நாராயண குரு எனும் இயக்கம்-2

natarajaguru

தொடர்ச்சி

நடராஜகுரு

 

நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது.

நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து மக்களுக்கும் உரியதாக ஆக்கியது.

நாராயணகுருவின் இயக்கத்தை கேரள எல்லையில் இருந்து விடுவித்து உலகளாவக் கொண்டு சென்றது.

ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் என்ற அளவில் நாராயணகுருவின் இயக்கம் அதன் பங்களிப்பை முடித்துவிட்டு ஆழமான தேக்கத்தை அடைந்து பலவகையான சிக்கல்களை நோக்கி செல்ல ஆரம்பித்த காலகட்டத்தில் நடராஜ குரு செயல்பட்டார். ஏராளமான கல்வி, சமூக நிறுவனங்களைக் கொண்ட பெரும் அமைப்பாக அது ஆனபோது நிர்வாகச் சீர்கேடுகள் உருவாயின. அதற்குள் கேரள சமூகத்தில் பணமும் செல்வாக்கும் மிக்க சமூகமாக கிவிட்ட ஈழவர்கள் நாராயணகுருவின் அமைப்பை அரசியல் இயக்கமாக்கி அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முயன்றனர். ஈழவ சமூகத்தில் பெரும் செல்வந்தர்கள் பலர் உருவாகி வந்தபோது மாற்றுச் சமூகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கும் முதலாளித்துவ அணுகுமுறையும் சிலரிடம் உருவாயிற்று. மூன்றாவதாக குறிப்பிடவேண்டியது, சமூகப்படி நிலைகளில் மிக வேகமாக ஏறிய ஈழவர்களில் ஒருச்சாரார் உயர்சாதி மனநிலைகளை அடைந்து அவற்றை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர் என்பது.

நாராயணகுரு மெல்ல ஈழவ சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட ஒரு சமூகத்தலைவராக பொதுவாக அறியப்படலானார். ஈழவ சமூகமும் அப்படி அவரை அடையாளப்படுத்தி சொந்தம் கொண்டாட ஆர்வம் காட்டியது. நாராயணகுருவின் தத்துவ தரிசனங்கள் பொதுவாக மறக்கப்பட்டன. அவை நுட்பமான மொழியில் தத்துவ நூல்களாக அமைந்திருந்தன. ஆகவே அனைத்து மக்களுக்கும் சென்று சேரவில்லை.

இந்திய தத்துவ விவாதத்தளத்தில் அவற்றை முன்வைத்து பேச எஸ்.என்.டி.பி ஆர்வம் காட்டவும் இல்லை. இந்நிலையில்தான் நடராஜ குரு நாராயணகுருவின் தத்துவார்த்த தளத்தை ஆராயவும் இந்திய அளவிலும் உலக அளவிலும் எடுத்துச் செல்லவும் நாராயணகுருகுலம் என்ற அமைப்பை உருவாக்கி தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார். அவரது உழைப்பின் விளைவாகவே நாராயணகுரு சிந்தனைத் தளத்தில் நாம் இன்று காணும் முக்கியத்துவத்தை அடைந்தார்.

 எஸ்.என்.டி.பி அமைப்பின் ஸ்தாபகரான டாக்டர் பல்புவின் சிறிய மகன் டாக்டர் நடராஜன். பிற்காலத்தில் அவர் நடராஜ குரு என அறியப்படலானார். 1895ல் பிறந்தார். அவரை தன் பணிக்கு அளிக்கும்படி நாராயண குருவே கோரியதாக கூறப்படுகிறது. செல்வந்த குடும்பத்தில் பிறந்த நடராஜ குரு நிலவியலில் பட்ட மேற்படிப்பினை முடித்தவர். மேற்கத்திய தத்துவம் கற்க ஃப்ரான்ஸ் போகும்படி அவரை நாராயணகுரு கேட்டுக் கொண்டார். சார்போன் பல்கலையில் உலகப்புகழ் பெற்ற தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக அவர் முனைவர்பட்ட ஆய்வை மேற்கொண்டார். கல்வியியல் குறித்த அவரது ஆய்வு யுனெஸ்கோ அமைப்பினால் உலக கல்வி முன்வரைவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1930-ல் ஜெனிவா தேசிய கல்லூரியில் உயர்பெளதிக ஆசிரியராக ஐந்து வருடம் பணியாற்றினார்.  [International Fellowship School in Geneva, Switzerland] ஊர் திரும்பிய குரு நாராயணகுருவின் சீடராக இருந்து கீழைத் தத்துவத்தை கற்றார். நாராயணகுருவின் தத்துவ நூல்கள் பலவும் நடராஜ குருவுக்கு கற்பிக்கும் பொருட்டு கூறப்பட்டு நடராஜ குருவால் எழுதியெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. மூன்று வருடம் சென்னையில் அத்வைத ஆசிரமம் எனும் அமைப்பின் கீழ் தலித்துக்கள் மத்தியில் பணியாற்றினார். பின்பு பிச்சையேற்கும் வாழ்க்கை மேற்கொண்டு பாரதம் முழுக்க ஆறுவருடம் அலைந்து திரிந்தார். நாராயணகுரு ஸ்தாபித்த வற்கலை உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.  எஸ்.என்.டி.பி அமைப்பு ஒரு ஈழவ சாதி அமைப்பாக மாறுவதையும் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதையும் எதிர்த்து கடுமையாக குரல்கொடுத்து அவ்வமைப்பை விட்டு முழுமையாக வெளியேறினார்.

அதன் பிறகு பல வருடங்கள் பாரதம் முழுக்க அலைந்து திரிந்தார். அமைப்புகளில் நம்பிக்கை இருக்கவில்லை. தனியாக வாழ்வதற்காக 1923ல்  ஊட்டி ஃபெர்ன் ஹில் பகுதியில் ஒரு தேயிலை தொழிற்சாலை இருந்த பகுதியை தானமாக பெற்று அதில் தன் கையாலேயே மண்ணாலும் தகரத்தாலும் கட்டப்பட்ட குடிசையில் நாராயணகுருகுலத்தைத் துவங்கினார். நாராயணகுருவின் மரணம் வரை அங்கு தன்னந்தனிமையிலேயே படித்தும் தியானம் செய்தும் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த பகுதி பிறருக்கு தெரிந்திருக்கவில்லை.

1928ல் நாராயணகுரு சமாதியான போது அவரது பிரதானசீடர் குமாரனாசான் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார், சகோதரன் அய்யப்பன், டி.கெ.மாதவன் போன்ற பலர் எஸ்.என்.டி.பி அமைப்பை விட்டு விலகிவிட்டிருந்தார்கள். அவ்வமைப்பு அன்று ஈழவ சாதியினரான ஓடு, கயிறு தொழில் முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு சாதி அமைப்பாக மாற்றப்பட்டது. புலையர்கள் வெளியேற்றப்பட்டனர். சபா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டது. ஆகவே நாராயணகுருவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு தேவை என உணர்ந்த நடராஜ குரு தீவிரமற்ற நடைமுறை விதிகளுடன் கூடிய நாராயணகுருகுலம் எனும் அமைப்பை நிறுவினார். அதன் தலைமையகமும் வற்கலாவில்தான் அமைந்திருந்தது. சார்போனில் நடராஜ குருவின் சக மாணவரான ஜான் ஸ்பியர்ஸ் அவரது முக்கிய மாணவரானதும் நடவடிக்கைகள் விரிவடைந்தன. நடராஜ குரு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்தார். நடராஜ குருவே நாராயணகுருவின் செய்தியை உலகம் முழுக்கக் கொண்டு சென்றவர்.

