‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 51

பகுதி ஐந்து : தேரோட்டி – 16

ரைவதகர் விண்ணேகிய நாளை கொண்டாடுவதற்காக யாதவர்கள் கஜ்ஜயந்தபுரிக்கு முந்தையநாளே வந்து குழுமத் தொடங்கியிருந்தனர். துவாரகையை சுற்றியிருந்த பன்னிரு ஊர்களிலிருந்தும் விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் தனித்தனி வண்டி நிரைகளாக வந்தனர். தொலைதூரத்தில் மதுராவில் இருந்தும் மதுவனத்தில் இருந்தும் கோகுலத்திலிருந்தும் மார்த்திகாவதியிலிருந்தும்கூட யாதவர்கள் வந்திருந்தனர்.

வலசைப்பறவைகளின் தடம்போல கஜ்ஜயந்தபுரியில் அவர்கள் வருவதற்கும் தங்குவதற்கும் நெடுங்காலம் பழகிப்போன பாதைகள், தங்குமிடங்கள், உபசரிப்பு முறைமைகள் உருவாகியிருந்தன அவர்களுக்கென கட்டப்பட்ட ஈச்சை ஓலை வேய்ந்த கொட்டகைகளில் தனித்தனிக் குலங்களாக பயணப்பொதிகளை அவிழ்த்து தோல்விரிப்புகளை விரித்து படுத்தும் அமர்ந்தும் உண்டும் உரையாடியும் உறங்கியும் நிறைந்திருந்தனர்.

வறண்ட அரைப்பாலை நிலத்தில் உடல்குளிர நீராடுவது இயல்வதல்ல என்று யாதவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே நீராடுவதற்கென்று விடுதிகளில் அளிக்கப்பட்ட ஒற்றைச் சுரைக்குடுவை நீரை வாங்கி அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கி “இது எதற்கு?” என்றனர். “இங்கு இவ்வளவு நீரால் உடல் கழுவுவதே நீராட்டெனப்படுகிறது” என்று முதிய யாதவர் விளக்கினார். “கைகளையும் முகத்தையும் கழுவி ஈரத்துணியால் உடம்பின் பிற பகுதிகளை துடைத்துக் கொள்வதுதான் இங்கு வழக்கம்.” ஒரு இளையவன் “இந்நகருக்குள் வரும்போதே இத்தனை நறுமணப்பொருட்கள் ஏன் எரிகின்றன என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது. இப்புகை இல்லையேல் இங்கு பிணந்தின்னிக் கழுகுகள் வானிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்திறங்கி விடும்” என்றான். சூழ்ந்திருந்தோர் நகைத்தனர்.

யாதவகுடியினர் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய கொடி அடையாளத்தை தங்கள் தங்குமிடம் அருகிலேயே கழை நட்டு பறக்கவிட்டனர். ஒரு குடி அருகே அவர்களின் பங்காளிக் குடியினர் தங்குவதை தவிர்த்தனர். ஆகவே கொட்டகையில் இடம் பிடிக்க அவர்கள் மாறி மாறி கூச்சலிட்டபடி சுற்றி வந்தனர். தோல்விரிப்புகளை விரித்து பொதிகளை அவிழ்த்து உடைமைகளை எடுத்த பின்னர் அருகே பறந்த கொடி பங்காளியுடையது என்று கண்டு மீண்டும் அனைத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டு இடம் மாறினர்.

அவர்களுக்குத் தேவையானவற்றை ஒருக்கிய குஜ்ஜர்களில் ஒருவன் “இவர்கள் அத்தனை பேரும் ஒருவருக்கொருவர் பங்காளிகள். பங்காளிகளை இவர்கள் பகைவர்கள் என எண்ணுகிறார்கள். ஆகவே எங்கு சென்றாலும் பகைவர்களையும் உடனழைத்தே செல்கிறார்கள்” என்றான். அவன் தோழன் “அது நன்று. வெளியே பகைவர்களுக்காக தேடவேண்டியதில்லை. நம்முடைய பகைவர்கள் நம்மை நன்கறிந்தவர்களாகவும் நாம் நன்கறிந்தவர்களாகவும் இருப்பது எவ்வளவு வசதியானது!” என்றான். அவன் நகையாடுகிறானா என்று தெரியாமல் நோக்கியபின் அவனிலிருந்த சிறுசிரிப்பைக் கண்டு நகைத்தான் முதல் குஜ்ஜன்.

