இன்று காலை செய்திகளில் இக் காணொளி கண்டேன். தலித் மாணவன் என கண்டிருந்தது. தலித் பிரச்னைகள் என்றாலே அது ஒரு டெம்ப்ளட், அதில் பொங்கும் அறப்பொங்கல்கள் ஒரு பேஷன். கல்லறைப் பிணத்துக்கு ஒப்பான அறிவு மற்றும் உணர்வு சமநிலையுடன் இதை அணுகவேண்டும் என எனக்கே உரைத்துக் கொண்டு இக் காட்சியை மீண்டும் கண்டேன். ஒரு மனிதனை சக மனிதர்கள் அடிக்கிறார்கள். கொல்லப்பட வேண்டிய வெறி நாயை அடிப்பது போல அடிக்கிறார்கள். அதன் மேல் எந்த விஷயம் பேசப் பட்டால்தான் என்ன? என் தம்பி. அடி வாங்கும் அதே தம்பி போலத்தான் இருப்பான். என் தம்பி என் தம்பி என்றே மனம் பதறியது.
என் தம்பிக்கு தொலைபேசினேன், உலகின் மாகா திமிர் பிடித்த ஜந்துக்களில் அவனும் ஒருவன். அடி குடுக்குற ஆளுங்க யாரும் உன் அண்ணன் தம்பி இல்லையா என நக்கலாக கேட்டான்.
வசுதைவ குடும்பகத்தை நினைத்துக் கொண்டேன். மானுடம் மொத்தமும் பாடையில் ஏறுவதற்குள் அங்கே சென்று சேர்ந்துவிடும் என எனக்கு நானே அறுதல் சொல்லிக் கொண்டேன்.
வெறுமனே மண்டியிட வந்திருக்கிறேன்
நீ ஒரு அரசனாகவோ
அரக்கனாகவோ இரு
ஆட்சேபணையில்லை
நான் ஒரு எளிய மனிதனாக
இருந்துவிட்டு போகிறேன்
என்னை தலை வணங்கவும்
மண்டியிடவும் செய்வதுதான்
உன் நோக்கம் எனில்
அப்படியே செய்வதில்
எனக்கு புகார் ஒன்றுமில்லை
தலைகள் வணங்கவும்
முழங்கால்கள் மண்டியிடவுமே
படைக்கப்படுகின்றன
ஆனால் நீ மண்டியிடச் செய்கிற ஒருவனுக்கு
நீ கடைசியில் ஏதாவது தர வேண்டும்
என்பதுதா உலகத்தின் நியதி
அதுதான் மண்டியிடச் செய்வதற்கான
உன் அதிகாரத்தை நிலை நிறுத்தும்
ஆனால் எனக்கு தேவையான
எதுவும் உன்னிடம் இல்லை
உன்னிடம் ஏராளமான பரிசுகள் இருக்கின்றன
நீ எனக்கு எதையும் தர அனுமதிக்க மாட்டேன்
அதைவிட துயரம் உனக்கு வேறு எதுவும் இல்லை
நான் வெறுமனே உன்னிடம்
மண்டியிடுகிறேன்
ஒருவனை
வெறுமனே மண்டியிடச் செய்வதற்காக
இந்த உலகம் உன்னை இகழும்
என்றுதானே
மண்டியிடும் ஒருவனைக் கண்டு
இவ்வளவு பயப்படுகிறாய்
–
-மனுஷ்ய புத்திரன்
இன்று வாசித்த கவிதை. எனது இன்றைய நாளுக்கான கவிதை.
கடலூர் சீனு