காடு,கடிதம்

அன்பு ஜெயமோகன் ..
நலமா ..? ஒரு எழுத்தையோ இல்லை எழுத்தாளரையோ பாராட்டி நான் இப்படி ஒரு கடிதம் எழுதுவேன் என்று சில மாதங்களுக்கு முன் நான் நினைத்தே இருந்ததில்லை. உங்களின் நாவலான ”காடு” மிக சமீபத்தில் தான் எனக்கு படிக்க கிட்டியது … ஒரு வாசிப்பும் இரு மீள்வாசிப்புமாக மூன்று முறை மனதை காட்டின் செறிவிர்க்குள் அலைய விட்டும் இன்னும் போதம் தெளிந்த பாடில்லை .
உங்கள் எழுத்தின் பேராண்மையை நான் அறிந்தது நான் கடவுள் படத்தின் கூர் வசனங்கள் மூலம் தான் .ஒரு வயோதிக பிச்சைகாரனின் இயலாமையும் வலியும் ஏற்றி உதிர்ந்த ”பார்த்து புளுத்துனான் தேவடியா மவன் ” [ இன்னும் நிறையவும் ] போன்ற வசனங்கள் என்னுள் ஏற்படுத்திய அதிர்வலைகள் வார்த்தைகளில் வரிக்க முடியாதவை . விளிம்பு நிலை மனிதர்களின் வலியை இதைவிட வலியாக/வலிமையாக சொல்லுவது எப்படி என்று யோசித்து தவித்திருக்கிறேன் . நாடகத்தனமான அலங்கார வசங்கள் மூலம் பக்கங்களை நிரப்பி இருந்தால் சிரித்துவிட்டு கடந்து போய் இருக்க கூடும், ஆனால் வலியை பார்வையாளனும் உணர சாத்தியமாக்கியதும் அதன் மூலம் என்னை உங்கள் எழுத்துகளின் பால் ஈர்த்ததும் உங்கள் வசனங்கள் தான் . ம்ம்ம் … கடிதம் திசை மாறுகிறதோ ..? ரைட்…. அபௌட்டர்ன் டூ ”காடு”.
எல்லாவற்றிர்க்குமாக ஒரு பாராட்டு அனுப்பலாம் என்று நினைக்கும் போது எல்லாம் ஒரு தயக்கம் அதன் பெரும் கரங்களால் என்னை பொத்திக்கொண்டு விடுகிறது . ஒரு குப்பி எரி சாராயம் [ ஆம் சாராயம் தான் இங்கு சௌதியில் சீமை சாராயம் கிடைப்பதில்லை ] மூலம் அக்கரங்களை துண்டித்த இரவில் இக்கடிதத்தை எழுத தொடங்கினேன் [ முடிப்பதற்கு என்னவோ ஒரு வாரம் ஆகிவிட்டது ]. கடந்த ஏழு ஆண்டுகளில் இது போல பல்லாயிரம் சருகுகளை உங்கள் காலடியில் காலம் ”காட்டின் ” மூலமாக குவித்து இருக்க கூடும் . பல்லாயிரத்தோடு இன்னொரு சருகாக இக்கடிதமும் உங்கள் காலடியில் கிடக்க கடவ …
”காட்டின்” பக்கம் முழுவதும் விரவி கிடந்த காட்டை குறித்த அவதானிப்புகள், அவசர வாழ்கை என்னும் ட்யுனர் மூலம் முறுக்கபடிருந்த என் வாழ்வியல் நாணை அறுக்க , அறுந்த நாணின் முனைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நான் மீட்டெடுத்தது நெல்லையின் பாபநாசம் மாஞ்சோலை மலைகாடுகளில் உலவிக்கொண்டு இருந்த என் பதின்மத்தின் எச்சங்களை தான் [ பதின்மத்தில் விஸ்வரூபம் காட்டிய வனங்கள் இன்று பெருந்தோட்டமாய் மாற என்ன காரணம்..? வனமா .. மனமா .? ( கிரிக்கும் இது தானே சம்பவித்து இருந்தது ) ] . நீங்கள் சொல்லுவதை போல ” அவள் என்பது பிம்பம் ” மட்டும்மில்லை ஜெமோ, காடும் பிரபஞ்சமும் இன்ன பிற எல்லாமுமே உணர்சிகளாலும் உணர்வுகளாலும் அவற்றால் ஆளப்படும் மொழிகளின் பிம்பமோ என்று தோன்றுகிறது. காடு காடாகவும் பெருந்தோட்டமாகவும் மாறும் அதிசயம் அப்பிம்பத்தின் நேரிசைவாய் இருக்க கூடுமோ ..?
