‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42

[ 11 ]

சாந்தீபனிக் கல்விநிலையின் முகப்பில் நின்றிருந்த சுஹஸ்தம் என்னும் அரசமரத்தின் அடியில் தருமன் இளைய யாதவரை எதிர்கொள்ளக் காத்திருந்த மாணவர்களுடன் நின்றிருந்தார். பீமனும் நகுலனும் சகதேவனும் அவருக்கு இருபக்கமும் நின்றிருந்தனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் இருக்கலாகாது என்று சொல்லப்பட்டிருந்தமையால் ஒரு இளம் மாணவன் கையில் வைத்திருந்த பெரிய நீள்வட்ட மரத்தாலத்திலிருந்த எட்டுகான்மங்கலங்கள் அன்றி வேறு வரவேற்புமுறைமைகள் ஏதுமிருக்கவில்லை.

தொலைவில் பறவைகள் எழுந்து ஓசையிடுவதைக் கேட்டதும் தருமன் அவர்கள் அணுகிவிட்டதை உணர்ந்தார். அதற்குள் அங்கிருந்த வீரன் ஒருவன் சங்கொலி எழுப்பினான். காத்து நின்றிருந்தவர்களில் ஒருவன் மறுசங்கொலி எழுப்பினான். குதிரைக்குளம்படிகள் கேட்கத்தொடங்கின. ஈரமுரசில் கோல்கள் விழுவதுபோல சருகுகள் மேல் அவை ஒலித்தன. பின்னர் பசுந்தழைப்புக்கு அப்பாலிருந்து வண்ணங்கள் கசிந்து இணைந்து அவர்கள் தோன்றினர்.

முதலில் அர்ஜுனனும் இளைய யாதவரும் இணையாக புரவியில் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் சாத்யகி வந்தான். இறுதியாக இரு காவல்வீரர்கள் வந்தனர். ஒருவன் கையில் சங்கு வைத்திருந்தான். அவர்களைப் பார்த்ததும் அவன் மீண்டும் சங்கொலி எழுப்பினான். காத்து நின்றிருந்தவர்கள் எதிர்ச்சங்கம் முழக்கினர். இளைய யாதவரின் புன்னகை வெண்மலர் போல கரிய முகத்தில் தெரிந்தது. அவர் சுரிகுழல்கற்றைகள் தோளில் சரிந்திருந்தன. தலையிலணிந்திருந்த மயிற்பீலி அப்போது எடுத்து வைத்ததுபோலிருந்தது. கரியபுரவிமேல் அவர் அமர்ந்திருந்தார். காட்டின் நிழலுக்குள் அது மறைந்துவிட்டிருந்தமையால் அவர் மிதந்து வருவதுபோலத் தோன்றியது.

முதன்மை மாணவன் இளையோனிடமிருந்து தாலத்தை வாங்கிக்கொண்டு முன்னால் சென்றான். தாலத்திலிருந்த மலர்மாலையை எடுத்து இன்னொரு மூத்தமாணவன் இளைய யாதவருக்கு சூட்டினான். இளையமாணவர்கள் அவர் மேல் பொன்னிற மலர்களைத் தூவி வேதச்சொல் உரைத்து வரவேற்றனர். அவர்கள் விலகியதும் தருமன் இரு கைகளையும் விரித்தபடி அணுகிச்சென்று இளைய யாதவரை தழுவிக்கொண்டார். “நன்று, தவக்கோலம் தங்களுக்கு அழகு” என்று சொல்லி அவர் தோள்களைப் பற்றி அழுத்தினார் இளைய யாதவர். தருமன் “ஆம், இங்கு உவகையுடன் இருக்கிறேன்” என்றார்.

பீமனை நோக்கி “காடாளத் தொடங்கிவிட்டீர், மந்தரே. வரும் வழியிலேயே சில குரங்குகளைப் பார்த்தபோது அவை உங்கள் நண்பர்கள் என உணர்ந்தேன்” என்றார். “ஆம், அங்கே இருப்பவை குறியன் கூட்டம். அவற்றின் ஒலியைக் கேட்டேன்” என்றான் பீமன். பீமனின் பெரிய கைகளைப் பற்றியபடி “குறியன் என்பவன் வால்குறுகிய முதுகுரங்கா? என்னிடம் அவன் வரவேற்புரைத்தான்” என்றார் இளைய யாதவர். “ஆம், அவன் எனக்கும் உங்களைப்பற்றி சொன்னான்” என்றான் பீமன்.

பீமனிடம் “தங்கள் தோள்கள் மேலும் பருத்திருக்கின்றன, நன்று” என்றபின் நகுலனையும் சகதேவனையும் நோக்கி கைகளை விரித்தார் இளைய யாதவர். அவர்கள் ஒரேஅசைவாக வந்து அவர் கால்தொட்டு சென்னி சூடினர். “இளையோர்தான் சற்று களைத்திருக்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். “ஆம், என்ன இருந்தாலும் காடு கொடிது” என்றார் தருமன். “வருக அரசே, தங்களுக்காக ஆசிரியர் காத்திருக்கிறார்” என்றான் முதுமாணவன்.

