அஞ்சலி : சசிப்பெருமாள்

a

இன்றுகாலை பேருந்துக்காக நின்றிருக்கையில் அருகே ஒரு மாந்தோட்டத்திற்குள் லுங்கியை தூக்கிக் கட்டிய ஒரு நடுத்தரவயது மனிதர் கையில் ஹெல்மெட்டுடன் சென்றார். அவர் கையிலிருந்தது ஒரு பக்கெட் என்று நினைத்த நான் கூர்ந்து பார்த்தேன். ஹெல்மெட்டை வைத்து உள்ளிருந்து இரண்டு ஃபுல் ரம் புட்டிகளை எடுத்தார். குந்தி அமர்ந்து அவற்றைத்திறந்து நேரடியாகவே வாயில் விட்டுக்கொண்டார். தண்ணீர்கூட இல்லை. தொட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. நேராக மடக் மடக். ஐந்தே நிமிடம். ஒருமுறை குமட்டியபின் அருகே நின்ற ஏதோ ஒரு இலையைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு வந்து என் அருகே நின்ற ஸ்கூட்டரை எடுத்தார்

மிகப்பழக்கமான காட்சி. ஆனால் தொடர்ந்து தொந்தரவு செய்தது. போனவருடம் அம்பசமுத்திரம் பகுதிகளில் கிராமங்களுக்குச் சென்றபோது வீடுவீடாக ஆண்கள் சும்மா இருப்பதைக் கண்டேன். பெண்கள் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தனர். ‘அந்தாளுக்கு பத்துமணி வெயிலடிச்சா அப்றம் கண்ணு நிக்காது சாமி. தலைசுத்தி விழுந்திரும். அதனால வேலைக்குப்போறதில்ல’ என்றார்கள். குடிப்பழக்கம். குடிக்கப்பணம்? ‘அது எதுனா சம்பாரிக்கும். அப்றம் நம்ம கிட்ட பிச்சுப்பிடுங்கிறதுதான்” கண்பஞ்சடைந்து கன்னம் குழிந்து அமர்ந்திருந்த குடிநோயாளிகளால் ஆனவையாக இருந்தன அனைத்துக்கிராமங்களும். வளமான நிலம் பெரும்பாலும் தரிசாக கிடந்தது. சாலையோரம் என்றால் ’பிளாட்’ போடப்பட்டு காத்திருந்தது

சாராயக்காசில்தான் அரசியலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து இலவசங்களும் டாஸ்மாக்கால்தான். அவற்றிலுள்ள ஊழலே அரசியலின் கொண்டாட்டம்.டாஸ்மாக் தமிழக உழைப்பாளிகளை ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டிருக்கிறது. மிகக்கேவலமான ரசாயனங்கள் இங்கே மது என்றபேரில் அரசால் விற்கப்படுகின்றன. அரசே விற்பனையை அதிகரிக்க தொடர்ந்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆணையிட்டு வற்புறுத்துகிறது. விற்பனைத்தொகை அரசின் சாதனைபோலவே வெளியிடப்படுகிறது. காலையிலேயே குடிக்க டாஸ்மாக் வாயிலில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். இன்னும் பலகோடித் தொழிலாளர்கள் உள்ள இந்த மண்ணில் உழைப்பதற்கு ஆள் கிடைக்கவில்லை. பிகாரிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் கொண்டுவரவேண்டியிருக்கிறது.

இந்த மகத்தான ஒடுக்குமுறையை, சுரண்டலை இங்கே எவரும் பேசுவதில்லை. மது பழந்தமிழர் பண்பாடு என்று ஒரு கூட்டம் ஜல்லியடிக்கிறது. கவிதை என்று நாலைந்து உடைந்த வரிகளை எழுதிவிட்டு குடித்து கூத்தாடுகிறது இன்னொருகூட்டம். புரட்சிவரட்டும் என்று இன்னொரு கூட்டம். தமிழ்த்தேசியம் , திராவிடம் எதற்கானாலும் டாஸ்மாக்தான் கொண்டாட்டப்பிரதேசம். தமிழகத்தின் எந்தப்பொதுவெளியிலும் இன்று பெண்கள் தனியாகச் செல்லமுடியாத நிலையை குடி உருவாக்கியிருக்கிறது. பேருந்துகளில் சுற்றுலாத்தலங்களில் எங்கும் குடியர்கள் அனைத்து நெறிகளையும் மீறி ஆட்டம்போடுகிறார்கள். குடிக்காதவர்கள் அவர்களின் பிணைக்கைதிகளாக வாழவேண்டியிருக்கிறது