நடராஜ குரு ஆங்கிலத்திலும் குறைவாக ஃபிரெஞ்சிலும் மட்டும்தான் எழுதினார். அவருக்கு மலையாளம் ஆழமாகத் தெரிந்திருக்கவில்லை. The world of Guru, One Hundred Verses of the Self Instruction, Autobiography of an absolutist, Wisdom, Man Woman Dialectics முதலிய இருபது நூல்கள் அவரால் எழுதப்பட்டுள்ளன. நாராயணகுரு முன்வைத்த தூய வேதாந்தத்தை மேற்கத்திய தத்துவ மொழியில் விளக்கியவர் நடராஜகுரு. நடராஜ குருவின் பங்களிப்பை இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று நாராயணகுருவின் சிந்தனைகளை நவீன மேலைத்தத்துவ தர்க்கமுறைகளைப் பயன்படுத்தி விளக்கியதும் நாராயணகுருவின் நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும். இரண்டு நாராயணகுரு முன்வைத்த அத்வைத நோக்கை தூய முதல்முழுமைவாதமாக [Absolutism] வளர்த்தெடுத்தமை. இதற்காக நடராஜ குரு ஐரோப்பா முழுக்க பலமுறை பயணம் செய்தார். பற்பல நாடுகளில் நாராயண குருகுலத்தின் கிளைகளை அமைத்தார். அவரது மாணவர்களில் பிற்பாடு இந்திய சமூக ஆன்மீக வாழ்வில் மிக முக்கியமானவர்களாக கருதப்பட்ட பலர் உள்ளனர். 1973-ல் மரணமடைந்தார். அவரது சமாதி வற்கலாவில் உள்ளது.

நடராஜ குருவின் பங்களிப்பை விரிவான இந்திய தத்துவ விவாதப்புலத்தில் வைத்தே புரிந்துகொள்ளவேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து மெய்ஞான மரபானது பற்பல அறிஞர்களால் மீட்டெடுக்கப்பட்டதன் மூலம் இந்து மறுமலர்ச்சி ஒன்று உருவானது என நாம் அறிவோம். ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், ராமகிருஷ்ண மடம், பிரம்மஞான சபை, அரவிந்த ஆசிரமம் போன்றவை இதன் விளைவாக உருவான அமைப்புகள். இவை எல்லாமே மதசீர்திருத்த, சமூக சீர்திருத்த நோக்கம் கொண்ட அமைப்புகள். இவற்றின் விளைவாகவே மெல்ல இந்திய தேசிய மறுமலர்ச்சி உருவாயிற்று.

இந்தியா முழுக்கப் பரவிக்கிடந்த விரிவான, உள்சிக்கல்கள் மிகுந்த ஞானமரபில் இருந்து முக்கியமான சில மையக் கூறுகளை அடையாளம் கண்டு மீட்டு, அவற்றை அடிப்படை ஓட்டமாக வைத்துக்கொண்டு, பிறவற்றை அம்மையத்தில் தொடுத்து இந்துமதத்தை மேலை மதங்களைப் போன்ற ஓரு நவீன அமைப்பாக ஆக்கிவிடுவதற்கான யத்தனம் இவற்றில் பொதுவாக காணப்படுகிறது. இதற்கான அடிப்படைக் காரணம் அன்றைய இந்திய சமூகத்தில் இருந்த ஒற்றுமையின்மையே. பொதுவான பண்பாட்டு அமைப்புகளின் அடிப்படையில் வலிமையான ஒரு சமூகமாக இந்தியாவை முன்வைக்கும் நோக்கம் இவற்றுக்கு இருந்தது.

ஆகவே இவ்வியக்கங்கள் பொதுவாக இந்து ஞான மரபின் இரு மையங்களை முக்கியப்படுத்தின. ஆரியசமாஜம், அரவிந்த சிரமம் போன்றவை வேதஞானத்தை அடிப்படையாகக் கொண்டன. பிரம்மசமாஜம், ராமகிருஷ்ண மடம் போன்றவை வேதாந்த மரபை அடிப்படையாகக் கொண்டன. இம்மையங்களில் வந்து இணையக்கூடியவையாக பிற இந்து ஞானக்கூறுகளை அவை உருவகம் செய்தன. சிறந்த உதாரணம் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது இந்து தத்துவ ஞானம் [7] என்ற உலகப்புகழ்பெற்ற நூல் இந்து ஞானமரபை ஆன்மீக மையம் கொண்டதாக உருவகித்து பிற தரிசனங்களையெல்லாம் அதில் கொண்டு சென்று சேர்க்கிறது. டாக்டர் ராதாகிருஷ்ணனில் மையம்கொண்ட இப்போக்கே இந்திய சிந்தனை அரங்கில் பொதுவாக இன்றுவரை மேலோங்கியுள்ளது. ‘நம் சிந்தனைமரபு ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது’ என்ற வரியை ஏறத்தாழ எல்லா ஆசிரியர்களிடமும் சாதாரணமாகக் காண முடியும்.

இத்தகைய ஒற்றைப்படை நோக்கை நடராஜ குரு ஏற்கவில்லை. சிந்தனையின் பலதள முரணியக்கம் குறித்து அவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது. பல்வேறு சிந்தனைப்போக்குகள் மோதி முயங்கி முன்செல்லும் ஒரு பேரொழுக்காக இந்திய ஞான மரபை அவர் உருவகித்தார். இக்காரணத்தால் அவர் சமகாலத்தைய இந்துஞானமரபுச் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்களிடம் மோத நேர்ந்தது. நடராஜ குரு இந்திய சிந்தனைமரபை தத்துவ விவாதப் பரப்பாகக் காண முயல்கிறார். மீபொருண்மை [Metaphysics] மரபை அத்தத்துவத்தின் ஒரு வெளிப்பாடாகக் கொள்கிறார். இந்துஞான மரபை ஆன்மீகமான உண்மைகள் அடங்கிய பாரம்பரியச் செல்வமாக காணும் நோக்கையும் மத மீட்பு நோக்கையும் அவர் நிராகரிக்கிறார்.

நடராஜ குருவின் மாணவரான நித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் வரும் ஒரு நிகழ்ச்சி உதாரணமாகச் சுட்டத்தக்கது. இதை எனக்களித்த பேட்டியிலும் நித்யா சொல்கிறார். [8 ] கொல்லம் கல்லூரியில் தத்துவ ஆசிரியராக இருந்த நித்ய சைதன்ய யதி அக்கல்லூரிக்கு வருகை தந்த நடராஜகுருவுடன் காரில் ஏறும்போது அக்குளில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பகவத்கீதி உரைநூலை வைத்திருக்கிறார். அதை வாங்கி தலைப்பைப் பார்த்த நடராஜகுரு நூலை காரிலிருந்து தூக்கி வீசிவிட்டார். காரை நிறுத்தச்சொன்ன நித்யா இறங்கி ஓடி நூலை எடுத்துக் கொண்டு நடராஜ குருவிடம் சண்டை போடுகிறார். நடராஜ குரு அதன் முதல்வரியைப் படிக்கச் சொல்கிறார். அதில் பகவத் கீதை இந்துக்களின் முக்கியமான மதநூல் என்று சொல்லப்பட்டுள்ளது. ‘ ‘முத்தத்துவம் [பிரஸ்தானத்ரயம் என்றால் என்னென்ன?’ என்று நடராஜகுரு கேட்க ‘உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம்’ என்று நித்யா பதில் சொல்கிறார்.