அவர்கள் இன்மொழி பேசியபடி இருபக்கமும் அசோகமும் மந்தாரையும் நிரைவகுத்த கல்விநிலைப் பாதை வழியாக சென்றனர். இளைய யாதவர் “இங்கு அனைத்தும் மாறிவிட்டன. மரங்கள், குடில்கள், முகங்கள்…” என்றார். “அவை மாறாமலிருக்காது என்று நன்கறிவேன். ஆயினும் மாறியிருப்பதைப் பார்க்க உள்ளம் பரபரப்படைகிறது.” தருமன் “ஆம், நானும் எங்கும் மாற்றங்களையே முதலில் பார்ப்பேன். அது முதுமைகொள்வதன் அடையாளம் போலும்” என்றார். சிரித்தபடி “இல்லை, அந்த மாற்றத்தின் நடுவே மாறாதிருக்கும் ஒன்றைக் கண்டு நிறைவடைவதற்கான முயற்சி அது. அனைத்தும் மாறுவது நாம் மறக்கப்படுவோம் என்பதற்கான சான்று. மாறாமலிருக்கும் ஒன்று நாம் எஞ்சவும் கூடும் என்பதற்கான நம்பிக்கை” என்றார் இளைய யாதவர்.

தருமன் விழிகளையே நோக்கிக்கொண்டு நடந்தார். அவரிடம் இளைய யாதவரைப்பற்றி சினம்கொண்டு பேசிய இளமாணவர்களில் பலர் அங்கிருந்தனர். அனைவர் விழிகளும் வியப்பால் விரிந்து இளைய யாதவரையே நோக்கிக்கொண்டிருந்தன. அவர்கள் என்ன உணர்கிறார்கள் என தருமனால் உணரமுடிந்தது. அவரைக் கண்டதும் முதலில் எழும் எண்ணம் அவர் உருவம் மிகச்சிறியது என்பதே. அவர் பேருடலன் அல்லர். ஆனால் குறியவனும் அல்லர். அவர்கள் விழிகளுக்கு முன் முதற்கணம் அவர் இயல்புருவைவிட குறுகிச் சிறுக்கிறார்.

ஏனென்றால் அவர்கள் அவரை குழந்தைவயதில் கதைகளாக அறிந்தவர்கள். குழந்தைகளின் தன்னுணர்வில் முதன்மையானது தாங்கள் சிறியவர்கள் என்பதே. ஆகவே அவர்கள் எப்போதும் மேலே பார்க்கிறார்கள். மேலே ஏற முயல்கிறார்கள். அண்ணாந்து சொல்கேட்கிறார்கள். அவர்களின் உலகம் மேலேதான் உள்ளது. அவ்வுலகில் அவர்கள் அவரை அறிந்தனர். அண்ணாந்தே அவரை நோக்கினர். அவர்களின் அறியா உள்ளத்தில் அவர் உருவம் கதைகளால் விரித்து பெரிதாக்கப்பட்டது.

அக்கதைகளுக்கு அயலானவராக அவர் எளிய உடலுடன் தென்படுவார். ‘இவரா? இவரேதானா?’ என நெடுநேரம் சித்தம் திகைக்கும். பின்னர் ‘இத்தனை எளியவரா? எப்படி?’ என வியக்கத் தொடங்குவார்கள். அவர் அசைவுகள் சொற்கள் சிரிப்புகள் அனைத்திலும் அது எவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதற்கான சான்றுகளை தேடுவார்கள். கூர்ந்து நோக்கப்படுவதனாலேயே அவர் பெரிதாகத் தொடங்குவார்.

மானுடப் பெருவெள்ளத்தில் கூர்ந்து நோக்கப்படுபவர்கள் மிகமிகச் சிலரே. காதலின் போது காதலர் கூர்ந்து நோக்கிக் கொள்கிறார்கள். நோக்கி நோக்கி ஒருவரை ஒருவர் வளர்க்கிறார்கள். ஆனால் அது காலநுரை. இருவருக்குள் நிகழ்ந்தழியும் கனவு. அவரோ பல்லாயிரம் விழிகளால் நோக்கப்படுகிறார். நோக்குகளை சேர்த்துக் கோக்கின்றன சொற்கள். அவர்கள் விழிகளில் ஏறி அவரைக் கூர்ந்து நோக்குவது அவர்களின் உள்ளம். அவ்வுள்ளம் அவரில் தன்னை படியச்செய்கிறது.

