‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74

[ 21 ]

நான்கு நாட்கள் துரியோதனன் இளகவில்லை. கர்ணன் “நீங்கள் சென்று ஒருமுறை நேரில் கேளுங்கள், அரசே. உங்கள் தந்தை என அவர் என்றும் நெகிழ்வுடனேயே இருந்திருக்கிறார். இன்று நீங்கள் மானுடனாக வாழ்வதும் அவரது கருணையினாலேயே” என்றான். “அந்நாட்கள் கடந்துசென்றுவிட்டன… எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கப்போகிறார்? இருபது நாட்களா? களிறு உணவில்லாது முப்பது நாட்களிருக்கும் என்கிறார்கள். முப்பது நாட்கள் பார்க்கிறேன். எரிமேடையில் உடல் அனல்கொண்ட பின்னர் விடுதலை பெறுகிறேன்” என்றான். “ஆனால் அவர் என் தந்தை அல்ல. மைந்தன் என அவர் மடியிலமர்த்திய யுயுத்ஸு அதை செய்யட்டும்.”

தன் உடன்பிறந்தவர்களிடம் “எவருக்கும் என் ஆணை என ஏதுமில்லை. விழைபவர் சென்று அவரது கால்தாங்கலாம். முடிசூட்டி அரசனாக்குவார் என்றால் அமரலாம்…” என்றான். துச்சாதனன் “மூத்தவரே, நீங்கள் வீண்சொற்கள் எடுக்கவேண்டியதில்லை. உங்களை அன்றி பிறிதெதையும் அறியாதோர் நாங்கள்” என்றான். சுபாகு “உங்கள் முகமென்றே பேரரசரையும் அறிந்திருக்கிறோம். உங்கள் எண்ணங்கள் எங்களுக்கு இறையாணைகள்” என்றான்.

“எதையும் மாற்றவேண்டியதில்லை. பன்னிரு படைக்களம் அமைக்க ஓர் ஒப்புதல் தேவை… அதை அவர் அளிக்கவேண்டியதுமில்லை. மறுக்காமலிருந்தால் போதும்” என்றான் கர்ணன். “பன்னிரு களத்திற்கு முறைப்படி யுதிஷ்டிரனை அழைக்கவேண்டியவர் அவர். அவரது ஆணையிருந்தால் மட்டுமே விதுரர் செல்வார். விதுரரன்றி எவர் சென்றாலும் யுதிஷ்டிரனை ஒப்புக்கொள்ளச் செய்ய முடியாது.” சகுனி “ஆம், நான் அவரிடம் பலமுறை பேசிவிட்டேன். சொற்களை அவர் அறியவேயில்லை” என்றார்.

கணிகர் புன்னகைத்து “எதிர்வினையாற்றப்படாத சொற்கள் நன்று. அவை விதைகள்” என்றார். சீற்றத்துடன் திரும்பி “உங்கள் சிரிப்பு என்னை எரியச் செய்கிறது, அமைச்சரே. நாம் எத்தகைய இடரில் வந்து நின்றிருக்கிறோம் என உண்மையிலேயே அறிவீரா?” என்றார் சகுனி. “ஆம், அறிவேன்” என்றபின் “ஆறு நாட்களுக்குமேல் தாங்கமாட்டார்” என்றார். “அவரா? அவர் உடல்…” என சகுனி தொடங்க “அவர் உடல் தாங்கும். ஆன்மா தாங்காது. அது ஏற்கெனவே மெலிந்து நீர்வற்றி இருக்கிறது…” என்று சொல்லி கணிகர் உடல்குலுங்க சிரித்தார்.

கர்ணன் நாள்தோறும் வடக்கிருக்குமிடத்திற்கு சென்று வந்தான். அங்குள்ள குளிர்ந்த அமைதி பெருகியபடியே வந்தது. ஒட்டடைகளைக் கிழித்து அகற்றி செல்வது போல செல்லவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் மேலும் மேலுமென வஞ்சம்கொள்ளும் தெய்வத்தின் சிலை அமைந்த கருவறைமுன் சென்றமர்ந்து மீள்வதைப்போல் திரும்பிவரவேண்டியிருந்தது. நான்காவது நாள் காந்தாரியும் திருதராஷ்டிரரும் மட்டுமே அமர்ந்திருந்தனர். பிறர் சோர்ந்து விழுந்துவிட்டனர்.

