சந்திப்புகள் கடிதங்கள் 2

7

மதிப்புக்குரிய ஜெயமோகன்,
கோவையில் உங்களையும் மற்ற நண்பர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பேருந்தில் பெங்களூருக்கு திரும்பும் பொழுதும் இன்றும் விவாதங்கள் மனதில் மறுஓட்டம் ஒடிய வண்ணமே இருக்கின்றன.
நண்பர்களின் (அரங்கசாமி, கிருஷ்ணன், சுரேஷ், மீனா, விஜயசூரியன், அஜிதன், சீனு, ராஜமாணிக்கம்) சிரிப்பையும் அன்பையும் மறக்க இயலாது. ஓர் இனிய நிகழ்வு.
சந்திப்பில் என்னுள் ஏற்பட்ட தனிப்பட்ட தாக்கங்கள்:
1) நாம் விவாதித்த IIM பட்டதாரிகளில் நானும் ஒருவன். நீங்கள் நேற்று குறிப்பிட்ட venture capital-ஐ சார்ந்த துறையில் தான் வேலை. வாழ்க்கையில் என் இடம் என்னவென்று யோசிப்பதற்குள் CA, IIM இரண்டையும் எந்த ஈடுபாடும் இல்லாமல் முடித்து வேலையிலும் சேர்ந்துவிட்டேன். 2017-இலிருந்து, செய்யும் தொழிலை விட்டுவிட்டு (சேமிப்பின் துணையில்) பயணங்களிலும் கலையிலும்  ஈடுபட நினைத்துள்ளேன். அந்த திட்டம் நிறைவேறும் வரை அவ்வப்பொழுது சோர்வும் பயமும் என்னை ஆட்கொள்கின்றன. வேலையின் பளுவால் உத்வேகமும் இல்லாத நிலையில் இருக்கும் எனக்கு, வாழ்க்கையை ஒவ்வொரு தருணத்திலும் முழுதாய் வாழும் உங்களை சந்தித்ததில் ஒரு மெல்லிய நம்பிக்கை கைகூடி உள்ளது.
2) சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், நான் பள்ளியில் பெரும்பாலும் ஆங்கிலமும் ஹிந்தியும் தான் கற்றேன். தமிழை மூன்றாம் மொழியாக மூன்று வருடங்கள் மட்டுமே படித்தேன். அதற்குப்பிறகு, சுமார் 4 வருடங்களுக்கு முன்னால் என் அடையாளத்தை பற்றிய கேள்விகள் என்னுள் எழுந்தபோதுதான் தமிழை படிக்கத்துவங்கினேன்.  நான் ஆங்கிலத்தில் யோசிப்பவன். அதனால் தமிழில் சரளமாய் பேசுவது, குறிப்பாக நுண்ணிய அவதானிப்புகளையும் கேள்விகளையும் முன்வைப்பது, இன்னும் எனக்கு சிக்கல் தான். சந்திப்பில் எல்லோரும் பேசிய தமிழ் இனிமையாய் இருந்த அதே அளவுக்கு intimidating-ஆகவும் இருந்தது. அதனாலேயே நான் அவ்வளவு பேசவில்லை.
3) நேற்று நீங்கள் விரிவாய் விளக்கிய sentiment vs melodrama vs emotion வேறுபாடு- மிகவும் முக்கியமான ஒன்றென்று நினைக்கிறேன். எந்தக் கலையை அணுகும் எவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று. இப்பொழுது யோசித்தால் என்னையும் அறியாமல் இந்த வேறுபாடை வைத்துத்தான் நான் ஆங்கில இலக்கியத்தையும், சினிமாவையும் மதிப்பிட்டிருக்கிறேன் என்று படுகிறது.
4) நண்பர்களின் சிறுகதைகளை நீங்கள் விவாதித்த விதம் மிகவும் கறாராகவும், துல்லியமாகவும் இருந்தது.நன்றி,
விஜய்,
பெங்களூரு
1
அன்பின் ஜெ,
மிக மிக சிறப்பான சந்திப்பாக அமைந்தது நம் கொல்லி மலையின் களம், அன்று நீங்கள் வாசகர்களின் முதல் இலக்கிய பரிட்சயம் (அ) கண்டடைதல் பற்றி வினவினீர்கள், நான் வெண்முரசே எனது முதல் இலக்கிய கண்டடைதல் என்று கூறியிருந்தேன், இன்னும் ஆழ்ந்து கூறுவதானால்,
    “அறியும்தோறும் அறியாமை கொள்கிறான் மனிதன். அறிவினாலேயேஅறியமுடியாதவனாகிறான்” துர்விநீதர் சொன்னார். (மழைப்பாடல்,பகுதி பதிநான்கு : களிற்றுநிரை)
இவ்வரிகள் என் வெண்முரசை அணுகும் முறையயே மாற்றிஅமைத்து. மேலும் சந்திப்பின் நாட்களில் தாங்கள் வழங்கிய தகவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளை அணுகும் முறைகள், விவாதகளங்களை அணுகும் விதம் மற்றும் எடுத்தாளும் தன்மை, கட்டுரைகளை அமைக்கும் முறை (Dialectics Method), நாவல்களை அணுகும் படிநிலை, இவற்றை எல்லாம் தொடர்ந்து என்னுள் பகுத்துக்கொண்டிருக்கிறேன். நேர் உரையாடலில் தெரிந்த மிக முக்கியமான விடயம் வெய்யோனில் வரும் அங்கத நாடகக்கதை சொல்லி தங்களின் பிரதிபலிப்பே, மேலும்  நடைமுறை சார்ந்த பொதுவான விடயங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டது சற்று அயர்வை ஏற்படுத்தியது. அதை தாங்கள் எதிர்கொண்டவிதம், ஆம் ஒரு ஆசிரியர் அவ்வாறுதான் இருக்க இயலும், மேலும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்த வரதராஜன்,வாசு,மீனாம்பிகை,மகேஷ், மற்றும் நல்அமுதளித்த செந்தில் அவர்தம் இல்லாள், உணவை மலை உச்சிக்கே கொண்டுவந்து சேர்த்த அவர் குழுவையும் இந்நிகழ்வுடன் இணைத்து நினைவில் தங்கவைப்பதே அவர்க்கு யாம் செய்யும் நன்றி.

சசிகுமார்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 21
அடுத்த கட்டுரைநூஸ் – கடிதங்கள்