இலங்கை -கடிதங்கள்

ஜெ

 

கிரிதரன் நவரத்தினம் எழுதிய இந்தப் பதிவுதான் என் பார்வை

ஆர்.சிவக்குமார்

எழுத்தாளர் ஜெயமோகனும், இனப்படுகொலையும் பற்றிய ஒரு பார்வை!

ஜெயமோகன் இனப்படுகொலை பற்றிக்கூறிய கருத்துகளுக்கு உணர்ச்சி வசப்பட்டுப்பலர் இணையத்தில் அவரைத்தூற்றிக் காரசாரமாக எதிர்வினையாற்றி வருகின்றார்கள். அவரது பேட்டியினை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் இணையத்தில் வெளியான அந்நேர்காணல் கேள்வி/ பதிலை வாசித்திருக்கின்றேன். முதலில் அவரது கேள்வியினைப் பார்ப்போம்.

*****************************************
விகடன் தடம்: ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’

ஜெயமோகன்: “முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது. 1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது? இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது. இலங்கை அரசு, தமிழர்களை மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை.

*******************************************

இனப்படுகொலை பற்றிய இது போன்ற கேள்விகளுக்குப்பதிலளிக்கும்போது நம்மவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகின்றார்கள். உணர்ச்சி கண்ணை மறைக்கும். அறிவையும் தடுமாறச்செய்யும். வார்த்தைகள் வராமல், போதிய தர்க்கிக்கும் வல்லமை அற்று ஜெயமோகனின் கூற்றினை வரிக்கு வரி எதிர்ப்பதற்கான காரணங்களைக் கூறுவதற்குப் பதில் கொதித்தெழுகின்றார்கள்.

ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித்தான் தான் நம்பும் காரணங்களைக் குறிப்பிடுகின்றார். இந்தியா, இலங்கை உட்படப்பல நாடுகளில் நடைபெற்ற ஆயுதக் கிளர்ச்சிகளில் பலர் அரசபடைகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் கூட சிங்களவர்களான ஜேவிபியினர் படுகொலை செய்யபட்டிருக்கின்றார்கள். இவையெல்லாம் இனப்படுகொலைகளா? இவற்றை அரசு தனக்கெதிராகப் போரிடும் குழுக்களுடனான மோதல்கள் என்றுதான் தான் பார்ப்பதாகவும், இனப்படுகொலையாகப் பார்க்கவில்லையென்றும் கூறியிருக்கின்றார்.

ஜெயமோகன் தன் அறிவுக்குட்பட்டு, இனப்படுகொலை பற்றிய தனது புரிதலுக்கேற்பப் பதிலை அளித்திருக்கின்றார். ஆனால் இது பற்றிய ஜெயமோகனின் பதிலை இணையத்தில் குறிப்பிட்டுக் கொதித்தவர்களெல்லாரும் , ஜெயமோகனின் முழுப்பதிலையும் குறிப்பிடாமல் , தங்களுக்குச்சார்பான ஒரு பகுதியை மட்டும் தூக்கிப்பிடித்துக்கொண்டு குமுறுகின்றார்கள். ஜெயமோகன் இலங்கையில் நடந்ததை மட்டுமல்ல, காங்கோ, பொலிவியா, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கையில் நடைபெற்ற தமிழ், ஜேவிபி போராட்டங்கள் பற்றியெல்லாம் இனப்படுகொலைகள அல்ல என்று ஜெயமோகன் கூறியிருக்கின்றார்.

அவற்றைப்பற்றி எதுவுமே குறிப்பிடாமல், இலங்கைத்தமிழர்களுக்கெதிரான அரச படுகொலைகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டுப் பலர் குமுறி வெடித்திருக்கின்றார்கள்.

உண்மையிலென்ன செய்திருக்க வேண்டும்?

ஜெயமோகன் கூறிய முழுப்பதிலையும் குறிப்பிட்டு, அந்தப்பதிலின் ஒவ்வொரு வரியும் ஏன் தவறு என்று தம் கருத்தை நிரூபித்து வாதிட்டிருக்க வேண்டும்? அவ்விதம் செய்வதற்குப் பதில், ‘ஜெயமோகன் இனப்படுகொலை இல்லையென்று கூறிவிட்டார்.’ என்று கொதித்தெழுகின்றார்கள்.