அவன் திரும்பும்போது எதிரே பானுமதி வருவதைக்கண்டு நின்றான். தலைவணங்கி முகமனுரைத்தான். அவள் பெருமூச்சுடன் விழி தாழ்த்தினாள். “பேரரசியிடம் பேசினீர்களா?” என்றான் கர்ணன். “இல்லை…” என்றாள் அவள். அவன் மேலும் கேட்க எண்ணியதை தவிர்த்து முன்னால் சென்றபோது அசலையும் கிருஷ்ணையும் வருவதை கண்டான். அணிகளும் சிலம்பும் ஒலிக்க ஓடிவந்து அசலையின் தோளை பற்றிக்கொண்ட கிருஷ்ணை “நான் சொன்னேன் அல்லவா? அந்த யாழின் பெயர் மகரம். அதை தெற்கின் பாணர்கள் வாசிக்கிறார்கள். அங்கே பாருங்கள், சிற்றன்னையே” என்றாள்.

“இருடி” என்றாள் அசலை. அதற்குள் கர்ணனை பார்த்துவிட்டு தலைவணங்கி “பணிகிறேன், மூத்தவரே” என்றாள். “என்ன பார்த்தாய்?” என்று கர்ணன் புன்னகையுடன் கிருஷ்ணையிடம் கேட்டான். அவள் கரிய முகம் நாணத்தால் அனல்கொண்டது. “இல்லை” என விழி தாழ்த்தி சிரிப்புடன் சொன்னாள். அசலை “ஒரு விறலியாக ஆகிவிடவேண்டும் என்பதே அவள் விருப்பமாம். விறலியாக எப்படியெல்லாம் ஏழு மலைகளுக்கும் ஏழு ஆறுகளுக்கும் அப்பாலுள்ள நாடுகளுக்கு செல்லப்போகிறாள் என்பதைப் பற்றியே எப்போதும் பேச்சு” என்றாள்.

கர்ணன் சிரித்து “பாரதவர்ஷத்தின் பேரரசியாக வேண்டியவர் விறலியாவதா?” என்றான். கிருஷ்ணை நாகம்போல தலைதூக்கி “பாரதவர்ஷத்தின் அரசியென்றானால் இதே அரண்மனையில் இதே முகங்கள் நடுவே அரியணை அமர்ந்திருக்கவேண்டும். பாரதவர்ஷம் ஏடுகளாகவும் காணிக்கைகளாகவும் வந்து முன்னால் நிற்கும். விறலியென்றானால் உண்மையிலேயே இந்த மண்ணையும் மக்களையும் பார்க்க முடியும்” என்றாள்.

“நன்று” என்றான் கர்ணன் நகைத்தபடி. “நான் பொய்யாகச் சொல்லவில்லை. விறலியாக ஒருநாள் இந்த அரண்மனையிலிருந்து கிளம்பிச் செல்லத்தான் போகிறேன்” என்று கிருஷ்ணை சொன்னாள். “உனக்கு எவர் பெயர் இடப்பட்டிருக்கிறதென்று அறிவாயா?” என்றான் கர்ணன். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியின் சிறுவடிவம் நீ.” கிருஷ்ணை முகம் சுளித்து “இல்லை. நான் சூததேவரின் துணைவியின் மறுவடிவம். அவள் பெயரும் கிருஷ்ணைதான்… அங்கே தென்னகத்தில் ஓடும் ஒரு பேராற்றின் பெயரும் கிருஷ்ணை” என்றாள்.

கர்ணன் “சரி… நான் சொல்சூழவில்லை… செல்க!” என்றான். அவள் தலையில் கைவைத்து வாழ்த்தியபின் சென்று படிகளை அணுகியபோது ஓர் எண்ணம் எழுந்தது. அங்கே நின்றபடி “கிருஷ்ணை” என்றான். “சொல்லுங்கள், பெரியதந்தையே” என்றபடி அவள் கால்சிலம்பு ஒலிக்க அவனை நோக்கி ஓடிவந்தாள். “எதற்காக ஓடுகிறாய்? மெல்ல செல்” என்றாள் அசலை. கிருஷ்ணை அவனருகே வந்து “இப்படி ஓடினால்தான் உண்டு. இளவரசியர் ஓடக்கூடாதென்கிறார்கள்…” என்றாள்.