சிறிது சிறிதாக கஜ்ஜயந்தபுரியின் ஊர்கள் அனைத்திலும் யாதவர்கள் பெருகி நிறைந்தனர். அவர்கள் தங்களுடன் கொண்டுவந்த உலர்ந்த அப்பங்களை உடைத்து கொதிக்கும் நீரில் இட்டு மென்மையாக்கி வெண்ணெய் தடவி உண்டனர். அந்த உலர்ந்த அப்பங்களை கஜ்ஜயந்தபுரியின் மக்கள் தொலைவிலிருந்து நோக்கி வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “மரக்கட்டைகள் போலிருக்கின்றன” என்றான் ஒருவன். “ஆம். நான் ஒருவரிடம் ஒரு துண்டை வாங்கி மென்று பார்த்தேன். மென் மரக்கட்டை போலவே தோன்றியது. என்னால் விழுங்கவே முடியவில்லை” என்றான் இன்னொருவன்.

“இவர்கள் நாட்கணக்கில் கன்று மேய்க்க காடு செல்லக்கூடியவர்கள். உலர் உணவு உண்டு பழகிப்போனவர்கள்” என்றான் முதிய குஜ்ஜன். “கெட்டுப்போன உணவையே சுவையானதென எண்ணுகிறார்கள். கெடவைத்து உண்ணுகிறார்கள்.” குஜ்ஜர்கள் அவர்களை அரைக்கண்ணால் நோக்கி புன்னகை செய்தனர். “இந்த குஜ்ஜர்கள் நம்மைப் பார்க்கும் வகை சீரல்ல. இவர்கள் ஊனுண்ணிகள் அல்ல என்பதே ஆறுதல் அளிக்கிறது” என்று ஒரு யாதவன் சொன்னான். “பெண்வழிச்சேரல் பெரும்பாவம் இவர்களுக்கு. ஆகவே ஆண்களை நோக்குகிறார்கள்” என்றான் ஒருவன். கொட்டகையில் வெடிச்சிரிப்பு எழுந்தது.

கொட்டகைகளில் இரவு நெடுநேரம் பேச்சுகளும் பாட்டுகளும் சொல்லுரசி எழுந்த பூசல்களும் நிறைந்திருந்தன. யாதவர்களின் பேச்சுமுறையே தொலைவிலிருந்து பார்க்கையில் பூசல்தான் என்று தோன்றியது. நகையாட்டு எப்போது பகையாடலாக ஆகுமென்றும் அது எக்கணம் கைகலப்பென மாறுமென்றும் எவராலும் உய்த்துணரக்கூடவில்லை. ஆனால் கைகலப்புகள் அனைத்துமே ஓரிரு அடிகளுக்கு மேல் நீடிக்கவில்லை. அடி விழும் ஓசை கேட்டதுமே சூழ்ந்திருந்த அனைத்து யாதவர்களும் சேர்ந்து பூசலிடுபவர்களை பிரித்து விலக்கி அதை முடிவுக்கு கொண்டு வந்தனர். பூசலிடுபவர்களும் அதை விலக்கி விடுபவர்களும் சேர்ந்து மேலும் கூச்சல் எழுப்பி சொற்கள் என எவையும் பிரித்தறிய முடியாத பேரோசையை எழுப்பினர்.

அர்ஜுனன் தன் விருந்தினர் மாளிகையிலிருந்து ரைவத மலையின் படிகளில் இறங்கி அதைச் சூழ்ந்திருந்த அரைப்பாலை நிலத்தின் புதர்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கொட்டகைகளில் தங்கியிருந்த யாதவர்களை பார்த்தபடி நடந்தான். அவர்கள் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஒருவன் அவனை நோக்கி “தாங்கள் யோகியா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அரசரின் விருந்தினரா?” என்று அவன் மேலும் கேட்டான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “இளைய யாதவர் மேலே தங்கியிருக்கிறாரா?” என்றான். “அறியேன்” என்றான் அர்ஜுனன்.

“அரசிகள் வந்துள்ளனரா?” என்றான் இன்னொருவன். “மூடா, அரசிகள் வருவதென்றால் அதற்குரிய அணிப்படையினரும் அகம்படியினரும் அணித்தேர்களும் வரவேண்டுமல்லவா? அவர்கள் வரவில்லை. வரவில்லை அல்லவா யோகியே?” என்று அர்ஜுனனிடம் கேட்டான் இன்னொரு யாதவன். “ஆம்” என்று அவன் மறுமொழி சொன்னான். “ரைவத மலையின் விழவுக்கு அரசிகள் வரும் வழக்கமில்லை. இது துறவைக்கொண்டாடும் விழவு. இதில் பெண்களுக்கென்ன வேலை?” என்றார் ஒரு முதியயாதவர். “ஆனால் இம்முறை மதுராவிலிருந்து இளவரசி சுபத்திரை வருவதாக சொன்னார்களே?” என்று ஒருவன் சொன்னான்.

