‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39

பகுதி ஐந்து : தேரோட்டி – 4

முதற்கதிர் மூடுபனித்திரையை ஒளிரச்செய்த காலையில் கதனும் அர்ஜுனனும் விடுதியிலிருந்து கிளம்பி வளைந்துசென்ற மலைப்பாதையில் நடந்தனர். முன்னரே கிளம்பிச் சென்ற பயணிகளின் குரல்கள் பனித்திரைக்கு அப்பால் நீருக்குள் என ஒலித்தன. அவர்களில் எவரோ குறுமுழவொன்றை மீட்டி பாடிக்கொண்டிருந்தனர். மீள மீள வரும் ஒரே தாளத்தில் அக்குரல் ஒன்றையே பாடிக்கொண்டிருந்தது, மன்றாட்டு போல, உறுதி ஏற்பு போல.

அனைத்துப் பாடல்களும் இன்னிசை கொள்கையில் தன்னந்தனிக் குரல் போல் ஒலிப்பதன் விந்தையை அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அப்போது அருகே பிற மானுடர் எவரும் இல்லையென்று அவை உணர்கின்றன. இனிய இசைப்பாடல்கள் ஒருபோதும் உரையாடல்கள் ஆக முடியாது. கூற்றுகளும் ஆக முடியாது. அவை வெறும் வெளிப்பாடுகளே. இங்குளேன் என்றும் அங்குளாயா என்றும் துடிக்கும் இரு முனைகள். அல்லது பக்திப்பாடல்கள் மட்டும்தான் அப்படி உள்ளனவா? இப்பாடலின்றி இவர்களால் மலையேற முடியாதா?

கதன் சொன்னான் “இளைய பாண்டவரே, என்னை பலராமர் தேர்வு செய்தது அவர்கள் தரப்பில் ஆற்றப்பட்ட பெரும்பிழை. நான் இளைய யாதவரிடம் இணையற்ற அர்ப்பணிப்பு கொண்டவன். அதை அறிந்தவர்களல்ல வசுவும் தம்பியரும். பலராமர் அதையெல்லாம் உன்னும் நுட்பம் கொண்டவருமல்ல. உகந்த ஒருவரை அனுப்ப வேண்டுமென்று அவர் கோரியதும் என்னை அனுப்பலாமென்று அவருக்கு சொன்னவர் ஆனகர். அவர் என்னை அறிவார்.”

அர்ஜுனன் “அப்படியென்றால் இது அவரது திட்டம்” என்றான். “ஆம். பலராமர் என்னிடம் சொன்னார், முடிவெடுக்க வேண்டியவர் எந்தை. அதனால்தான் அவரைத் தேடி வந்தேன். அவரது சொல் பெற்றுவிட்டேன். இனி ஏதும் நோக்க வேண்டியதில்லை. அஸ்தினபுரிக்கு செல்க! துரியோதனனை முகம் கண்டு இவ்வண்ணம் ஒரு முடிவு யாதவப் பெருங்குலத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்க! கதாயுதத்துடன் வந்து என் இளையவளை கைக்கொண்டு செல்லுதல் அவன் கடமை என்று உரைத்து மீள்க என்றார். நான் தலைவணங்கி ஆணை என்றேன்.” அர்ஜுனன் தலையசைத்தான். கதன் தொடர்ந்தான்.

பலராமர் என்னிடம் இந்திரப்பிரஸ்தம் சென்று அங்கு யுதிஷ்டிரரையும் பிற நால்வரையும் கண்டு இம்முடிவைக் கூறுக என்றதும் பின்னால் நின்ற வசு சற்றே அசைந்து “மைந்தா, இளைய பாண்டவர் அங்கில்லை. பிற நால்வரும் அவரிலாது முடிவெடுக்கத் தயங்குவர்” என்றார். “இல்லை, நான் இம்முடிவை எடுத்ததை அவர்கள் அறியவேண்டும். ஒளித்து எதையும் செய்ய நான் விரும்பவில்லை. கதாயுதப்போரில் பீமன் வந்துவிடலாகாது” என்றார் பலராமர்.

“அவ்வண்ணமெனில் அவர்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பதே நல்லது” என்றார் வசு. “அவர்கள் துரியோதனன் சுபத்திரையை மணப்பதை விரும்பமாட்டார்கள். இன்று இரு தரப்பும் போர்முகம் கொண்டு நிற்கின்றன. இருசாராரும் தங்கள் ஆற்றலை துளித் துளியென சேர்த்து பெருக்கிக்கொள்ளும் தருணம். துலாத்தட்டுகளில் வேறுபாடாக இருக்கப்போவது யாதவர்களின் ஆதரவே.” சூரசேனரும் “ஆம், நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன். பாஞ்சாலத்து அரசி எண்ணி எண்ணி படையும் கலமும் சேர்த்துக்கொண்டிருக்கிறாள் என்கின்றனர் ஒற்றர்” என்றார்.