“அரசரை இறுதியாக எப்போது பார்த்தாய்?” என்றான் கர்ணன். “ஒருமாதம், இல்லை இரண்டு மாதம் இருக்கும். இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்வதற்கு முன்பு.” கர்ணன் “அவர் உன்னிடம் என்ன சொன்னார்?” என்றான். “ஒன்றும் சொல்லவில்லை. என்னைப் பார்த்தால் முகம் மலர்ந்து சற்றுநேரம் நோக்கிக்கொண்டிருப்பார். பிறகு திடுக்கிட்டதுபோல நோக்கை விலக்கிக்கொள்வார். என்னிலிருந்து ஏதோ புதிய பூதம் பேருருக்கொண்டு எழக் கண்டதுபோல கண்களில் திகைப்பு தெரியும்” என்றாள் கிருஷ்ணை.

“அன்று என் தலையைத் தொட்டு இந்திரப்பிரஸ்தத்திற்கு வருகிறாயா என்றார். நான் ஏன் என்றேன். இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை பார்க்கலாமே என்றார். அவரை நான் ஏன் பார்க்கவேண்டும்? அவர் என்ன இசையரசியா, எளிய நாட்டரசிதானே என்றேன். புன்னகையுடன் ஆம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்” என்றாள் கிருஷ்ணை. “எப்போதும் அவர் என்னிடம் நெடுநேரம் நகையாடுவதில்லை. நான் பேசுவது அவருக்குப் புரிவதில்லை. என்னை இன்னமும் சிறுமி என்றே எண்ணுகிறார்.”

கர்ணன் சிரித்து “நீ மிகப்பெரிய பெண் அல்லவா?” என்றான். “பேரரசரை பார்த்தபின் சேடியை அழைத்தபடி அரசரின் மந்தண மாளிகைக்கு வா!” கிருஷ்ணை “நானா?” என்றாள். “ஆம், நீ அரசரை பார்த்தாகவேண்டும்.” அவள் விழி சுருக்கம் கொள்ள “ஏன்?” என்றாள். “உன் தாதை இங்கே உண்ணாநோன்பிருக்கிறார் தெரியுமா?” என்றான். “ஆம், அதனால்தான் அவரை பார்க்க வந்தேன். இங்கே எனக்கு மிகமிகப் பிடித்தமானவர் அவரே. அவர் உண்ணாநோன்பிருக்கிறார் என்றதுமே பார்க்கவேண்டுமென விழைந்தேன். எவரும் செல்லக்கூடாதென்று அரசரின் ஆணை என்றாள் செவிலி. நான் செல்வேன், என்னை நாடுகடத்தட்டும், விறலியாக யாழுடன் கிளம்பிவிடுகிறேன் என்று சொல்லி நான் சிற்றன்னையுடன் கிளம்பிவந்தேன்.”

“உன் தாதை உணவருந்தாமலிருப்பது உன் தந்தை வந்து அவர் பாதம் பணிந்து உண்ணும்படி கோராததனால்தான்” என்றான் கர்ணன். “நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. உன் அன்னை சொல்லையும் ஏற்கவில்லை. நீ வந்து சொன்னால் கேட்பார்.” அவள் “நான் சொன்னாலா?” என்றாள். “ஆம், அதை உன்னால் உணரமுடியவில்லையா?” என்றான். அவள் எண்ணிநோக்கி “ஆம், நான் சொன்ன எதையுமே அவர் தட்டியதில்லை” என்றாள். “ஆம், வருக!”

“நான் இப்போதே வருகிறேன்” என்றாள். “இல்லை, நீ பேரரசரை பார்ப்பதற்காக வந்தாயல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அவர் உண்ணாநோன்பிருக்கையில் வெறுமனே நோக்குவதிலென்ன பொருள் உள்ளது? நான் முதலில் தந்தையை வரச்செய்கிறேன். அவர் சொல்லி தாதை உணவருந்தியபின் அவரிடம் இசைபற்றி பேசிக்கொள்கிறேன்” என்றாள் கிருஷ்ணை. “ஆம், அது நன்று. அன்னையிடம் சொல்லிவிட்டு வா” என்றான்.

