறார்” என்று சகதேவன் சொன்னான். “ஆகவேதான் தங்களுடன் பிற எவரும் அருகணைய முடியாமலிருக்கிறது. உடன்பிறந்தோர் நால்வரும். மணந்த தேவியரும் மைந்தரும்கூட.” அர்ஜுனன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். பின்னர் “நீ எளிதில் தொட்டுவிடுகிறாய், இளையோனே. இன்று நீயே எந்தையின் வடிவாக எங்களுள் இருக்கிறாய். உன்னிடம் நான் சொல்லியாகவேண்டும்” என்றான். சகதேவன் புன்னகைத்தான்.

“நான் இளைய யாதவரை இழந்துவிட்டேன்” என்று அர்ஜுனன் தரைநோக்கியபடி சொன்னான். சகதேவன் எம்மறுமொழியும் சொல்லாமை கண்டு விழிதூக்கி நோக்கினான். அவன் புன்னகையுடன் “அவ்வாறு இழக்கப்படும் உறவல்ல அது, மூத்தவரே” என்றான். அர்ஜுனன் “உறவுகளில் அப்படி ஏதேனும் உண்டா என்ன? அவர் இங்குவருகையில் தமையனை இழந்த துயரை சுமந்துவந்தார். காவடியின் மறுஎடையாக என்னை இழந்த துயரை வைக்க விழைகிறார் போலும்” என்றான்.

“அது வெறும் குருதியுறவு” என்றான் சகதேவன். “குருதியுறவென்பது ஒரு தொடக்கம் மட்டுமே. மண்ணில் வாழ்க்கை குருதித்தொடர்புகளால் நிகழவில்லை. இங்கு நிகழும் லீலையை கர்மஜாலா என்கின்றனர் நூலோர். எனவே உறவுகளனைத்தும் கர்மபந்தங்கள் மட்டுமே.” அர்ஜுனன் அவன் சொல்வதை நோக்கிக்கொண்டிருந்தான். உரிய சொற்களை மட்டுமே எடுத்துக்கோக்க அவனால் எப்படி முடிகிறது? ஏனென்றால் அவன் உணர்வுகளை அவற்றுடன் இணைத்துக்கொள்வதில்லை.

“செயல்வலையில் சிக்கிய மானுடருக்கு செயலுறவே மெய். நீங்கள் அவ்வாறு இணைக்கப்பட்டவர்கள்” என்று அவன் மீண்டும் சொன்னான். “இப்போது நிகழ்வதென்ன என்று நீ அறியமாட்டாய், இளையோனே. நானும் அவரும் களம்குறித்துவிட்டோம். இருவரில் ஒருவரே எஞ்சுவோம்” என்றான் அர்ஜுனன். அவன் சொல்வதை கூர்ந்து நோக்கியபின் சகதேவன் மீண்டும் புன்னகைத்தான்.

“சொல், இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அபஹாரம் என்று இதை நிமித்திகமெய்நூல் சொல்கிறது, மூத்தவரே. மானுட வாழ்க்கை என்பது இப்புவியை ஆளும் பெருவல்லமைகளினால் ஆட்கொள்ளப்படுவதே. வெற்றியால் புகழால் செல்வத்தால் காதலால் வஞ்சத்தால் அச்சத்தால் சிறுமையால் ஆட்கொள்ளப்பட்டுத்தான் இங்கு அத்தனை மானுடரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவருடைய ஆட்கொள்ளல் என்ன என்று என்னால் அறியமுடியவில்லை. ஆனால் அதுவும் இயல்பென்றே நூலறிந்த நெஞ்சால் உணர்கிறேன்.”

