சண்டிகேஸ்வரர் முகங்கள்

index

 

வணக்கம் ஐயா,

உங்களுடைய சண்டீசர் பற்றிய பதிவினை இணையத்தில் படித்தேன். முகநூலில் உள்ள ஒரு குழுவில் சண்டிகேஸ்வரர் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்தன.

சிவகாமபுராணங்களில் யுகத்திற்கு ஒன்றென சண்டிகேசுவரர்கள் உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு முக சண்டிகேசுவரர் – பிரம்மாய

மூன்று முக சண்டிகேசுவரர் – ?

இரு முக சண்டிகேசுவரர் – யமன்

ஒரு முக சண்டிகேசுவரர் – விராசசருமர்..

இப்படி சண்டிகேசுவரியும் உள்ளார் என்பதை கடம்பர் கோயிலில் பார்த்தேன். அவர்களுக்கும் கூட இவ்வாறு யுகத்திற்கு ஒரு கடவுள் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என தெரியவில்லை. நீங்கள் சண்டீசர் ஒரு தொன்ம தெய்வம் என்று தெரிவித்தீர்கள். உங்களைப் போன்ற வரலாற்று எழுத்தார்கள் இந்த தமிழுக்குத் தேவை நன்றி.

அன்புடன்

தாணுமாலயன்
***

அன்புள்ள தாணுமாலயன்

சண்டை என்ற சொல்லின் வேர் சண்ட என்னும் சம்ஸ்கிருதச்சொல். உக்கிரம், போர்த்தன்மை என்னும் அர்த்தங்கள் கொண்ட பெயர் அது. சண்டப்பிரசண்டம், சண்டமாருதம் போன்ற சொற்கள் அதிலிருந்து வருபவை. சண்டி, சண்டிகை போன்ற சொற்கள் பெண்பால். சண்டியர் சண்டிராணி என்றெல்லாம் நாம் இன்றும் பயன்படுத்துகிற சொற்கள் உள்ளன

அந்தச்சொல்லே சண்டிகேஸ்வரர். பழங்குடித்தெய்வமாக இருக்கலாம். அது சிவனின் காவல்தெய்வமாக, கணதேவதையாக மாறியது.புத்தர் உட்பட பெரும்பாலான பெருந்தெய்வங்களுக்கு இப்படி காவல்தெய்வங்களும் கணதேவதைகளும் உண்டு.

சண்டேஸ்வர நாயனார் கதை அதற்குப்பின்னால் வந்தது. அவர் கன்றோட்டும் குலத்தவர். உக்கிரமான குணம் கொண்டவர் என்பதனால் அப்பெயர் வந்தது.

இப்படி ஒரு தெய்வம் உருவாவது ஒரு குறியீடு பிறப்பதுதான். அக்குறியீட்டை யோகநெறியும் தாந்த்ரீகமுறையும் சிற்பவியலும் பலவகைகளில் வளர்த்தெடுக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு கவித்துவ உவமைபோல. கவிதைப்படிமங்களை நாம் கவித்துவமனநிலையில் விரிவாக்கம் செய்கிறோம். இப்படிமங்கள் யோகநிலையில் விரிவுபெறவேண்டும்

ஜெ

 

சண்டிகேஸ்வரர்

 

முந்தைய கட்டுரைசண்டிகேஸ்வரர்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55