அவள் பானுமதியிடம் விடைபெற்று அவனுடன் வந்தபடி “பெரியதந்தையே, நான் உண்மையிலேயே விறலியாகத்தான் விரும்புகிறேன். யாழ் எனக்கு இசைகிறது. நானே பாடல் கட்டி பாடவும் செய்கிறேன். நேற்றுமுன்நாள் இங்கே வந்த கோசலநாட்டு விறலியும் என்னை மிகச்சிறந்த பாடகி என்றாள். அது நானே இயற்றிய பாட்டு” என்றாள். “என்ன பாடல்?” என்றான் கர்ணன். “அம்பையன்னையின் கதை. அவரை நிருதர் படகில் வைத்து ஓட்டிக்கொண்டு வருகிறார். அப்போது அவர் சீதையின் வாழ்க்கையை பாடுகிறார். அதைக் கேட்டு அம்பையன்னை புன்னகைசெய்கிறார்…”

“அது முன்னரே எழுதப்பட்டுவிட்டதல்லவா?” என்றான். அவள் சினந்து “ஆம், ஆனால் அதில் வேறுவகையில் எழுதப்பட்டிருந்தது. அன்னை அழுவதாக எழுதியிருந்தார்கள். அன்னை ஏன் அழவேண்டும்? அவர் இவர்களைப்போல அரண்மனைக்குள் அடைபட்ட வெறும் அரசகுலப் பெண்ணா? சீற்றம் கொண்ட சிம்மம் என்றல்லவா அவரைப்பற்றி பாடுகிறார்கள்? ஆகவேதான் சிரிப்பதாக மாற்றிக்கொண்டேன்” என்றாள். கர்ணன் “ஏன் சிரிக்கவேண்டும்?” என்றான். அவள் குழம்பி “அந்தக் கதையைக் கேட்டு…” என்றபின் “அவர் சிரிப்பதை நான் பார்த்தேன்” என்றாள்.

கர்ணன் அவள் தலையை செல்லமாக தட்டினான். “நான் சொல்வதை எவருமே நம்புவதில்லை” என்றபடி அவள் அவனுடன் வந்தாள். “சிறியதந்தை விகர்ணரிடம் மட்டுமே நான் பேசுவேன். அவர்தான் நான் என்ன சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்கிறார். நான் விறலியாக இங்கிருந்து செல்லும்போது அவரும் உடன்வருவதாக சொன்னார்.” கர்ணன் “அவன் இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தான் அல்லவா? என்ன சொன்னான்?” என்றான்.

“அவர்தான் இந்திரப்பிரஸ்தத்தின் அரசி நாடகவிறலி போலிருக்கிறார் என்றார். செந்நிற மணிமுடி சூடியபோது அவர் தலை தீப்பற்றி எரியும் கரும்பனை போலிருந்தது என்றார். நான் சிரித்தேன்.” கர்ணன் அவளை ஓரப்பார்வையால் நோக்கிக்கொண்டு நடந்தான். கைகளைத் தூக்கி எம்பிக்குதித்து ஒரு தோரணத்தைப் பிடித்து இழுத்தாள். அதை வாயில் வைத்து கடித்து உரித்து அப்பால் வீசினாள். “மாவிலை. கட்டி ஒருவாரமாகிறது” என்றாள்.

தேரில் பாய்ந்து ஏறிக்கொண்டு “பெரியதந்தையே, நானே தேரை ஓட்டினால் என்ன?” என்றாள். “பிறகு… இப்போது நாம் அரசப்பணியாக சென்றுகொண்டிருக்கிறோம்” என்றான் கர்ணன். “ஆம், நான் அரசரிடம் என்ன சொல்லவேண்டும்?” என்றாள். “நீ அவரை நோக்கிச் சென்று அவர் கைகளைத் தொட்டு கொஞ்சலாக தந்தையே தாதையிடம் சென்று பேசுங்கள் என்று மட்டும் சொல். அவர் சினந்தால் கெஞ்சு!” என்றான் கர்ணன். “அவ்வளவு போதுமா?” என்றாள். “வேறென்ன சொல்வாய்?” என்றான். “அரசுசூழ்தல் என்றால் சிக்கலான பெரிய சொற்றொடர்கள் தேவை அல்லவா?” என்றாள்.

