வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 12

DSC_0983

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசன் கவிதைகளை ரவி சுப்ரமணியம் இசையுடன் அமைத்திருந்தது மிகச்சிறப்பாக இருந்தது. தாமிரவருணிக்கரையில் அமர்ந்து அந்தக்கவிதைகளைக் கேட்பதுபோல ஓர் அனுபவம்

ஊருக்குச் சென்றால் தாமிரவருணி அங்கே இல்லை என்பதுதான் என்னைப் போன்றவர்களின் சோகம். அங்கே இருப்பது ஒரு பெரிய சாக்கடை

ஆனால் இதேபோல மொழியிலும் இசையிலும் தாமிரவருணி இருந்துகொண்டே இருக்கிறாள் என நினைக்கையில் ஆறுதல்

சங்கரநாராயணன்

***

அன்புள்ள ஜெமோ

வண்ணதாசன் வாசகர்களில் கணிசமானவர்களுக்கு உங்களைப்பிடிக்காது என்று கடிதங்கள் வழியாகத் தெரிந்தபோது வேடிக்கையாக இருந்தது. இவர்கள் எல்லாரும் விஷ்ணுபுரம் விருது நிகழ்ச்சிக்கு வருவார்களா? அடிதடி ஏதாவது நடக்குமா? காவல் ஏற்பாடு உண்டா?

சரி, நானும் ஏன் மறைக்கவேண்டும். எனக்கும் உங்களை சுத்தமாகப்பிடிக்காது. நான் சிவாஜி ரசிகன். நீங்கள் அவரைப்பற்றி எழுதியது ஆபாசம், அவதூறு என்றுதான் நினைக்கிறேன். அதுவரை நீங்கள் எழுதிய இரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன். அதன்பின்னர் படிப்பதை நிருத்திவிட்டேன்.

ஆனால் வண்ணநிலவன், வண்ணதாசன் ரெண்டுபேரும் என் ஆதர்ச எழுத்தாளர்கள். ஜானகிராமன் அழகிரிசாமி பிடிக்கும். அவர்கள் எழுதிய அழகியலுடன் இன்று ஓரளவுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் மட்டும்தான் எழுதிக்கொண்டிருக்கிறார். நீங்கள் எல்லாம் மூளையை வைத்து எழுதுபவர்கள்.

வண்ணதாசனுக்கு விருது அளிப்பதற்கு வாழ்த்துக்கள். அவருடைய சமவெளி நான் முதலில் வாசித்த தொகுப்பு. அதன்பின் இன்றுவரை வாசித்துக்கொண்டே இருக்கிறேன்

நடராஜன்

***

வணக்கம்.

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டது பற்றி ஆர்.வி. சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் எழுதிய பதிவை படிக்க நேர்ந்தது. அதில் குறிப்பிட்டிருந்த விஷயம் (http://tamil.samayam.com/latest-news/technology-news/shock-wikipedia-mentioned-as-writer-vannadasan-died-in-1976/articleshow/55045441.cms) ஒரு நொடி கோபமும் சிரிப்பும் ஏற்படுத்தியது.

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட மறுநாள் தேவதேவனுடன் பேசினேன். அவரிடம் விஷயத்தைச் சொல்லி மகிழ்ச்சி தெரிவித்தேன். அவர் எனக்குத் தெரியாதே என்றார். ஆச்சரியமாக இருந்தது.

வண்ணதாசன் தூத்துக்குடியில் சில காலம் இருந்தபோது இருவரும் பழகியதைச் சொன்னார். நீண்ட காலமாக தொடர்ந்து எழுதிவரும் அவருக்கு சாகித்திய அகாடமி விருதும் கிடைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

பேச்சினிடையே, வண்ணதாசனுக்குத்தான் விருது அறிவித்திருக்கிறார்கள். கல்யாண்ஜிக்கு இல்லையா? என்றேன். ஆமா என்றபடி சிரித்தார்.

நன்றி.

இப்படிக்கு,

வே.ஸ்ரீநிவாச கோபாலன்

***

வணக்கம்

வண்ணதாசன் அவர்களுக்கு விருது எனும் செய்தியை படித்தவுடன் அவரின் கவிதகைளே எனக்கு நினைவில் வந்தது. நான் அவரின் கவிதைகளை பல ஆண்டுகளாகவே வாசித்தும் ரசித்தும் வந்திருக்கிறேன்., பறவைகளும் அவற்றின் பூஞ்சிறகுகளும் பூனைக்குட்டிகளும் மரங்களும் சிறுமிகளும், வெயிலும் மழையும யானைகளுமாய் பரந்து விரிந்ததோர் கவிதா உலகம் அவருடையது.

நான் அவர் கதைகளை படித்ததே இல்லை விருது அறிவிப்புக்கு முன்னால். உங்களுக்கு பலர் எழுதும் கடிதங்களைப் பார்த்த பின்னர் அவரின் வலைத்தளம் சென்று ஒரு முதல் கதையை வாசித்தேன் .