இவ்விதம் கொதித்தெழுவதற்குப் பதில் இனப்படுகொலை பற்றிய அறிவினைச் சிறிது அதிகரித்துக்கொண்டு வாதிட்டிருக்கலாம். அவ்விதம் செய்யாமல், அல்லது செய்வதற்குப் போதிய ஆர்வமற்று ‘ஜெயமோகன் ஒழிக’ என்று குரலெழுப்புவது மிகவும் எளிதானது. எனவேதான் அவ்விதம் எதிர்வினையாற்றுகின்றார்கள்.

முதலில் ஜெயமோகன் கூறியவை பற்றிப்பார்ப்பதற்கு முன்னர் இனப்படுகொலை பற்றிய ஐக்கிய நாடுகள் சபை 1948இல் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தைச்சிறிது பார்ப்போம். அது பின்வருமாறு கூறுகின்றது:

“1948: The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide (CPPCG) was adopted by the UN General Assembly on 9 December 1948 and came into effect on 12 January 1951 (Resolution 260 (III)). Article 2:

Any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such: killing members of the group; causing serious bodily or mental harm to members of the group; deliberately inflicting on the group conditions of life, calculated to bring about its physical destruction in whole or in part; imposing measures intended to prevent births within the group; [and] forcibly transferring children of the group to another group. (Article 2 CPPCG)”

இதன் சாரத்தினைப் பின்வருமாறு கூறலாம்:

இத்தீர்மானத்தின்படி தேசிய, இன, மதக் குழுக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் எண்ணத்துடன் கொலை செய்வது மட்டும் இனப்படுகொலை அல்ல. அக்குழுக்களை , அல்லது அக்குழுக்களின் அங்கத்தவர்களை உடல் ரீதியாக, உள ரீதியாகத் துன்புறுத்துவதும் இனப்படுகொலைதான். அது மட்டுமல்ல அக்குழுக்களை முழுமையாக அல்லது பகுதியாக அழிக்கும் எண்ணத்துடன், திட்டமிட்டு அந்தக்குழுக்கள் மத்தியில் பிறப்பு வீதத்தைத்தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதும், குழந்தைகளைப் பலவந்தமாக ஒரு குழுவிலிருந்து இன்னுமொரு குழுவுக்கு மாற்றுவதும், இதற்கான வாழ்வியற் சூழலினை திட்டமிட்டு உருவாக்குவதும். இனப்படுகொலைக்குரிய குற்றங்கள்.

ஐக்கிய நாடுகள் சபை 1946இல் ஏற்றுக்கொண்ட இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணம் வருமாறு:

“United Nations General Assembly Resolution 96 (I) (11 December) Genocide is a denial of the right of existence of entire human groups, as homicide is the denial of the right to live of individual human beings; such denial of the right of existence shocks the conscience of mankind, …and is contrary to moral law and to the spirit and aims of the United Nations. … The General Assembly, therefore, affirms that genocide is a crime under international law…whether the crime is committed on religious, racial, political or any other grounds…[10]

இதன் சாரத்தைப்பின்வருமாறு கூறலாம்: “:இனப்படுகொலை என்பது ஒட்டுமொத்தமாக மனிதக் குழுக்களின் வாழும் உரிமையை மறுப்பதாகும். ுகொலை என்பது தனிப்பட்ட மனிதரொருவரின் வாழும் உரிமையை மறுப்பதாகும்.”

இவ்விரண்டு தீர்மானங்களின்படி மிக எளிதாக ஜெயமோகனின் இனப்படுகொலை பற்றிய தடுமாற்றத்தினைபோக்கியிருக்கலாம். ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித் தடுமாறியதற்குக் காரணம் அரசுகள் எல்லாம் கிளர்ச்சி செய்பவர்களைத் தம்முடன் போர் செய்பவர்களாகக் கருதிக்கொல்கின்றார்கள். அவையெல்லாம் இனப்படுகொலைகளா என்று குழம்பியதுதான்.

ஐக்கியநாடுகளின் இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணம், குற்றங்கள் பற்றிய தீர்மானங்களின்படி அவையெல்லாம் கூட இனப்படுக்கொலைகள்தாம். எனவே இலங்கையில் நடைபெற்றதும் இனப்படுகொலைதான். ஜெயமோகனின் தர்க்கத்தின்படி அவையெல்லாம் அரசுகளின் கிளர்ச்சிகளுக்கெதிரான போர் நடவடிக்கைகள். அந்த அடிப்படையில்தான் அவர் இலங்கைத்தமிழர்கள் மீதான அரச படுகொலைகளையும் அணுகுகின்றார்.

ஜெயமோகனின் அவையெல்லாம் இனப்படுகொலைகளா? என்னும் வினாவுக்குரிய விடையாக இனப்படுகொலை பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை கூறலாம். ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை பற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் அவையும் இனப்படுகொலைகளே.