சுபத்திரை என்ற சொல் அர்ஜுனனை நிற்க வைத்தது. இன்னொருவன் “அது வெறும் செய்தி. இங்கு பெண்கள் வரும் வழக்கமில்லை” என்றான். அர்ஜுனன் முன்னால் நடந்தான். அந்த யாதவர்குழு அதையே ஒரு பூசலாக முன்னெடுத்தது. அடிவாரத்தில் அருகர் ஆலயங்களைச் சூழ்ந்து குஜ்ஜர் அமைத்திருந்த பெருமுற்றங்களில் யாதவர் தலைகளாக நிறைந்து அமைந்திருந்தனர். நறுமணப்பொருட்களை மென்று அங்கிருந்த செம்மண் புழுதியில் துப்பினர். ஒருவரை ஒருவர் எழுந்து கைநீட்டி கூச்சலிட்டு அழைத்தனர். வெடிப்புற பேசி நகைத்தனர்.

யாதவர்களிடம் எப்போதும் பணிவின்மை உண்டு என்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். ஏனெனில் அவர்களுக்கு அரசு என்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கன்றுகளுடன் தன்னந்தனியாக காடுகளில் வாழ்பவர்கள். தன் காட்டின் அப்பகுதியில் தானே அரசனென்று ஒரு யாதவன் உணர முடியும். எனவே யாதவர்கள் ஒன்று கூடுமிடத்தில் மேல்கீழ் முறைமைகள் உருவாவதில்லை. ஆகவே முகமன்கள் அவர்களிடையே வழக்கமில்லை. சொல்தடிப்பது மிக எளிது. மிகச்சில கணங்களுக்குள்ளேயே அவர்களுக்குள் பெரும் பூசல்கள் வெடித்துவிடும். யமுனைக்கரையில் அவர்களின் மாபெரும் உண்டாட்டுகள் அனைத்தும் கைகலப்பிலும் போரிலும் பூசலிலுமே முடியுமென்று அவன் கேட்டிருந்தான்.

துவாரகை உருவாகி மதுரை வலுப்பெற்று யமுனைக்கரையிலிருந்து தென்கடற்கரை வரை அவர்களின் அரசுக்கொடிகள் பறக்கத்தொடங்கியபோது யாதவர்களின் பணிவின்மையும் துடுக்கும் மேலும் கூடி வந்தன. பல இடங்களில் முனிவர்களையும் வைதிகர்களையும் அயல்வணிகர்களையும் அவர்கள் கேலி செய்வதாகவும் அவமதிப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சாலையில் அவனைக்கண்ட யாதவர்கள் பலர் இளிவரல் கலந்து “வாழ்த்துங்கள் யோகியே” என்றனர். “உத்தமரே, தாங்கள் புலனடக்கம் பயின்றவரா?” என்று ஒருவன் கேட்டான். அர்ஜுனன் கேளாதவன் போல கடந்துசெல்ல “அதற்குரிய சான்றை காட்டுவீரா?” என்றான். அவன் தோழர்கள் நகைத்தனர்.

கண் தொடும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பற்ற எண்ணமொன்றால் நிகர் வைத்த அகத்துடன் அர்ஜுனன் நடந்து கொண்டிருந்தான். அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் முதுகை வளைத்து வயிறு தொங்க புதர்களின் அருகே ஒண்டி நின்று கண்மூடி துயிலில் தலைதாழ்த்தி திகைத்து விழித்து மீண்டும் துயின்றன. குதிரைகள் மூக்கில் கட்டப்பட்ட பைகளுக்குள்ளிருந்து ஊறவைத்த கொள்ளை தின்றபடி வால்சுழற்றிக் கொண்டிருந்தன, மாட்டு வண்டிகளின் அருகே வண்டிக்காளைகள் கால்மடித்து அமர்ந்து கண்மூடி அசைபோட்டன. தோல் விரிப்புகளிலும் மரவுரிகளிலும் ஈச்சை ஓலைப் பாய்களிலும் படுத்திருந்த யாதவர்கள் பலர் பயண அலுப்பினால் வாய்திறந்து குறட்டை எழ துயின்று கொண்டிருந்தனர்.