பின்னர் அவர் அவர்களின் வடிவாகிறார். அவரை வளர்த்தெடுப்பது அவர்கள் தங்களைப்பற்றிக் கொள்ளும் விழைவுக் கற்பனைகளின் வளர்ச்சி. அவரைப் பற்றிய கதைகள் புத்துருக் கொள்கின்றன. அக்கதைகளை அவர்கள் மேலும் வளர்த்தெடுக்கிறார்கள். அவர் பேருருக்கொள்ளத் தொடங்குகிறார். அவ்வுருவுக்குத் தொடர்பே இல்லாமல் அவர் எளிய மானுடனாகச் சிரித்து புழங்குகையில் தொன்மத்திற்கும் மானுடனுக்கும் நடுவே மயங்கித் தவிக்கிறது அவர்களின் சித்தம். அந்த மாயத்தால் அவர் ஒருபோதும் சித்தம்விட்டு இறங்காதவராகிறார்.

அவர்களின் விழிநடுவே சென்றுகொண்டிருக்கும்போது ஒரு நாடகத்தில் கூத்தர்கள்போல அணிகொண்டு வந்து நின்றிருப்பதாகத் தோன்றியது. விழாக்களிலும் அவைகளிலும் எப்போதும் தோன்றும் உணர்வுதான். ஆனால் மிகச்சில கணங்களிலேயே அதை வென்றுவிடமுடியும். ஏனென்றால் அங்கு அத்தனைபேருமே நடிகர்களாக இருப்பார்கள். இங்கு நோக்கும் விழிகள் உணர்வெழுச்சிகளால் நிறைந்திருந்தன. அத்துடன் அவை நிகழின் விழிகள் அல்ல. வரும் தலைமுறைகளின் விழிகள். அறியாத காலமடிப்புகளில் எங்கெங்கோ நின்றுகொண்டு நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அசைவுகள் பொய்யென ஆகாதிருக்க தருமன் தன்னை இறுக்கிக்கொண்டார். அது செயற்கையான மிடுக்காக தன் உடலில் தோன்றக்கண்டார். தளர்த்தியபோது அது செயற்கையான புறக்கணிப்பாகத் தோன்றியது. இயல்புநிலை என்பது இரண்டுக்கும் நடுவே ஒரு நடிப்பா என்ன என நினைத்துக்கொண்டபோது புன்னகை ஏற்பட்டது. அப்புன்னகை அவரை சற்று இயல்பாக ஆக்கியது. அவரை பார்த்தார். அவர் புல்லும் கல்லும் மண்டிய ஓடையின் மீன் போல மிக இயல்பாக அவர்களினூடாக சென்றுகொண்டிருந்தார். வாழ்த்துக்களை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். இறுகிய முகங்களையும் அதே புன்னகையுடன் எதிர்கொண்டார்.

எதிரே மாணவர்கூட்டத்திற்குள் பாதி புதைந்தவராக பிருகதர் நின்றுகொண்டிருந்தார். சேற்றுக்குள் உடல்புதைத்து மூச்சுக்கு முகம் மட்டும் நீட்டி ஒடுங்கியிருக்கும் விரால்மீன் போல. அவர் விழிகள் அவரில் கூர்ந்திருந்தன. சிறிய சுருக்கத்துடன். ஐயமா ஆர்வமா வெறுப்பா என்றறிய முடியாத சுருக்கம். கூட்டம் நெரிபட்டதனால் அவர் சற்று ததும்பிக்கொண்டிருந்தார். அவரை இளைய யாதவர் கடந்துபோகும் கணத்தில் கண்டுவிட்டார். முகம் மலர்ந்து புன்னகைத்து கைகளைக் கூப்பியபடி “வணங்குகிறேன், ஆசிரியரே” என்றபடி அவரை நோக்கி சென்றார். அறியாது அவர் உடல் பின்னடைவின் அசைவை காட்டியது. இளைய யாதவர் குனிந்து அவர் கால்களை சென்னி சூடினார். “வாழ்த்துங்கள்” என்றார். அவர் தலைமேல் வெறுமனே கைவைத்தார்.

எழுந்து “நீண்டநாள் ஆயிற்று பார்த்து. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?” என்றார். “ஆம்” என்று பிருகதர் சொன்னார். மேலும் பின்னடைய அவர் விழைவதுபோல் தோன்றியது. மாணவர்கள் இளைய யாதவரைச் சூழ்ந்து உடல்களால் அலையடித்தனர். அர்ஜுனன் அவர் தோளில் தொட்டு “செல்வோம், யாதவரே” என்றான். “தங்கள் குடிலுக்கு பின்னர் வந்து சந்திக்கிறேன், ஆசிரியரே” என்றபின் அவர் முன்னால் சென்றார். திரும்பி பிருகதரைப் பார்த்த தருமன் அவர் விழிகளில் அதே சுருக்கம் நீடிப்பதை கண்டார்.

