அறம் -கடிதங்கள்

அறம் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்

உங்களுடைய அறம் படித்து முடிந்து பிறகு ஒவ்வொரு ஆளுமைகள் ஏதோ எண்ணகளுக்கு உட்படுத்தினர் உங்கள் எழுத்து நடை மிக அருமை. அடுத்து உங்கள் மகத்தான படைப்புகளான விஷ்ணுபுரம், ரப்பர் படிக்க அதிக அவா கொண்டு இருகிறேன் .. நீங்கள் நலமாக,  நல்ல படைப்புகளை கொடுக்க எனது வாழ்த்துகள்.

நன்றி

இரா.பொற்செல்வன்

அன்புள்ள ஜெ

உங்கள் அறம் கதைகளை ஒரு நண்பர் எனக்கு அளித்தார். நான் முன்னரே உங்கள் பல கதைகளை படித்திருந்தாலும் அறம் தொகுதியின் கதைகள் அளித்த மன எழுச்சியை அளவிடமுடியாது. உண்மையில் அவை அறத்தை அடைந்து அறிவிக்கும் கதைகள் அல்ல. அவை அறம் அழிந்துகொண்டிருக்கும் ஒருகாலகட்டத்துக்கான கதைகள் என்று தோன்றுகிறது. அறத்துக்காகத் தேடித்தவித்துக் கண்டடையும் கணம் அக்கதைகளில் உள்ளது. அந்தக்கண்டடைவதென்பது சிலசமயம் ஒரு மாயை. சிலசமயம் ஒரு வரலாறாக உள்ளது. அல்லது விதிவிலக்காக உள்ளது. அதாவது அறம் திகழும் சமூகத்தை இந்தக்கதைகள் காட்டவில்லை. அறம் மார்ஜினலைஸ் செய்யப்பட்டுவிட்ட ஒரு காலகட்டத்தைக் காட்டுகின்றன இக்கதைகள்.

ஆகவே வாசித்தபின் நிறைவோ மகிழ்ச்சியோ உருவாகவில்லை. சோர்வும் துக்கமும்தான் ஓங்கி நின்றது. சொல்லத்தெரியவில்லை. நானே விரிவாக எழுதவேண்டும் என நினைத்து ரொம்பநாள் வைத்திருந்தேன். இப்போதுதான் எழுதினேன். அறம் ஒரு முக்கியமான தொகுப்பு. நம் வெற்றிகள் என்ன என்பதனால் அல்ல, நம்முடைய தோல்விகள் என்ன என்று அது காட்டுவதனால் என்று சொல்வேன்

அருண் பிரதீப்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

உங்கள் அறம் கதைகளை வாசித்தேன். அதில் மயில்கழுத்து என்பது என்னை மிகவும் கவர்ந்த கதை. ஆனால் அது ஏன் அறம் தொகுதியில் வருகிறது என்று மட்டும் புரியவில்லை. நெடுநாள் கழித்து இப்போது வாசித்தேன். அது மிகச்சிக்கலான கதை. உணர்வு எழுச்சி மட்டும் அல்ல. அது காட்டும் காமத்தின் உளவியல் முக்கியமானது. காமம் ஒரு பெரிய விஷயம். அதிலே பெரிய அளவில் வன்மமும் குரூரமும் உள்ளது. அதையெல்லாம் கலைஞன் சந்திக்கமுடியாது [நான் என் அனுபவத்தை கடிதமாக எழுதியிருந்தேன். ஞாபகமிருக்கலாம்] அதன் முன் தோற்றுவிடுகிறான் கலைஞன். அவன் அதிலிருந்து கலைவழியாக எழுகிறான். அல்லது எழுவேன் என்று சொல்கிறான். அவவ்ளவுதான் கதை. அது அவனுடைய அறம். அதுதான் இலக்கியத்தின் அறம் என்று நினைத்துக்கொண்டேன்

 

வேல்

 

அறம் அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
அடுத்த கட்டுரைகொடிக்கால் – தியாகங்களுக்குமேல் திரை