புழுதிபடிந்த உடலுடனும் இலக்கடைந்த உள எழுச்சியுடனும் மேலும் மேலும் சாலைகளினூடாக உள்ளே வந்துகொண்டிருந்த யாதவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களை கூவி அழைத்து தங்குமிடமும் உணவும் பற்றி உசாவினர். ஒன்றிலிருந்து ஒன்று என தொட்டுச் சென்ற தன் எண்ணங்கள் சுபத்திரையை வந்தடைந்து கொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். ஆனால் மிக எளிய ஒரு தகவல் போலவே அது எண்ணத்தில் எழுந்தது. ஏதோ ஒரு வகையில் தனக்கு பெண்கள் சலித்துவிட்டனர் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. பெண்கள் அளிக்கும் மாயங்களின் எல்லைகள் தெளிவடைந்துவிட்டதைப்போல. அவர்களை வெல்வதற்கான தன் ஆணவத்தின் அறைகூவல்கள் மிக எளிதாகி விட்டதைப்போல. அல்லது பெண்களின் வழியாக அவன் கண்டடையும் தன் முகம் மீண்டும் மீண்டும் ஒன்றைப் போலவே தோன்றுவது போல.

சுபத்திரை என்னும் பெயரை முதன்முதலாக கதன் சொல்லி கேட்டபோதுகூட எந்தவிதமான உள அசைவையும் அது உருவாக்கவில்லை என எண்ணிக்கொண்டான். ஒரு பெண் பெயர் போலவே அது ஒலிக்கவும் இல்லை. ஒரு செய்தியாக ஒலித்தது. அல்லது ஒரு ஊரின் பெயர். அல்லது ஒரு பொருள். அல்லது என்றோ மறைந்த ஒரு நிகழ்வு. உயிருள்ள உணர்வுகள் உள்ள உள்நுழைந்து உறவென ஆகும் ஒரு பெண்ணின் பெயரல்ல என்பதைப்போல. கஜ்ஜயந்தபுரிக்கு வரும்போதே அதைப்பற்றி எண்ணி வியந்து கொண்டிருந்தான். முதன் முறையாக ஒரு பெண்ணின் பெயர் எவ்வகையிலும் உள்ளக்கிளர்ச்சியை அளிக்கவில்லை. எளிய பணிப்பெண்கள் பெயர்கூட விரல் நுனிகளை பதறச்செய்யுமளவுக்கு நெஞ்சில் தைத்த நாட்கள் அவனுக்கிருந்தன. ஒரு வேளை முதுமை வந்தடைந்துவிட்டதா?

ஆம், முதுமையும் கூடத்தான். அவனைவிட இருபத்தி ஐந்து வயது குறைவானவள் சுபத்திரை. அவனுடைய இளவயது உறவில் மைந்தர்கள் எங்கேனும் பிறந்திருந்தால் அவளுடைய வயது இருந்திருக்கக் கூடும். உடனே இவ்வெண்ணங்களை இப்போது எதற்காக மீட்டிக் கொண்டிருக்கிறோம் என்றும் எண்ணினான். சுபத்திரை ஒரு பொருட்டே அல்ல என்றால் ஏன் அவ்வெண்ணத்திலேயே திரும்பத் திரும்ப தன் அகப்பாதைகள் சென்று முடிகின்றன?

சற்று முன் சுபத்திரை இங்கு வந்திருப்பதாக ஒரு யாதவன் சொன்னான். இங்கு வந்திருக்கிறாளா? இங்கு வரவில்லை. வந்திருக்கக்கூடும். வந்திருக்கிறாள் என்று அவன் அறிந்ததை சொன்னான். அப்போது தோன்றியது அவள் வந்திருக்கிறாள் என்று. அதைச்சொன்ன அந்த யாதவனின் முகம் அவன் அகக்கண்ணில் எழுந்தது. அதில் எழுந்த நூற்றுக்கணக்கான விழிகளை தன் நினைவில் எழுப்பினான். அவற்றில் ஒன்றில் சுபத்திரையைப்பற்றி அவர் சொல்லும்போது எழுந்த தனி ஒளியை கண்டான். ஆம், வந்திருக்கிறாள். ஆயினும் அவன் உள்ளம் எழவில்லை. வந்திருக்கக் கூடும் என்ற உறுதியை அடைந்தபின்னும் அது ஓய்ந்தே கிடந்தது.

கஜ்ஜயந்தபுரியின் எல்லை வரை நடந்து வந்திருப்பதை உணர்ந்தான். முழங்கால்வரை செம்மண் புழுதி ஏறியிருந்தது. நாளெல்லாம் கதிரவன் நின்று காய்ந்த மண்ணிலிருந்து எழுந்த வெம்மையால் உடல் வியர்த்து வழிந்திருந்தது. பாலைவனத்தின் விளிம்பில் நெடுந்தொலைவில் செங்குழம்பென உருவழிந்த சூரியன் அணைந்து கொண்டிருந்தான். நான்கு திசைகளிலிருந்தும் வந்து சூழ்ந்துகொண்டிருந்த யாதவர்களின் புழுதியால் கஜ்ஜயந்தபுரி மெல்லிய பட்டுத்திரை என போர்த்தப்பட்டிருந்தது.