இவ்விதம் தர்க்கபூர்வமாக ஜெயமோகன் கூறியதற்கெதிராக வாதிடுவதற்குப்பதில், அவர் கூறியதில் இலங்கைத்தமிழர்களுக்கெதிரான படுகொலைகளை மட்டும் பிரித்தெடுத்தும் கொண்டு, ஈழத்து எழுத்தாளர்கள் பலர் உணர்ச்சியில் குமுறியிருப்பதைப்பார்த்தால் ஒன்றினைக் கூறத்தோன்றுகிறது. தர்க்கம் செய்யும்போது ஆத்திரப்படாதீர்கள். கூறியவற்றை உங்களுக்குச் சார்ப்பாகத்திரிபு படுத்திக்கருத்துகளை வெளியிடாதீர்கள். முறையாக வரிக்கு வரி உங்கள் பக்க நியாயங்களை எடுத்துரையுங்கள். தர்க்கத்தில் உங்கள் பக்க நியாயங்களை வெளிப்படுத்துங்கள்.

இனப்படுகொலை பற்றிய பலரின் வரைவிலக்கணங்களைப் பின்வரும் இணையத்தளத்தில் வாசியுங்கள். அது பற்றிய புரிந்துணர்வினை அதிகரிக்க அது உதவும்.

https://en.wikipedia.org/wiki/Genocide_definitions

 

================================

அன்புள்ள ஜெ,

வணக்கம்.  ஈழம், இன்ப்படுகொலையா, போர் குற்றமா என்ற
விவாதத்தில் ஒரு முக்கிய விசியம் பேசப்படவில்லை. விடுதலை
புலிகளின் treasury உலகெங்கும் (முக்கியமாக அய்ரோப்பியா,
கனடா, ஆஸ்த்ரேலியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்)
பல நூறு பிணாமிகள். முகவர்கள் வசம் இன்றும் சிக்கியுள்ளன.
போர் நடக்கும் போது, தினமும் பல லச்சம் / கோடி ரூபாய் செலவு
ஆகியிருக்கும். ஆயுதம், மருந்து, டீசல், தளவாடங்கள் வாங்க, கடத்த
உலகெங்கும் மிக பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தைய புலிகள்
நிர்மாணித்து, shell companies, off shore accounts, front companies மூலம்
நடத்தி வந்ததை அறிவீர்கள். போர் முடிந்த இந்த 7 ஆண்டுகளில்
குமரன் பத்தமாநபனை மட்டுமே பிடிப்பட்டார். அவர் வசம் இருந்த
நிதி ஒரு பகுதி தான். இன்னும் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான
நிதிகள் உலகெங்கும் சிதறி கிடக்கின்றன. இதை வைத்து கொண்டு,
வாழ்க்கையை அனுபவிக்கும் பினாமிகள் இன்று வரை கள்ள மவுனம்
காக்கின்றனர். ஈழத்தில் இன்று வறுமையில், வேலையின்மையில் வாடும்
மக்களின் பெயரால் திரட்டப்பட்ட நிதி இது. நியாயமாக அவர்களின்
வாழ்வாதாரத்திற்க்காக,  மறுவாழ்விற்க்காக அய்.நா அல்லது செஞ்சிலுவை
சங்கம் மூலம் செலவு செய்யப்பட வேண்டிய நிதி அது. புலிகளின்
பினாமிகளை நோக்கி கேட்க்கப்ட வேண்டிய கேள்விகள் இவை.
ஆனால் ஈழ ஆதரவு உணர்ச்சி போராளிகள் யாரும் இந்த மிக முக்கிய,
தேவையான  விசியத்தை பேசுவதே இல்லை. பல  வருடங்களாக
நான் இணையத்தில் பல ‘போராளிகளிடம்’ கேட்டு சலித்துவிட்டேன்.
பழசை மட்டும் தான் பேசுகிறார்கள். ராஜபக்சேவை தண்டிபதில்
காட்டும் ஆவேசத்தை இதில் காட்டுவதில்லை. இதை பற்றியும் எழுதுங்கள்.
அன்புடன்
K.R.அதியமான்
சென்னை – 96

==========================================

அன்புள்ள ஜெயமோகன்,

 

உங்களது பதில் கட்டுரைக்கு நன்றி. உங்களது பதிலில் எனக்குள்ள சில கேள்விகளையும், விளக்கங்களையும் முன்வைக்கவிரும்புகிறேன்.

