தாயுமாதல் -கடிதங்கள்

 

11

வணக்கம் .

“தாயுமாதல்” படிக்கத் தொடங்கிய போது, தங்களின் புறப்பாடு தொகுப்பின் தொடர்ச்சியாகத்தான் நினைத்தேன். வர்ணனைகள், உணவு குறித்த குறிப்புகள் என்று வரிகளில் லயித்துக்கொண்டிருந்தேன். “அவள் என்னுடைய மனைவி தான்” என்ற வரியில் நின்றுவிட்டேன். முழுதும் படித்து முடித்துவிட்டு வெளியே சென்று கடலை நோக்கிக் கொண்டிருந்தேன். மழைப்பாடல் சதஸ்ருங்கம் நினைவில் வந்தது. பாண்டு நினைவில் வந்தார்… அத்தந்தையினுள் உள்ள தாய்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மையை மூர்த்தியினுள்ளும். கொல்லிமலைச் சந்திப்பில் நீங்கள் கூறிய தந்தையால் மட்டுமே கொடுக்கவியலும் அம்சங்கள் மற்றும் அவரால் தாயின் இடத்தை நிரப்ப முடியுமென்றதையும் எண்ணிக்கொண்டேன்.

நன்றி.

மகேஷ்.

(காங்கோ)

***

அன்பு ஜெ,

தன்னுள் இருக்கும் தாய்மையை தேடித் தேடி தான் பல வகையான ஓட்டம் பெண்கள் பின்னாடி என தோன்றியது. தாய்மை தான் நிறைவும் பொருளும் தரும் இல்லையா? அந்த நிறைவு பத்தாமல் காதலாலும் பெண்கள் அண்மையாலும் எவ்வளவு முயற்சிகள்? அர்ஜுனன் சித்ராங்கதை, சுபத்ரா என தேடியபடி சென்றதும் அவன் சொல்லிக் கொண்டது போல அனைத்து பெண்களிடம் அவன் காணுவது இவனின் ஒன்றையே என்றானதும்,  பின் அவன் மலர்ந்து நின்றுவிடுவது அபிமன்யு வந்த பின் என்பதும் இந்த தாயுமாதல் தானோ?

அப்படி தீராத அந்த வெம்மையின் வெற்றிடம், தன் பிள்ளைகளுக்கு பிறகு அதுவும் மகள்களுக்கு பின், அந்த தாய்மையை கூடுதலாக நெருங்கி கொண்டது போல பட்டது. நீங்கள் சொன்ன “நான்கள்” அந்த கனிதல்  என்பது இந்த பருவங்களுக்கு பின் வருகிறதோ? அப்படி ஒரு தகப்பன் தாய்மையை விட முடியாமல் தான் action hero biju படத்தில் வரும் ஒரு காட்சி (ஒரு தந்தை ஓடி போன தான் மனைவியிடம் தன் பெண்ணை கொடுத்து விட போலீஸ் ஸ்டேஷனில் கேட்பது )

பயணத்திற்கு வாழ்த்துக்கள். அரிபரி இன்றி மெதுவாக, கோபமின்றி செல்லவும்…

http://www.happytrips.com/bali/travel-guide/10-must-see-hindu-temples-in-bali/gs53004655.cms

Regards

Lingaraj

***

அன்புள்ள ஜெ

தாயுமாதல் ஒரு சுருக்கமான அழகிய வாழ்க்கைச்சித்திரம். மிகத்தட்டையான மொழியில் வெறும் அனுபவப்பதிவு போலச் சொல்லப்பட்டிருப்பதனால் அது நமக்குள் விரியத்தொடங்குகிறது. அதன் உள்ளே உள்ள மடிப்புகள் விரிகின்றன.

இக்கதையின் சாயல் கொஞ்சம் கிறுக்கனாசாரி வரும் அம்மையப்பம் கதையில் உண்டு. நீங்கள் எழுதிய முக்கியமான கதைகளில் ஒன்று அது. படைப்புமனத்தின் பெரும்துயரமும் தனிமையும் எந்தவிதமான மேலதிக அழுத்தமும் இல்லாமல் போகிறபோக்கிலே பதிவான கதை அது

ஆர். பிரபாகர்

***

அன்புள்ள ஜெ,

மணமாகவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். [தாயுமாதல்] அப்படியென்றால் நீங்கள் புறப்பாடு காலகட்டத்தில் செய்த பயணமா அது?

மாரிமுத்து

அன்புள்ள மாரிமுத்து,

இல்லை. 1986ல் ஜவகர் யாத்ரி டிக்கெட் எடுத்துக்கொண்டு நான் செய்த இரு நீண்ட இந்தியப் பயணங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதில் நிகழ்ந்தது இது

ஜெ

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 6
அடுத்த கட்டுரைபியுஷ் மனுஷும் எதிர்க்குரல்களும்