சாந்தீபனி முனிவர் தன் குடிலின் வாயிலிலேயே கைகளைக் கூப்பியபடி வந்து நின்று இளைய யாதவரை வரவேற்றார். “உங்கள் ஆசிரியரின் இல்லத்திற்கு வருக, யாதவரே” என்றார். இளைய யாதவர் குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னிசூடினார். அவர் அதில் ஒரு கணம் திகைத்ததுபோல் தோன்றியது. “அழிவற்றதாகுக உங்கள் மெய்யறிதல்!” என்று முணுமுணுத்தபின் “வருக!” என்று அவர் தோளைத்தொட்டார். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அர்ஜுனன் தலைவணங்கி வாயிலிலேயே நின்றான். நகுலன் “நாம் கூடத்திற்குச் சென்று காத்திருப்போமே!” என்றான். “ஆம்” என்றார் தருமன்.

அவர்கள் மாணவர்களினூடாக கூடம் நோக்கி சென்றனர். மாணவர்களின் ஓசை அதற்குள் பெருகி அப்பகுதியை சூழ்ந்திருந்தது. ஒரு சொல்லவை உச்சத்தில் முடிந்தபின்னர் அச்சொல்லாடலை ஒவ்வொருவரும் முன்னெடுப்பதுபோல் தோன்றியது. “நடிகன்!” என ஒரு குரல் கேட்டது. தருமன் அறியாது திரும்பிப்பார்த்தார். புன்னகையுடன் கண்ணொளிரத் தெரிந்த அத்தனை விழிகளில் எது அதைச் சொன்னது என்று அறியமுடியவில்லை. அவர் தலைதிருப்பியதுமே “பொய்ப்பணிவே ஆணவத்தின் உச்ச வெளிப்பாடு” என அக்குரல் சொன்னது. அவன் தனக்குள் மகிழ்கிறான் என தருமன் எண்ணினார். மீண்டும் திரும்பிநோக்கி அவனுக்கு அந்த உவகையை அளிக்கலாகாது என கழுத்தை இறுக்கிக் கொண்டார்.

கூடத்தில் புல்பாய்களில் அவர்கள் அமர்ந்தனர். நகுலன் “இளைய யாதவர் சற்று தளர்ந்திருக்கிறார்” என்றான். “ஆம், நடையிலும் தளர்வுள்ளது. நான் இன்றுவரை அவரை இத்தகைய தளர்வுடன் பார்த்ததே இல்லை” என்றான் சகதேவன். அர்ஜுனன் “துவாரகையில் நிகழ்ந்தவற்றைத்தான் சொல்லிக்கொண்டு வந்தார். அவர் உள்ளம் தளர்வதில் பொருளிருக்கிறது” என்றான். தருமன் அவனை திரும்பிப் பார்த்தார். “யாதவர்களின் உட்பூசல்… அது உச்சத்தை அடைந்திருக்கிறது” என்றான் அர்ஜுனன்.

“யாதவர்குலங்கள் பூசலிடாமலிருந்ததே இல்லையே?” என்றார் தருமன். “ஆம், ஆனால் முன்பு அவர்களை இணைக்கும் சரடாக இளைய யாதவர் இருந்தார். இன்று அப்பூசலை உருவாக்குவதாகவே அவரது இருப்பு மாறிவிட்டது. அதைத்தான் எண்ணி துயர்கொள்கிறார்” என்று அர்ஜுனன் சொன்னான். “இன்று அவர் நம்பிய அனைவருமே அப்பூசலில் அவருக்கு எதிராக அமர்ந்திருக்கிறார்கள்.” அச்சொற்களைக் கேட்டு சற்று அதிர்ந்த தருமன் அவன் விழிகளை நோக்கி “அக்ரூரருமா?” என்றார். “பலராமரும்” என்றான் அர்ஜுனன். தருமன் சிலகணங்களுக்குப்பின் பெருமூச்சு விட்டு “ஆம், அவ்வாறே அது ஆகும். அவர்கள் கருமையும் வெண்மையும்” என்றார்.

[ 12 ]

அவை நிரம்பி நீராவி வெம்மையும் வியர்வை வாடையும் கொள்ளத்தொடங்கியது. தருமன் கைகளைக் கட்டியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். வெளியே சங்கு முழங்க உள்ளிருந்தவர்கள் அமைதியாயினர். வெளியே இருந்து ஒரு மாணவன் சிற்றகல் ஒன்றை ஏந்தியபடி கூடத்திற்குள் நுழைந்தான். பிறிதொருவன் சங்குடன் தொடர்ந்தான். அவனுக்குப் பின்னால் இளைய யாதவரும் சாந்தீபனி முனிவரும் இணையாக கூடத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அவர்களை வணங்கினர். அவர்களை கைதூக்கி வாழ்த்தியபடி சாந்தீபனி முனிவர் தன் பீடத்தை அடைந்தார்.