”நீயே சொன்னாய் இவை தத்துவ நூல்கள் என. பல ஆயிரம் வருடங்களாக அவை தத்துவ நூல்களாகவே பயிலப்பட்டன. எப்போது யார் அவற்றை மதநூல்களாக ஆக்கினார்கள்? எந்த தைரியத்தில் இவர் இப்படி எழுதுகிறார்? தத்துவநூல் ஏற்றும் மறுத்தும் விளக்கியும் விவாதிக்கப்படவேண்டியது. ஆராயப்படவேண்டியது. மதநூல் நம்பிக்கையின் அடிப்படையில் நிலைநிற்பது, ஆராய்ச்சிக்கு உரியதல்ல. வேதங்கள் மதநூல்கள். பகவத் கீதையை மதநூலாக்குவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட விஷயம் கட்டியெழுப்பபடுகிறது. அது ஆபத்தனாது” என்கிறார் நடராஜ குரு. ”எனக்கு நூல்களை மதிக்கத் தெரியாமல் இல்லை. ஆனால் உள்நோக்கம் கொண்ட நூல்கள் மிக ஆபத்தானவை ‘ ‘ என்கிறார். குருவின் இக்கூற்றில் உள்ள கட்டளையை ஏற்று தான் தன் அறிவியக்கத்தை அமைத்துக் கொண்டதாக நித்யா எழுதுகிறார்.

நடராஜகுரு பகவத்கீதைக்கு எழுதிய உரை மிக முக்கியமான தத்துவநூலாக முக்கிய ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பகவத்கீதையை தத்துவக் கோணத்தில் விளக்கி எழுதப்பட்ட பெரும்பாலும் எல்லா நூல்களிலும் இந்நூலின் பாதிப்பு வெளிப்படையாக தெரிகிறது என்று நித்ய சைதன்ய யதி எழுதியிருக்கிறார். தத்துவ தளத்தில் நடராஜகுரு செய்தது என்ன என்ற வினாவுக்கு மூன்று தளங்களிலாக பதில் சொல்லலாம்.

1.      இந்திய ஞானமரபை ஒற்றைப்படையாகவும் மதம் சார்ந்தும் விளக்க முயன்ற முயற்சிகளை எதிர்த்து நாராயணகுருவால் முன்வைக்கப்பட்ட உரையாடல் தன்மை கொண்ட தத்துவார்த்த அணுகுமுறையை வலியுறுத்தினார்.

2.      நாராயணகுருவால் முன்வைக்கப்பட்ட செயலூக்கம் கொண்ட புதிய அத்வைத நோக்கை மேலைநாட்டு கருத்து முதல்வாத நோக்குகளுடன் இணைத்து விரிவாக விளக்கினார்.

3.      ஹெகல், காண்ட், குரோச்சே, ஹென்றிபெர்க்சன் ஆகிய மேல்நாட்டு சிந்தனையாளர்களின் கருத்துக்களுடன் நாராயண குருவின் சிந்தனைகளை இணைத்து உரையாடியதன் வழியாக தனக்குரிய முதல்முழுமைவாத தத்துவ நோக்கு ஒன்றை உருவாக்கினார். இதன் மூலம் வலுவான ஒரு கீழைமேலைச் சிந்தனைச் சந்திப்பை உருவாக்கினார். அனேகமாக இந்திய சிந்தனையில் அரவிந்தருக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட முக்கியமான சிந்தனைப் பாய்ச்சல் இதுவே. .

 

nitya

நித்ய சைதன்ய யதி

 

பந்தளம் பணிக்கர்கள் என புகழ் பெற்ற நிலப்பிரபுக்களின் குடும்பத்தில் 1923ல் பிறந்தவர் நித்யசைதன்ய யதி. கேரளத்தில் உள்ள ஒருசில ஈழவ நிலப்பிரபுக் குடும்பங்களில் ஒன்று அது. அவரது தந்தை பந்தளம் ராகவப்பணிக்கர் அக்காலத்தைய முக்கியமான கவிஞர். தாய்வழி தாத்தா பெரிய பாலிமொழி அறிஞர். பெளத்த மதம் சார்ந்த பல செப்பேடுகள் அவரது குடும்பத்திலிருந்து கிடைத்துள்ளன. முதல் பெயர் ஜெயச்சந்திரன். பள்ளி படிப்பை முடித்துவிட்டு நாடோடியாக அலைந்தார். பிறகு மீண்டுவந்து கொல்லம் கல்லூரியில் தத்துவம் எம்.ஏ. படித்து அங்கேயே ஆசிரியராக வேலைபார்த்தார். அப்போதுதான் நடராஜகுருவின் தொடர்பு ஏற்பட்டது.

துறவு பூண்ட குரு பிச்சை எடுத்தபடி பாரதம் முழுக்க அலைந்து திரிந்தார். காந்தியின் சபர்மதி சிரமத்திலும் ரமணரின் ஆசிரமத்திலும் தங்கி அவர்களை நெருங்கி அறிந்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவப்பேராசிரியராக பணியாற்றினார். 1952ல் டாக்டர் ராதாகிருஷ்ணனுடனான ஒரு மோதலுக்கு பிறகு அப்பதவியை துறந்தார். நடராஜ குருவின் நேரடி சீடரானது அக்காலத்தில்தான். குருவும் சீடரும் கடும் வறுமையில் தனிமையில் பல வருடங்களை ஊட்டியில் செலவிட்டார்கள். 1956ல் நடராஜ குரு உலகப்பயணத்துக்கு போனபோது நித்ய சைதன்ய யதி பம்பாய் சென்று விழியிழந்தோர் உளவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவின் ஆணைப்படி மாற்று உளவியல் ஆய்வு மையம் துவக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக தலைவராக இருந்தார்.

1969ல் நித்ய சைதன்ய யதி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாலுமியால் அழைத்து செல்லப்பட்டு திட்டமிடப்படாத ஓர் உலகப் பயணத்தை துவங்கினார். அப்பயணத்தில் அமெரிக்கா வந்து அங்கு போர்ட்லண்ட், சிகாகோ உள்ளிட்ட பல பல்கலைகழகங்களில் கீழைத்தத்துவம் மற்றும் மாற்று உளவியல் துறைகளில் பேராசிரியராக பணியாற்றினார். இங்கிலாந்திலும் ஃப்ரான்ஸிலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். ரஸ்ஸல், கார்ல் பாப்பர், போன்றவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார். 1984ல் பாரதம் திரும்பி ஊட்டி ஃபெர்ன் ஹில் குருகுலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார். 1999-ல் மரணமடைந்தார். அவரது சமாதி ஊட்டியிலேயே உள்ளது.

நித்ய சைதன்ய யதி மலையாளத்தின் மிகப் புகழ்பெற்ற, பரபரப்பாக விற்கப்படும் நூலாசிரியர். கேரளம் உலகை ஈ.எம்.எஸ் மற்றும் யதி கண்கள் வழியாகவே காண்கிறது என்று ஒருமுறை புகழ் பெற்றநூலாசிரியயையான கமலாதாஸ் குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் எண்பதும் மலையாளத்தில் கிட்டத்தட்ட நூற்று இருபது நூல்களை எழுதியுள்ளார். எண்ணற்ற எளிய அறிமுக நூல்களை எழுதி அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்தை கேரளத்தில் வேரூன்றசெய்த பெரும் ஆசிரியர் அவர். அவரது நூல்களில் முக்கியமானவை நாராயணகுருவின் நூல்களுக்கு நவீன அறிவியல் தத்துவ நோக்கில் அவர் எழுதிய உரைகளாகும்.