பலராமர் “இல்லை, எவ்வண்ணமென்றாலும் எவரையும் ஏமாற்றி அச்செயலை ஆற்ற நான் ஒப்பமாட்டேன்” என்றபின் என்னிடம் “பீமனிடம் நான் சொன்னதாக சொல்க. இந்த மணநிகழ்வில் அவன் பங்கு கொள்ளலாகாது. இது என் தங்கையை அஸ்தினபுரியின் அரசனுக்கு அளிப்பதற்கு விழைந்து நான் நிகழ்த்தும் மணவிழா” என்றார். வசு குரல் தழைத்து “அப்படி ஓர் ஆணையை நாம் எப்படி பீமனுக்கு அளிக்கமுடியும்? மேலும் மணநிகழ்வுக்கு எவரையும் வரலாகாது என ஆணையிடும் முறைமையும் இங்கில்லை” என்றார்.

“இப்போது அம்முறை உருவாகட்டும், வேறென்ன? மறைத்தும் ஒளித்தும் நிகழ்த்துவது அரசமுறை என்றால் அதைவிட மேலான அரசமுறை இதுவே. பீமனிடம் என் விழைவை மட்டும் சொல்லுங்கள். அதன் பிறகு அவன் வரமாட்டான், நான் அவனை அறிவேன்” என்றார் பலராமர். ஆனகர் ஏதோ சொல்ல முயல “தந்தையே, நீங்களெல்லாம் படைக்கலம் கொண்டு பொருதுபவர்கள். உங்கள் சொற்களும் படைக்கலம் ஏந்தியவை. நானும் அவனும் வெறுந்தோள் கொண்டு மல்லிடுபவர்கள். எங்களுக்கு எல்லாமே தசையுடன் தசை உள்ளத்துடன் உள்ளம்தான்” என்றார் பலராமர்.

நான் தலைவணங்கி “ஆணையை சென்னிசூடுகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் அஸ்தினபுரிக்குச் செல்லாமல் இந்திரப்பிரஸ்தத்துக்கே முதலில் சென்றேன். கட்டி முடிக்கப்படாத அப்பெருநகரில் அப்போதும் கற்பணி நடந்து கொண்டிருந்த மாபெரும் முகப்பு கோபுரத்தின் முற்றத்தில் யுதிஷ்டிரர் யவனச் சிற்பிகளுக்கு ஆணையிட்டு கொண்டிருந்தார். என்னை அங்குதான் அழைத்துச்சென்றனர் ஏவலர். தோளிலிருந்து காற்றில் நழுவிச் சரிந்த கலிங்கப்பட்டுச் சால்வையை எடுத்து மீண்டும் போர்த்தியபடி புருவங்கள் சுருங்க “என்ன?” என்றார்.

தவறாக எண்ணவேண்டாம், அங்கே நான் கண்டது பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியை அல்ல. எளிய குடும்பத்தலைவர் ஒருவரைத்தான். என் உள்ளத்தை கரந்து “இந்திரப்பிரஸ்தமாளும் பாண்டவர்களுக்கு மதுவனத்து அரசர் சூரசேனரின் செய்தியுடன் வந்துள்ளேன். என் பெயர் கதன். விருஷ்ணிகுலத்தான். கிரௌஞ்ச குலத்துக் கரவீரரின் மைந்தன்” என்றேன். “சூரசேனரின் செய்தியா?” என்று கேட்டபின் “அச்செய்தி எனக்கு மட்டும் உரியதா? எங்கள் ஐவருக்குமா?” என்றார். “ஐவருக்கும்” என்றேன். “இளையவன் இங்கில்லை பிற மூவரையும் வரச்சொல்கிறேன். சிற்றவை கூடத்திற்கு வருக!” என்றார்.

தலைவணங்கி “அவ்வண்ணமே” என்று நான் திரும்பியதும் “என்ன செய்தி?” என்று என்னை கேட்டார். அவர் பெரும் சூழ்மதியாளர் என அப்போது உணர்ந்தேன். செய்தியை நான் அரசமுறையில் அவையில் சொல்லவேண்டும். தனிப்பட்ட முறையில் அங்கே அளிக்கவேண்டும். “அரசே, யாதவகுலத்தலைவரும் மதுராபுரியின் அரசருமான வசுதேவர் தன் பட்டத்தரசி ரோகிணியில் பெற்றெடுத்த இளவரசி சுபத்திரையை வரும் வைகாசி மாதம் முழுநிலவுநாளில் மணத்தன்னேற்பு அவை முன் நிறுத்த அவருடைய பிதாமகர் சூரசேனர் முடிவெடுத்துள்ளார். அதற்கு முறைப்படி தங்களுக்கு அழைப்பு விடுக்க வந்துள்ளேன்” என்றேன்.