விளக்கேந்திய மாணவன் சிற்றகலால் அங்கிருந்த பிற நெய்யகல்களை ஏற்றியதும் தர்ப்பை போடப்பட்டிருந்த பீடம் ஒளிகொண்டது. சாந்தீபனி முனிவர் அவை நோக்கி திரும்பி “இன்று இங்கு நுண்வடிவாக இருக்கும் எந்தை மகிழ்வுகொள்கிறார். அவருக்கு உகந்த முதல்மாணவர், அவர் எண்ணிய இரண்டாவது மைந்தர், இன்று இக்கல்விநிலைக்கு வந்திருக்கிறார். இக்கல்விநிலையின் தலைவரென அவர் அமர்ந்து இதை வழிநடத்தவேண்டுமென எந்தை விழைந்திருக்கிறார். என்றாயினும் அவர் பெயருடன் இணைந்தே இது நினைக்கப்படுமென்றே என் உள்ளம் சொல்கிறது” என்றார்.

மாணவர்கள் விழிவிரித்து அமர்ந்திருந்தனர். அவர்கள் எண்ணுவதென்ன என்று உணரமுடியவில்லை. அகல்சுடர்களை ஏற்றி முடித்து மாணவன் பின்னால் சென்று அமைந்தான். “எந்தை அமர்ந்த இந்த ஆசிரியபீடத்தில் இன்று இளைய யாதவர் அமர்ந்து நமக்கு அவர் அருளிய சொற்களை சொல்லவேண்டுமென விழைகிறேன்” என்றார் சாந்தீபனி முனிவர். இளைய யாதவர் அதை மறுப்பார் என தருமன் எண்ணினார். ஆனால் புன்னகையுடன் இளைய யாதவர் அவையை நோக்கி “ஆசிரியர்களின் சொற்கள் மாணவர்களில் வாழ்கின்றன, விதையின் உயிர் மரத்தில் சாறெனத் திகழ்வதுபோல” என்றார். “நான் எண்ணுவதை சொல்கிறேன். ஒவ்வொரு சொல்லுக்கும் நான் அவருக்கு கடன்பட்டிருக்கிறேன்.” சாந்தீபனி முனிவர் அவர் கைகளைப்பற்றி பீடத்தில் கொண்டுசென்று அமர்த்தினார். அருகே இருந்த பீடத்தில் தான் அமர்ந்துகொண்டார்.

“இளையோரே, அந்த அழகிய மரம் தன் கிளைகளை மண்ணில் விரித்துள்ளது. வேரை விண்ணில் பரப்பியிருக்கிறது” என்று அவர் சொன்னார். “விண்ணகம் தூயநீர் ஒன்றால் நிறைந்துள்ளது என்கின்றன நூல்கள். அப்பாற்கடலின் திவலையையே நாம் மழை என்கிறோம். விசும்பின் துளி இங்கு பசும்புல் தலையாகிறது. பருப்பொருள் அன்னமாகிறது. அன்னம் அன்னத்தை வளர்க்கிறது. அன்னத்தின் ஆடலையே இங்கு இயல்வாழ்வு என்கிறோம். ஆயிரம் கிளைகள். பல்லாயிரம் சிறுகிளைகள். பற்பலப் பல்லாயிரம் சில்லைகள், முடிவிலா இலைகள்.”

“அனைத்திலும் பெருகும் சாறு ஒன்றே. அது விண்ணில் ஊறுவது. இளையோரே, வேர் அங்கிருக்கிறதென்றால் அதன் விதை எங்கிருந்தது? விண்ணகத்தில் நுண்வடிவாக இருந்தது அவ்விதை. முளைத்த பின்னரே தன்னை கண்டுகொண்டது அது. இலைகளின் காரணமென சில்லைகளும் சில்லைகளின் காரணம் என கிளைகளும் கிளைகளின் காரணமென மரமும் மரத்தின் காரணமென வேர்களும் வேர்களின் காரணமென விதையும் என்றால் அவ்விதையின் காரணமென அமைவது எது? அதுவே இங்குள அனைத்தும். அதை வணங்குக!”

“முடிவற்றுத் தளிர்ப்பதே அதன் விழைவென்பதனால்தான் அது இங்கு இவ்வண்ணம் உருக்கொண்டது. இங்கிருந்து வளர்ந்தெழுகிறது. அவ்வண்ணமென்றால் அதன் அழியாச்சொல் உயிர்த்திருப்பது தடியிலா, கிளையிலா, சில்லையிலா, இலையிலா? இல்லை எழுந்து ஒளிகொள்ளும் புதுத்தளிரில் மட்டுமே. உறுதியும் வண்ணமும் கொண்டவை மரமும் கிளைகளும். ஆனால் தளிருக்கு மட்டுமே பொன் அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் சொன்னார். தனக்குள் என அவர் சொல்லிக்கொண்டே சென்றபோது அவரும் அங்கின்றி அச்சொற்கள் முழங்குவதுபோல் தோன்றியது.