 

  1. இனஅழித்தொழிப்பு 80களுக்கு முன்பும், 2009க்கு பிறகும் இலங்கையில் நடந்தது இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். 1956ல் பண்டாரநாயகே பதவிக்கு வந்த உடன், சிங்களா ஒன்லி என்கிற சட்டம் மூலம் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக அறிவிக்கப்படுகிறது. அதற்க்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்து, அதற்கு பிறகு நடந்த கல்ஓயா கலவரத்தில் 150 தமிழர்கள் வெட்டிக்கொல்லபடுகின்றனர். பிறகு தொடர்ந்து 1958ல் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய வன்முறைதான் இரு சமூகங்களுக்கும் இடையேயான நிரந்தர பிளவை ஏற்படுத்துகிறது. 1958 மே 25ம்தேதி பொலன்னறுவை பண்ணையில், குழந்தைகள், கர்ப்பிணி பெண் உட்பட எழுபது தமிழர்கள் கரும்புதோட்டத்தில் வெட்டுகொல்லப்பட்டனர். 1958ம் ஆண்டு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், பலியானார்கள்.  பிற்பாடும் தொடர்ந்து 74, 77, 78 என பல படுகொலைகள் இனரீதியாக நடந்தே வந்திருக்கிறது. 
  2. இனஅழித்தொழிப்பு என்று ஏற்றுகொள்ளபடவேண்டும் என்றால் அது தொடர்ந்து நடைப்பெற்றிருக்கவேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். ரூவாண்டாவில் 1994ல் டுட்சி இனத்துக்கு எதிராக மிகப்பெரிய இனஅழித்தொழிப்பு நடைப்பெற்றது. உது இனத்தை சேர்ந்த மிதவாத தலைவர்களும் இதில் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு அங்கு அதே மாதிரியான படுகொலைகள் நடக்கவில்லை. எனினும் 94ல் நடைபெற்றது இனபடுகொலை என்று சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  
  3. மலையக தமிழர்கள், அடிப்படையில் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள். ஈழத்தமிழர்கள், இலங்கையின் பூர்வீக குடியினர். ஒரே மொழி பேசினாலும் இவையிரண்டும் அடிப்படையில் இருவேறு தேசிய இனங்கள். எனவே மலையக தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் நடைபெறவில்லை என்பதால் அது இனபடுகொலையல்ல என்று எப்படி கூற முடியும்?  மேலும், 2013ம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்ட தெளிவத்தை ஜோசப் அவர்களுடன் உரையாடியபோது அவர் தெரிவித்த கருத்து, 1970களில் அகதிகளாக வடக்குபகுதிகளில் குடியேறிய மலையக தமிழர்களும் இந்த போரில் மிகமோசமாக பாதிக்கப்பட்டனர் என்பதே. 2009ல் கொல்லப்பட்டவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மலையக தமிழர்களாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.  
  4. ஈழத்தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ்முஸ்லிம்கள் என இந்த மூன்று பிரிவினரிடையே 1915 முதலே பல கருத்துவேறுபாடுகளும் உள்குத்துக்களும் நடந்தேறியுள்ளன. இதன் தொடர்ச்சியாக சில காட்டிகொடுப்புகளும், பலிகளும், பின்பு புலிகள் 1990 அக்டோபரில் தமிழ் முஸ்லிம்களை வெளியேற்றியதும் நடந்தது. பிறகு, 2002ல் புலிகள் அமைப்பு, முஸ்லிம்களிடம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டனர், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கிமிடம், பிரபாகரன், வட-கிழக்கு பகுதி தமிழ் இஸ்லாமியர்களுக்கும் உரியதே என்று வாக்குறுதி கொடுத்ததும் நடந்தது. ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில் மலையக தமிழர் அமைப்புகளின் தலைவர்களும் புலிகளிடம் நெருங்கி வந்ததும், தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என்று பிரபாகரன் சொன்னதும் நடந்தது. 
  5. பொதுமக்களை, போர்முனைக்கு கொண்டு சென்றது புலிகளின் தவறு. ஆனால், ஒரு பகுதியை, யுத்தத்திலிருந்து பாதுகாக்கபட்ட பகுதி என்று அரசுதான் அறிவிக்கிறது. அதில் மக்களை குழும செய்கிறது. பிறகு அந்த பாதுகாப்பு வளையத்தில், குண்டு மழைபொழிந்து மக்களை கொல்கிறது. 2009ம் வருடம் ஜனவரி மாதம் 21ம் தேதி, சுதந்திரபுரம் என்ற இடத்தில் இதே போல், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கிறது அரசு. அதை நம்பி ஐ.நாவின் ஊழியர்கள் (11வது கான்வாய்) உணவு பொருட்களை எடுத்து செல்கிறார்கள். ராணுவத்துக்கும் தகவல் கொடுத்துவிட்டே செல்கிறார்கள். ஆனால், அவர்கள் சென்ற சில மணித்துளிகளிலேயே குண்டு வீசபடுகிறது. குறுந்தகவல்கள் மூலம் குண்டு வீசுவதை நிறுத்த சொல்லி ஐ.நா ஊழியர்கள் கதறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கொல்லபடுகிறார்கள். அந்த ஊழியர்கள் குண்டுவீச்சை நிறுத்தும்படி கோரிய குறுந்தகவல்கள் உட்பட இவையெல்லாம் மிக விரிவாகவே சார்லஸ் பேட்ரி (ஐ.நா உள்ளக ஆய்வு குழு) அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்லஸ் பேட்ரி அறிக்கையை வெளியிடுவதற்க்கே, ஐ.நா மிகவும் தயங்கியது. பிறகு முக்கியமான சில இடங்களை கறுப்பு மை கொண்டு அழித்துவிட்டு, வெளியிட்டது. இணையத்திலும் கிடைக்கிறது.  NFZ1, NFZ2 NFZ3 என அனைத்து பாதுகாப்பு வளையங்களிலும் இதே ரீதியான படுகொலைகள் நிகழ்ந்துள்ளது.  இறுதி போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், போர்முறை என பல ஆதாரங்கள் இது புலிகளுக்கு மட்டும் எதிரான போர் அல்ல என்பதை நிருபிக்கிறது. 
  6. இலங்கையில் நடந்தது போர்குற்றம் என்றும், மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்றும் ஐ.நா அமைத்த நிபுணர் குழு ஏற்கனவே அறிக்கை சமர்பித்து விட்டது. எனினும் இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. போரின்போதே ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட சொல்லி பலமுறை கோரிக்கை விடுத்தும் பான் கீ மூன் செவிசாய்க்கவில்லை. உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு இல்லை என்று மறுத்து விட்டார். 2009 ஜூனில், ஐ.நாவின் சட்டகுழு ஆர்டிக்கிள் 99படி சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று பரிந்துரை செய்தது. அதையும் பான் கீ மூன் ஏற்கவில்லை.  