ஒரு கணத்தில் அவர் கண்களில் ஒரு அசைவு வந்து போவதை கண்டேன். “என்ன படைக்கலம் கொண்டு?” என்றார். அனைத்தையும் அவர் புரிந்துகொண்டதை உணர்ந்தேன். தாழ்ந்த குரலில் “கதாயுதம் கொண்டு” என்றேன். அவர் முகத்தில் ஏதும் தெரியவில்லை. முனகலாக “கதாயுதமா?” என்றார். “பீமனிடம் ஏதேனும் செய்தி சொல்லும்படி பணிக்கப்பட்டீரா?” நான் “ஆம்” என்றேன். “எவர் செய்தி? பலராமரா?” நான் “ஆம்” என்றதும் “அவைக்கூடத்துக்கு வருக!” என்று திரும்பிக் கொண்டார்.

சிற்றவைக்கூடத்திற்கு வெளியே நான் காத்து நின்றபோது உள்ளே பேரமைச்சர் சௌனகரும் துணையமைச்சர்களும் பேசும் ஒலிகளை கேட்டேன். சற்றுநேரம் கழித்து சௌனகர் கதவைத்திறந்து முகமன் சொல்லி வணங்கி என்னிடம் உள்ளே வரும்படி சொன்னார். உள்ளே சிற்றமைச்சர்கள் நின்றிருக்க பீடங்களில் நகுலனும் சகதேவனும் மட்டும் அமர்ந்திருந்தார்கள். நான் தலைவணங்கி வாழ்த்தும் முகமனும் உரைத்தேன். என்னை அமரும்படி ஆணையிட்டனர். தலைவணங்கி அமர்ந்து கொண்டேன். ஆனால் சொல்லெடுக்கவில்லை.

சற்று நேரத்தில் மேலாடை மாற்றி அரசாடை அணிந்து குழல்திருத்தி யுதிஷ்டிரர் வந்தார். அவை எழுந்து அவருக்கு வாழ்த்துரைத்தது. அவரது அசைவுகள் இயல்பிலேயே ஒருவித தளர்வுடன் இருந்தன. தோள்கள் தொய்ந்திருப்பதனாலாக இருக்கலாம். கால்களை நீட்டி நீட்டி வைத்து கைகளை குறைவாக வீசி நடந்தார். அவர் தன் அரியணையில் அமர்ந்ததும்கூட தளர்வுகொண்டவர்களுக்குரிய எடை தாழ்த்தி இளைப்பாறும் பாவனைகள் கொண்டதாக இருந்தது. அவரது உடலின் தளர்வல்ல அது, உள்ளத்தின் தளர்வும் அல்ல. எண்ணங்களின் எடை அது என உணர்ந்தேன்.

அணிகளும் ஆடைகளும் காற்றில் ஒலிக்க மூச்சொலிகளும் இருமல்களும் எழுந்தமைய அவை காத்திருந்தது. அவர் பெருமூச்சுவிட்டு சற்றுநேரம் அமைதியாக இருந்தார். முகவாயை கைகளால் நீவிக்கொண்டு தன்னிலை மீண்டு “எங்கே மந்தன்?” என்றார். சௌனகர் “வந்துகொண்டிருக்கிறார்” என்றபின் துணையமைச்சர் ஒருவரை நோக்க அவர் தலைவணங்கி வெளியே சென்றார். சௌனகர் என்னை முறைப்படி அறிமுகம் செய்துவிட்டு என்னை நோக்கி செய்தியை சொல்லும்படி ஆணையிட்டார். நான் முகமன், வாழ்த்து, அரச குலமுறை ஏத்தல், என் குடிநிரை விளம்புதல் என மரபுப்படி விரித்துரைத்து செய்தியைச் சொல்லி தலைவணங்கினேன்.

அப்போதுதான் பீமன் உள்ளே வந்தார். அவரது பெருந்தோள்களின் அளவு இடுப்புக்குக் கீழே உடலை மிகச்சிறியதாக ஆக்கியிருந்தது. அத்தனை எடைகொண்ட ஒருவரின் வயிறு எட்டு பலகைகளாக இறுகியிருப்பதை நோக்கி வியந்தேன். அது சிற்பங்களில் மட்டுமே இயல்வது என்று தோன்றியது. மஞ்சள்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம். மிகச்சிறிய கண்கள் அவர் உற்றுநோக்கும்போது இரு நீர்த்துளிகளாக மாறி சுருங்கி உள்ளே ஒடுங்கின. கைகளைக் கட்டியபடி சுவரோரமாக நின்றார்.