தமிழில் அவரது விரிவான பேட்டி காலச்சுவடு சிற்றிதழில் வெளிவந்துள்ளது. சொல் புதிது சிற்றிதழ் அவரது கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ‘ஈசோவாஸ்ய உபநிடதம் ‘ என்ற நூல் வெளிவந்துள்ளது. தமிழினி வெளியீடாக மேலும் இருநூல்கள் வரவுள்ளன.

நடராஜகுருவின் பங்களிப்பிலிருந்து சற்று மாறுபட்டது நித்ய சைதன்ய யதியின் பங்களிப்பு. இப்படிச் சொல்லலாம். நாராயணகுருவின் சிந்தனை வெளியுலகம் நோக்கி நடராஜகுரு வழியாகச் சென்றது. அங்கே அது பலவிதங்களில் வளர்ந்த பிறகு நித்ய சைதன்ய யதி வழியாக மீண்டும் கேரளத்துகே திரும்பி வந்தது. நாராயணகுருவும் நடராஜகுருவும் உருவாக்கிய புதிய அத்வைத நோக்கையும் முதல் முழுமைவாத நோக்கையும் நவீன இலக்கியக் கோட்பாடுகளிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் செயல்படுத்திக் காட்டியவர் என்று நித்ய சைதன்ய யதியைச் சொல்லலாம். முதல் இரு ஆசிரியர்களிடம் ஒப்பிட்டால் நித்ய சைதன்ய யதி கலை இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கவிதை, ஓவியம், இசை மூன்றிலும் அவரது ஆர்வமும் பயிற்சியும் விரிவானது. ஆகவே அவரது எழுத்துக்களில் தத்துவ நோக்கைவிட கலைநோக்கு மேலெழுந்து காணப்பட்டது.

இந்தியச்சூழலில் இயல்பாக ஒரு எதிரெதிர் நிலைகள் உருவாகி வலுவாக இருப்பதை நாம் காணலாம். கலை இலக்கிய தளங்களில் இது மேலும் துல்லியமாக வெளிப்படுகிறது. பொதுவாக உள்ள நிலை மேலைச் சிந்தனைகளையும் அழகியல் நோக்குகளையும் அப்படியே ஏற்று அவற்றை பிரதிபலிப்பதே சிறந்த செயல்பாடு என்று நம்புதல். இதற்கு எதிராக உள்ளது அனைத்துமே மரபில் உள்ளன என்றும் மரபை பயின்று செயல்படுத்தலே போதும் என்றும் நம்புதல். இரு எல்லைகள், இருவகைத் தேக்க நிலைகள் இவை. தமிழிலும் இவற்றை நாம் தெளிவாகக் காணலாம். அறுபது எழுபதுகளில் கேரள சிந்தனைத் தளத்தில் இந்த இருமுனைகளும் மிக உச்சம் கொண்டு காணப்பட்டன. மார்க்ஸியமும், பிறகு புது மார்க்ஸியமும் [ஐரோப்பிய மார்க்ஸியம்], அதன் பின் இருத்தலியமும் மீள மீள பேசப்பட்டு எழுதப்பட்டு மிதமிஞ்சிப்போய் சட்டென்று ஒரு சலிப்பு உருவாகி பெருந்தேக்கம் ஏற்பட்டது.

அதைப்போல மறுபக்கம் மரபார்ந்த சிந்தனைத்தளத்தில் குட்டிகிருஷ்ண மாரார் போன்ற பெரும் பண்டிதர்கள் மறைந்து அவர்கள் உருவாக்கிய அலைகளும் ஓய்ந்து தொடர்ந்து ஒரு தேக்கம் உருவாகியது. இத்தேக்கத்தை இந்து தேசிய அரசியல் பயன்படுத்திக் கொண்டு வேரூன்ற ஆரம்பித்தது. மரபார்ந்த ஞானத்தை பயின்று ஆராய்ந்த குட்டிகிருஷ்ண மாராரின் இடத்தில் மரபை வழிபடக்கூடிய, மரபின் படிமங்களை அரசியல் நோக்குடன் தொகுப்பதையே நோக்கமாகக் கொண்ட பி.பரமேஸ்வரன் போன்றவர்கள் உருவானார்கள். இந்துஞானமரபு என்பது இந்துமதவாதமாக மாறியது. வகுப்புவாத வெறுப்பும் குடியேறியது. இத்தனைக்கும் கேரள வரலாற்றில் ஆகப்பெரிய இந்துஞானமரபுப் பேரறிஞர்கள் வெட்டம் மாணி [புராணக் கலைக்களஞ்சியம்] ராவ்பகதூர் செறியான் [இந்து தர்ம சர்வஸ்வம்] போன்ற சிரியன் கிறித்தவர்கள் ஆவர்.

இவ்விரு தேக்கநிலைகளுக்கும் எதிரான அலையாக எழுந்ததே நித்யா உருவாக்கிய அறிவியக்கம் எனலாம். மரபின் மீதான ஆழமான ஞானம் அதை மேலைநாட்டு நவீனச்சிந்தனைகள் மூலம் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யும் திறந்த மனம், அறிவியல் நோக்கு, எந்த தத்துவக் கோட்பாட்டு விவாதத்தையும் கவித்துவம் மூலமே நிகழ்த்தும் மொழிநடை, மூர்க்கமான நம்பிக்கைக்குப் பதிலாக தன்னைத் தானே திருப்பித் திருப்பிப் போட்டு எள்ளி நகையாடிச் செல்லும் ஆன்மீகமான அங்கதம் ஆகியவையே நித்ய சைதன்ய யதியின் சிறப்பியல்புகள். நித்யசைதன்ய யதி நாராயணகுருவின் தரிசனமாலாவுக்கு எழுதிய விரிவான உரை அவரது அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த உதாரணம். மேலை உளவியல் கோட்பாடுகளையும் இந்திய யோக மரபில் உள்ள உளவியல் அறிதல்களையும் இணைத்துக் கொண்டு தர்சனமாலாவை புரிந்துகொள்ள முயலும் நூல் அது.

பகவத்கீதை, பிரகதாரண்யக உபநிடதம், பதஞ்சலி யோக சூத்திரம் போன்றவற்றுக்கு நித்ய சைதன்ய யதி எழுதிய பெரிய ஆழமான உரைகள் மரபை வழிபடும் நோக்கு சற்றும் இல்லாத சமநிலை கொண்ட ஆய்வுகள். அரியபேருண்மைகள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன அவற்றைக் கற்றுத் தேர்வது மட்டுமே நம் கடமை என்ற நோக்கு ஒருபோதும் அவரிடம் இல்லை. அவர் அவற்றை பரிசீலனையே செய்கிறார். அவற்றை ஒருசில அர்த்த தளங்கள் நோக்கி குறுக்கும் போக்குகளை நிராகரிக்கிறார். இந்து மெய்ஞானத்தை உயர்குடிகளுக்குள் நிறுத்திக் கொள்ள செய்யப்பட்ட விரிவான முயற்சியையும், அதை மதக் கோட்பாடுகளாக சுருக்க நிகழும் யத்தனங்களையும் பெரும் அறிவுச்சதியுடன் எதிர்கொண்டு முறியடிக்கும் ஆக்கங்கள் அவை. இந்திய மெய்ஞானம் சார்ந்து நிகழ்ந்துவரும் விவாதங்களை கவனிப்பவர்கள் அவற்றின் பெரும்பாதிப்பை காணலாம்.