குடி என்றும் இங்கே இருந்தது. சமண பௌத்த மதங்களால் அது ஒரு சமூகத்தீமை என ஆழமாக நிறுவப்பட்டிருந்தமையால் அது கட்டுக்குள்ளிருந்தது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான் குடியை ஒரு வணிக அமைப்பாக ஆக்கினார்கள். கள்ளுக்கடை என்ற நிறுவனம் உருவாகி ஒருங்கிணைந்த முறையில் உழைப்பாளிகள் சுரண்டப்படலாலானார்கள். கள்ளுக்கடை ஏலம் என்பது அரசின் முக்கியமான வருமானம் என பிரிட்டிஷார் கண்டுகொண்டனர். பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய அக்காலக் கதைகளில் கள் கிராமங்களில் போடும் ஆட்டத்தின் சித்திரத்தைக் காணலாம். பெரும்பாலும் அடித்தளமக்களையே அது சுரண்டியது

sasi

குடி இந்தியாவின் அடித்தள மக்களின் வாழ்க்கையை, கிராமப்பொருளியலைச் சூறையாடுவதைக் கண்ட காந்தி அதற்கெதிரான போராட்டத்தை சுதந்திரப்போரின் மையமான செயல்திட்டங்களில் ஒன்றாக முன்வைத்தார். இந்தியாவில் சமணர்களின் காலத்திற்குப்பின் குடிக்கு எதிரான ஒரு நாடளாவிய பேரியக்கம் என்பது காந்தியின் கள்ளுக்கடை மறியல் போராட்டம்தான். இந்தியா முழுக்க குடிக்கு எதிரான ஒரு பெரிய விழிப்புணர்வை அது உருவாக்கியது. ஆனால் சுதந்திர இந்தியாவில் உருவாகி வந்த அரசுகள் பிரிட்டிஷாரின் அந்த சுரண்டல்திட்டத்தை தங்களுக்குச் சாதகமானதாகக் கண்டுகொண்டனர். அதிலிருந்த கொள்ளைலாபத்தை குறிவைத்தனர். தமிழகத்தில் குடியை அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்து அனைத்துச் சமூகத்தடைகளையும் அழித்து ஒரு தலைமுறையையே குடிக்குள் செலுத்தியவர் மு.கருணாநிதி. தமிழக வரலாற்றில் அவருக்கு ஏதேனும் இடமுண்டு என்றால் அது இதுதான்.

இன்று குடிக்கு எதிரான குரல் என்பது படித்த யூத்துகளுக்கும் படிக்காத பாமரருக்கும் கேலிக்குரியது.ஆயினும் இன்றும் காந்திய யுகத்தின் குரல்கள் குடிக்கு எதிராக எழுந்தபடியேதான் உள்ளன. மக்களோ ஊடகங்களோ ஆதரிக்காத நிலையில் காந்தியப்பிடிவாதத்தின் வெளிப்பாடாகவே அவ்வெதிர்ப்பு நிகழ்கிறது. நம் சமூகத்தில் சாகாது துடிக்கும் மனசாட்சியின் குரல் அது. எத்தனை நசுக்கப்பட்டாலும் உயிரோடிருக்கும் வல்லமை காந்தியத்திற்கு உண்டு என்பதற்கான ஆதாரம்

சசிப்பெருமாளின் இறப்புச்செய்தி இன்றுமாலை தெரிந்தது.இங்கே அருகே மார்த்தாண்டத்தில் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது சரிந்து விழுந்து இறந்திருக்கிறார். அவர் விரும்பிய மரணம். அவரது வாழ்க்கையின் முழுமை. ஆனால் அவரது குரல் எவர் மனசாட்சியுடனும் பேசவில்லை. அதற்கான காலம் கனியவில்லை. இந்த நாட்டின் அறிவுஜீவிச்சூழலில் ஊடகங்களால் சசிப்பெருமாளின் தியாகம் கவனிக்கப்படாமலே போய்விடத்தான் வாய்ப்பு அதிகம்.

சசிப்பெருமாளை திருப்பூர் அறம் அறக்கட்டளை விழாவில் நேரில் சந்திக்கவும் வணங்கி ஆசிபெறவும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் பேசாத எளிய மனிதர். தன் வாழ்க்கையின் இலக்கென்ன என வகுத்துக்கொண்டவர். செயல்மூலம் காந்தியை அறிந்தவர். காந்தியை அறிய சிறந்த வழி அதுவே. அதன் மூலம் காந்தியாகவே ஆகிவிடுதல். காந்தியாகவே நான் கண்ட சசிப்பெருமாளுக்கு என் அஞ்சலி

குடி பற்றி பழைய இணைப்புகள்

குடி

குடிக்கு எதிரான போராட்டம் -சசிப்பெருமாள்

நமக்குள் இருக்கும் பேய்

பயணம் குடி

குடி சினிமா கேரளம்

குடியைக் கட்டுப்படுத்துதல்

கேரளக் குடிநிறுத்தம்

கடற்கரைக்குடி

குடி கடிதம் 1

குடி கடிதம் 2

குடி கடிதம் 3

குடி கடிதம் 4

குடி கடிதம் 5

குடி கடிதம் 6

முந்தைய கட்டுரைகலாம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசசிப்பெருமாள் – கடிதம்