சூரியன் நீரில் விழுந்த குருதித்துளியென மேலும் மேலும் பிரிந்து கரைந்து பிரிந்து மறைவது வரை அவன் பாலை விளிம்பிலேயே நின்றிருந்தான். ஒருபோதும் இப்படி விழைவறுந்து தன் உள்ளம் மண்ணில் கிடந்ததில்லையே என்று எண்ணிக் கொண்டான். பெருவிழைவுடன் அணைத்த பெண்டிர்களுக்குபின் சற்றும் விருப்பின்றி ஒரு பெண்ணை மணக்கப் போகிறோமோ? அதுதான் இப்பயணத்தின் இயல்பான முடிவோ?

பின்பு நீள் மூச்சுடன் எழுந்தான். ஆம், அரசர்கள் நடத்தும் மணங்களில் பெரும்பாலானவை வெறும் அரசியல் மதிசூழ்கைகளின் விளைவுதான். பெண்களை விரும்புவதோ உள்ளத்தில் ஏற்றுவதோ ஷத்ரியனுக்குரிய பண்புகள் அல்ல. அவர்கள் அவன் ஆடிக்கொண்டிருக்கும் பெருங்களத்தின் கருப்பாவைகள் மட்டுமே. திரும்புகையில் ஒரு விந்தையை அவன் அறிந்தான். அவ்வெல்லை வரை வந்துகொண்டிருக்கும்போது எழுந்த அனைத்து எண்ணங்களும் நேர் எதிர்த்திசையில் திரும்பி ஓடத்தொடங்கின. திரும்புகிறோம் என்ற உணர்வாலா, அல்லது உடல் உண்மையிலேயே எதிர்த் திசை நோக்கி திரும்பி இருப்பதாலா அதை நிகழ்த்துகிறது அகம்?

இதுவரை அவன் எப்பெண்ணையும் உள்ளத்தில் ஏற்றிக் கொள்ளவில்லை. ஆகவே தான் குளித்து ஆடை மாற்றுவது போல பெண்களை மறந்து புதிய நிலம் நோக்கி செல்ல முடிந்தது. இப்போதுதான் ஒரு கணத்திலும் அவன் துறக்கமுடியாத ஒருத்தியை பார்க்கவிருக்கிறான். அவனுள் இருக்கும் அறியாத துலா ஒன்று நிலை குலைந்துள்ளது. அவனை அவள் வீழ்த்தத் தொடங்கிவிட்டாள். அதை அவனுக்கே மறைத்துக் கொள்ளும் பொருட்டுதான் அந்தப் பொருட்டின்மையை நடித்துக் கொள்கிறான். இரு கைகளாலும் அவள் பெயரை தள்ளித் தள்ளி விலக்கியபடி முன் செல்கையில் ஓரக்கண்ணால் அது தன்னை பின் தொடர்கிறதா என்று உறுதி செய்து கொள்கிறான்.

ரைவத மலையின் உச்சியிலிருந்த இந்திரபீடம் என்னும் கரிய பெரும்பாறையின் மீது விளக்கேற்றுவதற்கான பணிகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை தொலைவிலேயே பார்க்க முடிந்தது. நூலேணி ஒன்றைக்கட்டி அதன் வழியாக சிறிய வண்ண எறும்புகள் போல வீரர்கள் ஊர்ந்து மேலே சென்றனர். அங்கு சிறிய குளம் போன்று வெட்டப்பட்ட கல் அகல் ஒன்று உண்டு என்று அவன் அறிந்திருந்தான். அதில் நெய்யும் அரக்கும் கலந்து சுற்றப்பட்ட பெரிய துணித் திரியை சுருட்டி குன்றென வைத்து தீயிடுவார்கள். கதிரவனுக்கு நிகராக அந்நகரில் எழுந்து அவ்விரவை பகலென ஆக்குவது அது. அப்பகலில் வெளியே வந்து தெருக்களில் நடக்கவும் உணவு உண்ணவும் அருக நெறியினருக்கு மரபு ஒப்புதல் உண்டு.