என் செய்தியை மீண்டும் சொல்லும்படி தருமர் சொல்ல நான் பீமனுக்கு அதை சுருக்கி மீண்டும் சொன்னேன். அதுவே ஓர் உத்தி. ஒருசெய்தியைச் சொல்லும் தூதன் முதலில் விரிவான சொல்லாடலை அமைப்பான். உடனே மீண்டும் சொல்லச்சொன்னால் அவன் சலிப்புற்று அதன் சாரத்தை மட்டும் சொல்லிவிடுவான். அவன் அதைப்பற்றி பலமுறை எண்ணியிருப்பவன் என்பதனால் சரியான சொற்களில் சுருக்கமாகச் சொல்ல அவனால் முடியும். நான் சொல்லிமுடித்ததும் எல்லாம் அப்பட்டமாக திறந்து அவை முன் விரிந்து கிடந்தன.

பீமனின் விழிகளில் எந்த உணர்வுமாற்றத்தையும் நான் காணவில்லை. யுதிஷ்டிரர் என்னை நோக்கி “முறைமைசார் அழைப்புக்கு அப்பால் வேறு செய்தி எதையும் பலராமர் சொன்னாரா?” என்றார். ஆணையை புரிந்துகொண்டு நான் “ஆம்” என்றேன். “இப்போட்டியில் இரண்டாவது பாண்டவர் கலந்து கொள்ளலாகாது என்றார்” என்றேன். பீமன் கண்கள் மேலும் சுருங்க “ஏன்?” என்றார். “அவர் சுபத்திரையை அஸ்தினபுரியின் அரசர் மணக்கவேண்டுமென விழைகிறார்” என்றேன்.

அதை அப்படி மீண்டும் சொன்னதும் அவையில் ஓர் உடலசைவு ஏற்பட்டது. “அது அவரது விழைவாக இருக்கலாம்” என யுதிஷ்டிரர் தொடங்கியதுமே பீமன் கைகட்டி “இல்லை மூத்தவரே, அது அவரது ஆணை என்றே கொள்கிறேன்” என்றபின் என்னை நோக்கி “அவரது ஆணை என்றே அதை கொள்வதாக நான் சொன்னேன் என்று தெரிவியுங்கள்” என்று சொல்லி தலைவணங்கினார். அதைக்கேட்டு நகுலனும் சகதேவனும் முகம் மலர்வதை கண்டேன். யுதிஷ்டிரர் சரி போகட்டும் என்பதைப்போல கைகளை வீசியபின் ஏவலனிடம் ஏதோ கேட்க அவன் ஒரு துண்டு சுக்கை அவருக்கு எடுத்து அளித்தான். அதை வாயிலிட்டபின் கைகளை உரசிக்கொண்டார்.

நான் நால்வர் முகங்களையும் மாறி மாறி பார்த்தபின் சௌனகரை பார்த்தேன். சௌனகர் என்னிடம் “இச்செய்தியை எவரிடம் முதலில் சொல்லச் சொன்னார் பலராமர்?” என்றார். “அஸ்தினபுரிக்குச் சென்று துரியோதனரிடம் சொல்லச் சொன்னார். அங்கிருந்து இங்கு வரும்படி எனக்கு ஆணை” என்றேன். “நீர் வரிசை மாறிவிட்டீர் அல்லவா?” என்றார். “ஆம்” என்றேன். “ஏன்?” என்றார். நான் அவர் கண்களை நேராக நோக்கி “ஏனெனில் நான் இளைய யாதவரின் அடிமை” என்றேன். “முதலில் இங்கு வரவேண்டுமென்பது ஆனகரின் ஆணை. இளைய யாதவரின் ஆணை பெறுபவர் அவர்.”

என்னை சற்று கூர்ந்து நோக்கியபின் “இப்போரில் மந்தன் வந்தால் வெல்ல முடியும் என்று எண்ணுகிறீரா?” என்றார் யுதிஷ்டிரர். “வெல்ல முடியாது” என்றேன். “ஏனென்றால் கதைப்போரை அமைப்பவர் பலராமர். ஆனால் ஏதேனும் வழி இருக்கும். அதை இளைய பாண்டவர் கண்டறிய முடியும்.” யுதிஷ்டிரர் சிலகணங்களுக்குப்பின் “அர்ஜுனன் வந்தால்?” என்றார். நான் அவர் விழிகளை நோக்கி “அது வேறு கதை” என்றேன். “அப்படியென்றால் அதை நீர் இளைய பாண்டவரிடம்தான் சொல்ல வேண்டும்” என்றார் சௌனகர். “அவர் எங்கிருக்கிறார்?” என்று நான் கேட்டேன்.