“என்னை அச்சுறுத்துகிறது அந்த வஞ்சம்” என்று  அர்ஜுனன் சொன்னான். “பிற எவரும் என்னை இப்படி வெறுக்க இயலாது. பிறிதெவ்வகையிலும் என் மேல் இப்படி நச்சுமிழமுடியாது.” சகதேவன் சிரித்து “ஆம், அவர் ஒருவரே உங்களை உட்கடந்து கொத்த முடியும். நீங்கள் அவரையும் அவ்வண்ணம் செய்யலாம்” என்றான். “நானா, அவரையா? நீ அவ்வாறு நிகழுமென எண்ணுகிறாயா?” சகதேவன் “இது நிகழுமென முன்நாள் வரை எண்ணியிருந்தோமா?” என்றான். “ஒருநாளுமில்லை. என் நெஞ்சில் அன்னையூட்டிய முலைப்பால் எஞ்சியிருக்கும் வரை அது நிகழாது” என்றான்.

சகதேவன் மறுமொழி சொல்லவில்லை. அர்ஜுனன் சட்டென்று இளையோனின் கைகளை பற்றிக்கொண்டான். “இளையோனே, எனக்கு அச்சமாக உள்ளது. உண்மையிலேயே அது நிகழவும் கூடும். என்னை ஆள்வது எந்த தெய்வமென்று நான் அறியேன்” என்றான். அக்கைகளை நெரித்தபடி “அவ்வாறு நிகழுமென்றால் அதற்கு முன்னரே நான் இறக்கவேண்டும். அதைநான் செய்தேன் என்று என்னை நோக்கி நான் இழிவுகொள்ளலாகாது… நான்  அஞ்சுகிறேன், இளையோனே” என்றான்.

“அது நிகழட்டும்” என்று சகதேவன் சொன்னான். “அணுக்கங்கள் அப்படி ஓர் எல்லையில் முட்டிக்கொண்டாகவேண்டும். குருதியும் சீழுமெழ மீண்டும் தழுவிக்கொண்டாகவேண்டும்.” அர்ஜுனன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “நட்பின் கெடுமணம் இது, மூத்தவரே” அர்ஜுனன் தளர்ந்து கைகளை விட்டுவிட்டு இருளை நோக்கி திரும்பிக்கொண்டான். “இனித்தினித்து அறிந்தீர்கள். இனி கசந்து கசந்து அறிவீர்கள். அறிதல் அணுக்கத்தையே உருவாக்கும்” என்றான் சகதேவன்.

“எல்லா உறவுகளிலும் இத்தகைய ஒரு தருணம் நிகழும் என்று எண்ணுகிறாயா?” என்றான் அர்ஜுனன். “நிகழுமென்றால் ஒரு புதியஆழம் வெளிப்படுகிறது” என்றான் சகதேவன். நெடுநேரம் தன்னுள் ஆழ்ந்து தனித்து நின்றபின் மீண்ட அர்ஜுனன் “எத்தனை பெரிய ஆடல்” என்றான். “ஆம்” என்று சகதேவன் சொன்னான் “நிமித்திகக் கலை அதன் நுனியை அறிய முழுவேதத்தையும் எடுத்தாள்கிறது.”

“இளையோனே, இப்போர் நிகழுமென்றால் என்ன ஆகும்?” என்றான் அர்ஜுனன். “நீ உன் நிமித்திகநூலைக்கொண்டு சொல்!” சகதேவன் “ஒவ்வொரு செயலுக்கும் நிமித்திகநூலை அணுகுபவர் மூடர். உங்கள் பிறவிக்கணக்கை நான் நோக்கிவிட்டேன். நன்றே நிகழும்” என்றான். “நான் என்ன செய்வது?” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, உங்களிருவரையும் சுழற்றிச்செல்லும் அப்பெருக்குக்கு உங்களை ஒப்படையுங்கள்.” அர்ஜுனன் சிலகணங்கள் எண்ணியபின் “ஆம், வேறுவழியில்லை” என்றான்.

முந்தைய கட்டுரைஒரு மன்னிப்பு
அடுத்த கட்டுரைவீரசிங்கம் பயணம் போகிறார்!