“ஆம், ஆனால் அதை நாம் பேசவேண்டியதில்லை. நாம் பேசி முடித்தபின் சூதர்கள் அதை உருவாக்கிக்கொள்வார்கள்” என்றான் கர்ணன். “அப்படியா? நான் அதையெல்லாம் அரசர்களும் அரசியரும் பேசுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.” கர்ணன் “உன் தந்தையும் தாயும் அப்படியா பேசிக்கொள்கிறார்கள்?” என்றான். “அவர்கள் பேசிக்கொள்வதேயில்லை இப்போதெல்லாம். அன்னை தனித்திருந்து அழுகிறார்கள்.” கர்ணன் “உன் தந்தை தாதையிடம் பேசிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும்” என்றான்.

துரியோதனனின் அவை முன் நின்றிருந்த துச்சலன் கிருஷ்ணையைக் கண்டதும் திகைத்து “மூத்தவரே” என்றான். “நான் அழைத்துவந்தேன்” என்றான் கர்ணன். சுபாகு உடனே புரிந்துகொண்டு “ஆம், இது உகந்த வழிமுறையே” என்றான். துர்மதன் “என்ன வழிமுறை?” என்றான். துச்சகன் “அரசர் படைநகர்வு தொடர ஆணையிட்டிருக்கிறார், மூத்தவரே. படைத்தலைவர்கள் அனைவரையும் இன்றுமாலை கங்கைக்கரையில் சந்திக்கிறார்” என்றான்.

“எங்கிருக்கிறார்?” என்றான் கர்ணன். “ஓலைகளை நோக்குகிறார்” என்றான் சுஜாதன். கர்ணன் கதவைத் திறந்து உள்ளே செல்ல கிருஷ்ணை அஞ்சிய காலடிகளுடன் தொடர்ந்து உள்ளே வந்தாள். ஓசை கேட்டு திரும்பிய துரியோதனன் அவளைக் கண்டு புருவம் சுருங்க கர்ணனை நோக்கினான். “பேரரசரை நோக்க சென்றிருந்தேன். உடன் வந்தாள். உங்களைப் பார்க்கவேண்டும் என்றாள்” என்றான்.

“ஏன்?” என்றான் துரியோதனன். அவளை நோக்காமல் விழிவிலக்கி “இது போர்க்காலம்…” என்றான். “தந்தையே, தாதையிடம் சென்று பேசுங்கள்” என்று அவள் சொன்னாள். அக்குரலில் இருந்த தெளிவைக்கண்டு கர்ணன் திரும்பி அவளை நோக்கினான். பிறிதொருவள் எனத் தோன்றினாள். “என்ன?” என்றான் துரியோதனன். “தாதை உணவருந்தாமலிருந்தால் இந்நகர் அழியும். நீங்கள் எதையும் வெல்லப்போவதில்லை” என்றாள் கிருஷ்ணை.

திகைத்தவன்போல துரியோதனன் அவளை நோக்கினான். “தாதை உணவருந்தாவிட்டால் நானும் உணவருந்தப்போவதில்லை” என்றாள் கிருஷ்ணை. சீற்றத்துடன் துரியோதனன் “போ… மகளிர்மாளிகைக்குச் செல். இது உன் இடமல்ல” என்றான். “நான் பிறிதேதும் சொல்வதற்கில்லை” என்றபின் அவள் திரும்பி கதவைத் தொட “நில்… என்னை அச்சுறுத்துகிறாயா?” என்றான். “இல்லை, நான் சொன்னவற்றை உறுதிப்படுத்துகிறேன்” என்றாள் கிருஷ்ணை.

“சரி, நான் சென்று அவரிடம் பேசுகிறேன்” என்றான் துரியோதனன். “இன்றே பேசுங்கள்… இப்போதே செல்லுங்கள்” என்றாள். துரியோதனன் “சரி… நீ உன் விளையாட்டறைக்குச் செல்” என்றான். அவள் பெருமூச்சுவிட்டாள். “சரி என்றேனே?” என துரியோதனன் கூச்சலிட்டான். “நன்று, தந்தையே” என்றபின் அவள் வெளியே சென்றாள்.

துரியோதனன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “பேரரசரிடம் நீங்கள் ஒரு இளமைந்தனாகப் பேசினால் போதும், அரசே” என்றான் கர்ணன். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன்…” என்று துரியோதனன் கூவினான். புன்னகையுடன் கர்ணன் “சரி” என்று சொல்லி கதவைத் திறந்து வெளியே சென்றான்.