குன்றுக்கு அப்பால் கிழக்கு இருண்டு எஞ்சிய செவ்வெளிச்சமும் மெல்லிய தீற்றல்களாக மாறி மறைந்து கொண்டிருப்பதை பார்த்தபடி அவன் நடந்துகொண்டிருந்தான். மலையுச்சியில் புகை எழுந்து சிறிய வெண்தீற்றலாக வானில் நின்றது. மேலும் எழுந்து கரிய காளானாக மாறியது. அதனடியில் செந்நிறத் தழல் எழுந்தது. அவன் நோக்கிக் கொண்டிருக்கவே தழல் தன்னை பெருக்கிக் கொண்டது. ஒரு சிறிய மலரிதழை அப்பாறையின்மேல் வைத்தது போல. செஞ்சுடர் எழுந்ததனால் சூழல் இருண்டதா? குருதி தொட்டு நெற்றியில் இடப்பட்ட நீள்பொட்டு போல சுடர் எழுந்தபோது வானம் முற்றிலும் இருண்டுவிட்டிருந்தது. அச்சுடர் மட்டும் வானில் ஒரு விண்மீன் என அங்கு நின்றது.

கீழே ரைவத மலையின் மடிப்புகளில் இருந்த பல நூறு அருகர் ஆலயங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன. பல்லாயிரம் அடிகள்பாறைகளில் அகல்கள் எழுந்தன. வளைந்து அடிவாரம் நோக்கி வந்த படிக்கட்டு முழுக்க கல்விளக்குகள் கொளுத்தப்பட்டன. நகரெங்கும் இல்லங்களில் சுடர்கள் மின்னத்தொடங்கின. வானிலிருந்து ஒரு சிறு துளை வழியாக செந்நிறத்தழல் ஊறிச்சொட்டி மலையடிவாரத்தை அடைவதுபோல. அவன் மலையின் கீழிருந்த அருகர் ஆலயத்தை அடைவதற்குள் பல்லாயிரம் நெய் அகல்களால் ஆன மலர்க்காட்டுக்குள் இருப்பதை உணர்ந்தான்.

அடிவாரத்தில் இருந்த ரிஷப தேவரின் ஆலயத்தில் மணிமண்டபத்தின் மேல் கட்டப்பட்டிருந்த கண்டாமணி பன்னிருமுறை ஒலித்தது. உள்ளிருந்து அருகர் ஐவரையும் வாழ்த்தும் ஒலி எழுந்தது. வெள்ளுடை அணிந்து வாய்த்திரை போட்ட படிவர்கள் வலது கையில் மண்ணகலில் நெய்த்திரிச் சுடரும் இடது கையில் மயிற்பீலித் தோகையுமாக வெளிவந்தனர். தங்கள் இரவலர் கப்பரைகளை தோளில் மாட்டிக் கொண்டனர். மயிற்தோகையால் மண்ணை நீவியபடி அருகர் புகழை நாவில் உரைத்தபடி மெல்ல நடந்தனர். விளக்கொளித் தொகையாக அவர்கள் ரைவத மலையில் ஏறத்தொடங்க அவ்வொலி கேட்டு அருகநெறி சார்ந்த இல்லங்களிலிருந்து பெண்களும் குழந்தைகளும் கைகளில் நெய்யகல்களுடன் வெளியே வந்து நிரைவகுத்து மேலேறி செல்லத் தொடங்கினர். செந்நிற ஒளியென செதில் சுடரும் நாகம் ஒன்று மலைச்சரிவில் வளைந்து உடல் நெளித்து மேலெழுவது போல் தோன்றியது.

அந்த விளக்குகளின் அணியூர்வலம் கண்டு யாதவர்கள் எழுந்து கைகூப்பி நின்றனர். அருக நெறியினர் அனைவரும் ரைவத மலைமேல் ஏறிச் சென்றதும் கஜ்ஜயந்த புரியின் தெருக்களில் நிறைந்திருந்த யாதவர் உரத்த குரலில் ரைவதக மன்னரை வாழ்த்தி பேரொலி எழுப்பினர். மருத்தனின் வாளை ஏந்தி விண்ணை இரு துண்டென வெட்டிய ரைவதகரின் வெற்றியை புகழ்ந்து பாடியபடி மலையேறிய சூதனைத் தொடர்ந்து அர்ஜுனன் மேலேறினான். உருளைப்பாறைகளில் தன் கால்கள் நன்கு தடம் அறிந்து செல்வதை உணர்ந்தான் இருபுறமும் நின்ற மூங்கில்தூண்களில் நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அருகே நெய்க் கொப்பரையுடன் சுடர்க்காவலர் சிலை போல் நின்று கொண்டிருந்தார்கள். விண்ணிலிருந்து இறங்கி அவ்விழவுக்காக வந்த தேவர்கள் போல் அவர்கள் அசைவின்மை கொண்டிருந்தனர்.