காட்டில் ஈரம் பொசியும் பாறைகளை ஒத்திருந்தது திருப்பும் பக்கமெல்லாம் காமம் பொசியும் ”காட்டின்” பக்கங்கள். பொசியும் காமம் ஒன்று சேர்ந்து ,வழிபிடித்து, பேராறாகி அய்யரை, கிரியை,மாமியை,சிநேகம்மையை ,குட்டபனை உங்களை என்னை மற்றும் இப்பரபஞ்சதை எல்லாம் இழுத்து கொண்டு போவது போலவும் அதன் மௌன சாட்சியாய் ” காடு” நிற்பது போலவும் ஒரு பிரம்மை .அய்யரின் அழகியலும் , சிநேகத்தின் காலத்தின் நீரோடும் வாழ்வியலும், கிரியின் காதலும் தவிப்பும் [ நிஜாமியின் லைலா மஜ்னுன் ( பெங்குவின் பதிப்பகம் ) காதலுக்கு பின் என்னை தவிக்கவிட்ட காதல் இது தான் .. நீலியை ஏன் கொன்றீர்கள் ஜெமோ ..?] , ராபி ஆபேல் காதலும், ரேசாலத்தின் பாசமும் ,குரிசின் பக்தியும் .. ச்ச. படிக்கும் போதெல்லாம் சொல்லவைத்தது ”தாயோளி எப்படி எழுதி இருக்கான்” என்று ..?
ரேசாலதிர்க்கும் தேவாங்கிர்க்கும் இடையிலான பாசம் எதன் மீது கட்டமைக்கப்பட்டது என்று நான் வியந்து கொண்டிருந்த போது அது அவர் மகளின் பிரதிபிம்பம் என்றறிந்த கணத்தில் மனதில் பனி ஊசி சொருகி போயிற்று. கிரிக்கும் நீலிக்கும் , அய்யருக்கும் பெண்கள் / இயற்கைக்கும் இடையிலான காதல் கூட சங்க இலக்கியத்தின் மூலம் ஏற்ப்பட்ட பிம்பங்களின் மேல் கட்டப்பட்டவை தானோ என்று யோசிக்க வைத்த கணம் அது . அன்பென்பது நம்மால் படிக்கப்பட்ட ,படைக்கப்பட்ட ,தூண்டுதலை ஏற்படுத்திய முன்முடிவ்களின் பிரதி பிம்பங்களுக்கு நம் கொடையா..? [ இப்படி தான் ஜெமோ உங்கள் நாவலை படித்த பின் கேள்விகள் ஆற்றின் அடிபாறையில் அப்பி கொண்டு குறுகுறுக்கும் நத்தைகளை போல மனதில் அப்பி கொண்டு குறுகுறுகின்றன]
அனந்த லட்சுமியும் குட்டபனும் இன்னும் எல்லா கதாபாத்திரங்களும் என்னை , என் சுற்றங்களை ”காடெ”ன்ற கண்ணாடி மூலம் பச்சைய வாசத்துடன் அம்மணமாக்கி போகின்றது உங்கள் எழுத்து . பின்னே .. சொல்வதற்கு மறந்து போய் விட்டது, அது பகடி . எப்படி முடிகிறது ஜெமோ ..? எல்லா தருணங்களையும் பகடி என்னும் சருகையால் அலங்கரிக்க ..? அற்புதம் .. [ ”அயனி மரம் நிக்கிதுவே” / பருவவயதில் கஞ்சா அடித்து சிரித்து, சிரித்து கொண்டே இருந்த நியாபகம் ] .
ம்ம்ம்ம் … பாராட்ட வேண்டி தொடங்கிய கடிதம் அதை விடுத்தது சுயபுராணத்தின் மொத்த தொகுப்பாய் மாறிவிட்டதோ ? ன்றாலும் பரவாஇல்லை. என்னை என்னுள் திரும்பி பார்க்கவும் , என்னை திருப்பி பார்க்கவும் வாய்த்த நாவலும் எழுத்து நடையும் உங்களுடையது என்பதில் எழுத்தாளராய் உங்களுக்கு கெளரவம் /பாராட்டு தானே ..? எப்படியாகிலும் என் கண்கள் வழி ”காட்டை” பார்க்கும் பொழுது , நான் , என் பார்வைகள் ,என் மீதான தாக்கங்கள் , தாக்கங்களின் விளைவான தர்க்கங்கள் இவையே பிரதான பட்டு போய் விடுகின்றன . நான் என்பது பிரதானபடுவதன் நேரிடை விளைவு சு.பு என்பதால் அதுவும் தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது , அல்லது காட்டில் ஏறத்தாழ தொண்ணூறு நாட்கள் மிரண்டு ,சாந்தபட்டு ,ஓடி,இளைப்பாறி, சிரித்து விசனப்பட்டு இருந்ததில் நான் மெல்லமாய் அழிக்கப்பட்டு அதன் பகரமாய் உங்கள் எழுத்தின் வீரியமும் நளினமும் என் மேல் [உள்.?] வண்ணமாய் பூசப்பட்டுளதை உங்களுக்கு விளக்கும் பொருட்டும் சு.பு தவிர்க்க இயலாமல் போய் இருக்கலாம் . எனி வே.. ஒரு மிகச்சிறந்த வாசிப்பானுபவத்தை [ பேரானுபவம் ..? இருக்கலாம் ] தந்தமைக்கு நன்றி .

