
இன்று காலையிலேயே சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கிளம்பி செந்தேசாவிலுள்ள யூனிவெர்சல் ஸ்டுடியோ அரங்குக்கு சென்றார்கள். அது ஒரு மாபெரும் களியாட்ட மையம். அறிவியலும் கலையும் கேளிக்கையாகும் அற்புதம் . நான்கு பரிமாணக் காட்சிகள், விழிகளை ஏமாற்றும் பல்வேறு காட்சியமைப்புகள்
நான் கல்லூரிக்குச் சென்றுவிட்டேன். மாலை என் துறைத்தலைவர் சிவகுமார் என்னை அருகிலுள்ள அறிவியல் மையத்தில் இருக்கும் மேக்னாதியேட்டருக்கு அழைத்துச் சென்றார். மிகப்பிரம்மாண்டமான அரைக்கோளவடிவத் திரையில் அறிவியல் படம் ஒன்றை பார்த்தேன். மிக நுண்ணிய, மிகப்பிரம்மாண்டமான, மிக மெதுவான ,மிக விரைவான தளங்களில் இவ்வுலகில் என்னென்ன நிகழ்கிறது என்பதைக் காட்டும் படம். ‘அலகிலா விளையாட்டு’ என தலைப்புவைக்கலாம்

வீட்டுக்கு வந்து குளித்து சித்தமானபோது சரவணன் வந்தார். அவருடன் விமானநிலையத்தைச் சென்றடைந்தேன். பலகுழுக்களாகக் கிளம்பிச் சென்றவர்களில் எஞ்சியவர்கள் இருந்தார்கள். அவர்களுடன் அரைமணிநேரம் பேசிச்சிரித்து விடையளித்தேன். அன்னியநாடு ஒன்றில் நான் நண்பர்களை வரவேற்று திருப்பியனுப்பியது விசித்திரமான அனுபவமாக இருந்தது
சிங்கப்பூர் நினைவுகள் நெடுநாட்கள் அழகிய நினைவாக எஞ்சுமென நினைக்கிறேன்