அவள் சாளரத்தருகே நின்றிருந்தாள். முகத்தில் ஒளி அனல்செம்மையெனத் தெரிந்தது. அவன் அருகே வந்து “செல்வோம்” என்றான். “ஆம்” என அவள் அவனுடன் வந்தாள். இடைநாழியைக் கடந்து படியிறங்குவது வரை அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. தேரில் அவளை ஏற்றி கர்ணன் “நன்று செய்தாய், கிருஷ்ணை. உன்னால் மட்டுமே முடியும்” என்றான். அவள் அவனை கனவு காண்பது போன்ற விழிகளுடன் நோக்கி “ஆம்” என்றாள். புரவிகள் வால்சுழற்றி குளம்பெடுக்க தேர் மணியோசையுடன் கிளம்பிச்சென்றது.

[ 22 ]

திருதராஷ்டிரரின் அருகே அமர்ந்து துரியோதனன் தணிந்த குரலில் “வணங்குகிறேன், தந்தையே” என்றான். அவர் விழிகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. “நான் நான்கு நாட்களாக வெறிபிடித்தவன் போல உண்டேன். நீங்கள் அருந்தாத உணவையும் சேர்த்து உண்டேன்” என்றான். அவர் மறுவினை காட்டவில்லை. “தந்தையே, என்னை நீங்கள் ஏன் வாழவைத்தீர்கள்? நிமித்திகர் சொன்னபோதே என்னைத் தூக்கி காட்டில் வீசியிருக்கலாமே? அன்றே நாயும் நரியும் கிழித்துண்ண மண்வாழ்வை முடித்திருப்பேனே?” என்றான்.

அவன் குரல் இடறியது. “நினைவறிந்த நாள் முதல் சிறுமைகளை அன்றி எதை அறிந்தேன்? கலிப்பிறப்பென்றனர். கரியவிசை என்றனர். இன்றும் நான் குலம் அழிக்கும் நச்சு என்றே கருதப்படுகிறேன். உங்களைப்போல விழியிலாதவனாக இருந்திருக்கலாம். பிறவிழிகளையாவது நோக்காமலிருந்திருப்பேன்.”

பெருமூச்சுடன் அவன் தொடர்ந்தான். “நான் வெல்ல எண்ணுவது மண்ணை அல்ல, தந்தையே. புகழையும் அல்ல. இவ்விழிகளைத்தான். உளம் அமைந்த நாள்முதலாக நான் கண்டுவரும் இந்த நச்சு விழிகளின் முன் தலைதருக்கி எழுந்து நிற்கவிரும்புகிறேன். பாரதவர்ஷத்தை முழுதாள விழைகிறேன் என்றால் அது பாரதவர்ஷமே என்னை வெறுக்கிறதென்பதனால்தான்…”

இசைக்கூடத்தில் செறிந்திருந்த அமைதியில் விப்ரரின் சளிச்சரடு அதிரும் மூச்சு மட்டும் ஒலித்தது. அவரது கால்கள் நீர்வற்றிய வாழைமட்டை போலிருந்தன. “இந்திரப்பிரஸ்தத்தின் அவையில் யுதிஷ்டிரன் சூடி அமர்ந்த அந்த மணிமுடியை என்னால் ஒரு கணமும் மறக்கமுடியவில்லை, தந்தையே. ஆம், அதுவேதான். அந்தப் பெருநகரம். அதன் எண்ணக்குறையாத கருவூலச்செல்வம். அங்கே வந்து பணிந்த மன்னர்நிரை. அதைத்தான் நான் விழைகிறேன். இனி அதை மறந்து ஒருகணம் கூட என்னால் வாழமுடியாது.”

“நான் எதையும் மழுப்பவில்லை. நான் பொறாமையால் எரிகிறேன். பொறாமை. அல்லது அதை ஆற்றாமை என்று சொல்லவேண்டுமா? நான் அந்த அரியணையில் அமர முடியும். அந்த மணிமுடியை சூடவும் முடியும். அதற்கான தகுதியும் ஆற்றலும் எனக்குண்டு. ஆனால் அறத்தால் கட்டுண்டிருக்கிறேன். தங்கள் ஆணையில் சிக்கியிருக்கிறேன்.” கசப்புடன் சிரித்து “ஆனால் அறச்செல்வன் என்ற பெயரும் அவனுக்குரியதே” என்றான்.