“ஒற்றுச் செய்திகளின்படி இறுதியாக மணிபுரி நாட்டில் இருந்தார். அங்கு பப்ருவாகனன் என்னும் மைந்தனுக்கு தந்தையானார்” என்றார் சௌனகர். “அவன் எங்கிருக்கிறான் என்று அறிவது எளிதல்ல. அவனை மறைக்க முடியாதென்பதனால்.அவன் சென்ற தடத்தை தொடர முடியும். ஆனால் ஆற்றல் மிக்க சிறகு கொண்ட பறவை. எத்தனை தொலைவு சென்றிருக்கிறதென்று. உய்த்துணர்வது எளிதல்ல” என்றார் யுதிஷ்டிரர். “நான் என்ன செய்வது அரசே?” என்று கேட்டேன்.

“யாதவரே, இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை. இது பலராமரின் ஆணை என்றால் அது என்னையும் கட்டுப்படுத்துவதே” என்றார் யுதிஷ்டிரர். சௌனகர் “ஆனால் பலராமர் இளைய யாதவரின் தந்தையராலும் உடன்பிறந்தாராலும் திசை திருப்பப்பட்டிருக்கிறார். இதில் உள்ளது அவர்களின் வஞ்சம் மட்டுமே. இதன் இறுதி விளைவென்ன என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. யாதவ குலத்தின் வெற்றியும் பெருமையும் இந்திரப்பிரஸ்தத்துடன் இணை நிற்கையிலேயே உருவாகின்றன. இளைய பாண்டவரின் துணையின்றி இளைய யாதவர் வெற்றி கொள்வதும் எளிதல்ல. ஆகவே இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஒருபோதும் முறியத்தக்கதல்ல” என்றார்.

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஊழ்வினை இங்ஙனம் உறுகிறது என்றால் அவ்வண்ணமே ஆகுக” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “சுபத்திரை என் இளையவனால் மணக்கப்படுவாளானால் அது நன்று. ஆனால் எந்த மணஉறவும் முற்றிலும் அரசியல் அல்ல. அதை தெய்வங்கள் ஆடுகின்றன. ஆகவே மணவுறவுகள் எவையும் இன்றியமையாதவையும் அல்ல. நமது வெற்றியும் சிறப்பும் நம் அறத்திலேயே அமைந்துள்ளது. மேலும் நாம் படை திரட்டவில்லை. எந்நாடு மீதும் தண்டு கொண்டு செல்லப்போவதும் இல்லை.”

நான் பீமனை நோக்கினேன். “இதிலுள்ள அரசு சூழ்தல் எதையும் நான் எண்ணவிழையவில்லை. கதரே, பலராமரின் ஆணை அது. என் தந்தையின், ஆசிரியரின் ஆணைக்கு நிகர்” என்றபின் பீமன் தலை வணங்க யுதிஷ்டிரர் அவை நிறைவுக்காக எழுந்தார். வாழ்த்தொலிகள் எழ மெல்ல நடந்து நீங்கினார். பீமன் தன் கைகளை நீட்டி சோம்பல் முறித்துவிட்டு சகதேவனிடம் ஏதோ மெல்லிய குரலில் சொல்லிவிட்டுச் சென்றார். சௌனகர் “அவை நிறைவுற்றது கதரே. நீங்கள் தங்குவதற்கான அனைத்தையும் செய்கிறேன்” என்றார். “நான் அஸ்தினபுரிக்குச் செல்லவேண்டும்” என்றேன்.

நான் வெளியே வந்தபோது என்னுடன் சௌனகரும் வந்தார். நான் மெல்லிய குரலில் “நான் இனி என்ன செய்வது அமைச்சரே?” என்று அவரிடம் கேட்டேன். “அஸ்தினபுரிக்கே செல்லுங்கள். அங்கு துரியோதனரிடம் நீர் வந்த செய்தியை சொல்லுங்கள். உமது தூது முடியட்டும்” என்றார். நான் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ளாமல் வெறுமனே நோக்கினேன். “காலில் சரடுகட்டப்பட்டு பறக்கவிடப்பட்ட புறாக்கள் நாம்” என்றார் சௌனகர். “அதற்குள் நீர் என்ன செய்ய வேண்டுமென்பது தெரியவரும்.” “யாரிடமிருந்து?” என்றேன். “ஊழிடமிருந்து” என்று சொல்லி சிரித்தபின் என் தோளை மெல்ல தட்டியபடி அவர் திரும்பிச் சென்றார்.

மறுநாளே அங்கிருந்து கிளம்பி அஸ்தினபுரிக்கு சென்றேன். என்னை அங்கு எதிர்பார்த்திருந்தார்கள் என்று அறிந்தேன். கோட்டைக் காவல் மாடத்திலேயே என்னைக் காத்து படைத்தலைவர் வஜ்ரதந்தர் நின்றிருந்தார். தேரில் என்னை அழைத்து நேராக கொண்டு சென்று விதுரர் முன் நிறுத்தினார். நான் நீராடவோ முறைமையுடை அணியவோ இல்லை. பீடத்திலிருந்து எழுந்து என்னை வரவேற்ற விதுரர் நான் முறைமைச்சொல் சொல்வதற்குள்ளாகவே “சூரசேனத்திலிருந்து நீர் கிளம்பி சில நாட்களாகின்றன” என்று என்னை கூர்ந்து நோக்கி சொன்னார்.