நித்ய சைதன்ய யதியின் அணுகுமுறை சமநிலை கொண்ட நடுப்பாதை. கண்மூடித்தனமான மேலைச்சார்பு, மரபு எதிர்ப்பு ஆகியவற்றுக்கு அவர் எந்த அளவுக்கு எதிரானவரோ அதேயளவுக்கு மரபு வழிபாடு, மதவாத அரசியல் ஆகியவற்றுக்கும் எதிரானவர். ஆனால் நாராயணகுருவின் மரபை ஒட்டியவர் என்பதால் ஒருபோதும் எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்லி விவாதங்களில் ஈடுபடும் இயல்பு அவரிடம் இல்லை-விதிவிலக்காக இந்திய அரசியலில் மதவாதம் தலையெடுத்தபோது மட்டும் ஒரு சிறு பிரசுரம் அளவுக்கு எதிராக எழுதியுள்ளார். ஆக்கபூர்வமான படைப்புகளை தொடர்ந்து முன்வைப்பதே அவரது வழிமுறையாகும். நூறு வருடம் முன்பு மனித சமத்துவம் மற்றும் முழுமையான ஆன்மிக விடுதலையின் குரலாக நாராயணகுருவின் தத்துவம் எழுந்தது. பின்பு உலகசிந்தனையை நோக்கி முழுமைவாதத்தை முன்வைப்பதாக அது நடராஜ குருவால் விரிவாக்கம் செய்யப்பட்டது. நித்ய சைதன்ய யதியின் காலத்தில் இந்திய மரபைச் சார்ந்து உலகசிந்தனையை எதிர்கொள்வதற்கான காய்தல் உவத்தல் அற்ற நோக்குநிலையாக அது வளர்ச்சி பெற்றது.

இந்திய சிந்தனையில் இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று தலைமுறை வளர்ச்சி பெற்ற சிந்தனைப்பள்ளி இதுவே. பலகோணங்களில் பல தளங்களில் செயல்படும் முக்கியமான பலர் இவ்வியக்கத்தின் மூலம் உருவாகி வந்துள்லனர். சமீபகாலமாக இயற்கைமருத்துவம் மூலிகை வேளாண்மை சார்ந்து நித்ய சைதன்ய யதியின் மாணவர்கள் பலர் முக்கியமான ஆய்வுகளைச் செய்துள்ளனர். நடராஜகுருவின் மாணவர்களான முனிநாராயணபிரசாத், சுவாமி வினய சைதன்யா இருவரும் இன்று இந்திய அளவில் கவனிக்கப்படுபவர்கள்.

சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] மாற்று மருத்துவத்தளத்தில் செயல்பட்டு வருகிறார். இவ்வியக்கத்தின் அறிவார்ந்த வல்லமை நூற்றாண்டுக்குப் பிறகும் வளர்ந்துதான் வருகிறது.

நாராயணகுருவின் தத்துவம்

=======================

தமிழ்ச் சூழலில் நாராயணகுருவின் செய்தியை புரிந்துகொள்ள சிரமங்கள் உள்ளன. இங்கே ஓர் எதிர்மறையான சிந்தனைப்போக்கு மிக வலுவாக வேரூன்றியுள்ளது. மரபையே நிராகரிக்கும் போக்காக அது மாறியுள்ளது. மேலும் மிக எளிமைப்படுத்தபட்ட ஒரு இரட்டை எதிர்மை [binary opposition] கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. ஆரிய X திராவிட வாதம், உயர் சாதி X கீழ்சாதி வாதம், ஆதிக்கப்போக்கு X அடிமைப்படுத்தப்பட்ட போக்கு என்றெல்லாம் அப்பிரிவினை தொடர்ந்து செய்யப்படுகிறது. அந்த இரட்டை எதிர்மைத்தன்மை தமிழ்ப் பண்பாட்டாய்வில் வெள்ளையர்களால் [உதாரணமாக கால்டுவெல்] அக்கால மேற்கத்திய சிந்தனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அது அன்றைய மேற்கத்திய சிந்தனையின் சாரமாக காணப்பட்டமையால் அவ்வாறு உருவாக்கப்பட்டமை இயல்பானதேயாகும். அப்போக்கு மார்க்ஸியத்துடனும் ஒத்துப்போனதனால் அது வலுவாக நம் சிந்தனையில் வேரூன்றி அதுவே ஒரே சிந்தனைமுறை என கருதப்படுகிறது. நாராயணகுருவை புரிந்துகொள்ள மிகுந்த தடையாக அமைவது அதுவே. உண்மையில் நாராயண குருவின் பிரதான சீடர்கள் சிலர் கூட அவ்வடிப்படையில் நாராயணகுருவை மறுத்தனர். முக்கியமாக சகோதரன் அய்யப்பன்.

நாராயணகுருவின் சிந்தனைகளில் முற்றாக இல்லாதது இரட்டைஎதிர்மைப் பார்வை என்பதைக் காணலாம். அவர் எதிர்நிலை, எதிர்ப்புச் செயல்பாடு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவர். அமைதியான ஆக்கச் செயல்பாடுகளை மட்டுமே நம்பியவர். அவரது நெருங்கிய நண்பரும் ஆன்மீகத் துணைவருமான சட்டம்பி ஸ்வாமிகளுடன் ஒப்பிட்டு இதைப் பார்க்கலாம். சட்டம்பி ஸ்வாமிகள் நாயர் சாதியைச் சேர்ந்தவர். ஆனால் அவரது அணுகுமுறை சாதிமுறை, மதமூடநம்பிக்கைகள், பிராமணத்திரிபுகள் மற்றும் மோசடித்தனமான மதமாற்ற முயற்சிகள் ஆகியவற்றை கடுமையாகத் தாக்கிப் புடைப்பதாக இருந்தது. கேரளச்சூழலில் பிராமணர்Xபிராமணரல்லாதார் என்ற இரட்டை எதிர்மையை உருவாக்கியவர் அவரே. ஆனால் நாராயணகுரு அந்த தீவிரப் போக்குகள் எதையுமே கைக்கொள்ளவில்லை. அவரது அணுகுமுறை முற்றிலும் நேர்நிலை கொண்டதாக, முழுக்க முழுக்க சாத்விகமானதாக இருந்தது. சத்யாக்ரகம் போன்ற அகிம்சைப் போராட்டங்களைக்கூட நாராயணகுரு ஏற்கவில்லை. காரணம் அவை எதிர்நிலை எடுக்கின்றன, எதிர்தரப்புடன் மோதி அதை தார்மீகக் கட்டாயத்துக்கு உள்ளாக்குகின்றன என்று அவர் எண்ணினார்.

நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதே ஒரே செயல்பாடாக இருக்க முடியும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. ஓர் அமைப்பை அல்லது கோட்பாட்டை எதிர்ப்பது என்பது அதற்கு மாற்றாக நம்மை நாம் உருவாக்கிக் கொள்வதன் மூலமே நிகழமுடியும் என்று குரு எண்ணினார். நாம் எதிர்க்கும் அமைப்பில் அல்லது கோட்பாட்டில் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தையும் நாம் உள்வாங்கிக் கொண்டு அதைத் தாண்டிச்செல்வதன் வழியாகவே அவ்வளர்ச்சி சாத்தியமாகும். இதுவே நாராயணகுருவின் வழிமுறை. ஆகவே நாராயணகுரு முன்வைத்ததை ‘ உள்வாங்கல் கோட்பாடு ‘ அல்லது ‘ஒருங்கிணைப்புக் கோட்பாடு ‘ என்று சொல்லலாம். அதை அவர் அரசியல் சமூகச்செயல்பாடுகளுக்காக நடைமுறை விவேகமாக மாற்றி முன்வைத்தார். கூடவே உயர்தத்துவ விவாதத்துக்கான முன்வரைவாகவும் சுட்டிக் காட்டினார். இவ்விரு தளங்களிலும் நாராயணகுருவை நாம் அறியவேண்டியுள்ளது.

நம்மிடையேயுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துஞான அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளினாலேயே நிராகரிக்கப்பட்டவர்கள், வரலாறு துவங்கும் காலம் முதலே அவர்கள் முழுமையாக ஒடுக்கப்பட்டிருந்தார்கள் என்ற சித்திரத்தை கிறித்தவப் போதகர்களும் வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து உருவாக்கி வந்தார்கள். அவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட எந்த மக்களும் எவ்வகையிலும் சாதிக் கொடுமையில் இருந்து விடுபடவில்லை என்ற அப்பட்டமான உண்மை கண்முன் உள்ளபோதிலும் கூட அவர்கள் இதை இன்றும் உருவாக்கி வருகிறார்கள். அவர்களுக்கு சாதி அல்ல இலக்கு, இந்து மத அமைப்பு தான். பாரத மரபு முழுமையாகவே அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதுதான் என்று காட்டுவதில் அவர்களுக்கு உள்நோக்கம் இருந்தது. அதை ஏற்றுக்கொண்டவர் அல்ல நாராயணகுரு.

புலையர், ஈழவர் போன்ற சாதியினரை குரு ‘தோற்கடிக்கப்பட்ட’ மக்களாகவே கண்டார். பழைய காலத்தில் அவர்களுக்கு சிறப்பான கடந்தகாலம் ஒன்றிருந்தமைக்கான தடையங்கள் அப்போதும் எஞ்சியிருந்தன. நித்ய சைதன்ய யதியின் குடும்பம் மற்றும் மூர்க்கோத்து குடும்பம் முதலிய வரலாற்றுக்கு தப்பி பிழைத்த ஈழவ பிரபு குலங்கள் அதற்கு சான்றுகள். அக்குடும்பங்களில் பெளத்த மதம், பாலி மொழி முதலியவற்றை சார்ந்த புராதனமான செப்பேடுகள் மற்றும் குல அடையாளங்கள் இருந்தன. கேரள சாதியமைப்பில் பெளத்த மதம் வீழ்ந்த பிறகு ஒரு மறு அடுக்கு உருவானதாகவும் அதில் இன்றைய ஈழவ புலைய சாதியினர் பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் ஆய்வாளர் இன்று விரிவான ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவியுள்ளார்கள்.

தமிழக தலித் சிந்தனையாளராகிய அயோத்தி தாச பண்டிதரும் நாராயண குருவின் கருத்தையே அப்படியே பிரதிபலிக்கிறார் என்பதைக் காணலாம். பெளத்த மதம் ஒழிக்கப்பட்டபோதுதான் பறையர் தாழ்த்தப்பட்ட மக்களாக ஆனார்கள் என்பது அவரது கருத்து. பறையர்களுக்கு உயர்ந்த கல்வி கலாச்சார மரபு ஒன்று இருந்தது. அதன் தடையங்கள் அயோத்தி தாசர் காலத்தில் கூட மிக வலுவாகவே இருந்தன. மார்க்கலிங்க பண்டாரம் போன்ற பல முக்கிய பறையர் குலப் பேரறிஞர்களை அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். அவர்களிடம் பண்டைய தமிழ் பேரிலக்கியங்களின் சுவடிகள் பல பேணப்பட்டிருந்தன. திருக்குறளை எல்லிஸ் துரைக்கு அச்சுக்கு கொடுத்ததே பண்டிதரின் தந்தை கந்தப்பர் தான். தாழ்த்தப்பட்டவர்கள் சூழ்நிலையால் தாழ்த்தப்பட்டவர்களல்ல, எப்போதுமே அப்படி இருந்தவர்கள் தான் என்று இன்று வாதிடுபவர்கள் பெரும்பாலும் கிறித்த போதகர்களின் குரலை சுயநல நோக்குடன் எதிரொலிப்பவர்களாக உள்ளனர். அசலான தலித் சிந்தனையாளர்கள் தங்கள் குலத்தின் பழைய வரலாற்று பின்புலம் குறித்த தெளிவான புரிதல்களும் தாரங்களும் கொண்டவர்களாக உள்ளனர். பிறிதொரு ஆதாரம் சமீபகாலமாக குருசாமி சித்தர் மள்ளர்களைப்பற்றி எழுதும் நூல்கள். விரிவான மேலும் விவாதத்துக்கு உரிய தலைப்பிது.

எக்காரணத்தால் சமூக அமைப்பில் தோற்கடிக்கப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டார்களோ அக்காரணங்களை வென்று தோற்கடித்தவர்களுக்கு மேலாக ஆவதே நாராயணகுரு அளித்த செய்தி. வேதம் உனக்கு மறுக்கப்பட்டால் வேதத்தை பிராமணர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வேத விற்பன்னராக நீ ஆகு என்றார் அவர். நமது மரபுசெல்வங்கள் குறிப்பாக உபநிடதங்கள் எவருடைய தனிச்சொத்துமல்ல என்பது அவருடைய கருத்து. அவை விளக்கங்கள் மூலம் அவ்வாறு கையகப்படுத்தப்பட்டன. அவற்றை அனைவரும் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டியுள்ளது. கறாரான விமரிசனங்கள் கொண்ட விரிவான ஆழமான உரைகள் மூலம் நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் அப்பேரிலக்கியங்களை ‘விடுவிப்பதை’ காணலாம். மத அடையாளத்திலிருந்து முக்கிய நூல்களை அகற்றி அவற்றை தத்துவ, செவ்விலக்கிய ஆக்கங்களாக காண்பது இந்த குரு மரபின் பாணியாகும். இந்துஞானமரபின் அனைத்து சிறப்புக் கூறுகளையும் உள்வாங்கி செரித்துக் கொண்டு அதன் எதிர்மறை அம்சங்களை முற்றாக விலக்கி முன்செல்லும் ஒரு முறையை அவர் வகுத்தளித்தார். இதுவே குரு முன்வைத்த நடைமுறைத்தளமாகும்.

நாராயண குரு தூய அத்வைதி. இவ்வாறு சொல்லும்போது ஏற்படும் சிக்கல்கள் பல உண்டு. முக்கியமாக தமிழ்ச்சூழலில் இவற்றைப் பற்றி மிகக் கவனமாகவே பேசவேண்டியுள்ளது. இங்கே இந்துஞான மரபின் எந்த ஒரு கூறைப் பற்றியும் ஒருவரியாவது பேசுவதுகூட அப்பட்டமான பிற்போக்கு அல்லது மதநோக்கு என்று காட்டும்விதமாக பொதுவான சிந்தனைத்தளம் மோசமாகத் திருகப்பட்டுள்ளது. ஆகவே பெரும்பாலானவர்களுக்கு எதுவும் தெரியாது, தெரியாதவை குறித்த வெறுப்போ மிக அதிகம். அத்வைதம் என்றதுமே சரசரவென முடிவுகளை நோக்கி பாய ஆரம்பித்துவிடுவார்கள். இந்தியச் சூழலில் வேதாந்தம், அத்வைதம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுப்பிறவி எடுத்த அத்வைதம் ஆகியவற்றைத் தெளிவாகப் பிரித்துக் கொள்ளவேண்டியுள்ளது.