“தந்தையே, இத்தனை நாள் பெருந்தந்தையாக குல அறம் பேணி இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். இக்குடியின் அச்சு நீங்களே. ஆனால் உங்களைப்பற்றி இன்று பாரதவர்ஷம் என்ன சொல்கிறதென்றறிவீர்களா? ஏன், இந்நகர் மாந்தர் என்ன சொல்கிறார்கள்? விழியிழந்தான் வஞ்சம் பாண்டவர்களை விரட்டியது என்கிறார்கள். உங்கள் இருள்விழி எல்லையைவிட்டு விலகியதனால் அவர்கள் பெருகி வளர்ந்தனர் என்கிறார்கள். அங்கே நீங்கள் சென்று அவையமர்ந்து அவர்களின் ராஜசூயத்தை வாழ்த்தினீர்கள். நீங்கள் பொறாமையால் விழிநீர் விட்டு உளம் பொருமினீர்கள் என்கிறார்கள்.”

“தந்தையே, இது களம். இங்கே வெற்றி மட்டுமே போற்றப்படும். தோல்வியும் விட்டுக்கொடுத்தலும் இதில் நிகர். அச்சமும் பெருந்தன்மையும் ஒன்றே” என்று துரியோதனன் தொடர்ந்தான். “ஆம், நான் போருக்கெழுந்தேன். என் தோள்தோழர் கொலையுண்டபின் வாளாவிருந்தால் நான் வீணனென்றே பொருள். அதையும் உங்கள்பொருட்டே அடக்கிக்கொண்டேன். நிகரிப்போர் நிகழட்டும். அதில் வென்று ராஜசூயம் வேட்டேன் என்றால் இன்று என்னைச் சூழ்ந்துள்ள இழிவிலிருந்து சற்றேனும் மீள்வேன்.”

“தந்தையே, அன்று பழிச்சொல் கேட்டு உங்கள் மடியில் கிடந்த பைதல் நான். ராஜசூயம் வேட்டு வைதிகர் அருள்பெற்று சத்ராஜித் என அரியணை அமர்ந்தால் பிறந்த அன்று என் மேல் படிந்த பழி விலகும். நாளை என் கொடிவழியினர் என்னையும் உங்களையும் எண்ணி நாணமாட்டார்கள். நான் வாழ்வதும் அழிவதும் இனி உங்கள் சொல்லில்” என்றபின் அவன் தன் தலையை திருதராஷ்டிரரின் கால்களில் வைத்தான். அவர் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. ஆனால் அவர் கை எழுந்து அவனை வாழ்த்தவில்லை. அவன் சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்தபின் எழுந்து வெளியே சென்றான்.

[ 23 ]

மறுநாள் விடியலில் கர்ணன் கனகரால் எழுப்பப்பட்டான். கனகர் சிறு பதற்றத்துடன் “அங்கரே, விப்ரர் மறைந்தார்” என்றார். அவன் தன் உள்ளத்திலிருந்து ஓர் எடை அகன்ற உணர்வையே அடைந்தான். அதை அவன் அகம் எதிர்நோக்கியிருந்தது. “எப்போது?” என்றான். “காலை சஞ்சயன் சென்று நோக்கியபோது அவர் உடல் அசைவிழந்து குளிர்ந்திருந்தது.” கர்ணன் “பேரரசர் அறிந்திருக்கவில்லையா?” என்றான். “அவர் சிலைபோல அசைவற்று அமர்ந்திருந்தார் என்கிறான். அவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எவரையும் அழைக்கவில்லை. அழவும் இல்லை.”

கர்ணன் புஷ்பகோஷ்டம் நோக்கி செல்லும்போது கனகர் உடன் வந்தார். “அமைச்சர் அங்கே சென்றுவிட்டார். அரசரையும் இளையோரையும் அழைத்துவர யுயுத்ஸுவை அனுப்பினேன். சஞ்சயனை அரசரின் அருகே நிற்கும்படி ஆணையிட்டேன்” என்றார். அவன் தேரில் ஏறிக்கொண்டதும் அருகே நின்றபடி “பதினெட்டு வயதில் விப்ரர் பேரரசருடன் இணைந்தவர். பிறிதொரு வாழ்க்கை இல்லாதிருந்தார். அரசரின் அதே வயதுதான் அவருக்கும்” என்றார்.