“தளிரென எழுந்த ஒவ்வொன்றுக்கும் நிகராக அறியாத வானத்து ஆழங்களில் அதன் வேர்நுனி முளைகொள்கிறது என்றறிக! இங்கு ஒரு தளிரை கிள்ளுபவன் அங்கு ஒரு வேர்முளையின் பழிகொள்கிறான். இளையோரே, தடியால் இலையால் முள்ளால் தளிரை காத்துக்கொள்கிறது மரம். ஏனென்றால் தளிரிலேயே அது வாழ்கிறதென அது அறிந்துள்ளது.” அவர் விழிகள் பாதி மூடியிருந்தன. இதழ்கள் அசைகின்றனவா என்னும் உளமயக்கு ஏற்பட்டது. “இலைகளின் அலைகளாக ஒரு பெருவெள்ளம். புவிமூழ்கடித்து அது எழுகிறது இன்று. அதன் நுரைகள் அறைகின்றன இமயமலைமுடியை. அதன் ஆழிப்பேரோசை சுமந்த சங்குகள் ஆகின்றன நாம் உரைக்கும் ஒவ்வொரு சொல்லும்.”

“இனியவர்களே, பெருவெள்ளம் எழுகையில் உங்கள் தனிக்கிணறுகளால் என்ன பயன்? அவை விண்ணில் ஊற்று கொண்டவை ஆயினும்?” என்று அவர் சொன்னார். அச்சொற்கள் மீண்டும் மீண்டும் முழங்கும் அமைதியொன்றினூடாக கடந்து சென்றார். “ஊற்றென்பதும் உள்ளுறைந்த பெருவெள்ளமே. அதை அறிந்தவன் வெள்ளத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. இன்று தேவை அஞ்சாமை. நொய்மையான இல்லங்களை, ஒழுகும் களஞ்சியங்களை, நீச்சலறியாத இளமைந்தரை கொண்டுள்ள இல்லறத்தாரின் அச்சத்தால் எதிர்கொள்ளப்படுகிறது இன்றைய பெருவெள்ளம். மலைவிளிம்பில் நின்று அலைவெளிச்சம் கண்டு உவகையுடன் கைவிரித்து எழும் இளையோர் வருக! அவர்கள் இப்பெருவெள்ளத்தின் பொருளுணர்க! அவர்கள் சொல்லில் எழுக மேலும் புதுமழை!”

அவர் கைகூப்பினார். சாந்தீபனி முனிவர் கைகூப்பி முழுமைப்பாடலை பாடினார். அதன் பின்னரும் அவை ஓசையில்லாமல் அமர்ந்திருந்தது. அவ்வசைவின்மையில் மெல்லிய நிழலாட்டமென வாயிலுக்கு அப்பால் பத்ரர் தோன்றினார். அந்த நாடகத்தனமான தோன்றுதலுக்காகவே அவர் அங்கு காத்திருந்ததை உடனே தருமன் உணர்ந்தார். அவர் அடுமனையிலிருந்து வருபவர்போல கையில் ஒரு மரச்சட்டுவத்தை ஏந்தியிருந்தார். இடையில் தோலாடை நனைந்திருந்தது. உடலெங்கும் வியர்வை வழிந்தது. “இளையோனே, நான் உன் அணிச்சொற்களைக் கேட்க வரவில்லை. நீ இங்கு வந்துள்ளாய் என்றறிந்தேன். உன்னைக் காணும்பொருட்டே வந்தேன். உன் சொற்களைக் கேட்டேன்.”

SOLVALARKAADU_EPI_42

இகழ்ச்சியுடன் உதடுவளைத்து “சொற்களின் அரசவைநடனம். நன்று!” என்றார். “அணியும் ஆடையும் இன்றி அவை ஆடினால் மேலும் காமத்தை தூண்டக்கூடும்…” இளைய யாதவர் “தங்கள் சொற்களுக்கு நன்றியுடையேன், பத்ரரே” என்றார். கைகளைத் தூக்கி உரத்த குரலில் கூவியபடி அவர் அணுகினார். “நான் கேட்பதொன்றே. எனக்கு அணிகளில்லாமல் அவைநிற்கும் ஆண்மகனாக மறுமொழி சொல். நீ வேதத்தை ஏற்பவனா? மறுப்பவனா?” அவர் முகம் சினத்தால் இழுபட்டு நெளிந்தது. “எந்த வேதம் என்று தொடங்கவேண்டியதில்லை. எலி தப்பிச்செல்லும் வளைகளை எல்லாம் மூடியபின் தடியெடுத்தவன் நான். நால்வேதமென இன்று அமைந்து இப்புவியை ஆளும் மெய்ச்சொல்லை நீ ஏற்றவனா? மறுப்பவனா? அதைமட்டும் சொல்!”