ரிக்வேதத்தின் பத்தாம் மண்டிலத்தில் உள்ள பிரம்மதரிசனங்களில் இருந்து தொடங்கி உபநிடதங்களில் வளர்ச்சி பெற்று பாதராயணரால் பிரம்மசூத்திரம் மூலம் தொகுக்கப்பட்டதே வேதாந்தமாகும். இது பிரம்மத்தின் முதல்முழுமைத் தன்மையை முன்வைத்து பிரபஞ்சத்தை பிரம்மத்தின் அலகிலா ஆட்டமாகக் காண்கிறது. பிறகு பெளத்த தரிசனங்களுடன் வேதாந்தம் உரையாடியதன் மூலம் யோகாசார பெளத்ததில் வெற்றுவெளிவாதம் [சூன்யவாதம்] அறிவகவாதம் [விக்ஞானவாத] போன்ற கோட்பாடுகள் உருவாயின. இவற்றை உள்ளிழுத்துக் கொண்டு வேதாந்தம் மறுபிறப்பு கொண்டதே சங்கரரின் அத்வைதமாகும். வேதாந்தத்தில் இல்லாததும் சங்கரரில் இருப்பதுமான முக்கியமான கூறு முழுமையான மாயாவதம் எனலாம். இதைத் தொடர்ந்து உருவான ராமானுஜரின் விசிட்டாத்வைதம், மத்வரின் த்வைதம் போன்றவை பிற்கால வேதாந்தங்கள் எனப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கியபோது இந்துஞானமரபை மறு ஆக்கம் செய்ய எழுந்த ஞானிகள் பலரும் அத்வைதத்தையே முக்கியமான கோட்பாடாகக் கொண்டார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், நாராயணகுரு ஆகியோர் நேரடியாகவே அத்வைதக் கோட்பாடாக தங்கள் ஞானத்தை அறிவித்துக் கொண்டவர்கள். ராஜாராம் மோகன் ராய், அரவிந்தர் ஆகியோரிடம் மேலோங்கியிருப்பது அத்வைதமே. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடிய அய்யா வைகுண்டர், சுபானந்தகுரு, பிரம்மானந்த சிவயோகி, சுவாமி சகஜானந்தா போன்றவர்கள் அத்வைதத்தையே தங்கள் கோட்பாடாகக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. . சங்கரரின் அத்வைதம் பெளத்தத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்பது இதற்கு சமூகவியல் ரீதியான ஒரு காரணத்தை அளிக்கிறது. இவ்வாறு மறுமலர்ச்சி அடைந்த அத்வைதம் சங்கரரின் அத்வைதத்திலிருந்து பலவகையான முக்கியமான மாற்றங்கள் கொண்டது. இந்த அத்வைதங்களை பொதுவாக புதிய அத்வைதம் எனலாம்.

நாராயணகுரு முன்வைப்பது புதிய அத்வைதமாகும். உபநிடதங்களை உள்ளடக்கிக் கொண்ட பெளத்தமாகவே நாராயண குருவின் அத்வைதம் அமைந்தது. அத்வைதத்தை வைதிகச்சடங்குகள் பக்கமாக நகர்த்தி அதன் சாராம்சமான ஒருமைத் தரிசனத்தை அழித்த சங்கர மடங்களுடன் நாமிதை பிணைத்துக் கொள்ளக்கூடாது. ஏற்கனவே காஞ்சி சங்கராச்சாரியாரும் நாராயண குருவும் எடுத்த நிலைபாடுகளில் உள்ள வித்தியாசத்தை கண்டோம். அவ்விருவருமே சங்கரர் பெயரையே சொல்கிறார்கள். நாராயண குரு தன்னை பெளத்தர் என்று சொல்லிக் கொள்ள தயங்கியதுமில்லை. தூய அறிவே நாராயணகுரு முன்வைத்த அத்வைதம். எளிய மக்களுக்கு கடவுள் தேவை என்று கருதிய நாராயணகுரு தன் சீடர்களுக்கு அறிவார்த்தம் ஒன்றையே உபதேசித்தார். நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் கோவில்களுக்குச் சென்றவர்களோ ஏதேனும் இறைவழிபாட்டை எப்போதாவது நடத்தியவர்களும் அல்லர்.

நாராயணகுருவின் அத்வைத நோக்கு குறித்து மிகவிரிவான அளவில் பேசவேண்டியுள்ளது. அதற்கும் சங்கர அத்வைதத்துக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாட்டை மட்டும் குறிப்பிடலாம். சங்கரரின் மாயாவாதத்தை நாராயணகுரு உயர்தளத்து தரிசனமாக மட்டுமே ஏற்கிறார். அதாவது பத்துவகையான மெய்மைத் தரிசனநிலைகளில் ஒன்றாக. நடைமுறையில் உலகியல் வாழ்க்கையை மாயை என்று அவர் நிராகரிக்கவில்லை. பரமார்த்திகம் போலவே அதுவும் முக்கியமே என்று எண்ணினார். மேலான ஆன்மீகம் சிறந்த உலகவாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறதோ அதைப்போலவே பரமார்த்திக வாழ்வுக்கு மேலான உலகியல் வாழ்வு வழியாக அமைகிறது என்று எண்ணியவர் அவர்.

சங்கரரின் கோட்பாடுகளிலிருந்து நாராயணகுரு பெற்றுக் கொண்டது இரண்டு அடிப்படைகளை. காண்பதும் அறிவதும் எல்லாம் ஒன்றே என்ற மகத்தான ஒருமைத்தரிசனம். இதை அவர் சமத்துவதரிசனமாக, பேதமின்மை நோக்காக விரித்துக் கொண்டார். இரண்டு அறிவதெல்லாம் அறிவையே, தூய அறிவொன்றே பிரம்மமும் பிரம்மத்தை நோக்கிய பாதையுமாகும் என்ற மெய்ஞானம். தூய அறிவு என்பது வாழ்க்கையை விலக்கி அடையும் மர்மமான ஒன்றல்ல என்றும் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் ஈடுபட்டு கடந்துசென்று அறிதலே என்றும் அவர் அதை விளக்கிக் கொண்டார். இதுவே நாராயண குருவின் தரிசனமாகும். அவர் கூறிய அத்வைதம் தர்க்கபுத்தியை, பேதமின்மையை, பிரபஞ்சத்துடன் முழுமையான லயத்தை, கருணை நிரம்பிய சமத்துவத்தை வலியுறுத்திய பெரும் தரிசனம் என்று மட்டும் சொல்லலாம்.