    இந்த சூழலில், இனபடுகொலை என்று குரல் கொடுப்பதால்தான், சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது எப்படி சரியாக இருக்கமுடியும்? போர்குற்றம் என்றால் வெறும் அம்புகள் மட்டும் தண்டிக்கப்பட்டு, எய்தவர்கள் தப்பித்துவிட வாய்ப்பிருக்கிறது என்று கருதியே இது வெறும் போர்குற்றம் மட்டுமல்ல, இதன்பின்னே உள்ளவர்கள், இதற்கு உதவியவர்கள் என அனைவரும் தண்டிக்கபடவேண்டும் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இனபடுகொலை என்கிற வாதம், முன்வைக்கபடுகிறது. இனபடுகொலை என்று சொல்பவர்களின் நோக்கத்தை ஆராய்வதை விட தரவுகளின் அடிப்படையில் இது இனபடுகொலையா என்று ஆராய்வதுதானே சரியாக இருக்க முடியும்?

     

    கண்ணுக்கு முன்னே குழந்தைகள் வெடித்து சிதறியதையும், வாழ்க்கைதுணைகள் செத்து மடிந்ததையும், தாய்தந்தையர் கொல்லப்பட்டதையும் பார்த்து அலறி, தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வழங்குபடி கோரும் அந்த தமிழர்களின் குரல் வரலாற்றில் இப்படி மறக்கடிக்கப்படவேண்டியதுதானா? நடந்த கொடுமைகளுக்கு நீதி வழங்காமல், எப்படி அவர்கள் தமது கடந்தகால இழப்புகளை மறந்து ஒரே சமூகமாக ஒற்றுமையுடன் வாழ முடியும்?

     

    இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஓரளவு வசதியுடன் வாழ்கிறார்கள். மிகமோசமாக நாம்தான் அவர்களை கைவிட்டுள்ளோம் என்கிற உங்களது வரிகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். எங்களாலான உதவிகளை, இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர் குழந்தைகளின் கல்விக்காக செய்துவருகிறோம் என்பதையும் தெரிவிக்கிறேன்.

அன்புடன்
செந்தில்குமார்
முந்தைய கட்டுரைசார்வாகமும் நீட்சேவும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21