“நான் வேதமறுப்பாளன் இல்லை” என்றார் இளைய யாதவர். “பத்ரரே, மலர்கொண்டு நிற்கும் மரத்திலிருந்து மகரந்தத்தை கொண்டுசெல்கிறது சிறுவண்டு. வேரும் கிளைகளும் இலைகளும் மலர்களும் கொண்ட அந்த மரத்தை அது மறுக்கவில்லை. அம்மரத்தின் நுண்சாரத்தையே அது கொண்டுசெல்கிறது. அந்த மரத்தை அது அழிவற்றதாக்குகிறது.” பத்ரர் கைகளை ஓங்கி அறைந்து சினமும் ஏளனமும் கலக்க நகைத்தார். “வேதத்தை அழிவற்றதாக்க வந்துள்ளான் யாதவன். மகிழ்ந்திருங்கள், முனிவர்களே. களிகொள்ளுங்கள், மாணவர்களே. உங்கள் வேதம் இனி அழியாது. இதோ அதைக் காக்கும் தெய்வம் எழுந்தருளியுள்ளது.”

“மெல்லிய சிறுவண்டுகளே மரத்தைக் காப்பவை, பத்ரரே” என்றார் இளைய யாதவர். “ஆகவேதான் யானை உண்ணும் கிளையிலும் மான் உண்ணும் இலைகளிலும் பறவைகள் உண்ணும் கனிகளிலும் தன் சாறை மட்டும் வைத்திருக்கும் மரம் வண்டுகள் நாடிவரும் மகரந்தத்தில் தன் கனவை வைத்திருக்கிறது. வெளியே சென்று பாருங்கள், தான் செல்லவிரும்பும் திசைநோக்கி கைநீட்டி மலர்க்குவளைகளில் மகரந்தப்பொடி ஏந்தி நின்றிருக்கும் பெருமரங்களை காண்பீர்கள்!” பத்ரர் உச்சகட்ட வெறுப்புடன் “போதும்!” என்றார். “நான் உன்னிடம் ஒப்புமைகளால் விளையாட இங்கு வரவில்லை. இதுவரை நீ இயற்றிய வேள்விகள் என்ன? அதைமட்டும் சொல்!”

“நான் தேவர்களிடம் வேட்பதில்லை” என்றார் இளைய யாதவர். “அவ்வண்ணமென்றால் நீ வேள்விச்செயல்களை மறுக்கிறாயா?” இளைய யாதவர் “இல்லை” என்றார். “வேண்டுபவர்கள் வேட்கலாம். பெற்று நிறையலாம். வேள்வி பிழையென்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. அது இகம். வேதம் பரத்திற்கும் உரியது என்று மட்டுமே சொல்கிறேன்.” பத்ரர் “மண்ணில் உள்ளது விண் என உணர்ந்தோர் அருளியது வேதம். மண்ணின்றி நிற்கும் திறன்கொண்டதாகையால் அது மானுடம் கடந்தது. அதை இங்கமர்ந்து சொன்னவர் நீ துறந்து சென்ற உன் ஆசிரியர்” என்றார். இளைய யாதவர் “ஆம், நான் அவர் சொல்லை துறக்கவில்லை. நான் வேதகாவலன். வெண்ணை உண்பவன், எனவே ஆகாவலன்” என்றார்.

“இனி நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. இதோ இந்த அவையிலேயே சொல்லிவிட்டாய், வேள்வி புரப்பவன் அல்ல நீ என்று. இது வேதநிலம். வேள்வி புரக்காதவனுக்கு இங்கு முடியும் கோலும் இல்லை. வேதமறுப்பாளனைக் கொன்று அவன் குடிவெல்வது ஷத்ரியரின் கடமை. எண்ணிக்கொள் நாட்களை, அவர்கள் எழுந்து வருவார்கள். உன் நகரும் கோட்டையும் கொடியும் வீழும் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்று பத்ரர் கூவினார். “என்ன சொன்னாய், மூடா? நீ வேதசாரம் நாடுபவனா? மலமுருட்டிச் செல்லும் வண்டுக்கு மகரந்தச்சுவை தெரியுமா? இழிமகனே, என் ஆசிரியர் அமர்ந்த பீடத்திலிருந்து இக்கணமே இறங்கு!”

“அதைச் சொல்லவேண்டியவன் நான்” என்றார் சாந்தீபனி முனிவர். “பத்ரரே, உம்மை இங்கு நான் பேசவிட்டதே நீர் உச்சகட்டமாக என்ன பேசிவிட முடியுமென்று இந்த அவை அறியட்டும் என்றுதான். கற்றும் தெளிந்தும் ஒருவன் அடைந்தவற்றுக்கெல்லாம் அடியிலிருப்பது தன் பிறப்பின் மீதான வெற்றுப்பெருமைதான் என்றால் அவனே இழிந்தோனினும் இழிந்தோன். இங்கு நீர் இழிவுசூடவில்லை, உமக்குள் சென்ற வேதமெய்மையையும் இழிவு செய்கிறீர். உம்மை கீழ்மகனாகக் காட்ட வேண்டிய அத்தனை சொற்களையும் சொல்லிவிட்டீர்… நீர் செல்லலாம்!”