“நூல்கற்றவர். நெறிநூல்களை நெஞ்சிலிருந்து சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் விரும்பியிருந்தால் அமைச்சர் ஆகியிருக்கக்கூடும். ஆனால் நிழலென ஆவதையே விரும்பினார். அவரையும் அரசரையும் பிரித்து எண்ணவே முடியவில்லை.” கர்ணன் விப்ரரை முதன்முதலாக எப்போது நோக்கினோம் என்று எண்ணிக்கொண்டான். திருதராஷ்டிரரின் முதல் அணைப்புதான் நினைவிலெழுந்தது. அப்போது அருகே நீர் மின்னும் விழிகளுடன் விப்ரர் நின்றிருந்தார். அவரது கழுத்தில் நரம்பு ஒன்று புடைத்து அசைந்துகொண்டிருந்தது.

அவன் செல்லும்போது விப்ரரின் உடல் வெளியே கொண்டுசெல்லப்பட்டு மையக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. விதுரர் அருகே நின்று ஆணைகளை இட்டுக்கொண்டிருக்க சிற்றமைச்சர்களும் ஏவலரும் ஓடிக்கொண்டிருந்தனர். விதுரர் அவனைக் கண்டதும் அருகே வந்து “பேரரசர் திகைத்துப்போயிருக்கிறார். இரவிலேயே இறப்பு அவருக்கு தெரிந்துவிட்டது. அவர் உடல் நடுங்கிக்கொண்டிருக்கிறது” என்றார். “நான் உள்ளே சென்று பார்க்கிறேன்” என்றான் கர்ணன்.

“அரசகுலத்தோருக்குரிய சடங்குகள் நிகழவேண்டும். அரசகுடியினரின் மயானத்தில் அவர் எரியவேண்டுமென பேரரசர் முன்பு ஆணையிட்டிருந்தார். விப்ரரும் தன்னுடன் விண்ணுக்கு வந்தாகவேண்டும் என சொல்லிக்கொண்டிருப்பார்” என்றார் விதுரர். இறப்பு அவரை விடுதலை செய்துவிட்டதெனத் தோன்றியது. கர்ணன் குனிந்து வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த விப்ரரின் உடலை நோக்கினான். அவன் நோக்குவதைக் கண்ட ஏவலன் முகத்தை திறந்து காட்டினான். விப்ரரின் முகம் துயிலும் குழந்தை போலிருந்தது.

கர்ணன் உள்ளே சென்றான். தர்ப்பைப்பாயில் திருதராஷ்டிரர் முன்பு அவன் பார்த்த அதே தோற்றத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் அவர் மாறிவிட்டிருப்பதை முதல்நோக்கிலேயே உணரமுடிந்தது. அருகே காந்தாரியர் அமர்ந்திருக்க விழிமூடிக்கட்டிய முகத்துடன் பேரரசி தலைசரித்து செவிகூர்ந்தாள். அவன் அருகே அமர்ந்தான். அவன் காலடியோசைகள் அவர் உடலில் எதிரசைவை உருவாக்கின. அவர் வாயை அழுத்தி மூடி கழுத்துத்தசைகள் இறுகி நெளிய மறுபக்கம் முகம் திருப்பியிருந்தார்.

“பீஷ்மபிதாமகருக்கு செய்தி சென்றிருக்கிறது. துரோணரும் கிருபரும் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று அப்பால் நின்ற சஞ்சயன் சொன்னான். கர்ணன் தலையசைத்தான். திருதராஷ்டிரர் மெல்லிய குரலில் “மூத்தவனே, அரசன் எங்கே?” என்றார். “வந்துகொண்டிருக்கிறார்” என்றான் கர்ணன். “அவனிடம் சொல், அவன் விழைவதுபோல பகடைக்களம் நடக்கட்டும்” என்றார் திருதராஷ்டிரர்.

நினைத்ததுபோல நிறைவோ உவகையோ அவன் உள்ளத்தில் எழவில்லை. மெல்லிய குரலில் “தாங்கள் உணவருந்தலாமே” என்றான். “அவன் போகட்டும். அவன் எரியணைவது வரை அங்கே நான் உடனிருக்கவேண்டும்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “எரிகளத்தில் என்னுடன் எவரும் இருக்கலாகாது. சஞ்சயன் கூட.” கர்ணன் “ஆணை!” என்றான்.

முந்தைய கட்டுரை”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
அடுத்த கட்டுரைவயதடைதல்