அவரது அமைச்சு மாளிகையில் மூன்று துணைஅமைச்சர்கள் என்னை கூர்ந்து நோக்கி நின்றனர். அவருக்குப் பின்னால் நின்ற அமைச்சர் கனகர் என் விழிகளை நோக்கிக் கொண்டிருந்தார். “ஆம்” என்றேன். அந்த அறை சுவடிகளாலும் எழுத்துப்பட்டுச் சுருள்களாலும் நிறைந்திருந்தது. சற்றும் மந்தணமின்றி அத்தனை பேர் முன்னிலையில் அவர் உரையாடியது வியப்பூட்டியது. “இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றீரோ?” என்றதுமே நான் உணர்ந்து கொண்டேன், அத்தனை விழிகள் என் மேல் நாட்டப்பட்டிருப்பது எதற்காக என்று. அவை என்னை சித்தம் குவிக்க முடியாது செய்தன. ஒன்றும் சொல்வதற்கின்றி நான் “ஆம், அமைச்சரே” என்றேன்.

“உம்மிடம் இட்ட ஆணையை அவ்வண்ணமே நிறைவேற்றிவிட்டீரா?” என்றார். நான் “இல்லை. இங்கு வந்து அங்கு செல்ல வேண்டுமென்பது ஆணை” என்றேன். அடுத்த வினாவைக் கேட்காது அவர் கடந்து சென்றார். “நீர் அஸ்தினபுரியின் அரசரை இன்று சந்திக்கலாம், அவையமர்வதற்கான ஒப்புதல் ஓலையை உம்மிடம் துணையமைச்சர் சமீகர் வழங்குவார்” என்றார். நான் தலைவணங்கி “ஆணை” என்றேன். “உமக்குரிய மாளிகையும் நீராட்டறையும் சித்தமாக உள்ளன.”

மாலையில்தான் நான் அரசப்பேரவையில் துரியோதனரை சந்திக்கச் செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குமுன்னரே துரியோதனரின் ஆணை வந்தது, அவரை நான் மந்தண அறையில் சந்திக்கலாம் என்று. அந்த உள்ளவைக்கு விதுரர் வரவில்லை. கனகரே என்னை அழைத்துச் சென்றார். அவர் என்னிடம் ஒன்றும் சொல்லாமல் எண்ணம் சுமந்தவர் போல வந்தார். அவரிடம் ஏதேனும் பேசலாமென எண்ணினேன். அஸ்தினபுரிக்கு யாதவரின் எண்ணங்கள் எந்த அளவுவரை தெரியும் என அறிய விழைந்தேன். விதுரருக்கு நான் எண்ணியதைவிட கூடுதலாகவே தெரியும் என அவரது சொற்கள் காட்டின. துரியோதனர் அறிந்திருப்பாரா? ஆனால் கனகர் சொல்லெடுக்கலாகாது என்னும் ஆணை பெற்றவர் போலிருந்தார்.

அஸ்தினபுரியின் மைய அரண்மனை அத்தனை பழமையானது என்பதை நான் எண்ணியிருக்கவில்லை. கதைகளில் அம்மாளிகையைப் பற்றி இளமை முதலே கேட்டிருந்தேன். என் கற்பனையில் வான் என உயர்ந்த கூரையும் அடிமரமென தூண்களும் வெண்பளிங்குத்தரையும் அனலெனப்பறக்கும் திரைச்சீலைகளும் கொண்டதாக இருந்தது அது. நேர்க்காட்சிக்கு எடைமிக்க தடிகளை அடுக்கிக் கட்டப்பட்ட உயரமற்ற கூரைகொண்ட பழமையான கட்டடம் கருமைகொண்டிருந்தது. அதன் பூண்களும் பட்டைகளுமெல்லாம் வெண்கலத்தால் ஆனவை. படிகளில் தோல்கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. வயதாகி முதிர்ந்த பேரரசரைப் போல தோன்றியது அது.

இடைநாழி வழியாக அழைத்துச்செல்லப்பட்டு எந்த முறைமைகளும் இல்லாமல் அறைக்கதவைக் கடந்து தம்பியருடன் தன் மந்தண அறையில் உரையாடிக் கொண்டிருந்த துரியோதனர் முன்பு நிறுத்தப்பட்டேன். அறைக்கு வெளியிலேயே அவர்களின் சிரிப்பொலியை கேட்டேன். அவர்கள் நூறு பேர் என்று அறிந்திருந்தேன். ஆயினும் உள்ளே பேரவைதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என எண்ணினேன். உள்ளே நுழைந்து தலைவணங்கியதும் ஒரே விழியில் அவர்களைப் பார்க்கையில் ஆடிப்பாவை முடிவின்றி பெருகியது போல் ஒரு விழிமயக்கெழுந்து திகைத்தேன்.