இப்படிக்கு
காட்டில் தொலைந்து போன ஒருவன் .

–பி.கு–
1 . நான் ஒன்றும் பரந்த வாசிப்பாளன் இல்லை ஜெமோ. எனக்கு பிடித்ததை, உங்களிடம் சொல்ல விரும்பியதை உங்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியே இது .
2 . இங்கு உங்கள் புத்தகங்கள் கிடைபதில்லை . ஊரில் நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன் அவர்கள் அனுப்பி ,வந்து, படித்தவுடன் அடுத்த கடிதம் .

அன்புள்ள பரத்

காடு உங்களுக்கு பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் இருக்குமிடமும் ஒரு காரணமாக இருக்கலாம். ‘நினைவில் காடுள்ள மிருகம் எளிதில் பழகுவதில்லை’ [கெ சச்சிதானந்தன்]

காடு நாவலில் முதலில் காடும் இரண்டாம் பகுதியில் மானுடக்காடும் உள்ளன. இரு காட்டு வாழ்க்கைகளும் ஒன்றுடன் ஒன்று கலக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றை ஒன்று அர்த்தப்படுத்தப்படுகின்றன

என் நூல்களை நீங்கள் என் இணையதளத்தில் உள்ள உடுமலை டாட் காம் சுட்டி வழியாக அவர்களின் இணையதளம் சென்று வாங்கலாம் .

ஜெ

காடு,கடிதம்

வாசகர் கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇந்துவில் ஒரு சிறு பேட்டி
அடுத்த கட்டுரைதினமலர்,நேர்காணல்