அன்புள்ள ஜெயமோகன் சார்
நாளைய ஊடகம் எது என்பதைப்பற்றிய கட்டுரை வாசித்தேன். நீங்கள் ஏற்கனவே சொன்னதற்கு மறுபக்கம் இது
அதாவது சமூக ஊடகங்கள் பொருட்செலவில்லாமல் மக்கலிடையே செல்ல உதவுகின்றன. ஆனால் அவற்றை எவரும் எந்த வகையிலும் கட்டுப்படுத்தி சீரான செய்திகளை அளிக்கமுடியாது. அதே சமயம் காட்டாற்றை கரை உடைப்பதுபோல இஷ்ட்பபடி திருப்பி விடலாம். அது ஆக்கசக்தியாக இன்றைக்கு இல்லை
இப்போதுள்ள தேர்தல்களில் அவை ஆற்றும் பங்கு மிக முக்கியம். இன்றைக்கு சினிமா வரும்போதே சமூக ஊடகங்களில் பிரமோவுக்கு பணம் கொடுத்து ஆள் வைக்கிறார்கள். அஜித்தை மீம்ஸ் பண்ண விஜய் சார்பிலும் விஜயை கவுக்க அஜித் சார்பிலும் மீம்ஸ் பண்ண ஏற்பாடு செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதையே அரசியலிலும் செய்கிறார்கள்
ராகுல்காந்தி மீம்ஸ் பண்ணிய கவிழ்க்கப்பட்ட தலைவர். இப்போது வைக்கோ அப்படி கவிழ்க்கப்படுகிறார்
ராஜசேகர்
***
அன்புள்ள ஜெயமோகன்
நாளைய ஊடகம் முக்கியமான கட்டுரை. இன்று தேர்தலில் ஓட்டுப்போடும் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் அரசியலை க்ரிக்கெட் போல ஒரு ஜாலியான விளையாட்டாக நினைக்கக் காரணமே சோஷியல்மீடியதான்
அருண்
***
அன்புள்ள ஜெயமோகன்,
திண்ணை பேரத்தின் தேவைப் பற்றியக் கட்டுரை முக்கியமானதும், துல்லியமானதும் கூட. உங்கள் வரிகள் “லாபியிங் என்பது திரைமறைவு வேலையாகவோ, அரசியல் குற்றமாகவோ கருதப்பட வேண்டியதில்லை. வெளிப்படையாக நிதி வசூல் செய்து சட்டபூர்வமாக செய்யப்படலாம்” அமெரிக்காவில் லாபியிங் செயல்படும் முறையை மிகச் சரியாக சொல்கிறது. இப்போது நடக்கும் தேர்தலில், எப்போதும் போல், இந்த லாபியிங்கை எல்லா அரசியல்வாதிகளும் சாடுகின்றனர். ஆனால் அரசியில் ஆய்வாளர்கள் உங்கள் கருத்தை ஒட்டியே ஜனநாயகத்தில் அதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். கட்டை பஞ்சாயத்திற்கும் லாபியிங்கிற்கும் முக்கியமான வித்தியாசம் நீங்கள் சொன்ன சட்டமயமாக செய்வதே.
எப்போதும் போல் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இக்கட்டுரைகள் தொகுப்பாக வெளிவருமானால் மிக முக்கியமான ஆனால் அவ்வளவாக புரிந்துக் கொள்ளப்படாத ஒரு topic பற்றி பலருக்கு ஒரு புரிதலை அளிக்கும்.
அரவிந்தன் கண்ணையன்
***
திண்ணை அரசியல் படித்தேன். மீண்டும் தெளிவாக புரிகிறது. இருப்பினும் lobby அரசியல் நிறைய தனி நபர் அல்லது தனியார் நிறுவனங்களிலிடம் விலை போவது இன்றைய நிதர்சனம்.
குறிப்பாக எங்கே அதிகமா சுரண்டி பாழ்படுத்தி பணம் ஈட்ட வாய்ப்புகள் உண்டோ அங்கே தான் திண்ணை அரசியல் நன்கு வேலை செய்கிறது. நீங்கள் கூறும் வேலைவாய்ப்பு மற்றும் பகுதி முன்னேற்றம் பற்றி அக்கறை கொண்ட திண்ணை (lobby) அறவே ஒழிந்து விட்டது. மேலும் கூட்டமாக முன்னேறுவது தமிழர்களிடையே சாத்தியமே இல்லாதது. நான் சார்ந்த வியாபாரத்தில் கூட வட மாநில வணிகர்கள் ஒரு பிரச்சினை என்றால் காட்டும் ஒற்றுமை வலுவானது. நம்மிடையே பூஜ்யம். குழு மனப்பான்மை மிக முக்கியமான காரணியாக இருக்கிறது மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வளமான மாநிலங்களின் வெற்றிக்கு. இங்கே கடந்த இருபது வருடங்கள் குவாரி (கல் , மணல், கிரானைட் & தாது) பணம் பறிக்கும் கல்வி நிறுவனங்கள், ஆளை உறிஞ்சும் மருத்துவமனைகள் என்று அடுக்கி கொண்டே போகலாம் வெற்றிபெற்ற தொழில்களை. தனியார் (service sector) மென்பொருள் நிறுவனங்கள் விதிவிலக்கு. மேலும் இந்தியாவிலேயே அதிகமாக சுரண்டபட்ட மாநிலம் நமது தான் என்று தோன்றுகிறது
இந்தியாவில் ஜனநாயகம் நிறைய வாய்ப்புகளை, வசதிகளை உள்ளடக்கியது. அதன் பயன்கள் உரியவர்களை அடைவதில்லை என்பதே உண்மை. என்றாலும் வரும் காலங்களில் இந்நிலை மாறும்.
நடராஜன்
தினமலர் கட்டுரை இணைப்புக்கள்