துரியோதனர் வெண்பட்டுக் கீழாடையும் செம்பட்டு மேலாடையும் அணிந்து எளிய பீடத்தில் தன் பெருந்தோள்களைச் சாய்த்து அமர்ந்திருந்தார். தலைப்பாகையோ மணிமுடியோ இல்லாமல் நீள் குழல் சரிந்து தோள்களில் கிடந்தது. அவரைப்பார்த்த அக்கணமே நினைவு பீமனை சென்று தொட்டது. அவர்கள் இருவரையும் சேர்த்தே எண்ணிக்கொள்ளமுடிகிறது, இக்கணம் வரை. உண்மையில் அவர்களுக்குள் பொதுவாக ஏதுமில்லை. நிறம் தோற்றம் எதுவும். ஆனால் இருவரும் ஆடிப்பாவைகள் போலிருந்தனர். எப்படி என்று எண்ணி என்ணி என் சித்தம் சலிக்கிறது. அப்படியென்றால் அங்கிருந்த நூற்றுவரில் ஒருவர்தான் பீமன். அவர் பாண்டவராகப் பிறந்த கௌரவர்.

தமையன் அருகே இருந்த துச்சாதனன் என்னிடம் “உமது செய்தியை கனகர் சொன்னார். மீண்டும் அச்செய்தியை சொல்மாறாது உரைக்கலாம்” என்றார். நான் சூரசேனரின் சொற்களையும் பலராமரின் சொற்களையும் அவ்வண்ணமே மீண்டும் சொன்னேன். துரியோதனர் தலையசைத்து “நன்று” என்றார். பின்னர் கனகரிடம் “பலராமரின் ஆணை. அது என்னையும் இந்நாட்டின் ஒவ்வொரு குடியையும் கட்டுப்படுத்துவது” என்றார். துச்சாதனர் “நீர் அஸ்தினபுரிக்கு வருவதற்கு முன் இந்திரப்பிரஸ்தத்துக்கு சென்றீர் என்றார் கனகர்” என்றார். “ஆம்” என்றேன். “ஏன்?” என்று அவர் கேட்டார்.

“நான் மதுவனத்தை விட்டு வெளியே வந்து பழக்கமற்றவன். இந்திரப்பிரஸ்தம் நான் வரும் வழியிலேயே இருந்தது. அங்கு சென்றுவிட்டு இங்கு வருவதே எளிய வழி என்று தோன்றியது” என்றேன். துச்சாதனர் என் விழிகளையே கூர்ந்து நோக்கினார். நான் அவர் விழிகளில் இருந்து நோக்கை விலக்கவில்லை. “பீமனிடம் என்ன சொன்னீர்?” என்றார் துச்சாதனர். “இம்மணத்தன்னேற்பில் அவர் கலந்து கொள்ளக்கூடாது என்று பலராமரின் ஆணை என்றேன்” என்றேன். துச்சாதனர் “மூத்தவர் அதற்கு என்ன சொன்னார்?” என்றார். “பலராமர் ஆணை அவரையும் கட்டுப்படுத்தும் என்றார். இளைய பாண்டவர் அங்கு இல்லை என்பதால் அவர் எண்ணத்தை அறியக்கூடவில்லை. பிற நால்வரும் பலராமர் ஆணைக்கு கட்டுப்படுவதாக சொன்னார்கள்” என்றேன்.

துச்சாதனன் “நீர் பாஞ்சால அரசியை சந்திக்கவில்லையா?” என்றார். அப்போதுதான் அதை முழுதுணர்ந்து “இல்லை”  என்றேன். துரியோதனர் “இளையோனே, மணத்தன்னேற்புச் செய்தியை பெண்களிடம் சொல்லும் வழக்கமில்லை” என்றார். “அறிவேன் மூத்தவரே. ஆனால் இந்திரப்பிரஸ்தத்தை ஆள்வது பாஞ்சால அரசி. எச்சொல்லும் இறுதியில் அவளாலேயே முடிவெடுக்கப்படுகிறது” என்றார் துச்சாதனர். துரியோதனர் “அதை அவர்கள் சொல்லிக் கொள்ளட்டும்” என்றார். “ஒரு போதும் துவாரகை தன்னிடமிருந்து விலகிச்செல்வதை அவள் ஒப்பப்போவதில்லை. அவள் என்ன எண்ணுகிறாள் என்பதே முதன்மையனாது” என்றார் துச்சாதனர்.

