கனவுகளின் முதற்படியில்- விஷ்ணுபுரம் முதல் பதிப்பின் முன்னுரை

Vishnupuram wrapper(1)

விஷ்ணுபுரம் நாவலின் ஐந்தாம் பதிப்பு கிழக்கு வெளியீடாக வரவுள்ளது. அதில் சேர்க்கப்பட்டுள்ள முதற்பதிப்பின் முன்னுரை இது. அட்டை ஓவியம் ஷண்முகவேல்

 

images

1982 மார்ச் இருபத்திரண்டாம் தேதி இந்த நாவலின் மையப்படிமம் என்னை  வந்தடைந்தது. துறவியாக ஆகும் பொருட்டு அன்று காலைதான் வீட்டைவிட்டுக் கிளம்பியிருந்தேன். திருவட்டாறுக்குச் சென்று கைக்கடிகாரத்தை விற்றேன். அன்று முழுக்க ஆற்றங்கரை மணலில் அமர்ந்திருந்தேன். இரவில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வெளிப்பிரகாரத்தில் படுத்துக்கொண்டேன். ஏற்கெனவே அங்கு சிலர் படுத்திருந்தனர். இரவு இரண்டாம் ஆட்டம் விட்டு சிலர் வந்து இருளுக்குள்  படுத்துக்கொண்டனர். ஒரு முதியவர் பெருமாளைப் பற்றிப் பேசினார். மூன்று கருவறைகளை நிரப்பியபடி மல்லாந்து படுப்பார் என்று அக்குரல் கூறியபோது பெரியதோர் மன அதிர்வை அடைந்தேன். அவர்கள் குறட்டைவிட ஆரம்பித்த பிறகும் நான் தூங்கவில்லை. என் மனதிற்குள் சிலவருடங்களாக எழுந்திருந்த வினாக்கள் அப்பெரும் சிலையின் பாதங்களில் மோதி நுரைத்துச் சுழிப்பதாகப்  பட்டது. மறுநாள் காலையில் கிளம்பினேன். வீடு நிரந்தரமாக அந்நியமாயிற்று.

மூன்றரை வருட நாடோடி வாழ்வில் என் தவிப்புகளுக்கு இணையாகவே அப் படிமமும் என்னைத் தொடர்ந்து வந்தது. அதை உடைத்து அறியவேண்டுமென்னும் தவிப்பு. அதற்குரிய உபகரணங்கள் இல்லாத மொண்ணை மனதின் ஆற்றாமை. 1984ல் காசர்கோட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். தினக்கூலி வேலை. தோன்றும்போதெல்லாம் கட்டின்றி அலைதல். பெற்றோரின் அவமரணம். மனப்பிறழ்வுகளும் இலட்சியக்  கனவுகளும் மாறிமாறி வதைத்த பிராயம் அது. பின்பு சுந்தர ராமசாமியைச் சந்தித்தேன். நான் எழுதலாம் என்றார் அவர். எழுதுவதன் மூலமே கண்டடையவும் முடியும் என அறிந்தேன். இப்படிமத்தை ஒரு நாவலாக எழுதிவிட வேண்டும் என்று எண்ணினேன்.

ஆனால் இதன் கருவைக் கூறியபோது ராமசாமி அதிக ஆர்வம் காட்டவில்லை. விளைவாக சற்று மனச்சோர்வு ஏற்பட்டது. ஆனால் திட்டத்தைக் கைவிடுவதும் எனக்குச் சாத்தியமாக இல்லை. 1988ல் ஒருநாள் அதிகாலை, தூக்கமேயில்லாத இரவுக்குப் பிறகு எழுந்து, காசர்கோட்டிலிருந்து கும்பளா என்ற சிற்றூர் வரை நடந்து சென்றேன். பசுமை மண்டிக் கிடந்த தனித்த பாதையில் மெல்ல காலையொளி பரவியது. சிறுபறவைகள் சிறகுகள் ஒளிர செடிகள் மீது படிந்தன. அசாதாரணமாக மனநிறைவு ஏற்பட்டது.

விஷ்ணுபுரத்தின் தெருவொன்றில் நடந்து கொண்டிருப்பது போல உணர்ந்தேன். வேறுயாருக்காக இல்லாவிடினும், எனக்காகவாவது இதை எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்தேன்.