ஆலயங்கள்தோறும் எரிந்த குங்கிலியமும் அகிலும் கொம்பரக்கும் கலந்த நறுமணப்புகை இருளுக்குள் ஊடுருவிய இன்னொரு இருளென நிறைந்திருந்தது. சுடரொளி விழுந்த இடங்களில் செந்நிறநீர் விழுந்த பட்டுத்துணி போல் அப்புகை நனைந்து வட்டங்களாக தெரிந்தது. அரண்மனை முகப்பிலிருந்த ரிஷபர் ஆலயமுகப்பின் பெருமுற்றத்தில் அருகநெறியினர் பன்னிரு சுடர் நிரைகளாக அணிவகுத்து நின்றிருந்தனர். உள்ளே ஐந்து அருகர் சிலைகள் முன்னால் பரப்பப்பட்ட ஈச்ச இலைகளில் அரிசிச்சோறும் அப்பங்களும் காய்கனிகளும் மலரும் படைக்கப்பட்டிருந்தன.

அர்ஜுனன் அருகநெறியினரின் நீண்ட நிரையின் பின்வரிசையில் நின்று உள்ளே எழுந்த தெய்ய உருவங்களை நோக்கி நின்றான். மணியோசை எழுந்த போது இருகைகளையும் தலைக்கு மேல் குவித்து அருகரை வணங்கினான். அங்கிருந்த அனைவரும் ஒருங்கிணைந்த பெருங்குரலில் அருகர்களை ஏத்தினர். உள்ளிருந்து வெண்ணிற ஆடை அணிந்த படிவர் விளக்குடன் வெளியே வந்து தம் கையிலிருந்த நீரை அங்கு கூடியிருந்தவர்கள் மேல் வீசித்தெளித்து இரு கைகளையும் தூக்கி அவர்களை வாழ்த்தினர். அவர்களிடமிருந்து நீரைப்பெற்று பிற பூசகர் அனைவர் மேலும் படும்படி நீரை தெளித்தனர்.

தன் மேல் தெளித்த நீர்த்துளி ஒன்றால் உடல் சிலிர்த்தான் அர்ஜுனன். கோடைமழையின் முதல்துளியென அது தோன்றியது. ஒரு துளி நீர் ஒருவனை முற்றாக கழுவிவிடக்கூடுமா? ஒரு துளி நீரால் கழுவப்பட முடியாதவன் பெருங்கடல்களால் தூய்மை கொண்டுவிடுவானா என்ன? அங்கு கூடி நின்ற ஒவ்வொருவர் விழிகளிலாக மாறி மாறி நோக்கிச்சென்றான். மானுட அகத்தின் வேர்ப்பற்றுகள் என்றான வன்முறையை அவர்கள் எப்படி வென்றார்கள்? சிங்கத்தில் நகங்களாக, எருதில் கொம்புகளாக, ஓநாயில் பற்களாக, முதலையில் வாலாக, ஆந்தையில் விழிகளாக, வண்டில் கொடுக்காக எழுந்த ஒன்று. புவியை ஆளும் பெருந்தெய்வமொன்றின் வெளிப்பாடு. அதை இம்மக்கள் கடந்து விட்டனரா என்ன?

மீண்டும் மீண்டும் அம்முகங்களை நோக்கினான். வெள்ளாட்டின் விழிகள். மான்குட்டியின் விழிகள். மதலைப்பால்விழிகள். கடந்து விட்டிருக்ககூடும். தனியொருவனாக கடப்பது இயல்வதல்ல. ஆனால் ஒரு பெருந்திரளென அதை கடந்துவிட முடியும். இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்திலும் இருக்கும் இனிமை ஒன்றுடனொன்று ஒட்டிக்கொண்டு துளித்துளியாக தன்னை திரட்டிக்கொண்டு பேருருவம் கொள்ள முடியுமென்றால் அத்தெய்வத்தை காலடியில் போட்டு மண்ணோடு அழுத்தி புதைத்துவிட முடியும். நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழ்ந்தாக வேண்டும். ஐந்து சுடரென எழுந்த கரிய உடல்களின் முன் நின்ற போது “அதை நிகழ்த்தியிருப்பீர் கருணையின் தெய்வங்களே. அதை நிகழ்த்துக! அதை நிகழ்த்துக! ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்று வேண்டிக் கொண்டான்.