நாராயணகுருவின் தத்துவ ஆய்வுமுறையை குறிப்பாகச் சொல்லவேண்டியுள்ளது. தத்துவம் என்பது உலகை ஒரு குறிப்பிட்ட வகையாக விளக்கும் முறைமை. ஆகவே மாற்று விளக்கங்களுடன் அது மோதுவதை நாம் தவிர்க்க இயலாது. தத்துவம் என்பது வேர்ப்பரப்பு, அதிலிருந்தே அரசியல் சமூகவியல் அறவியல் ஒழுக்கவியல் அடிப்படைகள் உருவாகி வருகின்றன. ஆகவே தத்துவ மோதல் மிக்க விசையுடன் பலவிதமான உள்ளோட்டங்களுடன் நடப்பதையும் தவிர்க்க முடியாது. ஆனால் தத்துவ விவாதங்களை நடத்துவதில் நாராயண குரு காட்டிய வழி மாறுபட்டது. தத்துவத்தை முழுமுற்றான உண்மை ஒன்றுக்கான ஒருங்கிணைந்த தேடலாக அவர் காண்கிறார். ஆகவே தத்துவத்தின் மாறுபட்ட தரப்புகளை ஒன்றையொன்று நிரப்பும் தன்மை கொண்டவையாக அணுகுகிறார். ஒவ்வொரு தத்துவமும் அதுவரையான ஒட்டு மொத்த தத்துவ அமைப்பில் உள்ள ஒரு குறையை ஈடுகட்டும் பொருட்டு உருவானது என்ற நோக்கு அவருடையது. இதை அவர் ஒருங்கிணைப்பு நோக்கு [சமன்வயம்] என்ற சொல்லால் சுட்டினார். ஆதலால்தான் வாழ்ந்த காலகட்டத்தில் நாராயணகுரு எந்த தத்துவ மோதல்களிலும் ஈடுபடவில்லை. ஆனால் அதுவரையிலான தத்துவநோக்குகளை கூர்ந்து அவதானித்த பேரறிஞர் அவர். தமிழ் மலையாளம் சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழ்ந்த புலமையுடையவர். அன்று வரையிலான தத்துவ அமைப்பில் அவர் அவதானித்த போதாமைகளை நிரப்பும்பொருட்டு மட்டுமே அவர் தன் நூல்களை எழுதினார்.

இந்த ஒருங்கிணைப்புப் பார்வையை இன்று நாம் சாதாரணமாக தவறாகவோ குறைத்தோ மதிப்பிட்டுவிடுவோம். இன்று மத அரசியல் சார்ந்து எல்லா தரப்புகளையும் ஒற்றை அமைப்பாக மாற்றும் நோக்குடன் செய்யப்படும் சமரசம் போன்றதுதான் அது என்று சிலர் எண்ணக்கூடும். அப்படியல்ல, நாராயண குரு தத்துவ வேறுபாடுகளை மிக மிக முக்கியமாக கருதியவர். ‘அரியும் அரனும் ஒன்று’ என்பதுபோன்ற எளிய சமரசநோக்கு அல்ல அவருடையது. நவீன தத்துவ மொழியில் சொல்லவேண்டுமானால் நாராயணகுரு தத்துவத்தை ஒரு பெரும் உரையாடலாக, நவீனக் கலைச்சொல்லால் சுட்டவேண்டுமென்றால் சொற்களனாகக் [Discourse] கண்டார். உரையாடலின் எல்லா தரப்புமே முக்கியம்தான். உரையாடலின் இயக்கசக்தி அத்தரப்புகளின் மோதல் மூலம் உருவாவது. ஒவ்வொரு தத்துவமும் விரிவான சொற்களனில் எந்த இடத்தை நிரப்புகிறது என்று அவர் பார்த்தார். அது தத்துவ மொழியாடல் முறை எனலாம். [Dialogic Philosophy ]

கேரள அறிவியக்கத்தில் நாராயணகுருவின் பங்களிப்பு மிக விரிவானது. அவரது மாணவர்கள் வரலாறு தத்துவம் போன்ற பல தளங்களில் முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்கள். நாராயண குருவின் முக்கிய மாணவரான நாராயணகுருவின் வழிமுறை எதையும் நிராகரிப்பது அல்ல. அவர் அனைத்தையும் கற்று உள்ளடக்கி தனக்கென ஒரு நோக்கை உருவாக்கிக் கொள்வதை வலியுறுத்தியவர். பொதுவாக நிராகரிப்பது மிக எளிது. வெறுப்பு என்ற ஆயுதம் மட்டுமே அதற்குப் போதும். ஆனால் ஏற்பு மிக கடுமையான உழைப்பைக் கோரிநிற்பது. நாராயண குரு அனைத்தையுமே அறியும்படி அறைகூவினார். அனைத்தையும் சொந்தமாக்கிக் கொள்ள சொன்னார். சுரண்டப்பட்ட மக்களுக்கு சுரண்டுபவர்களின் ஞானம் எதற்கு என்ற வினா அன்றும் சிலரால் எழுப்பபட்டது. ஞானம் மானுடகுலத்துக்கு உரியது என்றும் அதை நிராகரிப்பதன் மூலமல்ல வென்று மேலெடுப்பதன்மூலமே முன்னேற்றம் சாத்தியம் என்றும் நாராயண குரு சொன்னார். ஒரு சமூகத்தின் அறிவார்ந்த வெற்றியே அதன் சமூக அதிகாரம் என்றார். ‘அறிவுக்கு குறுக்குவழிகள் இல்லை ‘ என்ற அவரது உபதேசம் முக்கியமானது.

தன்னை பின்பற்றியவர்களிடம் வேதங்கள் உபநிடதங்கள் இந்திய தத்துவங்கள் சம்ஸ்கிருத மலையாள காவியங்கள் தமிழிலக்கிய மரபு அனைத்துமே அவர்கள் பாரம்பரியம் என்றுதான் நாராயணகுரு சொன்னார். அவற்றை கற்று தெரிவு செய்து மறு ஆக்கம் செய்து முன்னெடுத்துச் செல்லும் சவாலை விடுத்தார். அதை அவர்கள் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர். அவ்வகையில் பார்த்தால் நாராயணகுருவின் இயக்கம் நிரூபிக்கப்பட்ட வழிமுறை ஒன்றை இந்தியாவுக்கு அளிக்கிறது.

====

====

முக்கிய நூல்கள்

1. சாதியமைப்பும் கேரள வரலாறும். பி கெ பாலகிருஷ்ணன். சுருக்கமான தமிழாக்கம் ஜெயமோகன். காலச்சுவடு 13

2. கேரள தலித்போராளி அய்யன்காளி. நிர்மால்யா. தமிழினி சென்னை.

3. தென்குமரியின் கதை. டாக்டர் அ. கா. பெருமாள். தமிழினி சென்னை

4. கேரளம் மலையாளிகளின் மாத்ருபூமி – இ எம் எஸ் நம்பூதிரிப்பாட். [மலையாளம்]

5] ‘நாராயணகுரு தொகைநூல் ‘ -பி. கெ. பாலகிருஷ்ணன் [மலையாளம்]

6] பாரதியார் கட்டுரைகள். தொகைநூல். தேசிய புத்தக நிறுவன வெளியீடு

7] இந்திய தத்துவ ஞானம். டாக்டர் ராதாகிருஷ்ணன். அண்ணமலைப் பல்கலைகழக வெளியீடு

8] மந்திரம் இசை மெளனம். நித்ய சைதன்ய யதியுடன் ஓர் உரையாடல். காலச்சுவடு17

[Presented at Refresher Training Course for Teachers at Tanjore]

Tamil University On 13-3 -04]

 மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Apr 25, 2004

முந்தைய கட்டுரைமையநிலப்பயணம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55