சிலைகள் -கடிதம்

index

அன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய  ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் நலமா?

சமீபத்தில் நான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும்  முதன்முறையாக செல்லும் வாய்ப்புக் கிட்டியது. நீங்கள் எப்போதும் சொல்லுகின்ற, இந்து மதத்தின் மூன்றடுக்குக்குள் என்னை பொருத்த தெரியாது அலைகின்ற ஒருவன். எனக்குள் நேர்ந்த சில அனுபவங்களை உங்களிடத்தில் பகிற விரும்புகிறேன்.

வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் நுழைந்ததும், உங்கள் நினைவு தான் வந்தது. சிற்பங்கள் பார்க்க ஒரு முக்கியமான இடம் என்று ஈரோடு சந்திப்பில் சொல்லியிருந்தீர்கள். வேகமாக ஐந்து ரூபாய் கொடுத்து மண்டபத்திற்க்குள் சென்றேன். நானும் நூறு ரூபாய் கொடுத்து தெரிந்தே ஏமாந்தேன். பிறகு நானாக ஒவ்வொரு தூணையும் பார்க்க தொடங்கினேன். எனக்கு சிலைகளைப் பற்றிய அறிவு எதுவும் இல்லை. ஒரு பாமரனாக அந்த சிலைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக நீங்கள் சொன்ன பெண(கள்) சிலை இன்னும் என் கண்களுக்குள் நிற்க்கிறது. ஒருவேளை என் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். முகம் உடைந்த சிலைகள் வருத்தம் தருவதாய் இருந்தது. இரண்டாம் நாள் ஈரோடு சந்திப்பில், காலையிலேயே சிலைகள் பற்றியும் அது அழிவது பற்றியும் பேசினீர்கள். எதுக்கு இவரு காலையிலேயே இதைப் போய் பேசகிறார் என்று அப்போது தோன்றிற்று. உண்மையில் அதன் முக்கியத்துவம் இன்று தான் விளங்கியது. இரண்டாவது முறை சுற்றி வரும்போதுதான் தெரிந்தது முதல் முறை சுற்றும் போது எத்தனை சிலைகள் பார்க்காமலே விட்டுவிட்டேனேன்று. பலவித நடனங்கள், குதிரைகள், கடவுள்கள். குறிப்பாக குதிரையில் அமர்ந்து இருக்கும் ஒருவரின் சிலையை பல்வேறு கோவில்களில் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் மாடம்பாக்கம் புராதான சிவன் கோவிலிலூம் அதை கண்டு இருக்கிறேன். அது கட்டப்பட்டது கிபி 9 நூற்றாண்டுவாக்கில். அதே போல் கோர முகமும். இராமானுஜர் சிலை இருப்பதால் அந்த மண்டபம் அமைத்தது கிபி 12 நூற்றாண்டாக இருக்குமா? (அவர் வாழ்ந்த காலம் 12 நூற்றாண்டு என நினைக்கிறேன்). அதனைப் பற்றி கொஞ்சம் விளக்கினால் மகிழ்ச்சி. வேறு உலகத்தில் இருந்தது போல தோன்றிற்று, சிலைகளை பார்த்துவிட்டு வெளிவரும்போது. கலைகளின் உச்சம். மனம் மகிழ்ந்தது. கோவிலுக்குள் சென்றேன்.

சிகிலடைந்த ஓவியங்கள், அற்புதமான சிலைகள் எங்கும் நிறைந்து கிடந்தது. வரதராஜரை சேவிக்க படியேறி உள்ளே நுழைந்தேன். கருநிற மேனியன் நின்றிருந்தான். கலைகள் தந்த மலைப்பில் அவனைப் பார்த்தேன். நன்னா வேண்டிக்க என்றாள் அம்மா. கண்களை மூடி, வேண்டுவது என்வென்று தெரியாமல் விழித்தேன். உச்சகட்ட கலைகளின் நடுவே சூன்யமானவர், அற்ப்பத்தனமாய் வீடு வேண்டும், கார் வேண்டுமேன வேண்டுவோரைப் பார்த்து சிரிப்பதாய் இருந்தது அது. இந்த சூன்ய புன்னகையிலிருந்துதான் அற்புதமான கலைகள் தோன்றியிருக்குமோ என நினைக்க வைத்தது. எறிகின்ற சுடரின் நடுவே சூன்யமான கடவுள், அதைச் சுற்றி நெருப்பு. மையத்தை விட்டு விலக விலக அதன் சுடர் அடர்த்தி குறைந்து, இறுதியில் மறைகிறது. அதைப் போலத்தான் பெருமாளும் அவரைச் சுற்றி சிலைகளும் பிறகு அடர்த்தி குறைந்த இவ்வுலகும். அல்லது இப்படியும் கொள்ளளாம். அடர்த்தியில்லாத இந்த உலகம், மையத்தை நெருங்க நெருங்க அடர்த்தி கூடி மகிழ்ச்சியுற செய்யும் சிலைகள், மையத்தில் ஆனந்தம் தரும் சூன்யம். மிகப்பெரிய அதிர்ச்சி, ஒன்றுமே இல்லாத சூனியத்திற்க்கா இவ்வளவு கலைகளும் கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது?

பின்குறிப்பு: எப்படியும் சிலைகளைப் பற்றியும், மேலே சொன்னற்றை பற்றியும் எழுதியிருக்கலாம். திரும்ப அதைப் பற்றி கேட்பதற்க்கு மனிக்க வேண்டுகிறேன். நாங்கள் தெளிவடையும் வரை இந்த பிக்கல் புடுங்களை பொறுத்துக்கொள்ளவும்.

நன்றி
மகேந்திரன்.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 32
அடுத்த கட்டுரைமைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’