அவன் உள்ளத்தை ஒலிப்பதுபோல் அப்பால் மணிமேடையில் கண்டாமணி மும்முறை ஒலித்தது. நீள் மூச்சுடன் அரண்மனை நோக்கி செல்லத் திரும்பியபோது கீழே பெருமுரசங்கள் ஒலிப்பதை கேட்டான். அருகராலயங்களில் பூசனைகள் முடிவுற்றதற்கான அறிவிப்பு அது. கஜ்ஜயந்தபுரி ஒற்றைப் பெருங்குரலில் “அருகர் சொல் வாழ்க!” என்று முழங்கியது. மேலிருந்து அனைத்துப் பாதைகளின் வழியாகவும் யாதவர்கள் கூட்டமாக மலைமேல் ஏறத்தொடங்கினர். ரைவதக மன்னரை வாழ்த்தி கூட்டமாக நடனமிட்டபடி பாறைகளிலிருந்து பாறைகளுக்குத் தாவி மேலே வந்தனர்.

அர்ஜுனன் அரண்மனை முற்றத்தில் இடைமேல் கைகளை வைத்தபடி நோக்கி நின்றான். இருளுக்குள் யாதவர்கள் வருவது பெரு வெள்ளம் ஒன்று பாறைகளை உருட்டிக்கொண்டு சருகுகளையும் முட்களையும் அள்ளிப் பெருக்கி எழுந்து குன்றை மூழ்கடிப்பது போல் தோன்றியது. அதுவரை அங்கிருந்த அமைதி குன்றின் மேலிருந்து தன்னை இழுத்துக்கொண்டு மேலேறி உச்சிப்பாறை மேல் நின்று ஒருமுறை நோக்கியபின் முகில்களில் பற்றி ஏறி ஒளிந்து கொண்டது.

ஒளிப்பரப்புக்குள் வந்த முதல் யாதவக்கூட்டத்தில் இருந்த களிவெறியை கண்டபோது தன் முகம் அறியாது மலர்ந்ததை எண்ணி அவனே துணுக்குற்றான். சற்று முன் ஐவர் ஆலயத்தின் முன் கைக்கூப்பி நின்ற மக்கள் எவர் முகத்திலும் இல்லாதது அக்களிவெறி. தன்னை மறந்த பேருவகை அவர்களுக்கு இயல்வதல்ல. உள்ளுறைந்த அவ்வன்முறை தெய்வத்தை ஒவ்வொரு கணமும் கடிவாளம் பற்றி தன்னுணர்வால் இழுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அதை அவர்கள் விடமுடியாது. கடும் நோன்பு என முழு வாழ்க்கையும் ஆக்கிக் கொண்டவர்கள் எவரும் இடைக்கச்சையை அவிழ்த்து தலைமேல் வீசி கூத்தாடி வரும் இந்த யாதவனின் பேருவகையை அடைய முடியாது. இக்களிவெறியின் மறுபக்கமென இருக்கிறது குருதியும் கண்ணீரும் உண்டு விடாய் தணிக்கும் அத்தெய்வம்.

பந்த ஒளிப்பெருக்கின் உள்ளே யாதவர்களின் வெறித்த கண்களும் கூச்சலில் திறந்த வாய்களும் அலையடித்த கைகளும் வந்து பெருகி எங்கும் நிறைந்தபடியே இருந்தன. கைகளை தட்டியபடியும் ஆடைகளை தலைமேல் சுழற்றி வீசி குதித்தபடியும் தொண்டைநரம்புகள் அடிமரத்து வேர்களென புடைக்க, அடிநா புற்றுக்குள் அரவென தவிக்க கூச்சலிட்டபடி அவர்கள் சென்று கொண்டிருந்தனர். தொலைதூரத்தில் “யாதவ இளவரசி வெல்க!” என்றொரு குரல் கேட்டது. அர்ஜுனன் அந்த ஒளிவட்டத்தையே நோக்கி நின்றான். “யாதவ இளவரசி வாழ்க! மதுராவை ஆளும் கோமகள் சுபத்திரை வாழ்க!” என்று மேலும் மேலும் குரல்கள் பெருகின.

அப்பால் இருந்த இருளுக்குள் இருந்து செவ்வொளிக்குள் வந்த சுபத்திரையை அர்ஜுனன் கண்டான். அவள் அணிந்திருந்த வெண்பட்டாடை நெய்ச்சுடர் ஒளியில் தழலென நெளிந்து கொண்டிருந்தது. அவள் நீண்ட குழலும் வெண்முகமும் பெருந்தோள்களும் செந்நிறத்தில் தெரிந்தன. குருதியாடி களத்தில் எழுந்த சிம்மம் மேல் நிற்கும் கொற்றவையென அவள் தோன்றினாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைநுண்வரலாறும் டாக்டர் எஸ்.ராமச்சந்திரனும்
அடுத்த கட்டுரைகுகை ஓவியங்கள் -கடலூர் சீனு