நாவலின் வடிவம் பற்றிய தேடலுடன் பேரிலக்கியங்களைக் கற்க ஆரம்பித்தேன். ஒரு பயிற்சியாக சிறுநாவல் (ரப்பர்) ஒன்றையும் எழுதினேன். 1989ல்  இதன் பொதுத்தோற்றம் ஒன்று மனதில் உருவாயிற்று. விரிவாக ஆய்வுசெய்ய ஆரம்பித்தேன். காவியமரபை மலையாளம் மூலம் அறிந்து கொண்டேன். இந்திய ஞான மரபில் அறிமுகம் ஏற்கெனவே இருந்தது. தாந்திரீகவியலும், சிற்பவியலும் மெதுவாக  என்னை உள்ளிழுத்துக் கொண்டன. 1988இல் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்களை ஒட்டி அளிக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு இரு நீண்ட சுற்றுப் பயணங்களை  நடத்தினேன். முதலில் நாற்பது நாள் குமரிமுதல் உத்தரகாசிவரை. பிறகு முப்பது நாள் அஜந்தாவும் ராஜஸ்தானும். தன்னந்தனியனாக, வெறுந்தரையில் தூங்கியபடி, தரும உணவுகளை உண்டு, எவ்விதத் திட்டங்களும் இன்றி நடத்திய அப்பயணங்கள்தான் என்னுள் உறங்கிய இப்படிமத்தை முளைக்க வைத்தன என்று படுகிறது. குறிப்பாக  சாஞ்சியிலும், விதிஷாவிலும், கபிலவாஸ்துவிலும் கண்ட ததாகதரின் முகங்கள் என்னைப் புதிதாகப் படைத்தன. மீண்டும் மீண்டும் என் கனவுகளில் அப்பெருமுகங்கள் இருள்திரை விலக்கி வருகின்றன. 1991, 1992 கள் பௌத்த தரிசனங்களைப்  பயில்வதில் போயிற்று. 1993ல் வைணவ ஆலயங்களைச் சுற்றிப் பார்த்தேன்.

1991ல் அருண்மொழியை மணம் புரிந்து கொண்டேன். தேனிலவு  நாட்களில் பெரும்பாலும் இந்நூலைப்பற்றியே பேசுவேன். என் நடை போதிய அளவு தயாராகிவிட்டது என்பதை “திசைகளின் நடுவே’  மூலம் அறிந்தேன். 1991 டிசம்பர் 23ம் தேதி, மழை பெய்து கொண்டிருந்த இனிய மாலையொன்றில், திடீர் உத்வேகத்திற்கு ஆளாகி இதன் முதல் அத்தியாயத்தை (முதற்பகுதியின் தோற்றுவாய்) எழுதினேன். அதுவரை அந்த மையப்படிமமன்றி வேறெதுவும் என்னிடம் இருக்கவில்லை. எழுத எழுத காலமும், இடமும், கதாபாத்திரங்களும் அந்தந்த  கணங்களில் பிறந்து வந்தன. 1996  ஏப்ரலில் நாவலை முடிக்கும்போதுதான் இதன்வடிவம் எனக்குத் தெளிவாகியது.

தீவிரமான இந்த பயணம் நான் எண்ணியிருந்தபடி இறுதி விடைகளை நோக்கி என்னைக் கொண்டு செல்லவில்லை. நான் சற்றும் விரும்பாததொரு நாஸ்திகத்தன்மை இப்படைப்புக்கு வந்துவிட்டாதோ என்றும் சஞ்சலம் கொண்டிருந்தேன். இதை பிரசுரிப்பது  பற்றிக்கூட தயக்கம் ஏற்பட்டது. பிறகு படிக்கும்போது எனது தருக்கங்களை மீறி, என் ஆழ்மன இயக்கம் இதில் பதிவாகியிருப்பதை உணர்ந்தேன். ஒவ்வொரு வாசிப்பிலும் என்னை எனக்குக் கற்பிப்பதாகவே இப்படைப்பு உள்ளது. அப்படியே வாசகர்களுக்கும் இருக்கக் கூடும்.

வாழ்வைச் சித்தரிப்பதல்ல இந்நாவல். அதன் அடிப்படைகளை ஆராய்வது. அத்தகைய தேடல் கொண்டவர்களே இதன் வாசகர்கள். நாவலில் இருந்து மேலும் விரிவடையக் கூடிய திறன் கொண்டவர்கள் அவர்கள். நாவலை  தங்களை நோக்கி சுருக்கிக் கொள்ளும் வாசகர்களை நோக்கி இது தன் வாசல்களை  மூடிக்கொள்ளும். துரதிர்ஷ்டவசமாக அரசியல் கோட்பாடுகள் சார்ந்த எளிமைப் படுத்தல்கள் இங்கு இரண்டாம் வகை வாசகர்களையே உருவாக்கியுள்ளன.  எந்தப்  படைப்பின் முகப்பிலும் எழுத்தாளனின் மௌனவேண்டுகோள் ஒன்று உள்ளது  “தயவு செய்து கவனமாகப் படியுங்கள்.’ அதை மன்றாடலாக முன்வைக்கவேண்டிய சூழலே நமக்குள்ளது.

சாதியின் எல்லைகளை மீறி, நாராயணகுருவின் ஆன்மிகமரபில் இணைந்த பல உறவினர் எனக்குள்ளனர். இந்நாவலை எழுதி முடிக்கும் தருணத்தில் எனக்கும் அப்பேறு வாய்த்தது. நாராயணகுருவின் மூன்றாம் தலைமுறையினரான குரு நித்யசைதன்ய யதி அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அவருடைய பிரியத்திற்குரிய “சந்தேக தாமஸ்’ ஆகி, அவரிடமிருந்து மேற்கத்திய சிந்தனைகளையும், நமது வேதாந்த மரபையும் அறிந்து கொள்ள முடிந்தது. என் பதற்றம் குறைந்து கவனம் ஒருமுகப்பட்டது. குரு என்பது கடல், நாம் அலைகளையே மனிதர்கள் என்று காண்கிறோம். இந்நூல் குருவிற்கு எளிய காணிக்கை.

ஜெயமோகன்

தருமபுரி

11.2.1997

முந்தைய கட்டுரைமனலீலை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 29