“ஆம், செல்கிறேன். உங்கள் இழிந்த அவையில் நான் சொல்லாட வரவில்லை. என் செயல்களம் அடுமனை. இங்குள்ள அனைவருக்கும் பசியாற்றும் கை இது. உங்கள் கைகளின் வேள்விக்கரண்டிக்கு நிகரானது இது.” அவர் தன் சட்டுவத்தை தூக்கிக் காட்டினார். “ஏனென்றால் வேதத்திற்கு என்னை முற்றளித்தவன் நான். எனவே செய்வதெல்லாம் எனக்கு வேள்வியே. என் ஆசிரியர் அமர்ந்த பீடத்தில் அமரத் துணிவுகொண்ட இவ்விழிமகனிடம் அவன் யார் என்று சொல்லிச்செல்லவே வந்தேன். யாதவா, உன் சொல்லை உன் குடியினர்கூட செவிகொள்ளப்போவதில்லை. வேதமென்பது பல்லாயிரம் முனிவர் கொண்ட அருந்தவத்தின் அமுது நனைந்தது. உன் வீண்சொற்களால் அதை நீ தொடவும் முடியாது.”

அவர் போகத் திரும்பியதும் “பத்ரரே” என இளைய யாதவர் மெல்ல அழைத்தார். அவர் அறியாது நோக்கித் திரும்ப அவரை கூர்ந்து நோக்கி மெல்லிய குரலில் இளைய யாதவர் சொன்னார் “தவத்துக்கு நிகரானது போர்க்களக்குருதி என நூல்கள் சொல்கின்றன. என் சொல் ஒவ்வொன்றையும் குருதியால் ஆயிரம் முறை நீராட்டி எடுத்து வைக்கிறேன். அவை வேதச்சொல் அளவுக்கே ஒளிகொள்வதை காண்பீர்கள்!” பத்ரர் மெய்சிலிர்ப்பதை காணமுடிந்தது. அவையினர் அனைவரும் கொண்ட விதிர்ப்பை தன் உடலால் தருமன் உணர்ந்தார். “ம்ம்” என உறுமிவிட்டு பத்ரர் வெளியே சென்றார்.

அவை பெருமூச்சொலிகளுடன் மெல்ல மீண்டது. சாந்தீபனி முனிவர் “இளையோரே, எந்தை சொன்ன சொல்லை மறுத்துச்சென்றவர் இவர் என்று நாம் அறிவோம். ஆயினும் எந்தை இவரையே தன் மாணவர் என்று எண்ணினார் என நான் அறிவேன். மறுப்பதனூடாக இவர் அவர்சொல்லை வாழவைக்கலாம். தொகுத்து முன்செல்லலாம். யோகியரின் பாதையை நாம் அறியோம். இதோ, உலகச்செயலனைத்தையும் ஒருங்குசெய்து ஓயாது அமைந்திருக்கும் இவரை மாபெரும் யோகி என்றே என் உட்புலன்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இன்று அவர் அறியாப்புதிர். நாளை அவர் சொற்களினூடாக அப்புதிர் அழியலாம். இவர் எவரென்று நாம் அறியலாம். நன்று, அதுவரைக்கும் பின்பும் சாந்தீபனிக் கல்விநிலையின் முதலாசிரியர் அவரே. இது எந்தைவடிவென்று இங்கிருந்து நான் இடும் ஆணை. ஆம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

அவர் எழுந்து இளைய யாதவரை வணங்கினார். அதன்பின் மூத்தமாணவர்கள் ஒவ்வொருவராக வந்து அவரை வணங்கி விலகினர். அனைவருக்கும் மலரளித்து “மெய்மை கைவருக!” என இளைய யாதவர் வாழ்த்தினார். தருமன் எழுந்து இளைய யாதவரை அணுகியபோது அவர் விழிகளை நோக்கினார். அவரறிந்த களிச்சிறுவன் அங்கிருக்கவில்லை. யோகத்திலாழ்ந்த விழிகள். கடந்துசென்றமையால் கனல்கொண்டவை. அவர் காலடியில் தலை வணங்கியபோது தன் வாழ்நாளில் முதல்முறையாக ஆணவம் முழுதடங்கி சித்தம் அவிந்து பணிந்தது அகம். “வெல்க, நிறைக!” என்றார் இளைய யாதவர். தருமன் ஒருகணம் நெஞ்சுவிம்ம கண்ணீர் கொண்டார்.

முந்தைய கட்டுரைபாகவதமும் பக்தியும்
அடுத்த கட்டுரைகாஷ்மீரும் பி.ஏ.கிருஷ்ணனும்