வெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்

 

2015-04-25

அன்புள்ள ஜெ

வணக்கம் முதலில் உங்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன். அன்று காலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தன்னையறியாமல் கண்களிலிருந்து கண்ணீர். அந்த கண்ணீர் ஏன் வருகிறது? எதனால் வருகிறது?அதன் நோக்கம் என்ன?என்று புலப்படவில்லை. சற்று ஒரு கணம் யோசித்து ஓ!அது மண்டையோட்டின் முகப்பு கண்ணாடி திறந்ததால் கற்று வீசி வருகிறது என்று நினைத்தேன். மறுகணமே என் சிந்தனை மாறியது. அப்படியென்றால் நீண்ட நேரம் வராதே, காற்றில் கண்ணீர் கன்னத்தில் காய்ந்திருக்குமே! இந்த கண்ணீர் விசித்திரமானதாக இருக்கிறதே! கண்களை துடைக்க துடைக்க கண்ணீர் கடலில் ஓரத்தில் எழும் அலைபோல் அல்லாமல் கடல் நீர் நடுவிலுள்ளபோல் அமைதியாக வந்தது. பின்னர் அறிந்தேன் இது காற்றால் அல்ல. ஒரு வித வலியால், உணர்வு, இந்த சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பால் வந்தது என்று.

ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது. இது கண்களிலிருந்து வரவில்லை, உணர்வு, வெறுப்பு, வேகம் நிறைந்த என் கனத்த இதயத்திலிருந்து வருகிறது என்று. இத்தனை நாள் வரவில்லை. இன்று ஏன்? இன்றுதான் வெள்ளை யானை நாவலை படித்தேன். இந்நூலை படித்த பின்பு பெரிகார்டியம் பாதுகாப்பு இருந்தும் பெரிய அதிர்ச்சி உணர்வு என் இதயத்தை தாக்கியது. என்னுள் பல கேள்விகள் எழுகின்றன. இந்த சமுதாயம் ஏன் இப்படிருக்கிறது? நாம் இப்போது மனிதனாக வாழ்கிறோமா, மதிக்கப்படுகிறோமா, அப்படியே இருந்தாலும் அதெல்லாம் புறவேசமா, புறநடிப்பா! இப்படி நடப்பதற்கு சாதி அமைப்பு, பொருளாதார நிலைமை காரணமா!

இல்லை அய்யங்கார் சொல்லுவதை போல் இந்த மக்களை இறைவன் கொடுமைப்படுத்தத்தான் படைத்தானோ! பல கேள்விகள் கேட்பது யாரிடம் தெரியாமல் என் மனச்சாட்சியை நானே கேட்டேன். ஆனால் பதில் இல்லை. இந்த நாவல் என்னை பல சுயபரிசோதனைகளுக்கு உட்படுத்தியது. நான் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இருக்கிறேனா! வெளியுலகம் அறிவதில்லையோ! ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்புலம் அறிவதில்லையோ! அறிகிறேன், ஆழ்ந்து யோசிக்கவும் செய்கிறேன். பின்னர் ஏன் என்னுள் கேள்வி எழுகிறது. எழுகிறது என்று சொல்லுவதைவிட எழுப்பியது வெள்ளை யானை.

காத்தவராயன்” சாவு உண்மைதான் ஆனால் எங்கே வாழ்ந்தோம் நாங்கள் சாவதற்கு, இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று சொல்லுவதும், நூறு பேரில் தொண்ணூறு பேர்கள் இறந்து பத்து பேர்கள் மனிதனாக வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் சொல்லும் போது இதயத்தில் கனத்த வலியை உண்டாக்கியது. ஏன் நாம் மனிதனாக பிறந்து மனிதனாக வாழ போராட்டம். உலகில் மனிதனை தவிர மற்ற இனம் அதே இனத்தோடு வாழ போராடவில்லை. பின்பு ஏன் நமக்கு மட்டும் இந்த போராட்டம். வெள்ளை யானை என்னை “பிறர் தட்டிவிடும்போது என்னால் முட்டி எழ முடியும்” என்னுள் இருந்த நம்பிக்கையை அதிகப் படுத்தியது. நன்றி ஐயா

தாமரை வீ

***

பெரு மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு ,

நாஞ்சில் நாட்டின் மீது இருந்த பற்றின் மூலமே நான் உங்களின் வாசகனானேன். உங்கள் மாடனிடம் பேசும் அப்பி என் நினைவில் தினமும் வருபவன். உங்களின் எழுத்துக்களின் மூலமே நீங்கள் சாதி மத எல்லைக்குள் நிற்பவர் அல்ல என புரிந்து கொண்டேன். அப்படிப்பட்ட நீங்கள் ஏன் நாஞ்சில் நாட்டில் இருந்த சமூக சீர்திருத்தவாதி [அய்யா வைகுண்டர் – முத்துக்குட்டி] பற்றி இன்னும் எழுதவில்லை என்பது வியப்பாக உள்ளது.

அவரின் சீர்திருத்தங்களில் சில…

ஒரு ஊரில் உள்ள அனைத்து சாதி மத வீடுகளிலும் பிச்சை எடுத்து அதை ஓரே பானையில் சமைத்து அதற்கு அன்னம் என்று பெயரிட்டு அதை அனைத்து சாதி மக்களும் ஒன்றாக இருந்து உணவருந்த செய்தார்.. இதை விட சமத்துவம் வேற யாரும் சொன்னதில்லை .

அனைத்து சாதி மக்களையும் தலையில் தலைப்பாகை [அது அரசனின் கிரீடம் போல] அணிவித்து அனைவருமே அரசனாக்கினார் சமமாக்கினார் .

தங்கத்தை தொட்டால் தீட்டு என்ற காலத்தில் அனைவருமே தங்கத்தில் தாலி கட்ட வைத்தார் [இன்று குமரி மாவட்டத்தில் சாதி மத வித்தியாசமின்றி அனைவருமே தங்கத்தில் தாலி காட்டுகின்றனர்]

அவர் அகிலத்திரட்டு என்ற நூலையும் அருளியிருக்கிறார்.

ஆனால் பெரியார் போன்ற எவருமே பேசியிருக்கலாமே தவிர இப்படி செய்து காட்டியிருக்க முடியாது .

எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்லி விட்டேன். நீங்கள் ஆராய்ந்து சரியென்று தோன்றினால் எழுதுங்களேன்.

பணிவன்புடன்,

பொன் ராஜா.

***

அன்புள்ள பொன் ராஜா

ஐயா வைகுண்டர் குறித்து எழுதியிருக்கிறேன். நாகர்கோயில் இதழ்களில். கட்டுரைகளை தேடி எடுக்கவேண்டும்.

என் மூத்தநண்பரான அ.கா.பெருமாள் அவர்கள் ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டை செம்பதிப்பாக பிழைதிருத்தி வெளியிட்டிருக்கிறார். அதையொட்டி விரிவாக எழுதவேண்டும் என எண்ணினேன். குறிப்புகளுடன் நின்றுவிட்டது

எழுதவேண்டும்

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5
அடுத்த கட்டுரைவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9