”கனியான பின்னும் நுனியில்”உருண்டு திரண்ட மாதுளைகளும், சீராக அடுக்கப்பட்ட கொய்யாப்பழங்களும், அந்த சங்கிலித்திருடனாய் அறியப்பட்ட நீள மூக்குக்காரரும், தாவரவியல் வகுப்பும், வகுப்பில் பறந்த பறவையும், நீளமூக்குக்காரரின் மகளான அந்த பெரிய கண்களைக்கொண்ட அந்த காரணத்தினாலெயே பேரழகியாய்தெரிவதற்கு எந்த பெருமுயற்சியும் தேவைப்படாத சிறுமியும், அணில் நகக்காயம் பட்ட மாதுளையும், அந்த சிறுமியின் முன் நெற்றியில் அடிக்கடி வந்து விழும் முடிக்கற்றையுமாய் கதை விரிகிறது. கதையைப் படித்தபின்னரும் எனக்கு நான் இன்னும் அவரின் கதைகளைப்படிக்கவேயில்லை என்றும் ”கனியான பின்னும் நுனியில் பூ” மற்றுமோரு நீண்ட கவிதை என்றும் தோன்றியது

மழைக்காலத்தில் அவரின் கவிதைகள் வெளியாவது. விருப்பமென்கிறார் ஒரு பதிவில். விருது வழங்கப்படும் மாதத்தில் பருவம் தப்பிவிட்ட, ஐப்பசியில் பெய்திருக்க வேண்டிய, இன்னும் வராமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கும் மழை வரட்டும்.. அவருக்கு விருது வழங்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சி விழாவில் அவரை சந்திக்கவும் கலந்துரையாடவும் மிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

“நேரடி வானத்தில்

தெரிவதை விடவும்

நிலா அழகாக இருப்பது

கிளைகளின் இடையில்“

கல்யாண்ஜி

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட உள்ளது. உவகை தரும் செய்தி.ஒரு தரமான இலக்கிய ஆளுமையை கௌரவித்தமைக்கு

நன்றி. இந்த விருது வண்ணதாசன் பற்றியும் ஜெயமோகன் பற்றியும் நிறையவும் நிறைவாகவும் சொல்கிறது. நான் வண்ணதாசனை வழக்கம் போல் தற்செயலாகவே வாசிக்க நேர்ந்தது.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நடந்த ஒரு போட்டியில் எனக்கு “தனுமை” என்ற நூல் பரிசாகக் கிடைத்தது. சுஜாதா தேர்ந்தெடுத்த சிறு கதைகளின் தொகுப்பு அது. அதில் வண்ணதாசனின் “தனுமை” மிகச் சிறந்த சிறு கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அப்போது தனுமை வாசிப்பு ஒரு புதுமைமையான வினோதமான அனுபவத்தைத் தந்தது.ஒரு சிறுகதை இப்படியும் இருக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது. கதையே இல்லாத ஒரு கதை.அல்லது சாஸ்திரத்துக்கு கொஞ்சம் கதை.

அதைக் கூட கதையாசிரியர் அடிக்கடி மறந்து போனது போல் எங்கெங்கோ போய் விடுகிறார். கொஞ்சம் கூட சம்பந்தமில்லாதவற்றைப் பற்றியெல்லாம் பேசுகிறார். ஒன்றும் புரியாதது போல் இருக்கிறது. ஆனாலும் பிடித்திருக்கிறது. இப்படி அறிமுகமான வண்ணதாசன் பின்னர் என்னைப் பாதிக்கக் கூடிய எழுத்தாளர்களில் ஒருவரானார்.எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து ரசிக்கவும் வாழ்வின் சின்னச் சின்ன அழகுகளையும் பரவசங்களையும் தரிசிக்கவும் எளிமையாகக் கூறி பயிற்றுவித்தார்.

வண்ணதாசனுக்கு விருது பற்றிய வாசகர் கடிதங்கள் சுவாரசியமாக உள்ளன. பெரும்பாலான வாசகர்கள் தாங்களே விருது பெற்றது போல் குதூகலிக்கிறார்கள். மகிழ்ச்சியாக உள்ளது. சில வாசகர்கள் தமக்கு ஜெயமோகனைப் பிடிப்பதில்லை என்று எழுதி உள்ளனர். நீங்களும் அவற்றை மகிழ்ச்சியோடு பிரசுரத்திருக்கிறீர்கள். இது எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்- அஜீத் சின்ரோம். ஒருத்தரைப் பிடித்தால் அடுத்தவரைப் பிடிக்காது.(எனக்கு முன்பு எல்லோரையும் பிடிக்கும்.இப்போது இவர்களில் யாரையும் பிடிப்பதில்லை)

பிடிக்காதவர்கள் சிலர் ஜெயமோகனின் எழுத்துக்கள் எதையும் இதுவரை படித்ததே இல்லை என்றுவாக்குமூலம் வேறு கொடுத்திருக்கிறார்கள். இது எப்படி? படிக்காமலேயே எப்படி வெறுப்பு வர முடியும்? பெரும்பாலும் வெறுப்பு இப்படித்தானோ? இதை எல்லாம் புரிந்து கொள்வதும் சகித்துக் கொள்வதும் பாடங்களே.

அன்புடன்,

ஜெ.சாந்தமூர்த்தி,

மன்னார்குடி

======================================

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==========================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8
அடுத்த கட்டுரைஇருத்தல், சந்திப்பு -கடிதங்கள்