“துவாரகை எங்கே விலகிச் செல்கிறது? மதுராவுடனான நம் உறவு துவாரகையை கட்டுப்படுத்தவேண்டுமென்பதில்லையே” என்றார் துரியோதனர். “அது அரசு சூழ்தலின் நோக்கு மூத்தவரே. ஆனால் இளைய யாதவர் தன் தங்கையை ஒரு தருணத்திலும் தன்னிலிருந்து விலக்கி நோக்க மாட்டார். தாங்கள் சுபத்திரையை மணந்தீரென்றால் இப்பிறவி முழுக்க உங்களிடமிருந்து ஒரு தருணத்திலும் துவாரகையின் தலைவர் அகலப்போவதில்லை” என்றார் துச்சாதனர்.

அவரை நோக்கி சில கணங்கள் மீசையை நீவியபடி அமர்ந்திருந்துவிட்டு என்னை நோக்கியபின் மீண்டும் அவரை நோக்கி “என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை” என்றார் துரியோதனர். “இவ்வளவுதான் சுருக்கம். எந்நிலையிலும் தன் தங்கையையோ இளைய பாண்டவரையோ இளைய யாதவர் விட்டுக் கொடுக்க மாட்டார். எனவே அவர்கள் மாற்றுத் தரப்பில் இருப்பதை விரும்பவும் மாட்டார். அவர்கள் இருவரும் மணம் புரிய வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருக்கும். அவ்வெண்ணத்தை உய்த்தறிந்துதான் அவர்மேல் அழுக்காறு கொண்ட அவரது குடிப்பிறந்தார் இம்மணத்தன்னேற்பை ஒருங்கு செய்திருக்கிறார்கள். அவர்கள் கையின் கருவி என்றே பலராமரை சொல்வேன்.”

“இம்மணத்தன்னேற்பு அவர்கள் எண்ணுவது போல அத்தனை எளிதில் நிகழாது. ஏனெனில் மறுதரப்பில் இருப்பது இளைய யாதவரின் விழைவு” என்றார் துச்சாதனர். துரியோதனர் “ஆனால் அவரும் தன் தமையனை மீற முடியாது” என்றார். கனகர் “அவ்வண்ணமே விதுரரும் எண்ணுகிறார்” என்றபின் என்னை நோக்கி “நீர் செல்லலாம்” என்றார். நான் தலைவணங்கி வெளியே சென்றேன்.

நான் அங்கே நின்றிருக்கையிலேயே அவ்வுரையாடலை அவர்கள் ஏன் நிகழ்த்தினார்களென்று வியந்தேன். அவைக்கூடத்திற்கு வெளியே கனகர் வெளிவருவதற்காக காத்து நின்றேன். அரைநாழிகைக்குப் பின் வெளியே வந்த கனகர் என்னிடம் “நீர் எங்கு திரும்பிச் செல்கிறீர்?” என்றார். “மதுவனத்திற்குத்தான். என் கடமை முடிந்தது” என்றேன். “அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர் கதாயுதம் கொண்டு மதுராவுக்கு வந்து சுபத்திரையை வெல்வார் என்று பலராமரிடம் சொல்லுங்கள்” என்றார். நான் தலைவணங்கினேன்.

அப்போது தெரிந்தது அங்கு நிகழ்ந்த உரையாடல் அனைத்தும் நான் சென்று பலராமரிடம் சொல்வதற்காகவே என. இளைய யாதவர் அம்மணத்தன்னேற்புக்கு எதிராக இருப்பார் என்பதை அங்கு பேசிக்கொண்டார்கள் என்பதை அவ்வண்ணம் பலராமர் அறிய நேருமென்று துச்சாதனர் எண்ணுகிறார். ஒரு கணம் நான் அஞ்சிவிட்டேன். இத்தனை கூரிய மதி விளையாடலில் எளிய யாதவனாகிய நான் என்ன செய்ய முடியும்? மீண்டும் என் கன்றுகளுடன் சென்று காடுகளுக்குள் புதைந்துவிட எண்ணினேன்.

“இளையபாண்டவரே, அப்போது நான் உணர்ந்த தனிமையை பிறகெப்போதும் உணர்ந்ததில்லை. நான் எளியவன், எளியவர்கள் வரலாற்றுப்பெருக்கில் அடித்துச்செல்லப்படவும் அதன் கொந்தளிப்பில் அலைக்கழியவும் விழைகிறார்கள். ஆனால் வரலாற்றில் கால் நிலைக்காத ஆழத்திற்குச் சென்றதுமே அங்கு வந்து சூழும் தன்னந்தனிமையில் பரிதவிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். தெய்வங்களின் உலகில் சென்றுவிட்ட எளிய உயிரின் தனிமை அது” என்றான் கதன்.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்


வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைவெங்கட் சாமிநாதன் : அஞ்சலிகள்
அடுத்த கட்டுரைசிற்றிதழ் என்பது…